தற்போதைய நிலவரம் : முப்படைகளிலும் (இராணுவம், கடற்படை, விமானப்படை) அக்னிவீரர்களைத் தொடர்ந்து பணியில் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதம் தற்போது 25 சதவீதமாக உள்ளது. இருப்பினும், நான்கு ஆண்டு பணிக்காலத்தை முடித்த பிறகு பணியில் தக்கவைக்கப்படும் அக்னிவீரர்களின் (Agniveers) சதவீதத்தை அதிகரிக்க முப்படைகளும் விரும்புகின்றன.
முக்கிய அம்சங்கள் :
அக்னிபாத் திட்டத்தின் (Agnipath scheme) கீழ் பணியமர்த்தப்பட்ட அக்னிவீரர்கள் 2023-ன் தொடக்கத்தில் தங்கள் பயிற்சியைத் தொடங்கினர். அக்னிவீரர்களின் முதல் தொகுதியினர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தங்கள் நான்கு ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்வார்கள்.
அவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். பின்னர், தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்கள் மீண்டும் வழக்கமான வீரர்களாகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இத்திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்த கடற்படைகளைத் (Navy) தக்கவைக்கும் விகிதத்தை சுமார் 75 சதவீதமாக உயர்த்த கடற்படை கோரக்கூடும் என்றும், அதேவேளையில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து சுமார் 50 சதவீதமாக உயர்த்தக் கோரக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.
தக்கவைப்பு விகிதம் (retention rate) தற்போது 25 சதவீதமாகவே உள்ளது என்ற நிலைப்பாட்டையே பாதுகாப்புப் படைகள் இதுவரை கொண்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படுவதால், அவர்களைத் தக்கவைப்பதற்கான அவசியம் உணரப்பட்டுள்ளது. சாத்தியமான வழிமுறைகளை ஆராய்வதற்காக இது குறித்து முப்படைகளுக்கும் இராணுவ விவகாரங்கள் துறைக்கும் (Department of Military Affairs (DMA)) இடையே மேலும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தகவல்களின்படி, அக்னிவீரர்களைத் தக்கவைக்கும் சதவீதத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்படாவிட்டாலும், சில சிறப்புப் பிரிவுகள் அதிக அனுபவம் வாய்ந்த, தக்கவைக்கப்பட்ட அக்னிவீரர்களிலிருந்து அதிக சதவீத வீரர்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடும். அதே வேளையில், வேறு சில பிரிவுகள், தங்கள் நான்கு ஆண்டு பணிக்காலத்தை இன்னும் நிறைவு செய்துகொண்டிருக்கும் அக்னிவீர்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவத்தின் 'பைரவ்' (Bhairav) படைப்பிரிவுகளில், வழக்கமான காலாட்படைப் பிரிவுகளைக் காட்டிலும், பணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் சதவீதம் அதிகமாக இருக்கலாம். வழக்கமான காலாட்படைப் பிரிவுகளில் நான்கு ஆண்டு பணிக்காலத்தை மேற்கொண்டுவரும் அக்னி வீரர்களின் சதவீதம் அதிகமாக இருக்கக்கூடும்.
உங்களுக்குத் தெரியுமா?
இராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) ஆகியவற்றில் ஆறு மாதப் பயிற்சி உட்பட நான்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பதற்காக 'அக்னிபாத்' திட்டம் (Agnipath scheme) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, தகுதி மற்றும் நிறுவனத்தின் தேவைகளின் அடிப்படையில், பணியில் சேர்ந்தவர்களில் 25% பேர் வரை நிரந்தரப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வீரர்களைச் சேர்க்கும் பணியை முப்படைகளும் தொடங்கியபோது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது, மருத்துவப் பிரிவின் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தவிர, மற்ற அனைத்து கடற்படைகள், விமானப்படை வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் ஆகிய அனைவரும் இத்திட்டத்தின் மூலமே பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.
இத்திட்டம் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் 'அக்னிவீரர்களாக' பெண்களைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. முன்னதாக, 2019-ம் ஆண்டில் இராணுவம் தனது 'இராணுவக் காவல் படையில்' (Corps of Military Police) பெண் வீரர்களைச் சேர்க்கும் பணியைத் தொடங்கியிருந்தது.
பணியில் உள்ள வீரர்களின் சராசரி வயதைக் குறைப்பதன் மூலம் ஆயுதப் படைகளுக்கு ஒரு "இளம் வயதுடைய கட்டமைப்பை" (youthful profile) உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அரசு கூறியிருந்தது.
இத்திட்டம் ஆயுதப் படைகளை "தொழில்நுட்ப அறிவுமிக்க மற்றும் நவீன போர் சக்தியாக" மாற்ற உதவும் என்றும், நான்கு ஆண்டு கால சேவைக்குப் பிறகு அவர்கள் பணி ஓய்வு பெறும்போது, சிவில் சமூகத்தில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஒழுக்கமான மற்றும் திறமையான இளைஞர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அது தெரிவித்தது.
இருப்பினும், இந்திய அரசின் அதிகரித்துவரும் பாதுகாப்புத் துறை ஓய்வூதியச் செலவுகள் இத்திட்டத்தைக் கொண்டுவருவதில் ஒரு முக்கியக் காரணியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இத்திட்டம் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை ஓய்வூதியச் செலவைக் குறைக்கும்.
அக்னிவீரர்களின் ஊதியம் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். மேலும், அவர்கள் ஆபத்து மற்றும் கடினமான பணிச் சூழலுக்கான படிகளைப் (risk and hardship allowances) பெறவும் தகுதியுடையவர்கள்.
இத்திட்டத்தில் 'சேவா நிதி' (Seva Nidhi) என்ற பங்களிப்புத் திட்டமும் உள்ளது. இதன்கீழ், அக்னிவீரர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 30 சதவீதத்தை பங்களிப்பார்கள். அரசும் அதற்கு இணையான தொகையைப் பங்களிக்கும். நான்கு ஆண்டுகள் முடிந்ததும், அவர்கள் இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 11.71 லட்சத்தை (வட்டியுடன்) பெறுவார்கள். இத்தொகைக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.
பணியின்போது உயிரிழப்பு நேரிட்டால், 'சேவா நிதி'த் தொகை மற்றும் அவர்களால் பணியாற்ற முடியாத காலத்திற்கான முழு ஊதியம் உட்பட ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை அவர்கள் பெறுவார்கள்.
ஊனமோ அல்லது உடல் குறைபாடோ ஏற்படும் பட்சத்தில், ராணுவ சேவையால் ஏற்பட்ட அல்லது தீவிரமடைந்த பாதிப்பின் அளவைப் பொறுத்து, அவர்கள் ரூ. 44 லட்சம் வரை பெறலாம்.
வழக்கமான சேவையில் உள்ள ஒரு வீரருக்கும், நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னிவீரருக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், வழக்கமான வீரர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுவார், ஆனால் அக்னிவீரர் பெறமாட்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு படைகளில் நிரந்தரமாகச் சேர்த்துக்கொள்ளப்படும் 25 சதவீத அக்னிவீரர்கள், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
Original article : What are the features of the Agnipath scheme? -Priya Kumari Shukla