தொழில்நுட்பம், பசுமை வளர்ச்சி, பாதுகாப்பு : பிரதமர் மோடியின் ஐரோப்பியப் பயணத்தின் முக்கிய அம்சங்கள். - குல்ஷன் சச்தேவா

 கடந்த சில ஆண்டுகளாக, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நட்பு நாடாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கொண்ட நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம், இந்த வளர்ச்சிப் பாதையை மேலும் எவ்வாறு வலுப்படுத்துகிறது?


ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவுமுறை, உத்திசார்ந்ததாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், அமைப்பு ரீதியாக வலுவானதாகவும் மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம், ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவுமுறையில் வளர்ந்து வரும் வேகத்தை  கோடிட்டுக் காட்டுகிறது.


கடந்த சில ஆண்டுகளில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பசுமை மாற்றம் போன்ற துறைகளில் ஐரோப்பா இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக உருவெடுத்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நலன்களின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு தெளிவாகத் தெரிந்தது. அங்கு இரு நாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்ததோடு, '2030-ஐ நோக்கி: ஒரு கூட்டு விரிவான ராஜதந்திர செயல்திட்டத்தையும்' ஏற்றுக்கொண்டனர்.


பிரதமர் மோடியின் இந்தப் பயணம், பசுமை வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை கூட்டுறவு ஆகியவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, இந்தப் பயணப் உறவை மேலும் வலுப்படுத்தியது. கூட்டாண்மைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பத் தூதரகம், பசுமை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய நான்கு முக்கிய முன்னேற்றங்கள் இந்தப் பயணத்தின் மிக முக்கிய விளைவுகளாகத் தனித்து நிற்கின்றன.


ஐரோப்பிய கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்


புது டெல்லி தற்போது ஐரோப்பாவுடன் கொண்டுள்ள நட்புறவில், ஒரு தெளிவான உத்தி உருவாகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் குறித்த ஆழமான புரிதலை இது காட்டுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறாத பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார மற்றும் உத்திசார் ஒருங்கிணைப்புகள் குறித்த வளர்ந்துவரும் அங்கீகாரத்தையும் இது வெளிக்காட்டுகிறது.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2004-ஆம் ஆண்டு முதல் மூலோபாய கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. இதேபோல், இந்தியா பிரான்ஸ் (1998), ஜெர்மனி (2000) மற்றும் ஐக்கிய இராச்சியம் (2004) உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய சக்திகளுடன் இராஜதந்திரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா 2023-ல் இத்தாலி மற்றும் கிரீஸுடனும், அதைத் தொடர்ந்து 2024-ல் போலந்துடனும் ராஜதந்திர கூட்டாண்மைகளில் கையெழுத்திட்டது.


பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து, இந்தியா 2021-ல் ஐக்கிய இராச்சியத்துடனான தனது உறவை ஒரு விரிவான இராஜதந்திர கூட்டாண்மையாக மேம்படுத்தியது. அதேபோல், இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை 2026-ல் உலகளாவிய ராஜதந்திர கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர், புதுடெல்லி சைப்ரஸுடன் ஒரு இராஜதந்திரக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளது.


பிரதமர் மோடி சில வருகையின்போது, ​​இந்தியா நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன் இரண்டு புதிய இராஜதந்திரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்திக் கொண்டது. மேலும், இத்தாலி உடனான இந்தியாவின் உறவு சிறப்பு இராஜதந்திரக் கூட்டாண்மை (Special Strategic Partnership) என்ற உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.


தொழில்நுட்ப இராஜதந்திரம் (Technology diplomacy)


இந்தப்  பயணம், தொழில்நுட்ப இராஜதந்திரத்தின் மீது இந்தியா அளித்து வரும் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாக அமைந்தது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக இயங்கும் தொழில்நுட்ப ராஜதந்திரம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), டிஜிட்டல் ஆளுகை, குறைக்கடத்திகள், குவாண்டம் கணினி, தொலைத்தொடர்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறது.


தொழில்நுட்பச் சார்புநிலையானது, ராஜதந்திர உறவின் கண்ணோட்டத்தில்   பார்க்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவும் ஐரோப்பாவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தங்கள் இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல நம்பகமான நட்பு நாடுகளைத் தேடுகின்றன. தற்போதைய நிலையில், பல முன்னோடி டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இரண்டு நாடுகளும் அமெரிக்கா மற்றும் சீனாவைவிடப் பின்தங்கியுள்ளன.


இருப்பினும், ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்கள் முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பிடத்தக்க உறவுகளையும், புதுமையான கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படும் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலையும் கொண்டுள்ளன. எனவே, இரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் ஐரோப்பாவின் தொழில்நுட்பத் திறன்களை இந்தியாவின் அளவு, திறமை வளம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் புதுமையான கண்டுபிடிப்பு ஏற்றவாறு ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர்.


இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்திற்குப் பெரும் உத்வேகம்


பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது இந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிந்தது. அங்கு, இந்தியாவின் குறைமின்கடத்திச் சூழலமைப்பின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டச்சு தொழில்நுட்பத் தலைவரான ASML உடன் ஒரு இராஜதந்திரக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டது. இது இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது.


$11 பில்லியன் முதலீட்டு ஆதரவுடன், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் இந்தியாவின் முதல் வர்த்தகரீதியான 300 மிமீ குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இந்த ஆலை, ஆட்டோமொபைல்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான பயன்பாடுகளுக்கான சிப்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்வீடனிலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முக்கிய இடம் பிடித்தது. இரண்டு நாடுகளும் மேம்படுத்தப்பட்ட கூட்டுப் புத்தாக்கக் கூட்டாண்மை 2.0-ஐத் தொடங்கி, மெய்நிகர் இந்தியா-ஸ்வீடன் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை (virtual India–Sweden Joint Science and Technology Centre (ISJSTC)) நிறுவின. இந்த மையம், செயற்கை நுண்ணறிவு, 6-ஜி தொழில்நுட்பங்கள், குவாண்டம் கணினி, நிலையான சுரங்கத் தொழில், நிலையான போக்குவரத்து, முக்கிய கனிமங்கள், விண்வெளி மற்றும் புவிசார் ஆராய்ச்சி மற்றும் உயிர் அறிவியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும்.


அதேபோல், இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் முடிவுகள் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஒத்துழைப்பு,  ஆர்க்டிக் மற்றும் துருவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் அளித்தன. ரோம் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடியும் இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், இரு நாடுகளின் புத்தாக்கச் சூழல் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்ட புத்தாக்க மையமான INNOVIT இந்தியாவைத் தொடங்கி வைப்பதாக அறிவித்தனர். சூப்பர்கம்ப்யூட்டிங்கில் ஒத்துழைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


பசுமை வளர்ச்சி (Green growth )


நோர்டிக் நாடுகள் மற்றும் நெதர்லாந்தின்  வலிமைகளை கருத்தில் கொண்டு,  இருதரப்பு செயல் திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகளின் முக்கிய கவனம் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பசுமை வளர்ச்சிமீது இருந்தது. இந்தப் பயணத்தின்போது ஒத்துழைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட முக்கியத் துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்கள், நீர் வள மேலாண்மை, நீலப் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருட்கள், சுழற்சிப் பொருளாதாரம், பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக வழித்தடங்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.


பிரதமர் மோடியின் பயணத்தின் ஒரு முக்கிய விளைவு, இந்தியா-நார்வே பசுமை உத்திசார் (India–Norway Green Strategic Partnership) கூட்டாண்மை தொடங்கப்பட்டதாகும். எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஒரு முக்கிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருந்தபோதிலும், நார்வே பசுமை மாற்றத்தில் முன்னணி நாடக இருந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சாரப் போக்குவரத்து மற்றும் பிற பசுமைத் தொழில்நுட்பங்களில் அதன் முன்னேற்றங்களுக்காக அந்த நாடு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் மின்சாரத்தில் 98 சதவீதம், முதன்மையாக நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் காலநிலை நடவடிக்கை, பசுமை மாற்றம் மற்றும் நீலப் பொருளாதாரம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், இந்தியா-நெதர்லாந்து செயல்திட்டம் நீர், வேளாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. ஸ்வீடனில், தூய்மையான தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்குவதன்மீது கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், சில ஆண்டுகளில் நெதர்லாந்துடனான நீர் கூட்டாண்மை, டென்மார்க்குடனான பசுமை உத்தி தொடர்பான கூட்டாண்மை, செக் குடியரசுடன் புத்தாக்க கூட்டாண்மை, பின்லாந்துடன் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையில் இராஜதந்திரக் கூட்டாண்மை உள்ளிட்ட பல துறைசார்ந்த முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக ஸ்வீடன்-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடமும் (Sweden–India Technology and Artificial Intelligence Corridor (SITAC)) நிறுவப்பட்டுள்ளது.


நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் ஈடுபாடு, 'நம்பகமான பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க உத்திசார் கூட்டாண்மை' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளில், நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை பெற்றுவரும் முக்கியத்துவத்தை  இது வெளிபடுத்துகிறது.


2025-ஆம் ஆண்டில், ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பின் (European Free Trade Association (EFTA)) ஐரோப்பிய ஒன்றியம் சாராத நான்கு உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் இந்தியா தனது முதல் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இதே போன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


ராஜதந்திர கூட்டாண்மைகள், துணைப் பிராந்திய அணுகுமுறைகள், துறைசார் ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் வலையமைப்புக்கு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், 50-க்கும் மேற்பட்ட துறைசார் உரையாடல்கள் மற்றும் பல்வேறு இருதரப்பு நிறுவன கட்டமைப்புகள் போன்ற வலுவான நிறுவனரீதியிலான அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.


பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு


உக்ரைனில் நடைபெற்று வரும் போர், அமெரிக்காவின் நீண்டகாலப் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்த நிச்சயமற்ற நிலை மற்றும் புதிய போர்க்களங்களின் தோற்றம் ஆகியவற்றின் காரணமாக, ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் தற்காப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. 'ஐரோப்பாவை மீண்டும் ஆயுதமயமாக்குதல்/தயார்நிலை 2030' (ReArm Europe/Readiness 2030) முன்முயற்சியின்கீழ், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வரும் ஆண்டுகளில் தற்காப்பிற்காக €800 பில்லியன் அதிகமாகச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா ஒரு லட்சியமிக்க பாதுகாப்புத் துறை உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாலும், அதன் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தொடர்ந்து வளர்ந்து வருவதாலும், அதன் பாதுகாப்புத் தொழில்துறையை ஐரோப்பாவுடன் இணைப்பது ஒரு முக்கியமான ஒத்துழைப்புத் துறையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பின்னணியில், பிரதமர் மோடியின் பயணத்தின்போது, ​​குறிப்பாக நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய இடம் பிடித்தது.


இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பும் முக்கிய இடம் பிடித்தது. இத்தாலியில், இரண்டு நாடுகளும் இருதரப்பு பாதுகாப்புத் தொழில்துறைக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.


இந்தியா நீண்டகாலமாக ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்து வந்தாலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி  வந்தாலும், கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு போன்ற சூழகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டாலும், இந்தியா மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையிலான ஆழமான ஒருங்கிணைப்பைப் பற்றிய விவாதங்கள் ஒப்பீட்டளவில் சில காலத்திற்கு முன்னர்  தான் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தப் பயணத்தின்போது இந்த இரண்டு விவகாரத்தின்மீது கவனம் செலுத்தப்பட்டிருப்பது, ஒத்துழைப்பு தற்போது வேகம் பெற்று வருவதைக் காட்டுகிறது.


முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பு


ஒட்டுமொத்தமாக, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிளவு,  வேகமாகச் செயல்படும் சீனாவின் எழுச்சி மற்றும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சீர்குலைக்கும் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்தப் பயணம் நடைபெற்றது. அதேசமயம், ஐரோப்பிய சுதந்திர வர்த்தகப் பகுதி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் மூன்று முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்ததன் மூலம், இந்தியா-ஐரோப்பா உறவுகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன.


இணைப்புத் திட்டங்கள், குறிப்பாக இந்தியா–மத்தியகிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India–Middle East–Europe Economic Corridor (IMEC)) மற்றும் இடம்பெயர்வு, நடமாட்டம் தொடர்பான பிரச்சனைகளை தாண்டி, முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பும் ஈடுபாட்டின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்தது. இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளும், ஆப்பிரிக்காவில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன.


அதேபோல், இந்தியாவும் நார்வேயும் மூன்றாம் நாடுகளில் கூட்டு வளர்ச்சித் திட்டங்களை ஆராய ஒப்புக்கொண்டன. குறிப்பாக, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தின. இந்த முயற்சிகள், உலக தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய கூட்டாளிகளும் தங்களுடைய பரஸ்பர வலிமைகளைப் பயன்படுத்தி நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதைக் காட்டுகின்றன.


Original article : Technology, green growth, defence: Key highlights of PM Modi’s Europe visit. -Gulshan Sachdeva

Share: