மகப்பேறு இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio (MMR)) என்றால் என்ன? -வீணா ஐயர்

 முக்கிய அம்சங்கள் :


மகப்பேறு இறப்பு விகிதமானது (MMR) 2014-2016-ல் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 130-ஆக இருந்த நிலையில், 2019-2021-ல் 93 ஆகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 33 ஆண்டுகளில், தாய்மார்களின் இறப்புகள் 86 சதவீதம் குறைந்துள்ளன. இது உலகளாவிய அளவில் 48 சதவீதக் குறைவுக்கு மாறானது. இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், இவை ஒரு கவலைக்குரிய எதார்த்தத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.


ஒரு சிறிய நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான (C-section) செலவு சுமார் ரூ. 40,000 ஆகும். அதேசமயம், பெரிய நகரங்களில் இது பெரும்பாலும் ரூ. 1,00,000-ஐத் தாண்டுகிறது. தனியார் மகப்பேறு மருத்துவர்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதம் பிரசவங்கள் மூலமே கிடைக்கிறது. கலாச்சாரரீதியான காரணிகள் இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்குகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில், பல பெண்கள் அறுவை சிகிச்சை மூலமான பிரசவத்தையே விரும்புகின்றனர். இதில் சில குடும்பங்கள், குழந்தை ஒரு குறிப்பிட்ட சுபமுகூர்த்த நாளில் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் அறுவை சிகிச்சையை வற்புறுத்திக் கேட்கின்றனர்.


தேவையற்ற அறுவை சிகிச்சைகளுக்கு எதிரான வாதம் வலுவானது. தாய்க்கு ஏற்படும் உடனடி ஆபத்துகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் தொற்று (infection), இரத்தப்போக்கு (haemorrhage), ஒட்டுதல்கள் (adhesions) மற்றும் எதிர்கால கர்ப்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் (problems in future pregnancies) ஆகும். அறுவை சிகிச்சை பிரசவத்தின்போது தழும்பு எண்டோமெட்ரியோசிஸ் (scar endometriosis) அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்பது பரவலாக அறியப்படாத ஒரு விஷயமாகும். இது அறுவை சிகிச்சைக் காயத்தின்மீது எண்டோமெட்ரியல் திசுக்கள் பதிந்துகொள்ளும் ஒரு நிலையாகும். இதனால், பிரசவத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் சுழற்சி முறையில் வலியை ஏற்படுத்துகிறது.


குழந்தையைப் பொறுத்தவரை, அறிவியல் சான்றுகள் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. பிறப்பின்போது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை சீர்குலைவது உண்மையானது. இருப்பினும், இது ஓரளவு சரிசெய்யக்கூடியது. பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பது அதை மீட்டெடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீண்டகால அபாயங்களைப் புறக்கணிப்பது மிகவும் கடினம். அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசக்குழாய் தொற்றுகள், ஆஸ்துமா மற்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


உங்களுக்குத் தெரியுமா? 


தொழில்முறை பயிற்சி பெற்ற ஒரு மகப்பேறு உதவியாளர், ஒரு சாதாரண பிரசவத்தின்போது மகப்பேறு மருத்துவருக்கு மாற்றாக இருப்பவர் மட்டுமல்ல. ஒரு சாதாரண பிரசவம் நிகழ்வதற்கான சூழலை உருவாக்குபவர் அவரே ஆவர். பிரசவம் ஒரு மருத்துவ அவசரநிலை அல்ல என்பதை உணர்ந்து, நேரத்தைப் பற்றிய கவலை மற்றும் பொறுப்பு குறித்த பதட்டம் இல்லாமல் ஒரு பெண்ணுக்கு ஆதரவளிப்பவரும் அவரே. தொழில்முறை மகப்பேறு உதவியாளர்கள், அபாயகரமான நிலைகளைக் கண்டறிவதற்கும், மருத்துவரீதியாகத் தேவைப்படும்போது நிபுணர்களிடம் பரிந்துரைப்பதற்கும் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இதனால், அறுவை சிகிச்சை என்பது இயல்பான நடைமுறையாக இல்லாமல், விதிவிலக்காகவே அமைகிறது.


2018-ம் ஆண்டில், 'செவிலியர்-மகப்பேறு உதவியாளர்' (Nurse Practitioner in Midwifery) திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியா ஒரு சரியான நடவடிக்கையை எடுத்து வைத்துள்ளது. இன்றுவரை சுமார் 1,500 மகப்பேறு உதவியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொது சுகாதார அமைப்புக்கு மட்டும் நமக்குத் தேவைப்படும் ஏறத்தாழ 90,000 மகப்பேறு உதவியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.


Original article : What is the Maternal Mortality Ratio (MMR)? -Veena Iyer

Share: