இந்தியா வெப்பமடைந்து வருகிறதா? - ஜேக்கப் கோஷி

 உலகின் அதிக வெப்பம் மிகுந்த நகரங்கள் பெரும்பாலும் இந்தியாவில்  உள்ளனவா? 'நகர்ப்புற வெப்பத் தீவுகள்' (Urban Heat Islands) எப்படி உருவாகிறது? எல் நினோ (El Niño) பருவமழையில் தாக்கதை ஏற்பத்துமா?


தற்போதைய செய்தி :


இந்தியாவின் பல நகரங்கள் கடும் வெப்ப அலைகளினால் தகித்து வருகின்றன. தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில்  ஏற்படும் தாமதம்  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்களில் 'எல் நினோ' (El Niño) உருவாகுவதற்கான உறுதியான சாத்தியக்கூறுகள், வெப்பம் தொடர்பான பாதிப்புகளை அதிகரிக்க செய்யும்.


2026-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான மாதமாக இருந்ததா?


பகல் நேர வெப்பநிலையின்படியோ அல்லது தேசிய அளவிலோ அல்ல. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மே 2026-க்கான கணிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 'இயல்பான' அல்லது 'இயல்புக்குக் குறைவான' அளவில் இருக்கும் என்றும், இயல்பைவிட அதிகமான அளவுகள் தென் தீபகற்பம் மற்றும் வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலான சூழல்களில், 'இயல்பான' என்பது ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் உள்ள 30 ஆண்டுகால சராசரி வெப்பநிலையைக் குறிக்கிறது. இது கணிசமாக மாறுபடும். இமயமலையில் உள்ள  கீழ்சரிவுகள், கிழக்குக் கடற்கரை மாநிலங்கள், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இயல்பைவிட அதிகமான வெப்ப அலை நாட்கள் கணிக்கப்பட்டன. அதே நேரத்தில், மே மாதத்திற்கான அகில இந்திய மழைப்பொழிவு நீண்டகால சராசரியைவிட 110% அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. தெளிவான அறிகுறி நீண்டகால அடிப்படையில் உள்ளது: 1961-2020 காலகட்டத்தில் மைய வெப்ப அலை மண்டலம் (Core Heatwave Zone (CHZ)) குறித்த இந்திய வானிலை ஆய்வுமையத்தின் ஆய்வில், வெப்ப அலைகளின் நிகழ்வு பத்தாண்டுக்கு 0.1 நாட்களாகவும், அதன் கால அளவு பத்தாண்டுக்கு 0.44 நாட்களாகவும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இவை இரண்டுமே புள்ளிகளின்ப்படி முக்கிய  மாற்றங்களகும். மேலும், இந்த ஆய்வில், பகல் நேரத்தைவிட இரவு நேரம் வேகமாக, பத்தாண்டுக்கு 0.21°C என்ற அளவில் வெப்பமடைவதும் கண்டறியப்பட்டது. நாட்டில் உள்ள மத்திய வெப்ப மண்டலத்தில், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும், மேலும் மராத்வாடா, விதர்பா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய வானிலை துணைப் பிரிவுகளும் அடங்கும். பல ஆண்டுகளாக வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதோடு, நீண்டு கொண்டே வருகின்றன. ஆனால், 2026-ஆம் ஆண்டு  மே மாதத்தை மட்டும் பார்க்கும்போது, அது அதிகபட்ச வெப்பத்தை பதிவுசெய்த மாதமாக இல்லாமல், அதிக மழை பெய்து, பிராந்தியங்களுக்கு இடையே வானிலை வேறுபாடுகள் காணப்பட்ட மாதமாக இருந்தது.

பரவலாகப் பகிரப்பட்ட ஒரு பட்டியல், ஏப்ரல் மாதத்தில் உலகின் 50 வெப்பமான நகரங்களும் இந்தியாவில்தான் இருந்ததாகக் கூறியது. அது எந்த அளவுக்கு நம்பகமானது?


அதை எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் ஒரு இணையதளத்தால் தொகுக்கப்பட்ட இந்தத் தரவரிசை, ஏப்ரல் 27, 2026 என்ற ஒரே ஒரு நாளை மட்டும் தரவுகளாகப் பதிவுசெய்து, அதை ஒரு காலநிலைக்கான செய்தியாக முன்வைத்தது. ஒரே ஒரு நாள் பதிவான தரவு மட்டும் ஒரு போக்கை தீர்மானிக்க முடியாது என்பதை அந்தக் கட்டுரையே ஒப்புக்கொள்கிறது. அந்தப் பட்டியல், இணையதளம் கண்காணிக்கும் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை வட மற்றும் மத்திய இந்தியாவில் உள்ளன. மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலிய நகரங்கள் இல்லாதது, அந்தத் தரவுத்தொகுப்பின் அமைப்பையே காட்டுகிறது. மேலும், 24 மணிநேர சராசரி வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்துவது, இரவிலும் அதிக வெப்பம் நீடிக்கும் இடங்களுக்கு சாதகமாகவும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறையும் பாலைவன நகரங்களுக்கு பாதகமாகவும் அமைகிறது. இது போன்ற காரணிகள்தான் இந்தியாவின் அனைத்துக்கால அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமான ராஜஸ்தானின் நகரங்கள் பட்டியலில் கடைசி இடங்களில் இடம்பெற்றன. பயன்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நேரடி நிலையத் தரவுகளிலிருந்து பெறப்படவில்லை. மாறாக அந்த இணையதளத்தின் குறியீட்டிலிருந்தே பெறப்பட்டுள்ளன. மேலும், சராசரி மதிப்புகளை கணக்கிட பயன்படுத்தப்பட்ட முறை பற்றிய எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.


ஏப்ரல் 2025-ஐ விட ஏப்ரல் 2026 வெப்பமான ஆண்டாக இருந்ததா?


பகல் நேர வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஏப்ரல் 2026 பொதுவாகக் குளிர்ச்சியாக இருந்தது. இதற்குக் காரணமாக, வழக்கத்தைவிட அதிகமாக செயல்பட்ட மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) அதிக மழையை கொண்டு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்தது. இதற்கு முந்தைய ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் காணப்பட்ட மிதமான சூழல் பகல்நேரத்தில் மட்டுமே காணப்பட்டது. இருப்பினும், இரவு நேர வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்தன. டெல்லியில் இரவு வெப்பநிலை இயல்பைவிட 2.2°C அதிகமாகவும், பஞ்சாபில் 2.4°C அதிகமாகவும் பதிவானது. மேலும், தேசிய சராசரியானது, குறிப்பிட்ட மாவட்டங்களில்  நிலவிய தீவிரமான நிகழ்வுகளை வெளிக்காட்டவில்லை.


நகர்ப்புற வெப்பத் தீவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் குளிரூட்டிகளின் பங்கு என்ன?


ஒரு நகரம் மண் மற்றும் தாவரங்களுக்குப் பதிலாக கான்கிரீட் மற்றும் நிலக்கீல் மணற்கலவை ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, ​​அந்த மேற்பரப்புகள் பகலில் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் மெதுவாக வெளியிடுகின்றன. குறைந்த ஆவியாதல் குளிர்ச்சி,  மோசமான காற்றோட்டம் மற்றும் வெப்பம் ஆகியவற்றுடன் இது சேரும்போது, ​​இந்திய நகரங்கள் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட 2–10°C வரை அதிக வெப்பமாக மாறக்கூடும். இந்த வெப்ப வேறுபாடு இரவில் அதிகமாக இருக்கும். குளிரூட்டிகள் இதை மேலும் தீவிரப்படுத்துகின்றன: ஒவ்வொரு அலகும் வெப்பத்தை வெளிப்புறமாக வெளியேற்றுவதன் மூலம்  உட்புறத்தைக் குளிர்விக்கிறது.


காலநிலை மாற்றத்தை விட நகர்ப்புற வெப்பத் தீவுகள் வெப்பத்தை உருவாக்குவதில் பெரிய காரணியாக உள்ளதா?


பெரும்பாலான நகரங்களில், இல்லை என்றே சான்றுகள் காட்டுகின்றன. Nature Cities  இதழில் 2024-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, நாடு முழுவதற்கும் பத்தாண்டுக்கு 0.26°C என்ற அளவில் வெப்பமடைவதோடு ஒப்பிடுகையில், இந்திய நகரங்கள் பத்தாண்டுக்கு 0.53°C என்ற அளவில் வெப்பமடைவதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த நகர்ப்புற வெப்பமயமாதலில் 38% மட்டுமே நகரமயமாக்கலால் ஏற்படுகிறது என்றும், இது பிராந்திய, காலநிலை சார்ந்த வெப்பமயமாதலுக்கு மேல் ஏறக்குறைய 60% அதிகரிப்பு என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டது. நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகரிப்பதற்கு வெப்பமயமாதல் முக்கியமான தொடர்பை கொண்டுள்ளது. இது, பிராந்திய அளவிலான பருவநிலை மாற்றமே நகர்ப்புறங்களில் ஏற்படும் வெப்பநிலையில் பெரும்பகுதியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது.


உருவாகி வரும் எல் நினோ, வெப்பநிலை மற்றும் பருவமழையை எவ்வாறு பாதிக்கும்?


இது வெப்பமான, வறண்ட பருவத்திற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எல் நினோ, பருவமழையின் ஈரப்பதம் நிறைந்த மேல்நோக்கி செல்லும் தன்மையை பலவீனப்படுத்துகிறது. இது வறண்ட "இடைவெளி" (break) காலங்களை அதிகரிக்க செய்கிறது. வடமேற்குப் பகுதி முழுவதும் ஈரப்பதமிக்க வெப்ப அலைகளைத்  அதிகரிக்க செய்யும்.


Original article : Is India getting hotter? -Jacob Koshy

Share: