இல்லத்தரசிகளுக்கான இழப்பீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டுத் தொகையை ரூ. 8.4 லட்சத்திலிருந்து ரூ. 62.78 லட்சமாக உயர்த்தியது.


• டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் , மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீட்டுத் தீர்ப்பாயம் (Motor Accidents Claims Tribunal (MACT)), அந்தப் பெண்ணின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குக் காப்பீட்டுத் தொகையாக ரூ.2,42,000 வழங்க உத்தரவிட்டது. டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், இதை ₹8.43 லட்சமாக உயர்த்தி, மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து 7.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வாரிசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.


• ஒரு பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் செய்யும் பணிகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அவரது உடல் மற்றும் உணர்வு ரீதியான உழைப்பு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும், அதன் தாக்கம் மிகவும் விரிவானது என்பதை மறுக்க முடியாது. இன்று கணவரின் பங்களிப்பிற்கும், நாளை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பதன் மூலம், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களே அச்சாணியாகத் திகழ்கின்றனர் என்று அந்த அமர்வு குறிப்பிட்டது. மேலும், ஒரு இல்லத்தரசியின் இழப்பு என்பது  கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமான இழப்பு அல்ல என்றும் நீதிபதி கரோல் தீர்ப்பில் குறிபிட்டுள்ளார்.


• வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண் ஒருவர் இறப்பு தொடர்பான வழக்குகளில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (Loss of domestic care) என்ற தலைப்பின்கீழ் கூடுதலாக ₹30,000 மொத்தத் தொகையை வழங்க வேண்டும் என்று அந்த அமர்வு கூறியது. இல்லத்தரசிகளின் வருமானம் மிகக் குறைந்த அளவிலேயே கணக்கிடப்படும் நிலையில், இந்தக் கூடுதல் தொகை அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய உதவும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


• குடும்பத்தின் சுமுகமாக கொண்டும் செல்லும் பணியில் பெண்களின் பங்களிப்பு, குழந்தைகளுக்குக் கிடைக்கும் தாயின் அரவணைப்பு இல்லாமல் போவது, வாழ்க்கைத் துணையின் ஆதரவு இழப்பு, வயது வந்த பிள்ளையின் ஆதரவு மற்றும் பராமரிப்பு, அத்துடன் உயிரிழந்தவரின் பெற்றோருக்கான ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அந்தத் தொகையானது கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


• ஒரு இல்லத்தரசி பாரம்பரியமான, பண ரீதியான வருமானம் எதையும் வீட்டிற்கு ஈட்டித் தராமல் இருக்கும் பட்சத்தில், அவருடைய மாதாந்திர வருமானத்திற்கான ஒரு அடிப்படை குறைந்தபட்சத் தொகையாக இந்த 30,000 ரூபாயைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது. அதேநேரம், அந்த இல்லத்தரசி ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுபவராக இருக்கும்பட்சத்தில், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் முன்பு நிரூபிக்கப்படும் அவரது மாதாந்திர வருமானத்தோடு சேர்த்து, அவர் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டதற்கான இழப்பீட்டுத் தொகையும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


உங்களுக்குத் தெரியுமா?


• வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண்கள் செய்யும் வேலைகள் எவ்வாறு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்பதை விளக்கிய நீதிமன்றம், சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல் மற்றும் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற அன்றாட வீட்டுப் பணிகள், சம்பளம் வாங்கும் உழைப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதிலும், நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனை இயக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டது. இருப்பினும், இத்தகைய பங்களிப்புகள் பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) போன்ற கணக்கீடுகளில் உற்பத்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


• அனுமான வருமானத்தைக் (Notional income) கணக்கிடும் "இந்த வழக்கமான முறைகளால் நாம் எவ்வளவு பெரிய விஷயத்தை இழக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள, ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 1,600 கோடி மணிநேரம் தனிநபர்களால் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகவும், பராமரிப்புப் பணிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.


• மேலும், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு (Time Use Survey) குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த ஆய்வு, குறிப்பாக பெண்கள் மேற்கொள்ளும் ஊதியமற்ற வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளின் அளவை வெளிக்காட்டுகிறது.


• இந்த ஆய்வின்படி, 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் (Unpaid domestic work) ஈடுபடுகிறார்கள். ஆனால், ஆண்கள் இதற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சராசரியாக, பெண்கள் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட, ஆண்களைவிட 2.6 மடங்கு அதிகமாக ஊதியம் இல்லாத பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொறுப்புகளைச் சுமக்கிறார்கள். இந்த ஒருதலைப்பட்சமான சூழ்நிலைதான் நாட்டில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு (Female labour force participation) 31.7-சதவீதமாகக் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.          ஏனெனில், சமூகக் கட்டமைப்பு பொதுவாக இதுபோன்ற பொறுப்புகள் தானாகவே பெண்கள் மீதுதான் விழும் என்று கருதுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெண்களின் இந்த ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகள்       15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் இது இன்னும் ஊதியமின்றியும் அங்கீகாரமின்றியும் தொடர்கிறது என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.


• பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, ஊதியம் பெறாத பராமரிப்புப் பணி என்பது ஒரு குடும்பத்திற்குள்ளும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் ஊதியம் பெறாத அனைத்து சேவைகளையும் குறிக்கிறது. இதில் நபர்களைப் பராமரித்தல், வீட்டு வேலைகள் மற்றும் தன்னார்வ சமூகப் பணிகள் ஆகியவை அடங்கும். இது போன்ற செயல்பாடுகள் பணியாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், கோட்பாட்டளவில் இவற்றைச் செய்வதற்கு ஒரு மூன்றாம் நபருக்கு ஊதியம் வழங்க முடியும்.


• பொருளாதார நடவடிக்கைகளின் நிலையான அளவீடுகள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளால் செய்யப்படும் இந்த வேலைகளின் பெரும் பகுதியை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இந்த வேலைக்காக ஒதுக்கப்படும் நேரத்தில் நிலவும் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வு மிகவும் வெளிப்படையானது. உலகளவில் செய்யப்படும் மொத்த ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளில் 75 சதவீதத்தைப் பெண்கள்தான் செய்கிறார்கள் என்று ‘McKinsey’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், 'Time Use' குறித்த 2019-ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக அறிக்கையின்படி, பெண்கள் ஒரு நாளைக்கு 299 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகிறார்கள், ஆண்கள் 97 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, பெண்கள் முறையான பொருளாதாரத்தில் பங்கெடுப்பதோடு நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Original article : What exactly Supreme Court ruling on compensation for homemakers said? -Priya Kumari Shukla

Share: