ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு இடையில், 30 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (Liquified Petroleum Gas (LPG)) கையிருப்பை உருவாக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திசார் கையிருப்பு என்றால் என்ன? இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) கையிருப்பின் தற்போதைய நிலை என்ன? இது உத்திசார் பெட்ரோலிய கையிருப்பில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
ஏன் செய்திகளில் இடம்பெற்றது?
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (Oil Marketing Companies (OMCs)) இந்தியன் ஆயில் நிறுவனம் (Indian Oil), பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகியவற்றை, அவற்றின் வழக்கமான வணிகக் கையிருப்புடன் கூடுதலாக, குறைந்தது 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவசரகால சமையல் எரிவாயு (LPG) இருப்பை உருவாக்குவதற்கான திட்டத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கூடுதல் சேமிப்பு வசதியானது—அவசரகால கச்சா எண்ணெய் இருப்புகளைப் போலவே, பூமிக்கு அடியில் உள்ள குகை போன்ற அமைப்புகளில் அமைக்கப்படுமா அல்லது பூமிக்கு மேல் உள்ள பெரிய தொட்டிகளில் அமைக்கப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தச் சூழலில், அரசின் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் தற்போதுள்ள சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் இருப்புகளின் நிலைமையையும் புரிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
உத்திசார் இருப்புகள் என்றால் என்ன?
1. உத்திசார் இருப்புகள் என்பது அவசரகால நிலைமைகள் அல்லது கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் காலங்களில் பயன்படுத்துவதற்காக, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கச்சா எண்ணெய் சேமிப்பாகும். இந்த பிரத்யேக உத்திசார் இருப்புகள் என்ற கருத்து, 1973-ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகே முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், உத்திசார் இருப்புகள் என்பவை வணிகரீதியான இருப்புகளிலிருந்து வேறுபட்டவை ஆகும். ஏனெனில், வணிக இருப்புகளின் முக்கிய நோக்கம் குறுகிய கால அன்றாட செயல்பாட்டுத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாகும்.
2. இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான 'உத்திசார் பெட்ரோலிய இருப்புகள்' (SPR) இருந்தாலும், சமையல் எரிவாயு (LPG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (Liquefied Natural Gas (LNG)) ஆகியவற்றுக்கு அத்தகைய உத்திசார் இருப்புகள் எதுவும் இல்லை. தற்போது நாட்டில் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயின் பெரும் பகுதி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிடம் உள்ள வணிகரீதியான சேமிப்புகளே ஆகும்.
LPG எனப்படும் சமையல் எரிவாயுவின் இறக்குமதியை இந்தியா எந்த அளவிற்குச் சார்ந்து இருக்கிறது?
3. இந்தியா தனக்குத் தேவையான சமையல் எரிவாயு (LPG) தேவையில் சுமார் 60%-ஐ இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் ஏறக்குறைய 90% விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு நுகர்வில் சுமார் 54% இந்த வழித்தடம் வழியாக வரும் விநியோகத்தையே சார்ந்துள்ளது.
4. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இந்த இறக்குமதியில் 55–60% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடந்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதமும் இந்தக் கப்பல் போக்குவரத்து வழித்தடம் வழியாகவே வருகிறது.
ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய நீர்வழியான இந்த ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையாகும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக தற்போது இந்த வழித்தடத்தில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
5. போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 90,000 டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தி வந்தது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் மற்றும் பருவகாலத் தேவை குறைவு காரணமாக, இந்தியாவின் தினசரி சமையல் எரிவாயு நுகர்வு சுமார் 72,000 டன்னாகக் குறைந்துள்ளது என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
6. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையானது, வீடுகளில் சமையல் எரிவாயுவைச் (LPG) சார்ந்துள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, தொழில் மற்றும் வணிகரீதியான நுகர்வோருக்கான எரிபொருள் விநியோகத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது LPG சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 33 கோடிக்கும் அதிகமாகும். எரிவாயு தேவையைச் சரியான முறையில் மேலாண்மை செய்வதற்காக, வீடுகளில் அடுத்தடுத்த சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச இடைவெளிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
7. மேலும், இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஓரளவுக்கு ஈடுகட்டுவதற்காக, உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகபட்சமாக அதிகரித்துள்ளன. அத்துடன், சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற மாற்று நாடுகளில் இருந்து சமையல் எரிவாயு சரக்குகளைப் பெறுவதற்கும் தீவிரமாக முயன்று வருகின்றன.
8. மேற்கு ஆசியப் போர் , அவசர காலத்திற்கான ஆற்றல் சேமிப்பு மிகக் குறைவாக இருப்பதில் உள்ள அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், இந்திய அரசும் இந்தத் துறைசார்ந்த பிற நிறுவனங்களும், சமையல் எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) ஆகியவற்றுக்கான கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவது குறித்தும், நீண்டகால ஆற்றல் விநியோகத் தடைகளின்போது பயன்படுத்தக்கூடிய கச்சா எண்ணெய் இருப்புகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்வது குறித்தும் தற்போது பரிசீலித்து வருகின்றன.
சமையல் எரிவாயு (LPG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
சமையல் எரிவாயு (LPG) என்பது முக்கியமாக புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வாயு எரிபொருள் கலவையாகும். இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை வாயு பதப்படுத்துதலின்போது கிடைக்கும் ஒரு துணைப் பொருளாகும். இதில் சிறிய அளவில் புரோப்பிலீன் (propylene), பியூட்டிலீன் (butylene) மற்றும் ஐசோபியூட்டிலீன் (isobutylene) போன்ற வாயுக்களும் இருக்கலாம். ஓரளவிற்கு குறைந்த வெப்பநிலை அல்லது மிதமான அழுத்தத்தில், இந்த வாயு கலவை திரவமாக மாறுகிறது. இது பெரும்பாலும் சமையல் மற்றும் வெப்பமூட்டும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில தொழில்துறைப் பயன்பாடுகளும் இதற்கு உண்டு. திரவ நிலைக்கு மாறும்போது, இது தன் வாயு நிலையின் கொள்ளளவில் சுமார் 260-ல் 1 பங்காக (1/260th) சுருங்கிவிடுகிறது.
மறுபுறம், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) என்பது முதன்மையாக இயற்கை வாயு ஆகும். இதில் முக்கியமாக மீத்தேன் (Methane) உள்ளது. இது -160°C குறைவான வெப்பநிலைக்குக் குளிர்விக்கப்பட்டு, மிகக் குறைந்த வெப்பநிலை தொழில்நுட்பம் மூலம் திரவமாக மாற்றப்படுகிறது. தற்போது கனரக வாகனங்கள், கப்பல்கள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கான ஒரு வளர்ந்துவரும் எரிபொருளாகப் பயன்படுவதைத் தவிர, இந்த திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவுக்கு நேரடியாக அதிகப் பயன்பாடுகள் இல்லை. குழாய்கள் மூலமாக அதைக் கொண்டு செல்வது சாத்தியமில்லை. அத்தகைய சூழ்நிலைகளில், அதை எளிதாகக் கொண்டு செல்வதே இயற்கை எரிவாயுவை திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவாக மாற்றுவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளின் (SPRs) நிலை என்ன?
1. மார்ச் மாதம் 23-ஆம் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) மாநிலங்களவையில் அளித்த அறிக்கையின்படி, இந்தியா தற்போது 3.37 மில்லியன் டன் எண்ணெயைக் கையிருப்பில் வைத்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறனில் (5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய்) ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே ஆகும்.
2. இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்புகள், குறுகிய கால எண்ணெய் விநியோகத் தடைகளின்போது ஒரு தற்காலிகப் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்படுபவை ஆகும். இந்தியாவின் இந்த மூன்று உத்திசார் இருப்புகளும் அவற்றின் முழுத் திறனை எட்டும்போது, தோராயமாக 9.5 நாட்களுக்கான நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடும் என்கின்றனர்.
3. இந்தியா ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று இடங்களில் இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்புகளைக் கொண்டுள்ளது. இவை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட பாறைக்குகைக் குடைவுகள் ஆகும். அவை: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் டன்), கர்நாடகாவில் உள்ள மங்களூரு (1.5 மில்லியன் டன்), கர்நாடகாவில் உள்ள பாதூர் (2.5 மில்லியன் டன்) ஆகும்.
4. இந்தியாவில், இந்த உத்திசார் கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும், எண்ணெய் தொழில் வளர்ச்சி வாரியத்தின் (Oil Industry Development Board (OIDB)) முழு உரிமையின்கீழ் இயங்கும் ஒரு துணை நிறுவனமாக, 'இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம்' (Indian Strategic Petroleum Reserves Limited (ISPRL)) என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு, இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
5. சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)), நாடுகள் தங்களின் நிகர எண்ணெய் இறக்குமதியில் குறைந்தபட்சம் 90 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. சர்வதேச எரிசக்தி முகையில் (IEA) உள்ள முழுநேர உறுப்பு நாடுகள் இந்த அளவிலான இருப்புக்களை பராமரிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன. இந்தியா இந்த அமைப்பில் முழுநேர உறுப்பினராக இல்லை, மாறாக ஒரு இணை உறுப்பினராக மட்டுமே உள்ளது.
6. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த தேசிய சேமிப்புத் திறன் 74 நாட்களாகும்; இதில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் உள்ள வணிகரீதியான இருப்புகளும் அடங்கும். இருப்பினும், இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைக்கும் அளவைவிடக் குறைவானதே ஆகும்.
7. சமீபத்தில், இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (Abu Dhabi National Oil Company (ADNOC)) ஆகியவற்றிற்கு இடையே ஒரு முக்கிய ராஜதந்திரரீதியான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்பை 3 கோடி பேரல்களாக உயர்த்தவும், இந்தியாவில் உத்திசார் எரிவாயு இருப்புகளை அமைப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
8. இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளில் கூட்டணி சேர்ந்துள்ள முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். 2018-ஆம் ஆண்டில், மங்களூருவில் உள்ள இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனத்தின் (ISPRL) சேமிப்புக் கிடங்கில் ஐக்கிய அரபு அமீரகம் 50 லட்சத்திற்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய் இருப்புகளைச் சேமித்து வைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் (ADNOC) நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அமைப்பின் தரநிலைகளைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவின் எரிபொருள் இருப்பு இலக்குகள் ஏன் மிக முக்கியமானவை?
1. உலகளாவிய எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 1974-ஆம் ஆண்டில் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) நிறுவப்பட்டது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) கட்டமைப்பிற்குள் செயல்படும் ஒரு சுதந்திரமான அரசுளுக்கிடையேயான அமைப்பாகும்.
2. பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில், இந்த அமைப்பின் முழுநேர உறுப்பினர் தகுதிக்காக இந்தியா விண்ணப்பித்தது. தற்போது இந்தியா, பாரீஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த முகமையின் ஒரு இணை உறுப்பினராக மட்டுமே உள்ளது. இந்த முக்கிய அரசுளுக்கிடையேயான அமைப்பு ஆற்றல் பாதுகாப்பு, உலகளாவிய எரிசக்தி கொள்கை, காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் பணியாற்றி வருகிறது.
3. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அமைப்பின் நிறுவன சாசனத்தின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் மட்டுமே சர்வதேச எரிசக்தி முகமையில் உறுப்பினராக முடியும். தற்போது, சர்வதேச எரிசக்தி முகமை அமைப்பில் 33 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் கொலம்பியா 33-வது முழுநேர உறுப்பினராக சமீபத்தில் இணைந்துள்ளது.
4. கடந்த 2015-ஆம் ஆண்டில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) இல்லாத நாடுகளும் இணை உறுப்பினர்களாவதற்கு சர்வதேச எரிசக்தி முகமை அனுமதி அளித்தது. இந்த இணை உறுப்பினர்கள் கொள்கை விவாதங்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்கலாமே தவிர, அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரமோ அல்லது முடிவெடுக்கும் அதிகாரமோ கிடையாது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா, ஓர் இணை உறுப்பினராக இணைந்தது. தற்போதைய நிலவரப்படி, இந்த அமைப்பில் 13 இணை உறுப்பு நாடுகள் உள்ளன.
5. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உறுப்பினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்தி முகமையில் (IEA) உறுப்பினராவதற்கு சில குறிப்பிட்ட தகுதிகளை ஒரு நாடு பூர்த்தி செய்ய வேண்டும். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) விதிகளின்படி அத்தகைய சில முக்கியத் தேவைகள் பின்வருமாறு: ஒரு நாடு கடந்த ஆண்டின் நிகர இறக்குமதிக்கு சமமான, 90 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் அல்லது எண்ணெய் தயாரிப்புகளின் இருப்பைக் கொண்டிருக்க வேண்டும்; இந்த இருப்பை அந்த அரசு நேரடியாகச் சொந்தமாகக் கொண்டிருக்காவிட்டாலும், அவசரக் காலத்தில் உடனடியாகப் பயன்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடைகளைச் சமாளிக்க இந்த இருப்பு பயன்படுத்தப்படலாம். மேலும், நாட்டின் எண்ணெய் நுகர்வை 10% வரை குறைப்பதற்கான அவசரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும், அரசின் கோரிக்கையின் பேரில் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்குரிய தகவல்களைத் தெரிவிப்பதை உறுதிசெய்யும் சட்டங்களையும் முறைகளையும் அந்த நாடு கொண்டிருக்க வேண்டும்.
Original article : India’s LPG Crisis: Why strategic reserves are critical after strait of hormuz disruptions. -Khushboo Kumari