சிந்து நதிநீர் ஒப்பந்தம்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முட்டுக்கட்டைகளை எவ்வாறு கையாண்டன? - அமிதாப் சின்ஹா

பாகிஸ்தான் "நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவைக் கைவிடும் வரை", இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச மயமாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.


கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.  முடிவின்படி, இரு நாடுகளின் வழியாகப் பாயும் சிந்து, ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் மற்றும் பியாஸ் ஆகிய 6 முக்கிய எல்லை தாண்டிய நதிகளின் நீரைப் பகிர்வதை இதுவரை நிர்வகித்து வந்த 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு, தற்போதைக்கு தான் கட்டுப்பட்டதாக இந்தியா கருதவில்லை என்பதாகும்.


இந்தியாவின் முடிவால் பாகிஸ்தானுக்குச் செல்லும் வழக்கமான நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இருநாட்டு உறவுகளுக்கு இடையே, கடந்த ஓராண்டில் இதுவே மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக ஒரு சர்வதேச சட்ட ரீதியான வழக்கை உருவாக்குவதற்கும், ஐக்கிய நாடுகள் சபை (United Nations (UN)), சர்வதேச நீதிமன்றம், உலக வங்கி மற்றும் பிற மூன்றாம் தரப்பு அமைப்புகளின் தலையீட்டைக் கோருவதற்கும் பாகிஸ்தான் கடந்த ஓராண்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐ.நா. பாதுகாப்பு சபையின் (UN Security Council (UNSC)) தற்காலிக உறுப்பினராகப் பணியாற்றி வரும் பாகிஸ்தான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறது.


மறுபுறம், இந்தியா இந்த நதிகளில் நீண்டகாலமாகத் தள்ளிப்போன திட்டங்களை முடிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தியா தனது பகுதியில் எதைக் கட்ட முயன்றாலும், அதற்கு பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்தித் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 


இந்தப் பிரச்சினை தொடர்ந்து   அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் அச்சுறுத்தியது போல, இது ஒரு கட்டத்தில் ஒரு பெரிய சட்ட அல்லது தூதரக மோதலாகவோ அல்லது ஆயுத மோதலுக்கான காரணமாகவோ தீவிரமடைய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமையன்று, பாகிஸ்தான் "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நம்பகத்தன்மையுடனும் மாற்றமுடியாத வகையிலும் கைவிடும் வரை" சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) நிறுத்தி வைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தப் பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள்


சிந்து நதி நீர் அமைப்பின் கீழ்மட்டப் பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால், இந்த ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவால் பாகிஸ்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விவசாயத் தேவைகளில் பெரும் பகுதி — அதாவது 70 சதவீதத்திற்கும் மேல், சிந்து நதி அமைப்பின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. தண்ணீர் தொடர்ந்து பாய்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி நீர் ஆணையர்களின் வழக்கமான கூட்டங்களும், தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளும் தடைபட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்குள் பாயும் நீரின் அளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீர்ப் பயன்பாட்டைத் திட்டமிடுவதிலும், வெள்ளம் அல்லது வறட்சி அபாயங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் பாகிஸ்தானின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.


நிலைமையை மாற்றத் தானாக எதையும் செய்ய முடியாத சூழலில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகப் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உடன்படிக்கையின்படி, எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி இல்லை என்பதுதான் அவர்களின் முக்கியமான சட்டப்பூர்வ வாதம் ஆகும். அதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று பாகிஸ்தான் கூறுகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) கடந்த ஆண்டு தொடங்கிய பாகிஸ்தானின் தற்காலிக உறுப்பினர் பதவி, தற்போது அவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்பு சபையில் அவர்கள் பலமுறை மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும், சம்பந்தமே இல்லாத தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் போதுகூட இந்த விவகாரத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.


உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த மாதம் எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் விவாதங்களை நடத்தியது. இயற்கை வளங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுவான செழுமைக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, மிரட்டலுக்கோ அல்லது மோதலுக்கோ பயன்படக்கூடாது என்று கூறியது. மேலும், இதே கொள்கை நீர் வளங்களுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டதோடு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்தும் பேசியது.


இதை ஒரு பாதுகாப்புப் பிரச்சினையாகக் கட்டமைத்தல்


பாகிஸ்தான் சிந்து நதி நீர் விவகாரத்தை பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரு பிரச்சினையாகச் சித்தரித்து வருகிறது. இது ஐநா பாதுகாப்பு சபையின் நேரடி கவனத்திற்குரிய விஷயம் என்பது அவர்களின் வாதம். மேலும், இதனை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவும் உருவகப்படுத்தி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) மனு அளிக்குமாறு தனது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஆதரவு அமைப்புகளையும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின்கீழ் செயல்படும் சிறப்பு அறிக்கையாளர்கள், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவைப் பற்றி விளக்கம் கேட்டு இந்தியாவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தானின் முயற்சிக்கு ஓரளவிற்குப் பலன் கிடைத்துள்ளது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது அடிப்படையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு இருதரப்பு ஒப்பந்தம் என்றும், இதில் உலக வங்கி வெறும் உதவியாளராகவும் நடைமுறைச் சிக்கல்களைக் கவனிக்கும் ஒரு மூன்றாம் தரப்பாகவும் மட்டுமே செயல்படுகிறது என்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாகும். எனவே, இந்த ஒப்பந்த விவகாரத்தில் உலக வங்கியின் வரம்பிற்கு அப்பாற்பட்டு வந்த தொடர்பையோ அல்லது கடிதத்தையோ இந்தியா முற்றிலுமாகப் புறக்கணித்தது.


பாகிஸ்தான் எழுப்பிய சில சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்த (IWT) நடைமுறையின்கீழ் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த ஆண்டு ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவு, ஏற்கனவே மன்றத்தின் பரிசீலனையில் உள்ள விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரத்தை அந்த மன்றத்திடம் இருந்து பறிக்காது என்று கூறியது. இதைத் தனக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகக் கருதிய பாகிஸ்தான், இந்தியாவின் முடிவு சர்வதேச சட்டத்தின்படி தவறானது என்பதற்கு இதுவே சான்று என்று கூறியது.

இருப்பினும், இந்தியா இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதையே ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது. உலக வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு நடுநிலை நிபுணர் மூலம் ஏற்கனவே ஒரு மாற்றுத் தீர்வு முறை செயல்பாட்டில் இருக்கும்போது, இது போன்ற மற்றொரு இணையான அமைப்பை உருவாக்குவது தேவையற்றது என்று இந்தியா வாதிட்டது. இதனால், இந்த மன்றத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பதோடு, அதன் தீர்ப்புகளையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.


பாகிஸ்தானின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்புக் குழுவின் (UNSC) ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது அல்லது இது தொடர்பாக ஏதேனும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய வைப்பதுதான். இல்லையெனில், எப்படியாவது இந்தச் சிக்கலை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் முயல்கிறது. இதில் எதுவும் நடப்பதற்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், ஐநா ஆவணங்களில் இந்த விவகாரம் தொடர்பானப் பதிவுகளைத் தொடர்ந்து அதிகப்படுத்துவதே பாகிஸ்தானின் முயற்சியாக இருந்து வருகிறது.


உள்கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் அதன் அவசியம்.


சர்வதேச அரங்குகளில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பாகிஸ்தானின் வாதங்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்தாலும், அந்த ஒப்பந்த விதிகளின்படி தனக்கு உரிமையுள்ள நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே இந்தியா முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது.


இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரைக்கூட, இந்தியா குறிப்பிட்ட அளவிலும், நீரை முழுமையாகப் பயன்படுத்தாத முறையிலும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேசமயம், கிழக்கு நதிகளான ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் ஆகியவற்றின் நீரை இந்தியா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் (IWT) வழிவகை செய்கிறது.


ஆனால், இந்த விதிமுறைகளை இந்தியா திறம்பட பயன்படுத்திக்கொள்ளவில்லை. தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டங்களைத் தாமதப்படுத்துவதும், அவற்றின் செலவை அதிகரிப்பதுமே பாகிஸ்தானின் முதன்மையான நோக்கமாக இருந்துள்ளது.


கடந்த ஆண்டு எடுத்த தனது முடிவினால் ஏற்படக்கூடிய எதிர்பாராத சட்டரீதியான  பின்விளைவுகளைச் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. பஹல்காம் உடனடித் தூண்டுதலாக இருந்தபோதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அதேசமயம், இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்று வாதிடுவதற்கு இந்தியாவிடம் வேறு சில காரணங்களும் உள்ளன.


இந்தியாவின் கருத்தின்படி, கடந்த 65 ஆண்டுகளில் கள நிலவரம் கணிசமாக மாறியுள்ளது. எனவே, தற்போதுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் புதிய சூழலுக்குப் பொருந்தாத ஒன்றாக உள்ளது. இந்தியப் பகுதியில் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது, காலநிலை மாற்றம் நீர் இருப்பு மற்றும் நதி நீர் ஓட்டத்தில் புதிய நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவைகள் இப்போது முற்றிலும் மாறுபட்டுள்ளன. அதோடு, புதிய தொழில்நுட்பங்கள் இந்த ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளைத் தேவையற்றதாக ஆக்கியுள்ளன. இந்தியாவின் இந்தத் தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான வாதத்தைப் புதிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் வலுப்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைதியாகப் பணியாற்றி வருகிறது.



Original Link: Indus Waters Treaty: One year since Operation Sindoor, how India and Pakistan have approached deadlock.


Share: