மும்பை மேயரின் 'சிவப்பு விளக்கு' (Lal Batti) சர்ச்சை: வாகனங்களில் சுழல் விளக்குகளைப் பயன்படுத்துவது குறித்த விதிகள் யாவை? - ஜீஷான் ஷேக்

சட்டப்படி, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் சிவப்பு நிறச் சுழல் விளக்குகளைப் (red beacon lights) பயன்படுத்த அனுமதி இல்லை. அவசரக்காலச் சேவைகள் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமே இத்தகைய ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.


மும்பை மேயர் ரிது தாவ்டேயின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. விதிமுறைகளை மீறி இந்த விளக்குகள் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மேயரின் கார் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாகச் செல்லும் வாகனத்தில் இருந்த அந்த விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)) கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச்  மாதம் 15-ஆம் தேதியன்று  தெரிவித்தது.


மகாராஷ்டிராவில் வாகனங்களில் ஒளிரும் சுழல் விளக்குகளை பயன்படுத்துவது குறித்த விதிகள் மீது இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்ன?


கடந்த வாரம், மேயரின் அதிகாரப்பூர்வ காரின் முன்பக்கத்தில் சிவப்பு மற்றும் நீலநிற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின.


இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, மேயரின் கார் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாகச் செல்லும் வாகனத்தில் இருந்த சுழல் விளக்குகளை பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) ஞாயிற்றுக்கிழமையன்று அகற்றியது. மாநகராட்சிப் பொறுப்பாளர்கள் பதவியேற்கும்போது அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக வாகனங்கள் வழங்கப்படுவதாகவும், இந்த விதிமீறல் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக அந்த விளக்குகள் நீக்கப்பட்டதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


விதிமுறைகள் என்ன கூறுகின்றன?


இந்தியாவில் வாகனங்களில் சுழல் விளக்குகள் அல்லது ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்துவது முக்கியமாக 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின்கீழ் (Central Motor Vehicles Rules, 1989) கட்டுப்படுத்தப்படுகிறது; எந்தெந்த வகை வாகனங்கள் இத்தகைய விளக்குகளைப் பொருத்தலாம் என்பதை இந்த விதிகளே தீர்மானிக்கின்றன.


பல ஆண்டுகளாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் தங்களின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் சாலையில் வெளிப்படுத்துவதற்காக "லால் பத்தி" (lal batti) என்று அழைக்கப்படும் சிவப்பு நிறச் சுழல் விளக்குகளைத் தங்கள் வாகனங்களில் பயன்படுத்தி வந்தனர்.


இந்தியச் சாலைகளில் நிலவிவந்த "விஐபி கலாச்சாரத்தை" (VIP culture) ஒழிக்கும் நோக்கில், ஒன்றிய அரசு 2017-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்து, நாடு முழுவதும் அரசு வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது. இந்த நடைமுறை மாற்றம் மே மாதம் 1-ஆம் தேதி, 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களைச் சாமான்ய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பழைய வழக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 


எந்தெந்த வாகனங்கள் ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்தலாம்?


காவல்துறை வாகனங்கள், மருத்துவ ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேரிடர் மீட்பு வாகனங்கள் போன்ற அவசரக்கால அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே தற்போது ஒளிரும் விளக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் மற்ற ஓட்டுநர்களை எச்சரிக்கவும், அவசரச் சூழல்களில் இந்த வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கு வழிவிடவும் பெரிதும் உதவுகின்றன.


சிவப்பு மற்றும் நீல நிற விளக்குகள் பொதுவாக காவல்துறை அல்லது அவசரக்கால வாகனங்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். எனவே, அரசியல்வாதிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்துவது, விதிமீறல்கள் குறித்த சந்தேகங்களை மக்களிடையே எழுப்பக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அனுமதியின்றி இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் (Motor Vehicles Act) அபராதம் அல்லது தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் போக்குவரத்துத் துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர்.


இந்த விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளின் (Central Motor Vehicles Rules (CMVR)) ஒரு பகுதியாக இருப்பதால், இவை மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கின்றனர். உரிய அனுமதியின்றி தனியார் அல்லது அரசு வாகனங்களில் இத்தகைய விளக்குகளைப் பொருத்துவது போக்குவரத்து காவல்துறையினரின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


இதற்கான அரசியல்ரீதியான எதிர்வினை என்னவாக இருந்தது?


முன்னாள் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததோடு, விதிகள் எவ்வாறு அலட்சியப்படுத்தப்பட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டன என்றும் கேள்வி எழுப்பினார்.


இருப்பினும், மேயர் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாகவும், சிவப்பு விவிளக்குகளைப் பயன்படுத்துவதற்கான தடை குறித்து அவருக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.


இந்த விவகாரத்தைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது அந்த வாகனத்தின் முகப்பில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்டிருந்ததை அறிந்ததாகவும் பட்னாவிஸ் கூறினார். மேலும், இதில் மேயர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் மாநிலத்தில் ஏற்கனவே சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதி அவருக்கும் தெரியும் என்றும் மேயர் அவர்கள் மீது அவர் தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுவதாகவும் பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Original Link: Mumbai Mayor’s ‘lal batti’ controversy: What are the rules on using beacon lights on vehicles?


Share: