இந்தியாவின் முறைசாராத் தொழிலாளர்வளம் ஏன் பிழைப்புக்கும் வளர்ச்சியின்மைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது? — புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பொதுவாகப் பெரிய நிறுவனங்கள், விரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களைச் சுற்றியே உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சியின்  முக்கியபகுதி, எந்தவிதமான மாற்றமின்றி இருக்கும் ஒரு துறையான, பதிவு செய்யப்படாத வேளாண்மை அல்லாத துறையையும் சார்ந்துள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை  மேம்படுத்தி, உள்ளூர் தேவையை ஆதரிக்கிறது.


ஆனால், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்தத் துறையின் விரிவாக்கம் முன்னேற்றத்தைக் குறிக்கிறதா அல்லது முறைசாராத் தன்மை நீடிப்பதை மறைக்கிறதா?


புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation’s (MoSPI)) பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) 2025-ன் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இதை வெளிக் கொண்டுவருகின்றன. வெளிப்படையாகத் தெரியும் பொருளாதாரத்தின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத, வேளாண்மை அல்லாத சிறு உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் வர்த்தக அலகுகள் போன்ற பெரிய வலையமைப்பு ஒன்று உள்ளது.


இந்தத் துறை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் உள்ளூர் தேவையை நிலைநிறுத்துகிறது. பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கெடுப்பின்படி, இந்தத் துறையானது 7.92 கோடி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 12.81 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரங்களில் ஒன்றாக அமைகிறது.

அளவு மற்றும் வேலைவாய்ப்பு விரிவாக்கத்தின் கணக்கீடு


முறைசாரா நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ஆம் ஆண்டில் 7.34 கோடியிலிருந்து, 2025-ஆம் ஆண்டில் 7.92 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 8 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த வளர்ச்சி, சிறிய பொருளாதார அலகுகள் தொடர்ந்து புதிதாக உருவாகி நிலைத்து நிற்பதை காட்டுகிறது. இந்த எண்ணிக்கைகளைப் பார்ப்பதால், துறைகளுக்கிடையில் இந்த வளர்ச்சியின் பகிர்வு பெரும்பாலும் மாற்றமின்றி இருப்பது தெரிகிறது: உற்பத்தித் துறையில் 27 சதவீதம், வர்த்தகத் துறையில் 31 சதவீதம், மற்றும் ‘சேவைத்’ துறையில் 42 சதவீதம் உள்ளது.


மேலும், வேலைவாய்ப்பும் விரிவடைந்து, தொழிலாளர்களின் எண்ணிக்கை 12.81 கோடியாக  அதிகரித்துள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை  மேம்படுத்தி, உள்ளூர் தேவையை ஆதரிக்கிறது. ஆனால், இந்த வேலைவாய்ப்பின் தன்மை மாற்றமின்றி உள்ளது. 62 சதவீத தொழிலாளர்கள் உரிமையாளர்-இயக்குநர்களாக (owner-operators) உள்ளனர். அதே, சமயம் 24 சதவீதம் மட்டுமே ஊதியம் பெறும் பணியாளர்களாக உள்ளனர். இது  துறையின் வளர்ச்சியை  வெளிக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு அதிகரித்தாலும், அது பெரும்பாலும் சுயதொழில் மூலமும் குடும்ப தொழிலாளர்களும் மூலமும்  நடைபெறுகிறது. இந்தத் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால், நிலையான மற்றும் ஊதியம் அடிப்படையிலான வேலைகளை அதிகமாக உருவாக்கவில்லை.


படம் 1: 2023-24 முதல் 2025 வரை இந்தியாவின் பதிவுசெய்யப்படாத துறையின் விரிவாக்கம்: நிறுவனங்கள், மொத்த மதிப்பு கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பு 






நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் அதிகரிப்புடன் சேர்த்து, இந்தத்துறையின் உற்பத்தியிலும் ஒரு உயர்வைப் பதிவு செய்துள்ளது. 2023-24 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 10.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) சேவைகள் துறை 42%  பங்கு வகிக்கிறது; இதனைத் தொடர்ந்து வர்த்தகம் (37%) மற்றும் உற்பத்தித் துறை (21%) பங்கு வகிக்கின்றன. இது பொருட்களை குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமலேயே வாங்கி விற்பனை செய்வதில் அதிகரிக்கும் மாற்றதைக் காட்டுகிறது.


உற்பத்தித் துறை இன்னும் முக்கியமானதாக இருந்தாலும், அது ஒப்பீட்டளவில் மிதமான வளர்ச்சியைக் காட்டுகிறது. குறைந்த மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறு அளவிலான உற்பத்தி அலகுகளின் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது. சேவைகள் மற்றும் வர்த்தகத்தை நோக்கிய இந்த மாற்றம், முறைசாராப் பொருளாதாரத்திற்குள் ஒரு மாறுபட்ட கட்டமைப்பு உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இது பொருளாதாரச் செயல்பாடுகளை வடிவமைப்பதில், தேவை சார்ந்த மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட சேவைகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.


படம் 2: 2023-24 முதல் 2025 வரை இந்தியாவின் பதிவுசெய்யப்படாத பொருளாதாரத்தில் துறைசார் வளர்ச்சி: நிறுவனங்கள், GVA மற்றும் வேலைவாய்ப்பு 



ஆதாரம்: 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) 


உற்பத்தித்திறன், ஊதியங்கள் மற்றும் வருவாய்கள் பற்றி 


பொருளாதார முன்னேற்றத்தின் முக்கியக் குறியீடுகளில் ஒன்று உற்பத்தித்திறன் ஆகும். 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு தரவுகளின்படி, ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டல் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகளின் மதிப்புக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீட்டின் மதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் 1.49 லட்சத்திலிருந்து 1.56 லட்சமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி 4.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், 2023-24-ஆம் ஆண்டில் இருந்த 5.6 சதவீதத்திலிருந்து இது குறைந்துள்ளது.


மேலும், மேம்பாட்டின் அளவு மிதமானதாகவே உள்ளது. தொழில்நுட்பம், திறன்கள் அல்லது செயல்பாடுகளின் அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த மூலதனத்துடன் செயல்படுகின்றன, பாரம்பரிய முறைகளில் நம்பிக்கை வைக்கின்றன. மேலும், உற்பத்தித்திறனில் மாற்றங்களை செய்யாமல்  உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப  சேவை செய்கின்றன.

முடிவுகள், பதிவு செய்யப்படாத (unincorporated) வேளாண்மை அல்லாத துறையில் ஊதியங்கள் அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. பணி செய்துவரும் தொழிலாளரின் சராசரி ஆண்டு ஊதியம் 3.88 சதவீதம் அதிகரித்து, 2023–24-ல் 1,41,071-லிருந்து 2025-ல் 1,46,550-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உயர்வு மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. இது, அதிகமான உற்பத்தி மூலம் கிடைக்கும் பலன்கள் தொழிலாளர்களின் வருமானமாக மாற்றப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், இது முறைசாராச் சூழல்களில் தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனை வெளிக் காட்டுகிறது.


பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் முன்னேற்றம்


2025-ஆம் ஆண்டு  பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கையின் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, பெண்களை உரிமையாளர்களாகக் கொண்ட தனி உரிமையாளர் நிறுவனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இவற்றின் பங்கு 26 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், சில கட்டமைப்புரீதியான தடைகள் தொடர்ந்து நிலவி வருவதன் காரணமாக, மாற்றம் குறைவான அளவே உள்ளது.


குறிப்பாக, பிணையச் சொத்துக்கள் (நிலம், தங்கம் போன்றவை) அல்லது முறையான நிதிசார் வரலாற்றுக் குறிப்புகள் (முந்தைய கடன்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவை) இல்லாத பெண் தொழில்முனைவோருக்கு, கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு இல்லை. சந்தையுடனான இணைப்புகள் பெரும்பாலும் வலுவற்ற நிலையில் இருப்பதால், அத்தகைய நிறுவனங்களின் செயல் எல்லை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன. இதன் விளைவாக, பெண்களால் முன்னெடுக்கப்படும் பல தொழில்முயற்சிகள் குறைவாகவும், வீட்டிலிருந்தே இயங்குபவையாகவும், குறைந்த மதிப்புடைய செயல்பாடுகளிலேயே குவிந்திருப்பவையாகவும் நீடிக்கின்றன.




மேற்கு ஆசியப் போர் முறைசாரா துறைக்கு எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது


 இது போன்ற  கட்டமைப்பு காரணிகள் அமைப்புசாரா துறையை எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றுகின்றன. மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர், நன்கு அறியப்பட்ட பரிமாற்ற வழிகள் (transmission channels) மூலம் இந்தத் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


இந்தியா தனது கச்சா எண்ணெயில் 80 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது. இதில் கணிசமான பகுதி மேற்கு ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக வருகிறது. இந்தப் போர் எரிபொருள் விலைகளில் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் உள்ளீட்டு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறைந்த லாப நோக்கத்தோடு செயல்படும் சிறிய, பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.


முறைசாரா துறையின் மூலம் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 80 சதவீதம் வர்த்தகம் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கிறது என்றும், இவை இரண்டும் தளவாட மற்றும் எரிசக்தி செலவுகளால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவை என்று  2025-ஆம் ஆண்டு  பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கை காட்டுகிறது. அதேநேரத்தில், மேற்கு ஆசியாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் பல பிராந்தியங்களில் உள்ள குடும்பங்களின் தேவையை ஆதரிக்கின்றன. இந்தப் பணப் பரிமாற்றங்கள் பலவீனமடைந்தால், உள்ளூர் நுகர்வு குறைகிறது. முறைசாரா துறையைப் பொறுத்தவரை, இத்தகைய அதிர்ச்சிகள் வெளிப்புறமானவை அல்ல, அவை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


நிறுவனங்களைக் கணக்கிடுவதிலிருந்து அவற்றை வலுப்படுத்துவது வரை


பதிவு செய்யப்படாத துறையின் மிக முக்கியமான  ஒன்று  அதன் முறைசாராத் தன்மையே ஆகும். திவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கை தரவுகளின்படி, ஏறக்குறைய 95 சதவீத நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமான அல்லது கூட்டாண்மை அலகுகளாகச் செயல்படுகின்றன. இந்தக் கட்டமைப்பிற்கு  வரம்புகள்  உள்ளன.


ஒருபுறம், இது நெகிழ்வுத்தன்மை, குறைந்த நுழைவுத் தடைகள் மற்றும் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப விரைவாகத் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மறுபுறம், இது முறையான நிதியைப் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது. விரிவாக்கத் திறனைக் குறைக்கிறது மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் தன்மையைக் குறைக்கிறது.


 முறை சாராத்துறை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஏறக்குறைய 8 கோடி நிறுவனங்களும் 12.8 கோடி தொழிலாளர்களும் வலிமையை அல்ல, அளவையே பிரதிபலிக்கின்றனர். உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால், வேலைகள் முறைசாராத் தன்மையுடனே இருக்கின்றன. உற்பத்தித்திறன் மேம்பட்டு வருகிறது. ஆனால், அது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பெண்கள் முறைசாராத்துறையில் நுழைகிறார்கள். ஆனால், முன்னேறவில்லை. இது ஒரு மாற்றத்தின் கதை அல்ல. இது ஒரு விடாமுயற்சியின்  கதையாக உள்ளது


 இந்தத்துறை வளர்ந்து வருகிறதா என்பது இனி கேள்வியல்ல. அது மாறி வருகிறதா என்பதே முக்கிய கேள்வியாகும். நிறுவனங்களைக் கணக்கிடுவதிலிருந்து அவற்றை வலுப்படுத்துவதை நோக்கி கொள்கை மாற்றம் பெறும்வரை, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் வளமானது, உயிர்வாழ்விற்கும் தேக்கநிலைக்கும் இடையில் சிக்கிக்கொண்டே இருக்கும்.


புஷ்பேந்திர சிங், மும்பையில் உள்ள சோமையா வித்யாவிகார் பல்கலைக்கழகத்தில் பொருளாதார உதவிப் பேராசிரியராகவும், அர்ச்சனா சிங், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தில் பாலினம் மற்றும் பொருளாதார உதவிப் பேராசிரியராகவும் உள்ளனர்.


Original article : Why India’s informal workforce is trapped between survival and stagnation —  Pushpendra Singh and Archana Singh

Share: