ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில், இந்திய அரசு தனது சேவை விதிகளில் சில மாற்றங்களைச் செய்தது. இதன் மூலம், 62 வயதிற்கு உட்பட்ட, பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்கள் (Lt Generals) மற்றும் அதற்கு இணையான பதவியில் உள்ள அதிகாரிகள் - முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Staff (CDS)) நியமிக்கப்பட தகுதியுடையவர்கள் என்ற சட்டபூர்வமான அடிப்படையை உருவாக்கியது. இருப்பினும், இந்த நடவடிக்கை இந்தியாவின் மதிப்புமிக்க மற்றும் நீண்டகால இராணுவ மரபுகளில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் (Lieutenant General) என்.எஸ்.ராஜா சுப்ரமணி, இந்தியாவின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக (CDS) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையின் (Department of Military Affairs (DMA)) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே மாதம் 31-ஆம் தேதி முதல் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். மறைந்த ஜெனரல் பிபின் ராவத் மற்றும் செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் பதவியேற்ற ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவின் மூன்றாவது முப்படைகளின் தலைமை தளபதியாக இவர் இருப்பார். ஜெனரல் அனில் சவுகானின் மூன்று ஆண்டு காலப் பதவி மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் 2019-ஆம் ஆண்டில், மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவி உருவாக்கப்பட்டது. அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், தனது ராணுவத் தளபதி பதவிக்காலம் முடிந்த பிறகு, ஜனவரி மாதம் 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இருப்பினும், டிசம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் ராவத் காலமானார். இதனால் ஆயுதப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், போர் கட்டளைகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் சுயசார்பை அதிகரித்தல் போன்ற அவர் திட்டமிட்டிருந்த பல சீர்திருத்தங்கள் முழுமையடையாமல் நின்றன. தற்போதைய 2026-ஆம் ஆண்டிலும்கூட, இந்தச் சீர்திருத்தங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. தெளிவற்ற காரணங்களால், ஒன்றிய அரசு சுமார் ஒரு வருடத்திற்கு புதிய முப்படைத் தலைமைத் தளபதியை நியமிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டின் இறுதியில்தான் இரண்டாவது முப்படைத் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டார்.
மோடி அரசாங்கம் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் (மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரி) அனில் சௌஹானைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ஜெனரல் (நான்கு நட்சத்திர தகுதிநிலை) பதவி உயர்வு அளித்ததால், இந்த நியமனம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது ஒரு அசாதாரண நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு, 62 வயதிற்குட்பட்ட பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்கள் (Lieutenant Generals) மற்றும் அதற்கு இணையான அதிகாரிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் சேவை விதிகளை மாற்றியது. இருப்பினும், இந்த முடிவு இந்தியாவின் நீண்டகால இராணுவ மரபுகளை மாற்றியமைப்பதாக அமைந்தது.
இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவது என்பது மிகவும் புனிதமான மற்றும் கௌரவமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்தி அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது ஒரு வழக்கத்திற்கு மாறான முன்னுதாரணமாக அமைந்தது. ஓய்வு பெற்ற அதிகாரியை முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) நியமிப்பதற்காக சேவை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பொதுவாக இராணுவ விதிகள் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதையோ அல்லது அவர்களை மீண்டும் நேரடிப் பணியில் சேர்ப்பதையோ அனுமதிக்கும் விதிகள் இல்லை.
அந்த வகையில், ஜெனரல் (General) சௌஹான் அவர்கள் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், அது ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியது. தற்போது லெப்டினன்ட் ஜெனரல் (Lt Gen) சுப்ரமணி அவர்களை அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) அரசாங்கம் விரைவாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அதே பழைய முறை இப்போதும் பின்பற்றப்படுவது தெளிவாகத் தெரிகிறது: அதாவது, ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரியைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு நான்கு நட்சத்திர தகுதிநிலை வழங்கிப் பதவி உயர்வு அளிக்கும் நடைமுறை மீண்டும் தொடர்கிறது.
தற்போது பணியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரிகளில், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு பொருத்தமான ஒருவரை அரசாங்கத்தால் கண்டறிய முடியவில்லை என்பதையே இந்த நடைமுறை உணர்த்துகிறது. இதன்காரணமாகவே, ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர அதிகாரிகளையும் இந்தப் பதவிக்கு பரிசீலிக்க அரசாங்கம் தனது தேடலை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி அவர்கள் மிகவும் திறமைமிக்க ஒரு அதிகாரி ஆவார். அவர் ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் உள்ளிட்ட, ஒரு மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட ராணுவ அதிகாரிக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். இவரைப் போன்றே இதே அளவிலான அனுபவங்களைக் கொண்ட பல ஓய்வுபெற்ற அதிகாரிகளையும்கூட, முப்படைத் தலைமைப் தளபதி (CDS) பதவிக்கு பரிசீலனை செய்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், சுப்ரமணி அவர்களுக்குச் சாதகமாக அமைந்த ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (National Security Council Secretariat (NSCS)) அவர் வகித்து வரும் இராணுவ ஆலோசகர் பொறுப்பாகும். இது ஜெனரல் அனில் சௌஹானின் தொழில்முறைப் பயணத்தோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது. அவரும் செப்டம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) பொறுப்பேற்பதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 2021-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (NSCS) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, முதல் முடிவு என்னவென்றால், தேசிய பாதுகாப்புக் குழு செயலகத்தில் (NSCS) நியமிக்கப்படுவது, முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) பதவி உயர்வு பெருவதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வு பெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகள், குறிப்பாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்களிடையே, அரசாங்கம் ஒரு விரிவான தேர்வு முறையை மேற்கொள்கிறது.
மோடி அரசாங்கம் இராணுவப் படைத் தலைவர்களை நியமிப்பதில் பணி மூப்பு (seniority) முறையையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஆனால், முப்படைத் தலைமைத் தளபதி பதவியைத் தேர்ந்தெடுக்கும்போது தகுதி அல்லது திறமை (merit) என்பதை அடிப்படையாகக் கொள்கிறது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகுதி எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இவ்வளவு முக்கியமான பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன? இந்தப் பதவி நாட்டின் இராணுவப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தகுதி எவ்வாறு அளவிடப்படுகிறது மற்றும் ஓய்வு பெற்ற எந்த அதிகாரிகள் குழுவிலிருந்து வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
தற்போதைய ஆதாரங்களின்படி, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மட்டுமே முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முப்படைகளில் இராணுவம் மிகப்பெரியது என்பதால், அந்தப் பதவிக்கு அதுவே மிகவும் பொருத்தமானது என்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் நீண்டகால நம்பிக்கையை இந்த நியமன நடைமுறை காட்டுகிறது.
தற்போதைய பிராந்தியப் போர்கள், நவீனகால மோதல்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை என்பதையும், மிக உயரிய இராணுவ நிலைகளில் பல்வேறு அனுபவங்களும் நிபுணத்துவமும் தேவை என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு நாட்டின் நலனுக்காக எல்லை தாண்டிய இராணுவத் திறனை மேம்படுத்துவதும் பயன்படுத்துவதும் தற்போது வல்லரசு நாடுகளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கான தேர்வை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்துவது, கடற்படை (Navy) மற்றும் விமானப்படையைச் (Air Force) சேர்ந்த சமமான திறன் கொண்ட அதிகாரிகளைப் புறக்கணிப்பதாக அமையலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது பணியில் இருக்கும் மூன்று நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரிகளில் (Three-star officers) ஒருவரைப் படைத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமையாகும்; இது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பும் ஆகும். இருப்பினும், ஓய்வு பெற்ற ஒருவரை முதலில் தேர்ந்தெடுத்து, அவரைப் முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்குத் தயார் செய்து, பிறகு அவருக்கு நான்கு நட்சத்திர தகுதிநிலை வழங்கி பதவி உயர்வு அளிக்கும் தற்போதைய நடைமுறை (இதற்கு முறையான விதிகள் எதுவும் இல்லாதபோதும்), தேவையற்ற அரசியல் தலையீட்டைக் கொண்டுவருகிறது. மேலும், இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசாங்கம் தற்போது பணியில் இருக்கும் எந்தவொரு மூன்று அல்லது நான்கு நட்சத்திர தகுதிநிலை கொண்ட அதிகாரியையும், முப்படைத் தலைமைத் தளபதி (CDS) பதவிக்கு தகுதியானவராகக் கருதாதது ராணுவ அதிகாரிகளுக்கு வழக்கத்திற்கு மாறான ஒன்றாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது. மேலும், புதிய முப்படைத் தலைமைத் தளபதிக்கு முன்னால் பல கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சவாலான பொறுப்பை ஏற்கும் அவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெனரல் சுப்ரமணி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
சி. உதய பாஸ்கர், புது டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வுகளுக்கான சங்கத்தின் (SPS) இயக்குநராக உள்ளார்.
Original Link: Why the CDS appointment procedure demands scrutiny.