மேற்காசிய நெருக்கடி, உரக் கொள்கை சீர்திருத்தத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களின் இருப்பு என்பதே ஒரு பிரச்சனையாக இருக்கும்போது, ஒருவர் எந்த அளவிற்கு மானியம் வழங்க முடியும்?


இந்திய வேளாண் தொழிலாளர்கள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைத்து, "இயற்கை விவசாயத்திற்கு" மாற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு நடைமுறைக்குச் சாத்தியமில்லாததாக இருக்கலாம். இருப்பினும், இந்த அழைப்பின் முக்கிய நோக்கம் தேவையற்ற உரப் பயன்பாட்டைக் குறைப்பதும், வேளாண் தொழிலாளர்கள் உரங்களை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் மட்டுமேயாகும். இது நியாயமான மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும். பயிர்கள் நல்ல மகசூலைத் தரத் தேவையான நைட்ரஜன் (Nitrogen (N)), பாஸ்பரஸ் (Phosphorus (P)), பொட்டாசியம் (Potassium (K)) மற்றும் சல்பர் (Sulphur (S)) போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை உரங்கள் வழங்குகின்றன. ஆனால், இந்த உரங்களைத் தயாரிக்கத் தேவையான இயற்கை எரிவாயு, பாஸ்பேட், பொட்டாஷ் மற்றும் சல்பர் ஆகியவற்றின் இருப்பு இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது, எனவே இந்தியா இறக்குமதியை பெருமளவு சார்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களாலும், சமீபகாலம் வரை உலக உர வர்த்தகத்தில் சுமார் 30% பங்கைக் கொண்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதாலும், இந்தியாவின் இந்த இறக்குமதி சார்ந்த நிலை இப்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், உரங்களுக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கியதன் மூலம் விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணியை செலவிட்டது மட்டுமல்லாமல், யூரியா (Urea) மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்ற செறிவூட்டப்பட்ட உரங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும் தவறுகளைச் செய்துள்ளன. இது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களில் கடுமையான சமநிலையின்மையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு, விவசாயிகள் அம்மோனியம் சல்பேட் (20.5% நைட்ரஜன் மற்றும் 23% சல்பர்) மற்றும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (16% பாஸ்பரஸ் மற்றும் 11% சல்பர்) போன்ற உரங்களைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர், இவை யூரியா மற்றும் டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்றவற்றால் மாற்றப்பட்டன. இவற்றில் முறையே நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் மிக அதிக அளவில் (46%) உள்ளன, ஆனால் மற்ற முக்கிய அல்லது சிறு ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த உரங்கள் திறமையற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றன. யூரியாவில் உள்ள நைட்ரஜனில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிர்களால் உறிஞ்சப்படுகிறது, மீதமுள்ளவை அம்மோனியா வாயுவாக மாறுகின்றன அல்லது நைட்ரேட்டாக மாறி நிலத்தடி நீருடன் கலந்து வீணாகின்றன. எனவே, ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக வழங்கக்கூடிய உரங்களே வேளாண் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றன.


அரசாங்கம் உரங்களின் சில்லறை விலையை அவற்றின் இறக்குமதிச் செலவுக்கு இணையாக உயர்த்த வேண்டும் அல்லது விலைக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க வேண்டும். தற்போது உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்திற்குப் பதிலாக, சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு சுமார் ரூ.5,000 வீதம் நேரடியாகப் பணமாக வழங்கலாம். உர மானியம் மற்றும் பிரதமர் கிசான் திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-Kisan)) ஆகியவற்றிலிருந்து சேமிக்கப்படும் நிதியை, வேளாண் தொழிலாளர்களுக்கான நேரடி வருமான ஆதரவுத் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, தற்போதைய உர மானிய முறை மற்றும் விலைக் கட்டுப்பாட்டு முறை நிதிரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் நீடிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உரங்கள் கிடைப்பதே பெரும் சிக்கலாக இருக்கும்போது, அதற்கு எவ்வளவு மானியம் வழங்க முடியும் என்பதற்கும் ஒரு வரம்பு உண்டு. எனவே, இந்தச் சூழலை நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டு வரும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Original Link: West Asia crisis opens space for fertiliser policy reform.


Share: