ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. -குஷ்பூ குமாரி

ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை அறிவித்துள்ளது. இந்தச் சட்டங்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை?


தற்போதைய செய்தி?


ஒன்றிய அரசு இறுதியாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை, 2026-ஆம் ஆண்டு மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பல அரசாணைகள் வாயிலாக அறிவித்துள்ளது. ஊதியச் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் ஆகிய இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், முந்தைய 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. தொழிலாளர் சட்டம் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்தத் தொழிலாளர் சட்ட வீதிகளுக்கு ஏற்ப விதிகளை இறுதி செய்ய வேண்டும். இந்தச் சட்ட விதிகள், முதலாளிகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் விதிமுறை இணக்கத் தேவைகளை எளிதாக்குவதையும், தொழிலாளர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்புகளில் சீரான தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


2. ஊதியச் சட்டம் (Code on Wages): அறிவிக்கப்பட்ட இறுதி விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்களை, ‘ஊதியக் குறியீடு (மத்திய) விதிகள், 2025’-ன் இறுதி வடிவத்திலிருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இந்த அளவுகோல்கள் “ஒன்றிய அரசால் சிறப்பு அல்லது பொது ஆணை மூலம் தனியாகக் குறிப்பிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை ஊதியம்: புதிய ஊதிய விதிகளின்படி, “குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம், உடை, வீட்டுவசதி மற்றும் ஒன்றிய அரசால் அவ்வப்போது பொருத்தமானதாகக் கருதப்படும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் ஒரு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அடிப்படை ஊதியம் (floor wage) என்பது ஒரு குறைந்தபட்ச வரம்பாகச் செயல்படும். இந்த வரம்பிற்குக் கீழே மாநிலங்கள் தங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க இயலாது. நாட்டின் பல்வேறு தொழில் மையங்களில்  கடந்த சில ஆண்டு  காலமாகத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விதிமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு சாதாரண வேலை நாள் என்பது எட்டு மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற முறைகளில் (மாதாந்திர அல்லது வாராந்திர ஊதியம்) பணியாற்றுபவர்களுக்கு, அவர்களின் வாராந்திர மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாத வகையில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படும். இது தவிர, ஊழியர்களுக்கான ஓய்வு இடைவேளை நேரங்கள் 'தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020'-ன்கீழ் தனியாக நிர்ணயிக்கப்படும்.









அம்சம்

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்

தொழிலாளர் சட்ட

சீர்திருத்தங்களுக்குப்  பின் 

வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல்

கட்டாய நியமனக் கடிதங்கள் இல்லை

அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள் வழங்குவது வெளிப்படைத்தன்மை, வேலைப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலை உறுதி செய்கிறது.

சமூகப் பாதுகாப்பு காப்பீடு

வரையறுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு 

சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.

குறைந்தபட்ச ஊதியம்

பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதியம்; தொழிலாளர்களின் பெரும் பிரிவினர் இதன்கீழ் வரவில்லை.

ஊதியச் சட்டம் குறைந்தபட்ச ஊதியம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியதுடன், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையையும் வழங்குகிறது.

தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு

பணி வழங்குபவர்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற சட்டவிதிகள்  ஏதுமில்லை.

பணி வழங்குபவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனையை வழங்க வேண்டும்.

சரியான நேரத்தில் ஊதியம்

சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாததற்கான காரணம்

பணி வழங்குபவர்கள் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிதி நிலைத்தன்மையை அளிக்கிறது. பணி அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த மன உறுதியை அதிகரிக்கிறது.

பெண்களின் பணியிடப் பங்கேற்பு

இரவு நேரப் பணிகளிலும் குறிப்பிட்ட சில தொழில்களிலும் பெண்களின் வேலைவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

அனுமதி மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பெண்கள் அனைத்து நிறுவனங்களிலும் இரவிலும் அனைத்து வகையான பணிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

இணக்கச் சுமை

பல்வேறு தொழிலாளர் சட்டங்களின்கீழ் பல பதிவுகள், உரிமங்கள் மற்றும் வருவாய் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒற்றைப் பதிவு, அகில இந்திய ஒற்றை உரிமம் மற்றும் ஒற்றை வருமான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.


3. சமூகப் பாதுகாப்புச் சட்டம்: ஒன்றிய அரசின் சமூகப் பாதுகாப்பு விதிகள், 2025-ன்கீழ், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமைப்புசாராத் தொழிலாளியும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பதிவை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புதிய கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும், அத்தகைய பணியாளரை ஒன்றிய அரசின் குறிப்பிட்ட இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அந்தத் தொழிலாளர்கள் பணியிலிருந்து விலகும் விவரங்களையும் அந்த இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.


கிக் பணியாளர்கள் (Gig workers)


சமூகப் பாதுகாப்புச் சட்டம் முதன்முறையாக கிக் பணியாளர்களை அங்கீகரித்தது. கிக் பணியாளர்கள் என்பவர்கள், வழக்கமான முதலாளி-பணியாளர் உறவுகளுக்கு வெளியே பணிபுரிந்து அல்லது ஒரு பணி ஏற்பாட்டில் பங்கேற்று, அதன் மூலம் வருமானம் ஈட்டும் "சுயதொழில் செய்பவர்கள்" (self-employed) என வரையறுக்கப்படுகிறார்கள்.


கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்காக ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியமும் அமைக்கப்படவுள்ளது. அதில் மக்களவை, மாநிலங்களவை, அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள், மாநிலங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.


4. தொழிலாளர் உறவுகள் சட்டம்: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் உறவுகள் விதிகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள், சமமான முதலாளி-தொழிலாளர் பிரதிநிதித்துவம், அதிகபட்சம் 10 உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் ஒரு குறைதீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும்.


— 300 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்கள், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு (ஆட்குறைப்பு/தற்காலிகப் பணிநீக்கம்) இனி அரசாங்க அனுமதி தேவையில்லை. இதற்கு முன்பு இந்த வரம்பு 100 பணியாளர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


— வேலைநிறுத்தம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்போ அல்லது அறிவிப்பு கொடுத்த 14 நாட்களுக்குள்ளோ அறிவிப்பு கொடுக்காமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று சட்ட விதி கூறுகிறது.


— வேலைநிறுத்தம் என்பதற்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்செயல் விடுப்பு (Casual Leave) எடுத்தால், அதுவும் வேலைநிறுத்தமாகவே கருதப்படும். திடீர் வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


5. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (Occupational Safety, Health and Working Conditions (OSH)) விதிமுறை: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிகளின்படி, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிமுறையின்கீழ் இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்கு முன்பும் இரவுப் பணியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் அந்தப் பெண் ஊழியரிடமிருந்து முறையான எழுத்துப்பூர்வமான சம்மதத்தைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.


— பெண் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வெளிச்சம் நிறைந்த பணியிடத்தை வழங்குவதுடன், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அலுவலகத்திற்கு வந்து செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகளையும் நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும்.


— ஒவ்வொரு ஊழியருக்கும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பணி நியமனக் கடிதத்தை வழங்க வேண்டும். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இலவச உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும், வெவ்வேறு பணி நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்குச் சமமான ஊதியம், வேலை மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.


— புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விவரங்களை, முதலாளிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.


— 500 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு தொழிற்சாலையும் அல்லது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பிற வகை தொழிற்சாலைகளும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும்.


பல்வேறு வகையான ஊதியங்கள்


1. அடிப்படை ஊதியம் என்பது, ஒரு முதலாளி சட்டப்படி ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய மிகக்  குறைவான தொகையாகும். ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான முந்தைய அளவுகோல்கள் சேர்க்கப்பட்டிருந்தன, அவை இதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.

(i) ஒரு நபருக்கு ஒரு நாளைக்குச் நிகர அளவில் 2,700 கலோரிகள் உணவு கிடைக்க வேண்டும்.


(ii) தொழிலாளி, துணவி/துணைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு சாதாரண தொழிலாளர் குடும்பத்திற்கு, ஒரு ஆண்டிற்கு 66 மீட்டர் துணி வழங்கப்பட வேண்டும்.


(iii) உணவு மற்றும் உடைக்காகச் செய்யப்படும் செலவில் 10% தொகையை வீட்டு வாடகையாகக் கொள்ள வேண்டும். இது தவிர, எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர செலவுகளைக் குறைந்தபட்ச ஊதியத்தில் 20%-ஆகக் கருத வேண்டும்.


(iv) குழந்தைகளின் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் எதிர்பாராத அவசரச் செலவுகளுக்காக, குறைந்தபட்ச ஊதியத்தில் 25% தொகையை ஒதுக்க வேண்டும்.


இந்தச் சூத்திரம், 1991-ஆம் ஆண்டின் ரெப்டகோஸ் பிரெட் (Reptakos Brett) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புக்கும், 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற 15-வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (Indian Labour Conference (ILC)) பரிந்துரைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. 


2. வாழ்வாதார ஊதியம்: ஒரு தொழிலாளி தனது அடிப்படைத் தேவைகளான இருப்பிடம், உடை, உணவு மற்றும் போக்குவரத்து போன்றவற்றை நிறைவு செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியமே இதுவாகும். கல்வி, மருத்துவம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது அவர்களுக்கு வழிவகை செய்கிறது. இது பொதுவாக அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக இருக்கும்.


3. நியாயமான ஊதியம்: தொழில்துறையின் லாபம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இருவருக்கும் நியாயமாக இருக்கும் ஊதியமே இதுவாகும். பொதுவாக, இது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மற்றும் வாழ்வாதார ஊதியத்திற்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும்.


Original Link: Centre notifies rules for all 4 labour codes.


Share: