தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியை தமிழ்நாட்டின் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் ஏன் தடை விதித்தது? -அமால் ஷேக்

சேதுபதியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவோ அல்லது வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்ய உத்தரவிடவோ போவதில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான இந்தப் பிரச்சினை முறையாகப் பரிசீலிக்கப்படும் வரை, தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதே  இடைக்கால உத்தரவின் நோக்கம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.  


திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி எண் 185-ல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக  சட்டமன்ற உறுப்பினர் R. சீனிவாச சேதுபதி, புதன்கிழமை நடைபெறவிருந்த தமிழ்நாட்டின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை   உச்சநீதிமன்றத்தை நாடினார். மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த விவகாரத்தை  தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்களிடம் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு (floor test) முன்பு, புதன்கிழமையன்று இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிட ஒப்புக்கொண்டார்.



நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் N. செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, "மறு உத்தரவு வரும் வரை, தமிழக சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லாத் தீர்மானம்,   அல்லது வேறு எந்த வாக்கெடுப்பு நடவடிக்கை உட்பட, எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வாக்களிப்பதற்கோ அல்லது வேறுவிதமாகப் பங்கேற்பதற்கோ" சேதுபதிக்குத் தடை விதித்திருந்தது.


தேர்தல் தொடர்பான சர்ச்சைகள், தேர்தல் மனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை, ‘சர்ச்சைக்குரிய விவகாரம் என்பது   தேர்தலின் செல்லுபடித்தன்மை பற்றியது மட்டுமல்லாமல், ஒரு அரசாங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய தேர்தல் ஆணையைம்  நடவடிக்கையாகப் பயன்படுத்துவது பற்றியதாகவும் இருக்கும்போது,  நீதிமன்றங்கள் அமைதியாக இருக்க முடியாது’ என்ற கோட்பாடாக மாற்றியமைத்துவிட முடியாது என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


சர்ச்சைக்கான காரணம் என்ன


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 185-வது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரான சேதுபதி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் K.R. பெரியகருப்பனைவிட  ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.


இரண்டு அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் 18-மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (electronic voting machine (EVM)) வாக்குகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். மனுவின்படி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எண் 185-க்குச் சொந்தமான தபால் வாக்குச்சீட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே பெயர் இருந்ததால், அந்த வாக்குச்சீட்டு தவறான தேர்தல் அதிகாரியைச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரி, அதைச் சரியான தொகுதிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அந்த வாக்குச்சீட்டை நிராகரித்துள்ளார்.


தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின்கீழ், தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்கை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றுவதற்கு சட்டப்பூர்வமான வழிமுறை எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது. விதி 54A(2)-ன்கீழ் உள்ள நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட வாக்குகளை மட்டுமே இந்த விதிகள் கையாளுகின்றன. ஒரு தபால் வாக்கை ஒரு தேர்தல் அதிகாரியிடமிருந்து மற்றொரு தேர்தல் அதிகாரிக்கு மாற்றுவதற்கு வழிவகை செய்யும் எந்த விதியும் இல்லை.


சென்னை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது


சேதுபதியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவோ அல்லது மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடவோ இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இந்தச் சிக்கல் முறையாக ஆராயப்படும் வரை, தேர்தல் செயல்முறையின் நேர்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே தனது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.


ஒரு வாக்கு வித்தியாசம், கூறப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முரண்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய தபால் வாக்குச்சீட்டு ஆகிய மூன்று காரணிகளை நீதிமன்றம் முக்கியமானவையாகக் கண்டறிந்தது.


ஒரு வாக்கால் தீர்மானிக்கப்படும் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல; அது முடிவைத் தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்று நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.


தபால் வாக்குகள் கையாளப்பட்ட விதத்தை நீதிமன்றம் விமர்சித்தது. ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு தபால் வாக்குகள் தவறுதலாக அனுப்பப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, தேர்தல் கட்டமைப்பில் ஒரு இடைவெளி நிலவுவதை அதிகாரப்பூர்வ பிரதிவாதிகளின் நிலைப்பாடே வெளிப்படுத்துகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


மேலும், நீதிமன்றம் தேர்தல் அதிகாரியை நேரடியாக விமர்சித்தது. வாக்குச்சீட்டு எண் 50-க்கு உரியதல்ல என்பதை அவர் கவனித்தவுடன், "தேர்தல் கட்டமைப்பில்  உள்ள  கோட்பாட்டிற்கு ஏற்ப, அந்த அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச செயல், அந்த வாக்குச்சீட்டை நிராகரிப்பதற்குப் பதிலாக, உடனடியாகத் திருத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீட்டெடுத்து, எண் 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தகுதிவாய்ந்த தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பதே ஆகும்.


தேர்தல் அதிகாரிகள் என்பவர்கள், படிவங்களையும் நடைமுறைகளையும் செயலற்ற முறையில் பாதுகாப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் ஒரு குடிமகனால் அளிக்கப்படும் ஒவ்வொரு செல்லுபடியான வாக்கும் அதன் சட்டப்பூர்வமான இலக்கைச் சென்றடைவதை உறுதிசெய்யக் கடமைப்பட்ட அரசியலமைப்புப் பணியாளர்கள் ஆவர்" என்று நீதிபதி அமர்வு கூறியது.


பிரிவு 329(b)-ஐ நீதிமன்றம் எவ்வாறு கையாண்டது


இந்த வழக்கின் முக்கிய அம்சம் அரசியலமைப்பின் பிரிவு-329(b) ஆகும். இதன்படி, தேர்தல் தொடர்பான புகார்களை 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் முறையான 'தேர்தல் மனு' தாக்கல் செய்வதன் மூலமாக மட்டுமே அணுக முடியும். மற்றபடி நீதிமன்றங்கள் இதில் தலையிடவோ அல்லது வழக்குகளை விசாரிக்கவோ முடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக, அரசியல் சாசனப் பிரிவு 226-ன்கீழ் உள்ள பேராணை (Writ) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.


சென்னை உயர் நீதிமன்றம் இந்த வரம்பை ஏற்றுக்கொண்டது. சட்டத்தின் 80 மற்றும் 100-வது பிரிவுகளின்கீழ் தேர்தல் மனு தாக்கல் செய்வதன் மூலம் மட்டுமே பெரியகருப்பனுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று சேதுபதி வாதிட்டார்.


இருப்பினும், உயர்நீதிமன்றம், 2000-ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் vs  அசோக் குமார் (Election Commission of India v. Ashok Kumar (2000)) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியது. அந்தத் தீர்ப்பின்படி, தேர்தல் நடைமுறையை பாதிக்கும் தடைகளை நீக்கவோ அல்லது ஆதாரங்களைப் பாதுகாக்கவோ தேவைப்படும்பட்சத்தில், நீதிமன்றங்கள் தலையிடலாம் என்ற ஒரு விதிவிலக்கை நீதிமன்றம் அங்கீகரித்தது.


அந்த வாதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தேர்தல் முடிவையே சவால் செய்யும் ஒரு வழக்கமான மனு அல்ல என்றும், மாறாக, தேர்தல் ஆவணங்களைப் பாதுகாப்பது மற்றும் தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்குகள் தொடர்பான நடைமுறை வெற்றிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு "அசாதாரணமான உண்மைச் சூழ்நிலையிலிருந்து" (extraordinary factual situation) எழும் ஒரு கோரிக்கை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது..


தேர்தல் தொடர்பான விசாரணை தொடங்கும் முன்பே, அதற்கு அடிப்படையான தேர்தல் ஆவணங்கள் அழிந்துவிட்டால், தேர்தல் மனுவின் மூலம் கிடைக்கும் தீர்வே பயனற்றதாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியது.


மக்களாட்சியானது வாக்குச்சீட்டின் வாயிலாகவே சுவாசிக்கிறது. தேர்தல்கள் தொடர்பான விவகாரங்களில், இந்திய அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தும்போது, ​​நீதிமன்றமானது அரசியலமைப்பு  விதிகள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படக் கடமைப்பட்டுள்ளது. இடைக்காலப் பாதுகாப்பு என்ற பெயரில், தேர்தல் மனுவுக்காக ஒதுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட எல்லைக்குள் நீதிமன்றம் நுழைய முடியாது. அதே நேரத்தில், காலப்போக்கில் உண்மை மறைந்துவிடக்கூடாது என்பதற்காக, முக்கியமான தேர்தல் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய மற்றும் விதிவிலக்கான கோரிக்கை வைக்கப்படும்போது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக முடங்கிப் போய்விட முடியாது.


நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன் நிலைமையை மாற்றுகிறது?


முன்மொழியப்பட்ட அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, சாதாரணமாக இருந்திருக்க வேண்டிய ஒரு தேர்தல் சர்ச்சையை முக்கியமான ஒன்றாக மாற்றிவிட்டது. வழக்கமாக, தேர்தல் தொடர்பான மனுக்கள் முடிவுக்கு வர மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகும். ஆனால், உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய காரணத்தை முன்வைத்தது: ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் சேதுபதியின் வாக்கு தீர்மானமிக்கதாக இருந்து, அதன் பிறகு அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை நடைமுறையில் சரிசெய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.


ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட தேர்தல் முடிவில் உள்ள கடுமையான தேர்தல் முறைகேடுகள் குறித்த முதற்கட்ட ஆய்வு நிலுவையில் இருக்கும் நிலையில், அவையின் அதிகாரச் சமநிலையை மாற்றக்கூடிய ஒரு நடவடிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை மட்டுமே நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்று நீதிமன்றம் கூறியது. சேதுபதி பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவரது வாக்கு தீர்க்கமானதாக அமைந்தால், மனுதாரருக்கும் தேர்தல் செயல்முறையின் தூய்மைக்கும் ஏற்பட்ட பாதிப்பை    சரிசெய்ய இயலாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 


எனவே, ஒரு தேர்தலின் முடிவை எதிர்ப்பதற்கும், அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் விவகாரங்களில் சர்ச்சைக்குரிய அந்த தேர்தல் வெற்றியை உடனடியாகப் பயன்படுத்துவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதோடு, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.


Original Link: Why Madras HC barred TVK MLA Seenivasa Sethupathi from Tamil Nadu Assembly floor test.


Share: