இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டுமா அல்லது வங்கிகள் பெரிய அளவில் வைப்புத்தொகையைத் திரட்ட வேண்டுமா: 'மதிப்பு குறைந்துள்ள' இந்திய ரூபாய்க்கு எது தேவை? -சித்தார்த் உபாசனி

 இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது, 'மூலதனப் புழக்கத்தில்' (Capital flows) உள்ள ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவுக்குள் வெளிநாட்டு மூலதனம் ஈர்க்கப்பட்டதற்கு, இந்தியாவின் உள்நாட்டுத் தனிச்சிறப்பு மட்டும் காரணமல்ல; உலகளவில் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்ததே முதன்மைக் காரணம் ஆகும்.


இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) தனது மூன்று நாள் கூட்டத்தை புதன்கிழமை தொடங்கியது. இக்குழு தனது கொள்கை ரெப்போ விகிதத்தை (Repo rate) 5.25%-ஆக தக்கவைத்துக் கொள்ளும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்தாலும், ஒரு சிறிய தரப்பினர் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளனர். ரூபாய் மதிப்பு கடுமையான அழுத்தத்தில் இருப்பதாலும், பணவீக்கம் மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்காகவும் வெள்ளிக்கிழமை இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


ரெப்போ விகிதம் (Repo Rate): வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். 


நீண்டகாலம் நிலையாக இருந்த பிறகு, கடந்த ஓராண்டாக மாற்று விகிதம் (Exchange rate) ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் உடனடி மற்றும் எதிர்கால வர்த்தகச் சந்தைகளில் (Spot and forward markets) ) வெளிநாட்டு நாணயங்களை விற்பது, நாணயப் பரிமாற்ற வாய்ப்புகள் மற்றும் ஏலங்களை (Swap windows and auctions) வழங்குவது, நாணய மதிப்பை வைத்து லாபம் பார்க்க நினைக்கும் வணிகத்தைக் கட்டுப்படுத்த விதிகளைக் கடுமையாக்குவது மற்றும் வெளிநாட்டுச் செலாவணி இருப்பைப் (Foreign exchange reserves) பாதுகாப்பதற்காகத் தங்கத்தை விற்பது போன்ற நடவடிக்கைகள் போன்றன அடங்கும். 


2013-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தியது. ஆனால், இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதற்குப் பதிலாக, வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான வெளிநாட்டு நாணய (வங்கி) (Foreign Currency Non-Resident (Bank) (FCNR(B)) வைப்புத்தொகை வேகமாக அதிகரித்ததே ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இருப்பினும், 2013-ஆம் ஆண்டைவிட தற்போது உலகளாவிய வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால், இதுபோன்ற ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்துவது அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும். இதுதவிர, ‘Nomura’ நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு எச்சரிக்கையை முன்வைக்கின்றனர். நாட்டின் நாணய மதிப்பைத் தக்கவைப்பதற்காக வட்டி விகிதங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தமடையச் செய்யும்; அதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியேறும் ஆபத்தும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.


பொதுத்துறை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மானிய விலையிலான வசதிகளை வழங்குவது மற்றொரு வழியாகும். அதிகாரிகள் எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், 2013-ஆம் ஆண்டில் வெளிநாட்டு வாழ் இந்தியர் (வங்கி) திட்டத்தின் (FCNR(B)) மூலம் திரட்டப்பட்ட 26 பில்லியன் டாலர் (2,600 கோடி டாலர்) தொகையைவிட, மிக அதிகமான தொகையைத் தற்போது திரட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதன் மதிப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 பில்லியன் டாலர்களாக (சுமார் ₹4,15,000 முதல் ₹5,00,000 கோடி) இருக்க வேண்டும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அடைந்துள்ள வளர்ச்சியை ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சாதகமாக மாற்றுவதற்கு இந்தத் தொகை போதுமான அளவு பெரியதாக இருக்க வேண்டும். இந்திய ரூபாய் மீதான சர்வதேசப் பார்வையை நாம் விரைவாக மாற்ற வேண்டியுள்ளது; அதற்கு வெளிநாட்டு மூலதனத்தின் பெரிய அளவிலான வரவு நிச்சயம் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். 


ரூபாய் கதை


கடந்த ஓராண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு    10 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான அளவைவிடக் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கருதுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த வாரம் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ரூபாயின் "உண்மையான பயனுள்ள மாற்று விகிதத்தை" (Real Effective Exchange Rate (REER)) சுட்டிக்காட்டி அவர் இதனைப் பேசினார். இந்த உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) கடந்த ஏப்ரல் மாதத்தில் 90.96-ஆகக் குறைந்தது.  இது செப்டம்பர் மாதம் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகக் கருதப்படுகிறது.


இந்த உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) என்பது, உலகெங்கிலும் உள்ள 40 முக்கிய நாணயங்களின் தொகுப்பிற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை அளவிடுவதாகும். அந்தந்த நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் சேவை சாரா வணிகத்தின் (Non-services trade) அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) 100-க்கும் கீழே இருந்தால், அந்த நாணயத்தின் மதிப்பு குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், 100-க்கு மேல் இருந்தால் அதன் மதிப்பு அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் அர்த்தம் ஆகும். எனவே, தற்போது உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) 90.96-ஆக இருப்பது, இந்த 40 நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சுமார் 9 சதவீதம் குறைவான மதிப்பில் வர்த்தகமாகிறது என்பதைக் காட்டுகிறது.


இருப்பினும், இந்திய ரூபாய் உண்மையிலேயே அதன் மதிப்பைவிடக் குறைவாகத்தான் மதிப்பிடப்பட்டிருக்கிறதா?



குறைந்த வட்டி விகிதங்களின் நன்மைகள்


தற்போதைய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு, முதலீடுகள் உள்ளே வருவது (capital inflows) குறைவாக இருப்பதே முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏப்ரல் மாதம் 2024-ஆம் ஆண்டு முதல், அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) மற்றும் அந்நிய அந்நிய முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) ஆகிய இரண்டின் மூலமும் நாட்டிற்குள் வந்த மொத்த நிகர முதலீடு, (-) 1,840 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அந்நிய நேரடி முதலீடானது (FDI) கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. இதுகுறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் (Chief Economic Advisor) வி. அனந்த நாகேஸ்வரன் கடந்த மாதம் எழுதிய கட்டுரையில், 2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில் உலகளவில் வட்டி விகிதங்கள் வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக இருந்தன. இது உலகெங்கிலும் இருந்த முதலீட்டாளர்களின் நஷ்ட பயத்தைக் குறைத்து, அதிக லாபத்தைத் தேடி வளரும் நாடுகளின் சந்தைகளுக்குள் பெருமளவிலான மூலதனத்தை கொண்டு வரச் செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


குறைந்த வட்டி விகிதங்கள் நிலவிய காலகட்டத்தால் இந்தியாவிற்கு நன்மை கிடைத்தது. மேற்கண்ட வரைபடம் காட்டுவதுபோல, அமெரிக்காவின் (US) வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தபோது, இந்தியாவிற்குள் வந்த நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) அதிகரித்தது. இருப்பினும், பொருளாதார நிபுணர் சஜ்ஜித் சினாயின் கூற்றுப்படி, 2005 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும்தான், அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி வருவாயைச் (US bond yields) சார்ந்து இருக்காமல், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (FDI) முற்றிலும் சுயமாகவும் சுதந்திரமாகவும் உயர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


அந்த ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய தனியார் முதலீட்டு (Capital Expenditure (Capex)) சுழற்சியைக் கண்டதே இதற்குக் காரணம் என்று சினாய் விளக்கினார். இதுவே வலுவான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஈர்த்தது. இதிலிருந்து, வெளிநாட்டு நேரடி முதலீடானது உள்ளூர் ஈர்ப்பு காரணிகள் ("pull" factors) மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலை காரணிகள் ("push" factors) ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.


2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமே முதலீடு செய்வதற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் மிகக் குறைந்த வட்டியில் எளிதாகப் பணம் கடன் வாங்க முடிந்த ஒரே காரணத்தினாலேயே இங்கு முதலீடு செய்ததாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டுகளில், இந்திய ரூபாயின் மதிப்பும் மற்றும் அதன் உண்மையான பயனுள்ள மாற்று விகிதமும் (REER), வெளிநாடுகளில் நிலவிய பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டி விகிதங்களால் பாதிக்கப்பட்டு இருந்தன. அப்படியிருக்க, தற்போது உலகளாவிய பணவியல் கொள்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள சூழலில், இந்திய ரூபாய் இன்னும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்றாகவே கருதப்பட வேண்டுமா?  என்ற கேள்வி எழுகிறது. 


பிராஞ்சுல் பண்டாரி தலைமையிலான ‘Hongkong and Shanghai Banking Corporation’ பொருளாதார வல்லுநர்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய ரூபாயின் வீழ்ச்சியானது செலுத்துநிலைப் பாக்கியின் (Balance of Payments (BoP)) நீண்டகாலக் கட்டமைப்பு பலவீனத்தால் ஏற்பட்டதாக இருந்தால், நாணயத்தின் மதிப்பு குறைவது இயல்பான மற்றும் சரியான விளைவுதான். இருப்பினும், ரூபாயின் மதிப்பு தேவைக்கு அதிகமாகக் குறைந்து, அதன் உண்மையான மதிப்பைவிடக் குறைவாகக் காணப்பட்டால், அதிகாரிகள் அதன் மதிப்பை நியாயமான அல்லது சமநிலை நிலைக்கு உயர்த்துவதற்கு முயற்சி செய்யலாம். இதில் இருக்கும் சவால் என்னவென்றால், குறுகியகாலத்தில் இந்த வீழ்ச்சியில் எவ்வளவு பகுதி ஒரு புதிய சமநிலை மதிப்பை பிரதிபலிக்கிறது, எவ்வளவு பகுதி வெறும் தற்காலிகமான அதிகப்படியான வீழ்ச்சி என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமாகும்.


இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்தது போல் இப்போது இல்லை என்பதை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால்தான், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, (மேற்காசியப் போர் தொடங்குவதற்கு முன்னதாக) தங்களிடம் இருந்த 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி இருப்புத்தொகையைப்  (Forex Reserves) பயன்படுத்தினர். இருப்பினும், ஒரு அரசு ஆலோசகர் குறிப்பிட்டது போல, அந்நியச் செலாவணி இருப்பை சந்தையின் தற்காலிக நெருக்கடிகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, சந்தையின் இயல்பான திசையை நிரந்தரமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.


Original article : RBI rate hike or massive deposit mobilisation drive: what does ‘undervalued’ rupee need? -Siddharth Upasani

Share: