பதவி விலகுவதன் மூலம் நீதிபதிகள் பதவிநீக்க நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா? நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு குறித்த விளக்கம். -வினீத் பல்லா

 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை (Public Accountability) உறுதிசெய்வதில்  முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறிவருகின்றனர்.


அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தாக்கல் செய்ய எடுத்த முடிவு, இந்தியாவின் நீதித்துறை பொறுப்புணர்வு கட்டமைப்பை இதுவரை செல்லாத புதியதொரு காலத்திற்கு கொண்டு செல்லும்.


ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், ஒரு நீதிபதியின் ராஜினாமா தானாகவே ஒரு நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நீண்டகால அனுமானத்திற்கு சவால்விடும் வகையில், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


நீதிபதி வர்மாவுக்கு எதிரான வழக்கு என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க (Impeachment) நடவடிக்கைகள், கடந்த ஆண்டு அவரது புதுடெல்லி இல்லத்தில், தீயில் கருகிய மற்றும் சிறிதளவில் சேதமடைந்த ரொக்கப் பணக் கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள் விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில், நீதிபதி வர்மாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புடையவர் என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, 146-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக, நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-ன் (Judges (Inquiry) Act) கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவர் உருவாக்கினார். குழு தனது விசாரணைகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, நீதிபதி வர்மா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை  வழங்கினார்.


ஒரு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 217-வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். உச்ச நீதிமன்றம் 1978-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதியின் ராஜினாமா என்பது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தீர்ப்பளித்தது. நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நாள் முதலே அது நடைமுறைக்கு வந்துவிடும். அதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கியது.


முந்தைய பதவிநீக்க விசாரணைகள் ஏன் தோல்வியடைந்தன?


இந்தியாவில் இதுவரை எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை.


2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. டி. தினகரன் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. நீதிபதி தினகரனுக்கு எதிரான விசாரணையை விசாரணைக் குழு நடத்திக்கொண்டிருந்தபோது அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவைச் செயலகம் விசாரணையின் நோக்கம் நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதே என்பதால், அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த நடைமுறையைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கருதியது. எனவே, அந்த விசாரணை நடைமுறையும், விசாரணைக் குழுவின் பணியும் பயனற்றதாக (infructuous) மாறிவிட்டது என்று மாநிலங்களவைச் செயலகம் விளக்கியது.


நீதிபதி சென் ராஜினாமா செய்தபோதும் இது போன்ற ஒரு நடைமுறையே பின்பற்றப்பட்டது. அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பே மாநிலங்களவை அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தபோதிலும், மக்களவை அந்தப் பதவி நீக்க வாக்கெடுப்பைக் கைவிட்டது.


இருப்பினும், ஒருவர் பதவி விலகினால் விசாரணை முடிவுக்கு வர வேண்டும் என்று சட்டம் வெளிப்படையாகக் கூறவில்லை என சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பொதுச் சட்டம் மற்றும் ஆளுகைத் துறைத் தலைவர் பேராசிரியரான சுபங்கர் டாம், முறைகேடு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு நீதிபதி பதவி விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை 1978-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.


நீதிபதிகள் தினகரன் மற்றும் சென் ஆகியோர் ஏற்படுத்திய முன்னுதாரணத்திற்குப் பிறகு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகலிருந்து தப்பிக்கவும், ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை  தொடர்ந்து பெறவும், ராஜினாமா செய்வதே மிகவும் எளிதான வழியாக மாறிவிட்டது என்று டாம் கூறினார். மேலும், விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், அது ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவாகவும், பொதுமக்கள் பார்வைக்கான பதிவாகவும் அந்த அறிக்கை அமையும். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான மீதான நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தகவல்களாலும், உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணை அறிக்கை ஊடகங்களில் கசிந்ததாலும், இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.






நீதிபதி தினகரன் மீதான நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதேனும் உள்எதிர்ப்பு இருந்ததா?


 2011ஆம் ஆண்டு, Justice P. D. Dinakaran மீதான பதவிநீக்க  நடவடிக்கையின்போது, அவரை விசாரித்த குழுவின் உறுப்பினராக இருந்த சட்ட அறிஞர் ஜி. மோகன் கோபால், நீதிபதி தினகரன் ராஜினாமா செய்த மூன்று வாரங்களுக்குள், விசாரணையை நிறுத்தாமல் தொடர்ந்து முடிக்க வேண்டும் என்று தன்னுடன் பணியற்றிய  குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


கடிதத்தில், கோபால் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்கீழ் நடைமுறையின் இரண்டு பகுதிகளுக்கு இடையே ஒரு வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார்: முறைகேட்டின் “விசாரணை மற்றும் நிரூபணம்” (investigation and proof) மற்றும் நாடாளுமன்றத்தால் செய்யப்படும் உண்மையான “பதவி நீக்கம்” (removal from office). குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே இறுதி இலக்கு என்று அவர் வாதிட்டார்.


ஜி.மோகன் கோபால் தனது கடிதத்தில், தவறான நடத்தைக்கான இந்தக் குறைந்தபட்ச பொறுப்புணர்வை (accountability) நடைமுறைக்குக் கொண்டுவரும் சூழலிலும், நீதிபதிகள் ராஜினாமா செய்வதன் மூலம் நடைமுறையில்  தடுக்கக்கூடிய (‘veto’) அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கக் கூடும் என்று குறிப்பிட்டார்.


இறுதியில், நீதிபதி தினகரன் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணம், விசாரணைக் குழுவில் ஏற்பட்ட காலி இடத்தால் அது செயலிழந்ததும், மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி, நீதிபதி தினகரன் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், அவரை பதவியிலிருந்து நீக்குவதே விசாரணையின் முக்கிய நோக்கம் என்பதால், அந்த நோக்கம் இனி பயனற்றதாக (moot) மாறிவிட்டது என்று கருதினார்.





தற்போது அறிக்கையைத் தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான அறிக்கையைத் தாக்கல் செய்வது இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும்.


முதலாவதாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டால், அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வரும். வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அலோக் பிரசன்ன குமார், நீதிபதி தினகரன் வழக்கில் உருவான தவறான முன்னுதாரணத்தை மக்களவைத் தலைவர் மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று கூறினார். ஏனெனில், அந்த முன்னுதாரணம் விசாரணை முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தால், ஒரு நீதிபதி தனது செயல்கள் குறித்த ஆய்வில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான செய்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


இது வெறும் பதவி நீக்கும் நடைமுறை மட்டுமல்ல; நீதிபதி தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டரா என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு பொறுப்புக்கூறல் (accountability) நடைமுறையும் ஆகும். இந்த விசாரணை அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. எனவே, அமைக்கக் குழு என்ன கண்டறிந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.


இரண்டாவதாக, இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் முக்கிய சட்ட மற்றும் நிதி விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு நீதிபதி ராஜினாமா செய்யும்போது, ​​தனது பணியிலிருந்து சாதாரணமாக ஓய்வு பெறுபவரைப் போன்ற அதே ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர் ஆவார்.


டாம் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்: இது சட்டரீதியான அல்லது கல்வி தொடர்பான விவாதம் மட்டுமல்ல. ஒரு நீதிபதி ஓய்வுக்குப் பிறகு பெறும் சலுகைகளுக்கு பொதுமக்களின் வரிப்பணமே செலவிடப்படுகிறது. இரண்டு விசாரணை ஆணையங்களால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நீதிபதி, ராஜினாமா செய்தப் பிறகு ஓய்வுக்காலச் சலுகைகளைப் பெறுவது ஏன்?


குழுவின் அறிக்கை குற்றச்சாட்டுகளை உறுதி செய்தால், கோட்பாட்டளவில் நீதிபதியின் பதவி நீக்கத்தை, அந்தப்பதவி நீக்க நடைமுறை தொடங்கிய தேதியிலிருந்தே அமல்படுத்த முடியும் என்று குமார் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் மேற்கொள்ளும் முறையான பதவி நீக்க நடவடிக்கை, அந்த நீதிபதியின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுக்காலச் சலுகைகளை நிறுத்துவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான சூழலையும் உருவாக்கக்கூடும்.


Original article : Can judges avoid impeachment by resigning? The Justice Yashwant Varma case explained. -Vineet Bhalla

Share: