யார் இந்தியக் குடிமகன் என்பதைத் தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்க முடியுமா? சிறப்புத் தீவிர திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன? -ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா, வாசுதேவ் தேவதாசன்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதை குடியுரிமை இழப்பிலிருந்து முழுமையாகப் பிரித்துக் காட்டவில்லை என்பதைக் கவனிக்க கருத்தில் கொள்ள வேண்டும். சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மே 27 அன்று, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்தியத் தேர்தல் ஆணையம் (Association for Democratic Reforms v. Election Commission of India) வழக்கில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. பீகாரில் நவம்பர் 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தில் இருந்து இந்த சவால் எழுந்தது.


அதன் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தச் செயல்முறையை நிறைவுசெய்து மற்ற 19 இடங்களில் சிறப்புத் தீவிர திருத்தத்தின் அறிக்கைகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்தும், குடியுரிமை குறித்த கேள்வி குறித்தும் நீதிமன்றம் கூறியவற்றை நாங்கள் விளக்குகிறோம்.


சிறப்புத் தீவிர திருத்தம் நடத்துவதற்கான அதிகாரம்


அந்தத் தீர்ப்பு நான்கு கேள்விகளை முன்வைத்தது: அவை சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா, அந்த அதிகாரத்தை அது விகிதாசாரப்படி பயன்படுத்தியதா, அந்த நடைமுறை சட்டப்பூர்வ திட்டத்தை மீறியதா மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் குடியுரிமையை ஆய்வு செய்யமுடியுமா  என்பதாகும். ஒவ்வொரு நிலையிலும், நீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.

சிறப்புத் தீவிர திருத்த அறிக்கையை வெளியீடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், அது சட்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்துள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நடவடிக்கை   விகிதாசாரமானது என்றும், வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான துல்லியமான தொழில்நுட்ப வழிமுறைகளைத் தீர்மானிக்க இந்தியத் தேர்தல் ஆணையமே மிகவும் சரியான அமைப்பு என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. சிறப்புத் தீவிர திருத்தில் பல சிக்கல்கள், ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுதல், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்களை வெளியிடுதல், மற்றும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நீதிபதிகளை நியமிக்குமாறு  உத்தரவிட்டது  போன்ற  நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட்டன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளாவில் தேர்தல்களுக்கு சில காலத்திற்கு முன்னர் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) வெளியிடப்பட்டதன் காலமானது, வாக்களிக்கும் உரிமையை அனுமதிக்க முடியாத அளவிற்குப் பாதித்ததா என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் இந்த செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மையையும் நீதிமன்றம் ஆராயவில்லை. அங்கு, பெற்றோரின் பெயர்கள் அல்லது வயதுகளை பார்க்காமல் இருப்பதுபோன்ற, படிவங்களில் உள்ள "தேவையற்ற முரண்பாடுகள்" காரணமாக 1.36 கோடி வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தைச் சார்ந்த விவகாரம், நீதிமன்றத்தின் முன் தனி மனுவாக நிலுவையில் உள்ளது.


இந்தத் தீர்ப்பு, நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. சட்டப் போராட்டம் முடிந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 30 நாள் கணக்கெடுப்பு (Enumeration) கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் இந்த நடைமுறையைப் புரிந்துகொண்டு, தங்களின் வாக்குப்பதிவுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள், உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் தனது அறிவிப்புகளில் கூறியுள்ள நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


குடியுரிமை குறித்து நீதிமன்ற கூறியது


1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆம் பிரிவு, குடிமக்கள் இல்லாதவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதைத் தடை செய்வதால், வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும்போது இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு நபரின் குடியுரிமையை ஆராயலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவர், வாக்காளர் மற்றும் குடிமகன் என்ற அனுமானத்தைப் பெறுகிறார் என்றும் அது தெளிவுபடுத்தியது.


ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த அறிக்கையை வெளியிடும்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், வாக்காளர்களின் பதிவை நிராகரிக்கலாம் அல்லது பெயர் நீக்கதைத் தொடங்கலாம். முக்கியமாக, அது போன்ற முடிவு அந்த நபரை ஒரு குடிமகன் அல்லாதவர் என்று அறிவிப்பதில்லை. தேர்தல் நோக்கங்களுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் திருப்தியடையவில்லை என்பதையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் மட்டுமே அது குறிக்கிறது. இதன் ஒரே விளைவு, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது ஒரு தனிநபரின் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே பாதிக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தாலும், தீர்ப்புக்கு முன்பு, பீகார் மற்றும் மேற்கு வங்க அரசியல் தலைவர்கள், சிறப்புத் தீவிரத் திருத்ததிற்குப் (SIR) பிறகு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். வாக்காளர் பதிவை அடிப்படையாகக் கொள்ளாத தகுதியைக் கொண்ட தற்போதைய திட்டங்களை,  சிறப்புத் தீவிரத் திருத்ததில் சேர்க்கப்படாதவர்களுக்கு சட்டப்படி மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை வெளிப்படையாக விலக்குவதற்காகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால், அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த நிலைப்பாடுகள் மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்தத் தீர்ப்பு, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவது மற்றும் குடியுரிமையை இழப்பது ஆகியவற்றை முற்றிலும் தனித்தனியாகப் பார்க்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான குடியுரிமை நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறாரா என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம்  திருப்தியடையவில்லை என்றால், அந்தக் கேள்வியை 1955-ஆம் ஆண்டு  குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டாலும், அதற்கான இறுதி முடிவு ஒன்றிய அரசின் தீர்மானத்திற்குட்பட்டதாகவே இருக்கும். அந்த முடிவு நியாயமான காலக்கெடுவிற்குள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எந்த நிலையிலும் அந்த நபரின் தொகுதியில் அடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் வாக்குரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான நிலை நீண்ட காலம் தெளிவற்றதாக இருக்காமல் தடுக்க முடியும். மேலும், குடியுரிமை மறுக்கப்படுவது ஒரு நபரின் “அடையாள உணர்வையும் சமூக அங்கீகாரத்தையும்” பாதிக்கும் என்பதால், இது போன்ற முடிவுகள் “நியாயமான நடைமுறைகளுடனும் அமைப்புரீதியான கட்டுப்பாட்டுடனும்” அணுகப்பட வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை குடியுரிமை தீர்மானத்திற்காக அனுப்புவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான முன்னுதாரணம் ஏற்கனவே உள்ளது. 1997-ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, பல இலட்சம் மக்கள் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமையை இறுதியாகத் உறுதிசெய்ய வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு  அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 30 ஆண்டுகளை கடந்தும், இந்த சந்தேக வாக்காளர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அவர்கள் குடிமக்களாகவும், வெளிநாட்டவர்களாகவும் இல்லாமல் இடையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, குடும்பஅட்டைகள், வங்கி கணக்குகள் போன்ற அடிப்படை உரிமைகளையும் சேவைகளையும் பெறுவதில் அவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்முறையின்கீழ் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை, ஒருகாலத்தில் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். இதனால் தற்போதுள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களின் (Foreigners Tribunals (FTs)) திறன் கடுமையாக அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். பெயர்களில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது ஆவணங்களில் பெயர் பொருந்தாதது போன்ற   நிர்வாகத் தவறுகளுக்காகவே பலரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, அவர்களை குடியுரிமை விசாரணைக்கு அழைப்பது, அவர்களின் வாக்குரிமையை மட்டுமல்லாமல், பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய உரிமையற்ற நிலைக்கு (rightlessness) அவர்களை தள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.


ஷெனாஸ் சௌத்ரியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஆதித்யா பிரசன்ன பட்டாச்சார்யா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், வாசுதேவ் தேவதாசன் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவர்.

 

Original article : Can Election Commission decide who is an Indian citizen? What Supreme Court said in SIR verdict. -Aditya Prasanna Bhattacharya, Vasudev Devadasan

Share: