பழங்குடியினர் அடையாளம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த அடையாளத்தை உருவாக்கப் பெரும் பங்காற்றிய மிக முக்கியமான தலைவரான பிர்சா முண்டாவை நினைவுகூர்வோம். -சுபம் டிகா

 பிர்சாவை வெறும் ஒரு உழவர்களின் எழுச்சியின் தலைவராக மட்டும் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அவர் பழங்குடியின மக்களின் அடையாளம், தனித்துவம் மற்றும் தன்னாட்சி குறித்த ஒரு விரிவான பார்வையை உலகிற்கு வெளிப்படுத்தினார்.


ஜூன்  மாதம் 9-ஆம் தேதி, பழங்குடியின மக்களின் அடையாளமாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த பிர்சா முண்டாவின் நினைவுநாளையொட்டி, ஜார்க்கண்டில் உள்ள பல பழங்குடியின அமைப்புகள் அவருடைய "பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டன.


கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பழங்குடியினரை, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற "பட்டியல் நீக்க" கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வரும் சூழலில் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பழங்குடியின மக்களின் அடையாளம் குறித்த நீண்டகால விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.            கடந்த மாதம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பழங்குடியினரின் கூட்டத்தில் இந்த 'பட்டியல் நீக்க' கோரிக்கை சமீபத்தில் முன்வைக்கப்பட்டது.

ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியின அமைப்புகள் இந்த உறுதிமொழி நிகழ்வின்போது, "பிர்சா முண்டாவின் பார்வை என்பது பழங்குடியினரின் அடையாளம், அவர்களின் இறையாண்மை மற்றும் நில உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினர். மேலும், வலதுசாரி அமைப்புகள் பிர்சாவின் அந்தப் பார்வையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


அப்படியென்றால், பிர்சா எதற்காகப் போராடினார்? அவர் மறைந்து 125 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்தப் பழங்குடியினத் தலைவரின் வாழ்க்கை, நம்பிக்கைகள் மற்றும் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் குறித்த ஒரு பார்வை பின்வருமாறு:


பிர்சா முண்டா என்பவர் யார்?


ஜார்க்கண்ட் மற்றும் அதன் அண்டை மாநிலங்களை உள்ளடக்கிய, கனிமங்கள் நிறைந்த சோட்டாநாக்பூர் பீடபூமி பிராந்தியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் பிர்சா முண்டாவும் ஒருவர் ஆவார்.

பலராலும் பூமியின் தந்தை (Dharti Aba)  என்று போற்றப்படும் இவர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பழங்குடியினரின் நிலங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் மீதான ஆக்கிரமிப்பு அதிகரித்தபோது, அதற்கு எதிராகப் போராடினார். ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் "டிக்கு" (Diku - பழங்குடி அல்லாத மக்கள்) என்று அழைக்கப்பட்ட ஜமீன்தார்களுக்கு எதிராக உல்குலன் (Ulgulan) அல்லது "பெரிய எழுச்சி" (Great Tumult) என்ற போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தியதற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.


இருப்பினும், பிர்சாவின் செல்வாக்கு தற்போதைய ஜார்க்கண்ட் மாநில எல்லைகளைத் தாண்டி மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களின் தொலைதூரக் கிராமங்கள் வரை பரவியிருந்தது.



வரலாற்றாசிரியர் கே. எஸ். சிங், தனது முக்கியத்துவம் வாய்ந்த  'பிர்சா முண்டாவும் அவரது இயக்கமும்' என்ற நூலில், பிர்சாவை முண்டா பழங்குடி சமூகத்தை மாற்றியமைத்த ஒரு மத சீர்திருத்தவாதி, சமூக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் தலைவர் என்று விவரித்துள்ளார்.


அதேபோல, பழங்குடியின வரலாற்று ஆய்வாளர் ஜோசப் பரா என்ன வாதிடுகிறார் என்றால், பிர்சாவை வெறும் ஒரு விவசாயப் புரட்சியின் தலைவராக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, அவர் பழங்குடியினரின் தனித்துவம், தன்னாட்சி மற்றும் பழங்குடியினரின் சொந்த தேசம் (Adivasi disum) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த தொலைநோக்குக் பார்வையை வெளிப்படுத்தினார்.


2000-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய அரசியல் மற்றும் பொது விவாதங்களில் பிர்சாவின் முக்கியத்துவம் கணிசமாக வளர்ந்தது என்று பரா குறிப்பிடுகிறார்.


இன்று, அவர் இந்தியாவின் மிகப்பரவலாக அறியப்பட்ட பழங்குடியின அடையாளங்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், பழங்குடியினரின் தனித்துவம், நில உரிமைகள், மதம் மற்றும் சுயாட்சி குறித்த விவாதங்களில் மிக முக்கியப் இடத்தைப் பிடித்துள்ளார்.


பிர்சா முண்டாவின் ஆரம்பகால வாழ்க்கையும் அவரது தாக்கங்களும் 


பிர்சா முண்டா தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி (Khunti) மாவட்டத்தில் உள்ள உலிஹாது (Ulihatu) கிராமத்தில் 1875-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 -ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுக்னா முண்டா கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு 'மசிஹ் தாஸ்' (Masih Das) என்றும் அழைக்கப்பட்டார். சுக்னா முண்டா 'சர்தாரி இயக்கத்துடன்' (Sardari movement) தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. இது பாரம்பரிய நில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், 'டிக்கு' (Diku) என்று அழைக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் மற்றும் இடைத்தரகர்களின் அதிகரித்து வரும் ஆதிக்கத்திற்கு எதிராகவும், முண்டா மற்றும் ஓரான் பழங்குடியின மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆரம்பகால போராட்ட இயக்கமாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பே பழங்குடியினரின் பகுதிகளில் வெளியாட்களின் ஊடுருவல் தொடங்கிவிட்டது, ஆனால் ஆங்கிலேய காலனித்துவ நிலக் கொள்கைகள் அதற்கு முன் எப்போதும் இல்லாத சட்டப்பூர்வ ஆதரவை வழங்கின. 1773-ஆம் ஆண்டின் 'நிலையான நிலவரித் திட்டம்' போன்ற சட்டங்கள் மூலம், ஆங்கிலேயர்கள் இந்த வரி வசூலிக்கும் இடைத்தரகர்களுக்கு  காடுகளைத் திருத்தி விவசாயம் செய்யும் கூட்டு நில உரிமை முறை (Khuntkatti) போன்ற பாரம்பரிய அமைப்புகளின்கீழ் நிர்வகிக்கப்பட்ட நிலங்களிலிருந்து வரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கினர். இதனால் பழங்குடியினரின் பாரம்பரிய உரிமைகள் பறிபோனதுடன், அவர்கள் கடுமையான கடன் சுமை, நில இழப்பு மற்றும் கட்டாய வேலை போன்ற கொடுமைகளை எதிர்கொண்டனர். அதேநேரத்தில், கிராமப்புற அமைப்புகளும் தங்களின் வளங்கள் மற்றும் விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்தன.


இந்த மாற்றங்கள் சோட்டாநாக்பூர் பகுதி முழுவதும் வேளாண் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தன.


பிர்சா முண்டா குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்த புத்ராம் முண்டா பகிர்ந்துகொண்ட தகவல்களின்படி, பிர்சா தனது ஆரம்பகால சிறுவயது வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தனது மாமாவின் கிராமத்தில் கழித்தார். அதன் பிறகு சாய் பாசா (Chaibasa) பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பயின்றார்.


இந்தக் காலகட்டத்தில், அவருக்கு கிறிஸ்தவப் பள்ளிகளின் கல்வி அறிமுகமானது. அப்போது அவர் 'தாவூத்' (Daud) என்ற கிறிஸ்தவப் பெயரால் அழைக்கப்பட்டார், இதை அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் 'டேவிட்' (David) என்றும் நினைவுகூர்கின்றனர்.


எதிர்ப்பிலிருந்து அரசுரிமை வரை


பிர்சா முண்டா தலைமையிலான உல்குலன், 1899-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குந்தி கிராமத்தில் உள்ள டோம்பாரி புருவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இங்குதான் பிர்சா முண்டாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நிலத்தின் மீதான தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், ஆங்கிலேயர் அதிகாரத்தை எதிர்க்கவும் ஆயிரக்கணக்கான பிர்சா முண்டாவின் ஆதரவாளர்கள் அங்கு ஒன்று கூடினர்.


ஆங்கிலேயப் படைகள் அந்த மலையைச் சூழ்ந்து கொண்டு, அங்கிருந்த மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தின. அதிகாரப்பூர்வ பதிவுகள் உயிரிழப்பு குறைவாக இருந்ததாகக் கூறினாலும், பழங்குடியின மக்களின் நினைவுகளில் இது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையாகவே பதிவாகியுள்ளது. பல மாதங்கள் தலைமறைவாக இருந்த பிர்சா முண்டா, 1900-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி போரஹாட் (Porahat) காடுகளில் கைது செய்யப்பட்டு, ஜூன் மாதம் 9-ஆம் தேதி, 1900-ஆம் ஆண்டு ராஞ்சி சிறையில் காலமானார். காலனித்துவ பதிவுகள் அவர் காலரா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கினால் இறந்ததாகக் கூறினாலும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்களிடமும் மக்கள் நினைவுகளிலும் இன்றும் நீடிக்கிறது.


ஆங்கிலேய அரசு இந்தப் புரட்சியை ஒடுக்கியிருந்தாலும், டோம்பாரி புரு மலை பழங்குடியினரின் வீரமிக்க போராட்டத்தின் அடையாளமாக மாறியது.


இந்த நிகழ்வு, காலனித்துவ நிர்வாகத்தை நிலச் சீர்திருத்தங்களைத்  கட்டாயப்படுத்தியது. அதன் விளைவாக காடுகளைத் திருத்தி விவசாயம் செய்யும் கூட்டு நில உரிமைகளுக்குச் (Khuntkatti) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது, பின்னர் 1908-ஆம் ஆண்டின் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (Chotanagpur Tenancy Act (CNT)) இயற்றப்பட்டது.




இது சோட்டாநாக்பூர் பகுதியில் வாழும் முண்டா பழங்குடியினரிடையே நடைமுறையில் இருந்த பாரம்பரிய கூட்டு நில உரிமை மற்றும் நிர்வாக முறையாகும். (ஓரான் பழங்குடியினரிடையே இது புய்ன்ஹாரி - Bhuinhari என்று அழைக்கப்பட்டது). இந்த முறையின்கீழ், காடுகளை அழித்து கிராமத்தை உருவாக்கிய ஆரம்பகால குடியேறிகளின் வாரிசுகள் குண்ட்கட்டிதாரர்கள் (Khuntkattidars) எனப்படுவர், அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பின் மீதும் கூட்டு உரிமையைக் கொண்டிருந்தனர்.


குண்ட்கட்டிதார் (Khuntkattidar) என்பது குறிப்பாக ஜார்க்கண்ட் மற்றும் சோட்டாநாக்பூர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பழங்குடியினர் நில உரிமை  தொடர்பான சொல்லாகும். இது பொதுவாக வனப் பகுதிகளை  அழித்து முதன்முதலில் அந்த இடத்தை குடியிருப்புக்கும் சாகுபடிக்கும் ஏற்றதாக மாற்றிய பழங்குடியினரின் வழித்தோன்றல்களைக் குறிக்கிறது.


முண்டா பழங்குடியின சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்த மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரான மானுடவியலாளர் மற்றும் பாதிரியார் ஜான்-பாப்டிஸ்ட் ஹாஃப்மேன், 'முண்டாரி குண்ட்கட்டி' (Mundari Khuntkatti) முறையை சாதாரண தனிச்சொத்துரிமை விதிகளின்கீழ் புரிந்துகொள்ள முடியாது என்று வாதிட்டார். இது ஒரு வாடகை நிலமோ அல்லது சாதாரண சட்டப்பூர்வமான நில உடைமையோ அல்ல; மாறாக இது நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு தனித்துவமான முறை. இதில் 'குண்ட்கட்டிதாரர்கள்' நிலத்தை தங்களுக்கே உரித்தான முழு அதிகாரத்துடன் வைத்திருக்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.


பழங்குடியின மக்களின் பல ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, சோட்டாநாக்பூர் பகுதியில் அவர்களின் பாரம்பரிய நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கத்தால் 1908-ஆம் ஆண்டு சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (CNT Act) கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் சட்டக் கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவராக தந்தை ஜே.பி. ஹாஃப்மேன் கருதப்படுகிறார். பழங்குடியினரின் நிலம் பழங்குடி அல்லாதவர்களுக்கு கைமாறுவதைத் தடுப்பதும், குண்ட்கட்டி மற்றும் புய்ன்ஹாரி (Bhuinhari) போன்ற பாரம்பரிய நில உரிமை முறைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதும்தான் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதிகாரிகள் மற்றும் குடியேறியவர்களின் கூட்டுச் சதியால் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின நிலங்கள் பறிபோகாமல் தடுக்கும் வலிமையான சட்டப் பாதுகாப்பாக இது இன்றும் உள்ளது.


உல்குலன் (Ulgulan) போராட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட பழங்குடியினரின் தன்னாட்சி கனவு, பின்னர் 1900-களின் நடுப்பகுதியில் ஜெய்பால் சிங் முண்டா தலைமையில் தனி ஜார்க்கண்ட் மாநிலம் கோரும் இயக்கமாக மாறியது என்று எழுத்தாளர் பரா குறிப்பிடுகிறார்.


மத ரீதியான கருத்துக்கள்


முண்டா பழங்குடிச் சமூகம் குறித்து தேவாலய அதிகாரிகள் கூறிய சில கருத்துக்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, கிறிஸ்தவ கல்வியுடனான பிர்சாவின் தொடர்பு முடிவுக்கு வந்தது என்று புத்ராம் முண்டா கூறுகிறார்.


கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகிய பிறகு, பிர்சா ஒரு உள்ளூர் குருவின் மூலம் சில காலம் வைணவத்தின் (Vaishnavism) தாக்கத்திற்கு உள்ளானார்.


1885-ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு, வாழ்க்கை மற்றும் இயற்கையைப் பற்றிய தனது போதனைகளை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் என்று புத்ராம் முண்டா கூறினார். அமைதிக்கு இடையூறு விளைவித்தல், கூட்டத்தைக் கூட்டுதல் மற்றும் ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் ‘டிக்கு' (Diku) ஜமீன்தார்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் கூறி ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்தனர்.


இவரது போதனைகள் 'பிர்சைட்' (Birsait) என்ற மத இயக்கத்தை உருவாக்கியது. இது பாரம்பரிய பழங்குடி மதம் (Sarnaism), கிறிஸ்தவம் மற்றும் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது.



அவரது ஆதரவாளர்கள் அவரிடம் பல அற்புதங்கள் இருப்பதாக நம்புகின்றனர். அவரை ஒரு மீட்பராகக் கருதி, "பகவான்" என்றும் "பூமியின் தந்தை" (Dharti Aba) என்றும் அழைக்கின்றனர்.


 புத்ராம் முண்டா கூறுகையில், பகவான் பிர்சா எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இலக்காகக் கொள்ளவில்லை. ஜமீன்தார்களாக நியமிக்கப்பட்ட சாதிச் சமூகத்தைச் சேர்ந்த வெளிநபர்களையும், கிறிஸ்தவ மதபோதகர்களையும் அவர் எதிர்த்தார். ஏனெனில் அவர்கள் இருவரையும் சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாகவே அவர் கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்தவ பழங்குடியினரை, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து புத்ராம் முண்டா பேசியுள்ளார். பழங்குடியினரின் புகழ்பெற்ற தலைவரான பிர்சா முண்டாவின் தந்தை சுக்னா முண்டாவின் மூத்த சகோதரரான கானு முண்டாவின் வம்சாவளியினர், பல தலைமுறைகளாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவதாகக் கூறினார். பழங்குடியினருக்கான அடையாளம் என்பது அவர்களின் முன்னோர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அல்ல என்று அவர் வாதிட்டார்.


அவரது கூற்றுப்படி, அவர்கள் வழிபடும் முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து பழங்குடியினரும் தங்களின் தோற்றம் 'சிங்போங்கா' (Singbonga) என்ற ஒரே பிரபஞ்சப் பேரிறைவனிடமிருந்தே உருவானதாக நம்புகின்றனர்.


Original article : Amid debate over Adivasi identity, recalling the icon who helped define it: Birsa Munda. -Shubham Tigga

Share: