பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜவஹர்லால் நேருகூட ஒருமுறை இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உலகளாவிய சூழலையே காரணமாகக் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: அன்றைய காலகட்டத்தில் உலகச் சூழல் உண்மையில் எப்படி இருந்தது, அந்த சவால்களை இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது?
சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) உருளைகளை மக்கள் பதுக்குவதாகவும், அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதற்கு ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் மத்திய அரசைத் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த வாரத் தொடக்கத்தில், உலகளாவிய விநியோகத் தடைகளை சரிசெய்ய உலகத் தலைவர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், கள்ளச் சந்தை விற்பனையைத் தடுக்கவும், வதந்திகள் பரவுவதை நிறுத்தவும் மாநில அரசுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய சூழலை நேரு அவர்கள் முன்பு குறிப்பிட்ட ஒரு கருத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், முன்னொரு காலத்தில் பண்டிட் நேரு அவர்கள் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி செங்கோட்டை உரையில், வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நடந்த போர் இந்தியாவில் விலைவாசியை உயர்த்தியதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய நெருக்கடிகள் நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இன்று உலகம் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி மக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி குறிப்பிட்ட நேருவின் கருத்தை மீண்டும் சுட்டிக்காட்டினார். உக்ரைன் போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 1951-ஆம் ஆண்டிலேயே கொரியப் போர் இந்தியாவின் பணவீக்கத்தைப் பாதிக்கும் என்று நேரு குறிப்பிட்டிருந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால், இன்று உலகம் முழுவதும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் போர் இந்தியாவைப் பாதிக்கும் என்று சொன்னால் அதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
பணவீக்கம் மற்றும் கொரியப் போர் குறித்து ஜவஹர்லால் நேரு கூறியது என்ன?
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது 1951-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாடு சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்தியா தனது ஒற்றுமையையும் திறன்களையும் இன்னும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு இடைவிடாத விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், இன்றைய சவால்கள் நிறைந்த உலகில் விழிப்புடன் இல்லாதவர்கள் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மக்கள் விலைவாசி உயர்வு மற்றும் கள்ளச் சந்தை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிக்கல்கள் இரண்டு காரணங்களால் ஏற்படுகின்றன என்று அவர் விளக்கினார். ஒன்று கொரியப் போர் போன்ற நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் என்றும் மற்றொன்று நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய உள்நாட்டு காரணங்கள் என்றும் குறிப்பிட்டார்.
கள்ளச் சந்தை என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை குற்றம் என்றும், அதனை அரசு மிகக் கடுமையான முறையில் கையாள வேண்டும் என்றும் நேரு கூறினார். இருப்பினும், கடந்த காலங்களில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் கையாளப்பட்ட விதம் எதிர்பார்த்த அளவிற்குத் திறம்பட அமையவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலைமை எவ்வாறு இருந்தது?
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) வெளியிட்ட இந்தியாவின் புள்ளிவிவர ஆண்டு புத்தகத்தின் ஒரு அத்தியாயம், முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் (1951–56) தொடக்கத்தில் இந்தியா அகதிகளின் வருகை, கடுமையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற பெரும் சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய மையப்படுத்தப்பட்ட திட்டங்கள், நாட்டின் முக்கியப் பொருளாதார இலக்குகளை நோக்கி வளங்களைச் சரியாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நேருவுக்கு முன்னதாகவே, அன்றைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் அவர்கள் தனது 1951-52-ஆம் ஆண்டிற்கான நிதிநிலைத் திட்ட உரையில் கொரியப் போரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருந்ததால், அது மிகுந்த கவலைக்குரிய காலம் என்று அவர் குறிப்பிட்டார். அசாம் மாநில நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் இந்தச் சூழல் மேலும் மோசமடைந்ததாகவும், அதே சமயம், உலகம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளேயே கொரியப் போர் தொடங்கியதும், மீண்டும் ஒரு மிகப்பெரிய உலகளாவிய மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியதாக சி.டி. தேஷ்முக் விவரித்தார்.
போரின் காரணமாக சணல் பொருட்கள், கச்சா பருத்தி, பருத்திக் கழிவுகள் மற்றும் கச்சா கம்பளி போன்ற இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததாக தேஷ்முக் சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்த பொருட்களின் மீது ஏற்றுமதி வரிகளை அரசாங்கம் விதித்தது. மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட ராணுவக் கட்டமைப்பு நடவடிக்கைகளால் அடிப்படைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது என்றும் இது சந்தையை நிலைப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
1958-ஆம் ஆண்டின் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் தேசிய வருமானம் 11 முதல் 12 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டத்திற்கான செலவு எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தபோதிலும், தேசிய வருமானம் உண்மையில் 18 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் இந்தத் திட்டத்தை ஒரு மிகப்பெரிய வெற்றி என்று அங்கீகரித்தது.
மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அறிக்கை, நிர்ணயிக்கப்பட்ட 2.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கைவிட, 3.6 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியை இந்தியா எட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கடைசி இரண்டு ஆண்டுகளில் கிடைத்த நல்ல விளைச்சலே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டது. நாட்டில் வறுமை மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை நீடித்தபோதிலும், அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் போன்ற இலக்குகள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன.
கொரியப் போருக்கு இந்தியா எவ்வாறு எதிர்வினை ஆற்றியது?
பனிப்போரின்போது அணிசேரா கொள்கையைப் பின்பற்றிய இந்தியா, அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் (United States of Soviet Russia (USSR)) இடையே நிலவிய போட்டியைச் சமாளிக்க, தனது ராஜதந்திரரீதியான முயற்சிகள் மற்றும் பொருள் உதவிகளின் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் நிறுத்தத்திற்கு பங்களித்தது.
கொரியா 1910-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை ஜப்பானின் ஆட்சியின்கீழ் இருந்தது. போர் முடிந்தபிறகு, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேச நாட்டுப் படைகள் கொரியாவைத் தற்காலிகமாக இரண்டு பகுதிகளாகப் பிரித்தன: அதன்படி வட பகுதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், தென்பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவினையானது அமெரிக்காவால் வரையப்பட்டு, சோவியத் யூனியனால் (USSR) ஏற்றுக்கொள்ளப்பட்ட 38-வது அட்சரேகை (38th Parallel) கோட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில், கொரியா எவ்வாறு சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்த கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்தன.
1950-ஆம் ஆண்டு வடகொரியா தென்கொரியாவின்மீது படையெடுத்தபோது, அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐநா பாதுகாப்பு கூட்டமைப்பு (UN Security Council (UNSC)) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்துடன் (USSR) நெருக்கமான உறவைக் கொண்டிருந்தபோதிலும் இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்தது. இருப்பினும், நிலைமையை மென்மையாகக் கையாளும் விதமாக, அந்தப் படையெடுப்பை "ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, "அமைதிக்கு ஏற்பட்ட இடையூறு" என்று பயன்படுத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்குக் கொண்டு சென்றபோது, வடகொரியா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவாக சீனாவும் போரில் இணைந்தது. இந்தியாவின் போர்நிறுத்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தாலும், போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பாக இந்தியா முன்வைத்த ஒரு முக்கியமான யோசனை 1953-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தூதர் வி. கே. கிருஷ்ண மேனன் மிக முக்கியப் பங்காற்றினார்.
சியோலில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவல்படி, ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின்கீழ் (UN Command) இந்தியா 627 பேரைக் கொண்ட ராணுவ மருத்துவக் குழுவை அனுப்பியது; இந்தக் குழு சுமார் 2,20,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கி சேவையாற்றியதாகவும் கூறப்படுகிறது.
Original Link: PM Modi says ‘Nehru blamed inflation on Korean war’: What did the former PM say, India’s links to that war.