நிபுணர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, மார்ச் 13 அன்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
பல மாத கால தாமதத்திற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)), தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறைக்கு (Tamil Nadu State Department of Archaeology (TNSDA)) மாநிலத்தில் உள்ள 8 வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இறுதியாக அனுமதி அளித்துள்ளது. இதில் கீழடியில் மேற்கொள்ளப்படவுள்ள 11-ஆம் கட்ட அகழாய்வும் அடங்கும்.
அதிகாரிகளின் தகவல்படி, சிவகங்கை மாவட்டத்தின் கீழடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்; தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர்; தென்காசி மாவட்டத்தின் கரிவலம் வந்தநல்லூர்; கடலூர் மாவட்டத்தின் மணிக்கொல்லை; விழுப்புரம் மாவட்டத்தின் அடிச்சனூர்; கோயம்புத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர்; சேலம் மாவட்டத்தின் தெலுங்கனூர்–மாங்காடு; மற்றும் நாகப்பட்டினத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் துறையின், 'ஆய்வு மற்றும் அகழாய்வுப் பிரிவு' (Exploration and Excavation Section) சார்பில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 'பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாத்தல் விதிகள், 1959'-ன் (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) கீழ், மார்ச் 13 அன்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
2025 ஜூலை மாதத்தில், 2025–26 மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த இந்த இடங்களில் அகழாய்வு நடத்த தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை (TNSDA), இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) அனுமதியை கோரியது. தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அனுமதி கோரி மீண்டும் இந்தியத் தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஏனெனில், தமிழ்நாட்டில் அகழாய்வு பருவம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நடைபெறுகிறது.
சமீபத்தில், ஆண்டின் இரண்டாம் பாதியில் பருவமழை காரணமாக களப்பணிகள் பாதிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள, ஒரு காலத்தில் 'காவிரிப்பூம்பட்டினம்' என்று அழைக்கப்பட்ட பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரின் கடற்கரைப் பகுதியில், நீருக்கடியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் மாநில தொல்லியல் துறை இந்தியத் தொல்லியல் துறையிடம் கடிதம் எழுதியிருந்தது. அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீருக்கடியில் ஆய்வு மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்தியத் தொல்லியல் துறை வழங்கியது. அதன் பின்னர், பூம்புகார் கடற்கரைப் பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
Original Link: ASI permits T.N. Archaeology Department to conduct excavations in Keeladi, seven other sites.