பெண்களின் வருமானத்தையும், சுகாதாரப் பராமரிப்பையும் இணைத்தல் - சிரந்தன் சாட்டர்ஜி

 பெண்கள் தங்களின் கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் சுகாதாரப் பராமரிப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் குடும்ப முன்னுரிமைகளை மறுசீரமைக்கக்கூடும்.


இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு புரட்சிகளை சந்தித்து வருகிறது. முதலாவது பொருளாதாரப் புரட்சி (economic revolution) ஆகும். இது கடந்த சில ஆண்டுகளில், பணியிடங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு, பொருளாதாரத்தின் முறைசார்மயமாக்கல் (formalisation), டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளன.


இரண்டாவது நோய்ப்பரவல் சார்ந்த புரட்சி (epidemiological revolution) ஆகும். இந்தியா இனி தொற்றுநோய்களை மட்டுமே எதிர்கொள்ளவில்லை; நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் மனநலக் கோளாறுகள் ஆகியவை இப்போது வரையறுக்கும் பொது சுகாதார சவால்களாக மாறி வருகின்றன. இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த நாள்பட்ட நோய்களே காரணமாக உள்ளன. மேலும், இவை குடும்பங்கள் மற்றும் பொது நிதிகள் இரண்டின் மீதும் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.


பெரும்பாலான கொள்கை விவாதங்கள், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றே கருதுகின்றன. இருப்பினும், ஆக்ஸ்போர்டு ஓபன் எகனாமிக்ஸ் (Oxford Open Economics) இதழில் விரைவில் வெளியாகவுள்ள புதிய ஆய்வு ஒன்று, இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.


மருத்துவமனைகளுக்கு அப்பால் ஒரு பார்வை


இந்தியா பாரம்பரியமாக, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விரிவான காப்பீட்டு வசதி மற்றும் சுகாதாரத் துறைக்கான அதிக செலவினம் போன்ற நன்கு அறியப்பட்ட குறியீடுகள் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் முன்னேற்றத்தை அளவிடுகிறது. இந்த முதலீடுகள் இன்றியமையாதவையாகவே இருக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) போன்ற திட்டங்கள் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளன. அதேநேரத்தில், ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்றி வருகின்றன. ஆனால், சுகாதாரச் செலவினம் (healthcare spending) என்பது ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி மட்டுமே. ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் பல முக்கியக் காரணிகள் மருத்துவமனைகளுக்கு வெளியேதான் உள்ளன. சிறந்த ஊட்டச்சத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பங்களுக்குள் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுடன் கூடிய முடிவெடுத்தல் ஆகியவை இதில் அடங்கும். குடும்பங்கள் இந்தச் செயல்பாடுகளில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கினால், மக்களின் ஆரோக்கியம் மோசமடைவதால் அல்ல, மாறாக ஆரோக்கியம் மேம்படுவதால் சுகாதாரச் செலவினம் குறையக்கூடும்.


மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில், இந்தியாவின் 2018-ம் ஆண்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இயல்பான பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் சீர்திருத்தம், முறைசார் துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்த பெண்களுக்கான கட்டாய வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை, அவர்களின் முதல் மூன்று வருடப் பணிக்காலத்தில் 12%-லிருந்து 8%-ஆகக் குறைத்தது. இதன் விளைவாக, பெண்கள் தங்கள் மொத்த ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், பெண்கள் கையில் பெறும் சம்பளம் அதிகரித்தது. இது, பெண்கள் கூடுதல் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய இது ஒரு தெளிவான வாய்ப்பை உருவாக்கியது.


தேசிய அளவிலான பிரதிநிதித்துவக் குடும்பக் குழுத் தரவுகளைப் பயன்படுத்தி, இந்தக் கொள்கையால் பயனடைந்த பெண் தலைமையிலான குடும்பங்கள், ஒட்டுமொத்த சுகாதாரச் செலவினங்களை சுமார் 11.6% குறைத்துள்ளன என்பது கண்டறியப்பட்டது. மருந்துகள் மற்றும் மருத்துவர் ஆலோசனைகளுக்கான செலவுகள் குறைந்த அதேவேளையில், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தொடர்புடைய செயல்பாடுகளுக்கான (ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி உட்பட) செலவுகள் அதிகரித்துள்ளன.


இந்த ஆய்வு, இந்தியாவின் மிகப்பெரிய கண் மருத்துவமனை அமைப்புகளில் ஒன்றின் மின்னணு மருத்துவப் பதிவுகளையும் பகுப்பாய்வு செய்தது. ஏற்கனவே சுகாதார சேவைகளைப் பெற்று வந்த பெண்களைக் கணக்கில் கொண்டபிறகும், கூடுதல் வருமானம் பெற்ற பெண்களிடையே செலவினங்கள் குறைவாகவே இருந்தன.


இதன் பொருள் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பிற்கு குறைந்த மதிப்பளிக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, பெண்கள் தங்கள் கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் சுகாதாரச் சேவைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் குடும்ப முன்னுரிமைகளை மறுசீரமைக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.


வருமானத்தை யார் ஈட்டுகிறார்கள் என்பது முக்கியம் என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் நீண்டகாலமாகவே உணர்ந்துள்ளனர். எஸ்தர் டுஃப்லோ (Esther Duflo) மற்றும் அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) ஆகியோரின் ஆய்வுகள், பெண்களுக்கு வளங்களை ஒதுக்குவது குடும்பங்கள் பணத்தைச் செலவழிக்கும் விதத்தை மாற்றுகிறது என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள், கல்வி, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு ஆகியவற்றில் அதிக முதலீடுகளை உருவாக்குகின்றன. இதேபோல், வருமானம் பெறுபவரின் அடையாளம், குடும்பங்கள் வளங்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்கின்றன என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை பானர்ஜி மற்றும் நீஹாஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இந்த புதிய கண்டுபிடிப்புகள், இந்த நுண்ணறிவை சுகாதாரத் துறைக்கும் விரிவுபடுத்துகின்றன. பெண்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீண்டகால நோக்கில் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஒருவர் நோய்வாய்ப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, உடல்நல அபாயங்கள் அதிக செலவு பிடிக்கும் மருத்துவப் பிரச்சனைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் குறைப்பதில் முதலீடு செய்ய அவர்கள் அதிக வாய்ப்புள்ளது. மொத்த சுகாதார நிதி ஒதுக்கீட்டில், சொந்தப் பணச் செலவினங்கள் இன்னும் கணிசமான பங்கைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, இந்த நடத்தை மாற்றம் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.


இது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?


இந்தியாவின் மக்கள்தொகைப் பலன் (demographic dividend) என்பது, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக, அதிக பொருளாதாரப் பங்களிப்பு ஆரோக்கியமான குடும்பங்களாக மாறுவதை உறுதி செய்வதையும் சார்ந்துள்ளது. பெண்களின் வருமானத்தை அதிகரிப்பது, ஊட்டச்சத்து, தடுப்புப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் குடும்பங்களின் முதலீடுகளை மாற்றினால், வேலைவாய்ப்புக் கொள்கை என்பது சுகாதாரக் கொள்கையாக மாறும். பெண்களின் பொருளாதாரச் செயல்பாட்டை மேம்படுத்தும் கொள்கைகள், தொழிலாளர் சந்தைகளுக்கு அப்பாற்பட்ட பலன்களை உருவாக்கக்கூடும். அவை ஏற்கனவே நெருக்கடியில் உள்ள இந்தியாவின் சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தையும் குறைக்கக்கூடும்.


பல ஆண்டுகளாக, சுகாதாரம் என்பது ஒரு அத்தியாவசியமா அல்லது ஆடம்பரமா என்பது குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். குடும்பங்கள் சுகாதாரத்திற்காக மட்டும் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, நல்ல ஆரோக்கியத்தை உருவாக்குவதில் முதலீடு செய்கின்றனவா என்பதே மிகவும் பொருத்தமான கேள்வியாக இருக்கலாம். இந்த வேறுபாடு முக்கியமானது, ஏனெனில் சுகாதாரச் செலவினங்கள் ஆரோக்கியத்தின் ஒரு முழுமையான அளவுகோல் அல்ல. மருந்துகள் அல்லது ஆலோசனைகளுக்கான குறைந்த செலவு என்பது தானாகவே புறக்கணிப்பின் அறிகுறியாகிவிடாது. சில சமயங்களில், அது சிகிச்சை தேவைப்படும் நோய்கள் குறைவாக இருப்பதையும் பிரதிபலிக்கிறது. மற்ற நேரங்களில் இது சிறந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவின் வளர்ச்சி உத்தியானது, நோய்த்தடுப்பு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறையில் மற்றொரு முக்கிய அம்சம் இடம்பெற வேண்டும் என்பதை இந்தப் புதிய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அது பெண்களின் பொருளாதார மேம்பாடு (economic empowerment) ஆகும். பெண்கள் அதிகம் சம்பாதிக்கும்போது, ​​அவர்கள் பொதுவாக அதிகமாகச் செலவு செய்வதோடு நின்றுவிடுவதில்லை, அவர்கள் அதை வெவ்வேறு வழிகளில் செலவிடக்கூடும். அந்த மாறுபட்ட செலவின முடிவுகள், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக அமைதியாக மாறக்கூடும்.


சிரந்தன் சாட்டர்ஜி, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய சுகாதாரம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார்.


Original article : Linking women’s incomes and healthcare -Chirantan Chatterjee

Share: