ஜார்க்கண்டின் 'தானா பகத்'கள் (Tana Bhagats) யார்? அவர்கள் ஏன் ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்? -சுபம் டிகா

 சிறப்பு அரசியலமைப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியில், இந்த நெடுஞ்சாலையானது மூதாதையர் நிலம், காடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விவசாய வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பழங்குடியின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


பாரத்மாலா திட்டத்தின்கீழ் கட்டப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிராக ஜார்க்கண்டின் தானா பகத் சமூகம் போராட்டம் நடத்தி வருகிறது. சிறப்பு அரசியலமைப்பு விதிகளின்கீழ் பாதுகாக்கப்படும் ஒரு பட்டியல் பகுதியில் உள்ள தங்களது மூதாதையர் நிலம், காடுகள், வழிபாட்டுத் தலங்கள், விவசாய வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக இடங்களுக்கு இந்தத் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கும்லாவிலிருந்து சத்தீஸ்கர் எல்லை நோக்கி தேசிய நெடுஞ்சாலை-43 (NH-43) சாலையை அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்துவதே இந்த மோதலின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.


இந்தத் திட்டம் எதைப் பற்றியது?


ஜார்க்கண்ட்-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள 32.4 கி.மீ நீளமுள்ள இந்தச் சாலைப் பகுதி, ராய்ப்பூர்-தன்பாத் பொருளாதார வழித்தடத்தின் ஒரு அங்கமாகும். ராய்ப்பூர்-தன்பாத் விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் இது, 700 கி.மீ நீளமுள்ள, நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச்சாலையாகும் (four-lane access-controlled expressway). இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தொழில் மையங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கப் பகுதிகளுக்கு விரைவான இணைப்பை வழங்கும். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தத் திட்டம், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 16 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரமாகக் குறைக்கும்.


தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் பிரிவு 3A-ன் கீழ் ஜனவரி 2023-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று, நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை அறிவித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ஆட்சேபனைகளைக் கோரியது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2023-ல் பிரிவு 3D–ன் கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், 'செயல்முறையின் போது பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.


கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?


பழங்குடியின சமூகங்களின் பிரச்சினைகளைக் கையாளும் அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் (Fifth Schedule) கீழ் இப்பகுதி வருவதாகவும், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Scheduled Areas) செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கிராம சபைகளுக்கு, இத்தகைய திட்டங்களை ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அதிகாரம் உள்ளதென அவர்கள் வாதிட்டனர். இத்திட்டத்தைத் தொடர்வதற்கு முன்பு கிராம சபைகளிடமிருந்து எந்த ஒப்புதலோ அல்லது சம்மதமோ பெறப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம்-1996 (Panchayats (Extension to Scheduled Areas) Act (PESA)) கீழும், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு நிலம், வளங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மாநில அரசை விமர்சித்ததுடன், பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தை (PESA) அமல்படுத்தவும் தேவையான விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சரவை பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்ட (PESA) விதிகளுக்கு ஒப்புதல் அளித்தது.


"இந்தத் திட்டம் பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தை (PESA) மீறுவது மட்டுமல்லாமல், 1908-ம் ஆண்டின் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தையும் (Chotanagpur Tenancy Act (CNT)) மீறுகிறது. இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக வரலாற்றுரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தானா பகத் சமூகம், இன்று அச்சமூகம் இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது," என்று ஜமீன் பச்சாவ் சங்கர்ஷ் சமிதியின் புரவலரும் தற்காலிகத் பொறுப்புத் தலைவருமான லோத்தே ஓரோன் கூறினார்.


அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, 2022 ஜனவரியில் பிரதான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, கும்லா துணை ஆணையர் ஒரு கணக்கெடுப்பை நடத்தி, உண்மையான பாதையானது சூழல் உணர்திறன் மண்டலம் மற்றும் பால்கோட் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்வதாகக் கூறினார். பின்னர் நிர்வாகம், திருத்தப்பட்ட பாதையானது எந்தவொரு சாரணா ஸ்தல் அல்லது பழங்குடியினர் மதத் தலங்களையும் பாதிக்காது என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) “விருப்பம்-3” பாதைக்கு ஒப்புதல் அளித்தது.


எனினும், ஆதிவாசிச் செயற்பாட்டாளர்கள் இந்தக் கூற்றை மறுக்கின்றனர். “ரைடிஹ் வட்டாரத்தின் கீழ் வரும் கட்கயா கிராமத்தில் உள்ளவை உட்பட, சர்னா ஆதிவாசிகளின் சமயத் தலங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல பழங்குடிப் பூசாரிகளின் நிலங்களும், தானா பகத்களின் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இதை நாங்கள் இதனை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்வோம்,” என்று ஆதிவாசி ஆர்வலரான ஜோதி குஜூர் கூறினார்.


யார் இந்த தானா பகத்துகள்?


தானா பகத்கள் என்பவர்கள், சோட்டாநாக்பூர் பகுதியின் ஓரோன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் ஆவர். இவர்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், ஜமீன்தார்கள், வரி விதிப்பு மற்றும் பிற சுரண்டல் கொள்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பிற்காக அறியப்படுகிறார்கள். இந்த இயக்கம் 1914-ல் ஜத்ரா பகத் என்பவரால் வழிநடத்தப்பட்டது.


காலப்போக்கில், இந்த இயக்கம் காந்திய சித்தாந்தத்துடன் நெருக்கமாக இணைந்தது. இதனைப் பின்பற்றுபவர்கள் வெள்ளை உடைகள், வெள்ளைத் தொப்பிகள் அணிந்து, மூவர்ணக் கொடியை ஏந்தி, அகிம்சை கொள்கைகளைப் பின்பற்றினர். பழங்குடி ஆர்வலர்கள் மற்றும் சர்னா அறிஞர்களின் (Sarna) கூற்றுப்படி, தனா பகத்துகள் (Tana Bhagat) சமூகத்தினர் விலங்கு பலியிடுதல், மது அருந்துதல் ஆகியவற்றிலிருந்து விலகி இருத்தல் மற்றும் பிற சர்னா மற்றும் கிறிஸ்தவ ஆதிவாசி சமூகங்கள் பின்பற்றும் சில வழக்கமான மத நடைமுறைகள் உள்ளிட்ட சில கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டனர்.


தற்போது, ​​தனா பகத் சமூகத்தினர் முக்கியமாக ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கும்லா, ராஞ்சி, லோஹர்தகா, லதேஹார், சத்ரா, சிம்தேகா, குந்தி மற்றும் பலாமு போன்ற மாவட்டங்களில் உள்ளனர். இவர்களின் மக்கள்தொகை 20,000-க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சில சமூகத்தினர் சத்தீஸ்கரின் சில பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.


அரசின் நிலைப்பாடு என்ன?


கும்லா மாவட்ட நில கையகப்படுத்தல் அலுவலர் (District Land Acquisition Officer (DLAO)) மகேஷ்வர் மாத்தோவின் கூற்றுப்படி, பாரத்மாலா திட்டம் (Bharatmala project) தொடர்பாக நிர்வாகத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பும் அதிகாரப்பூர்வமாக வந்து சேரவில்லை. "எந்தவொரு எதிர்ப்பு மனுவும் எனக்கு வந்து சேரவில்லை," என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் மாத்தோ கூறினார். மேலும், தனது துறையின் பணி நிலம் கையகப்படுத்துவதுடன் மட்டுமே நின்றுவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


2023-ம் ஆண்டிலேயே நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாகவும், அதேவேளையில் பிரிவு 3G-ன் கீழான நடுவர் மன்ற நடவடிக்கைகள் (arbitration proceedings) கடந்த ஆண்டு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் விதிகளின்கீழ் ஒரு தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட ரயத்துகளுக்கு (நில உரிமையாளர்கள்) அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன என்று மாஹ்தோ கூறினார். இந்த அறிவிப்புகள் இழப்பீட்டுத் தொகையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்பதோடு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கின்றன. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) அமைப்பு மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இழப்பீடு நேரடியாக மாற்றப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கிராமவாசிகள் எழுப்பிய கவலைகள் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (Chotanagpur Tenancy (CNT)) போன்ற சிறப்பு சட்ட விதிகள் பொருந்துமா என்பது பற்றிக் கேட்டபோது, ​​1956-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின்கீழ் மட்டுமே இந்தக் கையகப்படுத்துதல் கண்டிப்பாக மேற்கொள்ளப்படுவதாக மாத்தோ தெரிவித்தார்.


தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரி எஸ்.கே. கௌதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 85 சதவீதம் பேர் கிட்டத்தட்ட 380 கோடி ரூபாய் இழப்பீட்டை ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.


இருப்பினும், “பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறு பிரிவினர் சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்டு, ‘சமூக விரோத சக்திகளைப்’ போல் நடந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவின் சில உறுப்பினர்கள் நிறுவனப் பணியாளர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது,” என கௌதம் குற்றம் சாட்டினார்.


கும்லாவின் கோட்ட வன அதிகாரி (Divisional Forest Officer (DFO)) அஹ்மத் பெலால் அன்வர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், முன்மொழியப்பட்ட 32.4 கி.மீ நீளமுள்ள மாற்றுச் சாலையில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பகுதி வனப்பகுதி வழியாகச் செல்லும் என்று கூறினார். இந்தத் திட்டத்திற்கு முதற்கட்ட வன அனுமதி ஏற்கனவே கிடைத்துவிட்டது என்றும், எனினும், பணிகளைத் தொடங்குவதற்கான இறுதி அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Original article : Who are the Tana Bhagats of Jharkhand and why are they opposing a highway project? -Shubham Tigga

Share: