குறிப்பாக கிராமப்புறங்களில், அதிகமான பெண்கள் தொழில்துறையில் இணைந்து வருகின்றனர்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoS&PI), ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கான 'காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025' (Periodic Labour Force Survey (PLFS)) குறிப்பிடத்தக்க முறையியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது. முதல் முறையாக, இந்த மேம்படுத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS), கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா ஆகிய இரண்டையும் ஒவ்வொரு மாதமும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு முன்னர், இக்கணக்கெடுப்பு ஜூலை முதல் ஜூன் வரையிலான சுழற்சி முறையைப் பின்பற்றியதுடன், நகர்ப்புறங்களுக்கான காலாண்டுத் தரவுகளை மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், இது சமீபத்திய ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர் சந்தை குறித்த, அகில இந்திய அளவிலான மிக விரிவான புள்ளிவிவரத்தை இப்புதிய கணக்கெடுப்பு வழங்குகிறது.
இந்தியாவின் அனைத்து வயதினருக்குமான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 44.9%-ஆக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு 10 இந்தியர்களில் சுமார் நான்கு நபர்கள், பணியில் உள்ளனர் அல்லது தீவிரமாக வேலைதேடி வருகின்றனர். 2024-ஆம் ஆண்டில் 44.7 சதவீதமாக இருந்த இத்தொகை, தற்போது ஏறக்குறைய அதே நிலையில் (மாற்றமின்றி) நீடித்து வருகிறது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கான இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (LFPR) (சதவீதத்தில்), கடந்த சில ஆண்டுகளின் அடிப்படையில் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
கிராமப்புறங்களில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.6% ஆக உள்ளது. இது ஆண்களின் பங்கேற்பு விகிதத்தைவிடக் குறைவாக இருந்தாலும், விவசாயம் மற்றும் வீட்டு சார்ந்த பணிகளில் பெண்களின் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு வெறும் 22.2% ஆகக் குறைகிறது. நகர்ப்புற இளம் பெண்களிடையே இந்தச் சவால் இன்னும் தீவிரமாகிறது. இந்த நகர்ப்புற மையங்களில், ஒவ்வொரு 10 பெண்களிலும் ஏறக்குறைய இருவர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, நகர்ப்புற ஆண்களின் பங்கேற்பு விகிதம் 59.7% ஆக உள்ளது. இது இந்த விகிதத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இந்த இடைவெளி, இந்தியாவின் நகர்ப்புற தொழிலாளர் சந்தையில் நிலவும் தொடர்ச்சியான சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. 2025-ம் ஆண்டில் பாலினம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை, கீழே உள்ள வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.
15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 9.9% ஆக உள்ளது. இது, 3.1% என்ற தேசிய சராசரியைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாகும். குறிப்பாக நகர்ப்புற இளம் பெண்களைப் பொறுத்தவரை, இந்த விகிதம் 18.9%-ஆக உள்ளது. இதன் பொருள், நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஐந்து இளம் பெண்களிலும் ஏறக்குறைய ஒருவர் வேலையின்றி உள்ளார் என்பதாகும்.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) இதைத் தெளிவுபடுத்துகிறது. வேலையின்மை விகிதம் என்பது, தொழிலாளர் சந்தையின் ஒரு பகுதியாக இருப்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. இது வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்குக் கூட வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்பதை இது உணர்த்துகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு இந்தச் சவால் மிகவும் கடுமையாக உள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, பாலினம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் வேலையின்மை விகிதத்தை, கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
படித்த மற்றும் வேலையில்லாத நிலை குறித்து
இடைநிலைப் பள்ளி அல்லது உயர் கல்வி பெற்ற 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், வேலையின்மை விகிதம் 6.5%-ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். நகர்ப்புறங்களில், படித்தவர்களிடையே வேலையின்மை 7.2%-ஆக உள்ளது. அதேசமயம், கிராமப்புறங்களில் இது 6%-ஆக இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள படித்த தொழிலாளர்கள் வெளிப்படையாக வேலையில்லாமல் இருப்பதைவிட, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கலாம். 2022 மற்றும் 2025-க்கு இடையில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.6%-லிருந்து 3.1%-ஆகக் குறைந்துள்ளது. ஆனாலும், படித்தோரிடையே வேலையின்மை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. படித்தவர்களிடையே வேலையின்மை தொடர்ந்து உயர்வாக இருப்பது, படித்த தொழிலாளர் சக்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கம் முழுமையாக இல்லை என்பதைக் காட்டுகிறது. கீழே உள்ள விளக்கப்படம், படித்தவர்கள் மற்றும் அனைத்து நபர்களிடையேயான வேலையின்மை விகிதத்தை (சதவிகிதத்தில்) இடங்கள் வாரியாகக் காட்டுகிறது.
கிராமப்புறங்களில், பணிபுரியும் பெண்களில் 70.7% பேர் சுயதொழில் செய்கின்றனர். இந்த வகை, உண்மையான தொழில்முனைவுத் தேர்வைவிட, பெரும்பாலும் வாழ்வாதாரப் பணிகளையே பிரதிபலிக்கிறது. நகர்ப்புறங்களில், பணிபுரியும் பெண்களில் 40.4% பேர் சுயதொழில் செய்கின்றனர். இது தொழில்முனைவு நடவடிக்கை மற்றும் முறைசாரா வேலைகள் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. முறைசார்ந்த வேலைவாய்ப்பின் அடையாளமாகக் கருதப்படும் வழக்கமான ஊதியம் அல்லது சம்பள வேலை, கிராமப்புறங்களில் பணிபுரியும் பெண்களில் வெறும் 9.3% பேரை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதேநேரத்தில் மேலும் 20% பேர் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். நகர்ப்புறங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த போக்கைக் காட்டுகின்றன. அங்கு பணிபுரியும் பெண்களில் 50.9% பேர் வழக்கமான ஊதிய வேலைவாய்ப்பில் உள்ளனர். கீழேயுள்ள விளக்கப்படம் பெண் தொழிலாளர்களிடையே உள்ள வேலைவாய்ப்பு வகைகளை (சதவிகிதத்தில்) காட்டுகிறது.
அனைத்து நபர்களுக்கான தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் Worker Population Ratio (WPR) 2022-ல் 39.7%-லிருந்து 2025-ல் 43.5%-ஆக அதிகரித்துள்ளது. தற்போது அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் அதிகமான பெண்கள் தொழிலாளர் துறையில் நுழைகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில், இதே காலகட்டத்தில் பெண் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 26.9%-லிருந்து 33.8% ஆக உயர்ந்துள்ளது. கீழேயுள்ள விளக்கப்படம், அனைத்து வயதுப் பிரிவுகளிலும் பல ஆண்டுகளாக இந்தியாவின் தொழிலாளர் மக்கள்தொகை விகிதத்தை (சதவிகிதத்தில்) காட்டுகிறது.
கட்டுரையாளர், இந்தியப் புள்ளியியல் சேவை அதிகாரியாக, புள்ளியியல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் (MoS&PI) இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
Original link:
India’s worker population ratio has climbed since 2022.