ஜூன் 3, 1947-ம் ஆண்டில், வைஸ்ராய் லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபு, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா போன்றோர் பிரிட்டிஷ் இந்தியாவை இரு நாடுகளாகப் பிரிக்கப் போவதாக அறிவித்தனர். அந்தத் திட்டம் என்ன முன்மொழிந்தது?, மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இரண்டும் ஏன் ஒப்புக்கொண்டன?
எழுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் தெருக்களிலும், பொதுப் பூங்காக்களிலும், சந்தைகளிலும் மாலை 7 மணிக்குத் திட்டமிடப்பட்ட ஒரு வரலாற்று வானொலி ஒலிபரப்பைக் கேட்க கூடினர். அந்த வழியாகச் செல்பவர்கள் அறிவிப்பைக் கேட்கும் வகையில் கடைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டன. வரலாற்றாசிரியர் யாஸ்மின் கான் தனது The Great Partition (2007) நூலில் குறிப்பிட்டதைப் போல: “பெஷாவர் முதல் திருவிதாங்கூர் வரை, கராச்சி முதல் ஷில்லாங் வரை, இந்தியா ஒரு மாபெரும் ஒருங்கிணைந்தச் செவியாக மாறி, அந்த ஒலிபரப்புகளுக்காக மூச்சற்று, உதவியற்று, நம்பிக்கையற்று காத்திருந்தது.”
இதற்கிடையில், டெல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், அன்றைய முக்கிய அரசியல் பிரமுகர்களான பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, காங்கிரஸ் சார்பில் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் லீக் சார்பில் முகமது அலி ஜின்னா மற்றும் சீக்கியர்கள் சார்பாக பல்தேவ் சிங் ஆகியோர் துணைக்கண்டத்தின் எதிர்காலத்தை அறிவிக்கத் தயாரானார்கள்.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு, ஜூன் 3 பிரகடனம் என்று அறியப்பட்டது. அது என்ன முன்மொழிந்தது? மேலும், காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் அதனை ஏன் ஏற்றுக்கொண்டன?
பின்தங்கிய நிலையில் இருந்த ஒரு நாடு
1947 மார்ச் 22 அன்று வைஸ்ராயாகப் பதவியேற்பதற்காக மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லிக்கு வந்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லீயிடமிருந்து ஒரு தெளிவான ஆணையை அவர் கொண்டுவந்திருந்தார். இதில், 1948 ஜூன் 30-ம் தேதிக்குள் அதிகாரம் இந்தியக் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே அந்த ஆணையின் சாரம்சம். அவர் நம் நாட்டிற்கு வந்தபோது, ஏற்கனவே தீவிரமடைந்து வந்த வகுப்புவாத வன்முறையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. 1946 ஆகஸ்டில் நடந்த கல்கத்தா படுகொலைகளைத் தொடர்ந்து நோவாக்கலி மற்றும் பீகாரில் கலவரங்கள் வெடித்திருந்தன. அதேநேரத்தில், பதற்றமானது பம்பாய் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. அமிர்தசரஸ், தக்ஷிலா மற்றும் ராவல்பிண்டியில் பெரும் வன்முறை வெடிப்புகளுடன், பஞ்சாபும் மோதலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் என்ற யோசனை தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று மவுண்ட்பேட்டன் விரைவாக முடிவு செய்தார். இந்தியாவில் கலந்தாலோசனைகளை நடத்தியும், மே மாத நடுப்பகுதியில் லண்டனுக்குச் சென்று, அவர் திரும்பி வந்து 1947 ஜூன் 3 அன்று மாலை பிரிவினைத் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மையக்கரு, பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினையை ஏற்றுக்கொண்டதுதான். பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் மாகாணங்களைப் பிரிப்பதா வேண்டாமா என்பது குறித்து அவற்றின் சட்டமன்றங்கள் வாக்களிக்கும் என்று அந்தக் குழு முன்மொழிந்தது. மேலும், சிந்து மாகாண சட்டமன்றம் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பதை முடிவு செய்யும். மேலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் சில்ஹெட் மாவட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அங்கு பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படும். ஒருவேளை பிரிவினை ஏற்பட்டால், ஒரு எல்லை ஆணையம் (Boundary Commission), குறிப்பாக எல்லைகள் குறித்துக் கடுமையான சர்ச்சை நிலவும் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில், எல்லைகளை குறித்து வரைவை மேற்கொள்ளும்.
இந்தத் திட்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு சுதந்திரமான தன்னாட்சிகளை (two independent dominions) உருவாக்குவதற்கும், ஒவ்வொன்றும் அதன் அரசியலமைப்புச் சபையைக் கொண்டிருப்பதற்கும் வழிவகை செய்தது. சுதேச அரசுகள் இந்த இரண்டு தன்னாட்சிகளில் ஒன்றில் சேர வேண்டியிருந்தது. மேலும், அதிகாரப் பரிமாற்றம் ஆகஸ்ட் 15, 1947-க்கு முன்கூட்டியே நடத்தப்பட்டது.
"குறிப்பாக, இந்த அறிவிப்பின் விதிமுறைகளை மாற்றியமைப்பதற்காக அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கடைசி நிமிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று ஆயிஷா ஜலால் தனது ஒரே பிரதிநிதி: ஜின்னா, முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் கோரிக்கை-1994 (The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan) எனும் நூலில் எழுதியுள்ளார். முஸ்லிம் லீக் கட்சியானது பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினையைத் தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதேவேளையில், பஞ்சாபின் முக்கிய மாவட்டங்களில் தங்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், எல்லை ஆணையத்திற்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குமாறு சீக்கியத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
எதிர்க் கட்சிகள் எவ்வாறு உடன்பட்டன?
ஜூன் 3 திட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதற்குப் பல காரணிகள் வழிவகுத்தன.
ஒன்று, நாட்டின் பெரும் பகுதிகளில் பரவியிருந்த, வேகமாக அதிகரித்து வந்த மதக்கலவரத்தைக் கட்டுப்படுத்தும் விருப்பமே ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. ஒரு இந்திய அரசாங்கத்திடம் விரைவாக அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்டி, இரத்தக் கொதிப்பை நிறுத்த அதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். முஸ்லிம் லீக் நிரந்தரமாக ஆட்சியைத் தடுக்கவோ அல்லது தடைசெய்யவோ கூடிய ஒரு ஒன்றுபட்ட இந்தியாவைவிட, ஒரு வலுவான மத்திய அரசாங்கத்துடன் கூடிய சிறிய ஆனால் மிகவும் ஒன்றுபட்ட இந்தியாவே சிறந்தது என்றும் அவர்கள் முடிவு செய்தனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத், 'இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்-1989' (India Wins Freedom) என்ற தனது நூலில் குறிப்பிடுவது போல, “வடமேற்கு மற்றும் வடகிழக்கில் சில சிறிய பகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, பின்னர் ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது சிறந்தது என்று மவுண்ட்பேட்டன் பிரபு அறிவுறுத்தினார். முஸ்லிம் லீக்குடன் ஒத்துழைப்பது இந்திய ஒற்றுமையைப் பாதிக்கும் என்ற வாதத்தால் சர்தார் படேல் ஈர்க்கப்பட்டார்….” இந்த வாதங்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தியையும் பாதித்தன என்று ஆசாத் குறிப்பிடுகிறார்.
மவுண்ட்பேட்டனின் முந்தைய “பால்கன் திட்டத்தில்” (Plan Balkan) முன்மொழியப்பட்டிருந்த பிளவைத் தவிர்க்கவும் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அத்திட்டத்தின்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாகாணமும் ஏற்கனவே உள்ள அரசியலமைப்புச் சபையில் சேரவோ, புதிய ஒன்றை அமைக்க ஒன்றிணையவோ அல்லது இரண்டிலிருந்தும் விலகி நிற்கவோ தேர்வுசெய்யலாம்.
தனது புத்தகத்தில், பிரிவினையை எதிர்க்கும்படி காங்கிரஸ் தலைவர்களை இணங்க வைப்பதற்கான தனது தோல்வியுற்ற முயற்சிகளை ஆசாத் விவரிக்கிறார். இதில், பிரிவினை தவிர்க்க முடியாதது என்று பட்டேலும் நேருவும் நம்பத் தொடங்கியிருந்ததாக அவர் எழுதுகிறார். ஆசாத் நினைவுகூரும்போது, “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்று பட்டேல் பதிலளித்தபோது நான் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன். மேலும், முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஒரே தேசமாக ஒன்றிணைக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார்.” இருப்பினும், நேரு தயக்கத்துடன் பிரிவினையை ஏற்றுக்கொண்டார். “உண்மையில், பிரிவினை அதன் இயல்பிலேயே தவறானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும்கூட, நிர்வாகக் குழுவின் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்களின் நடத்தை குறித்த தனது அனுபவத்திற்குப் பிறகு, கூட்டு நடவடிக்கைக்கான அனைத்து நம்பிக்கையையும் அவர் இழந்திருந்தார்.” காந்தியும்கூட, மவுண்ட்பேட்டனுடனான தனது கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இறுதியில் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.
இதற்கு மாறாக, முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை, ஜூன் 3 திட்டத்தை ஏற்றுக்கொண்டது பாகிஸ்தான் உருவாக்கத்தை உறுதி செய்ததுடன், அதன் முக்கிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றியது. ஜின்னாவின் தலைமையின்கீழ், இயங்கிய முஸ்ஸீம் லீக், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவார்கள் என்று அஞ்சியது. எனவே, அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான தெளிவான மற்றும் உறுதியான பாதையாகப் பிரிவினையை அது கருதியது.
இருப்பினும், இந்த ஏற்பாடு குறித்து ஜின்னாவுக்கும் சில ஐயங்கள் இருந்தன. கான் மேற்கோள் காட்டிய ஒரு கடிதத்தில், அவர் ஒரு பத்திரிகையாளருக்கு குறிப்பிட்டதாவது, ‘பஞ்சாபையும் வங்காளத்தையும் பிரிக்கும் முடிவுக்கு மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. என் கருத்துப்படி இது ஒரு தவறு... ஆனால் இப்போது நாங்கள் இந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், இதை நாங்கள் சிறப்பாகச் செய்து முடிப்போம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்’ என்று எழுதியிருந்தார்.
தெளிவான வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ இல்லை
கான் குறிப்பிடுவது போல, முஸ்லிம் லீக் பாகிஸ்தானைப் பெற்றிருந்தபோதிலும், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லை. அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பரவலான குழப்பமும் திசைமாற்றமும் ஏற்பட்டதாக அவர் விளக்குகிறார். இந்தியாவைப் பிரிக்கும் முடிவு இப்போது இறுதியானது. இருப்பினும், பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. மக்கள் இடம்பெயர வேண்டியிருக்குமா? எல்லைகள் சரியாக எங்கே வரையப்படும்? எந்தெந்த மாவட்டங்கள் பாகிஸ்தானின் பகுதியாக மாறும்? எந்தெந்த மாவட்டங்கள் இந்தியாவிலேயே இருக்கும்?
அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில், இந்தத் திட்டம் பெரிய அளவிலான இடப்பெயர்வைத் தூண்டுமா என்று பத்திரிகையாளர்கள் மவுண்ட்பேட்டனிடம் பலமுறை கேள்வி எழுப்பினர். இதில், “மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று அவர்கள் கேட்டனர். இதற்கு “தனிப்பட்ட முறையில் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை,” என்று வைஸ்ராய் பதிலளித்தார்.
இருப்பினும், அதன் துயரமான விளைவுகள் விரைவில் உலகிற்குப் புலப்பட்டன. அடுத்த சில வாரங்களில், துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை வன்முறை சூழ்ந்துகொண்டு, வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வுகளில் ஒன்றைத் தூண்டியது.
Original article : Mountbatten Plan at 79: How the June 3 Declaration redrew the subcontinent. -Nikita Mohta