தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை எவ்வாறு முன்மாதிரியாகத் திகழ்கிறது? -ஜி.எஸ்.கே. வேலு

 தமிழ்நாடு மாநிலம், நாட்டிற்கு எளிதில் அணுகக்கூடிய ஒரு சுகாதார அமைப்பு மாதிரியை வழங்குகிறது.


பல ஆண்டுகளாக இந்தியாவில், சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் மருத்துவமனைகளின் விரிவாக்கங்கள், மருத்துவக் கல்லூரிகளின் நிறுவுதல் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பின் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டே அளவிடப்பட்டது. இவை முக்கியமானவையாக இருந்தாலும், சுகாதார சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்திற்கு, உள்கட்டமைப்பை அணுகல், பணியாளர்களின் திறன், நோயறிதல், தொழில்நுட்பம் மற்றும் நீண்டகால சுகாதார விளைவுகளுடன் இணைக்கும் ஒரு பரந்த, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.


தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை பலங்கள் ஒரே இரவில் உருவாகிவிடவில்லை. அவை, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, தாய் மற்றும் குழந்தை நலன், மருத்துவக் கல்வி, நோய்த் தடுப்பு, பொது சுகாதாரத்தை சென்றடைதல் மற்றும் பரவலாக்கப்பட்ட சுகாதாரச் சேவை வழங்குதல் ஆகியவற்றில் பல பத்தாண்டுகளாகக் கவனம் செலுத்திய நிறுவனங்களின் விளைவாக உருவானவை ஆகும். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) என்பது, அரசு நிறுவனங்கள் முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தை நெறிப்படுத்துவதற்காக 1994-ல் நிறுவப்பட்ட ஒரு இலட்சிய மாதிரியாகும். மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்தி, செயல்திறன் குறைபாடுகளைக் குறைப்பதன் மூலம், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) பொதுத்துறை மருந்து கொள்முதலுக்கான ஒரு தேசிய முன்மாதிரியாக மாறியது. சுகாதாரத் துறை முன்னேற்றம் என்பது மருத்துவமனைகளைக் கட்டுவது மட்டுமல்ல, சிகிச்சையை எளிதில் அணுகக்கூடியதாகவும் பொறுப்புக்கூறக்கூடியதாகவும் மாற்றும் அமைப்புகளை உருவாக்குவதுதான் என்பதை இந்தச் சீர்திருத்தம் காட்டியது.


காலப்போக்கில், தமிழ்நாடு பொது சுகாதார உள்கட்டமைப்பை தனியார் கூட்டமைப்புகளுடன் இணைத்து ஒரு மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை உருவாக்கியுள்ளது. மாவட்டங்கள் முழுவதும் உள்ள 8,700 துணை சுகாதார மையங்கள் ஒரு முக்கியக் கொள்கையைப் பிரதிபலிக்கின்றன. முதலீடு நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டும் குவிக்கப்படாமல், சமமாகப் பகிரப்படும்போது வலுவான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.


தமிழ்நாட்டின் முக்கிய பலங்களில் ஒன்று, ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பில் நோயறிதலுக்கு (diagnostics) அளிக்கும் முக்கியத்துவம் ஆகும். பொது சுகாதாரத் திட்டங்களும் சமூகப் பரிசோதனைகளும் இப்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான குடிமக்களைச் சென்றடைகின்றன. இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டிற்கு, வலுவான நோயறிதல் வசதிகளைக் கொண்ட ஆரம்ப சுகாதார அமைப்புகள் அவசியமானவை. ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது, மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் நீண்டகால சிகிச்சைச் செலவுகளைக் கட்டுப்படுத்துகிறது. பரவலாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் மற்றொரு முக்கியமான பாடமாகும். மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் நுண்ணுயிரியல் ஆய்வக வலையமைப்புகளில் செய்யப்பட்ட சுமார் ₹360 கோடி முதலீடுகள், சுகாதாரச் சேவைகளை அணுகுவதில் உள்ள பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவுகின்றன.


தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்


சுகாதாரப் பராமரிப்பின் அடுத்த கட்டத்தில் தொழில்நுட்பமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள், தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயறிதல் போன்றவற்றின் செயல்திறனை மேம்படுத்தி, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளுக்கும் சுகாதார அணுகலை விரிவுபடுத்தும். எனவே, டிஜிட்டல் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் தரவு சார்ந்த சுகாதார நிர்வாகத்தில் தமிழ்நாட்டின் கவனம் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.


சுகாதாரப் பணியாளர்களின் திறனும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) முக்கியக் கவனம், பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதிலும், எதிர்காலத்திற்குத் தேவையான பராமரிப்பை வழங்குவதிலும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் காரணமாக, இந்தியா முழுவதிலுமிருந்து நோயாளிகள் வருகின்றனர். பணியாளர் மேம்பாட்டிற்கான முதலீடுகள் மேற்கொள்ளாமல், பௌதீக உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்குவது, சுகாதார வசதிகள் திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான செயல்பாடுத்துவதற்கான வலிமையை இழக்கக்கூடும். நோயறிதல், டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு உதவியுடனான அமைப்புகள் மற்றும் பல்துறை மாதிரிகளில் தொடர்ச்சியான திறன் மேம்பாடு, ஒரு நிலையான சூழலமைப்பை உருவாக்க உதவுகிறது.


வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல் மற்றும் துல்லியமான பொறியியல் ஆகியவற்றில் தற்போதுள்ள தனது பலத்தைப் பயன்படுத்தி, மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான விருப்பமான உற்பத்தி மையமாக மாறுவதற்கும் தமிழ்நாடு சிறந்த நிலையில் உள்ளது. மாநிலத்தின் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்த, இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இறுதியாக, அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்வதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பு இன்றியமையாதது. பொது சுகாதார அமைப்புகள் பெரிய அளவிலான சேவைகளையும் பரந்த அளவிலான மக்களைச் சென்றடையும் அதே வேளையில், தனியார் சுகாதாரப் பராமரிப்பு, நோயறிதல், மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரச் சூழல் அமைப்புகள் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்புத் திறன்களுக்குப் பங்களிக்கின்றன.


இருப்பினும், ஒப்பீட்டளவில் மேம்பட்ட சுகாதார அமைப்புகள்கூட சவால்களை எதிர்கொள்கின்றன என்பதை அங்கீகரிப்பதும் அவசியமாகும். அதிக நோயாளிகளின் சுமை, சுகாதாரப் பணியாளர் விநியோக இடைவெளிகள், செயல்பாட்டுத் தடைகள் ஆகியவை இந்திய மாநிலங்கள் முழுவதும் கவலைக்குரியவையாகவே இருக்கின்றன.


தமிழ்நாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ஒரு ஒத்த கட்டமைப்பைப் பிரதிபலிப்பது அல்ல. மாறாக, நீடித்த முதலீடுகள், பரவலாக்கப்பட்ட சேவை வழங்கல், பணியாளர் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட அமைப்புகள் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகும். அதுவே இந்தியா இப்போது பின்பற்ற வேண்டிய செயல்திட்டமாகும்.


டாக்டர். ஜி.எஸ்.கே. வேலு, FICCI தமிழ்நாடு மாநில மன்றத்தின் தலைவராகவும், டிரிவிட்ரான் ஹெல்த்கேர், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் மேக்சிவிஷன் கண் மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.


Original article : How Tamil Nadu’s healthcare leads by example? -G.S.K. Velu

Share: