வரைபடங்கள், தரவுகள் மற்றும் கண்ணோட்டங்கள்: உயர்ந்துவரும் அரசுப் பத்திர வருவாய்கள் ஏன் ஒரு கெட்ட செய்தி? -உதித் மிஸ்ரா

உலகளவில், அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் கடுமையாக அதிகரித்து வருகிறது. இது நுகர்வோர் மற்றும் வணிகங்கள் மீதும், அவர்கள் பணம் கடன் வாங்கும் விதம் மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்களுக்குப் பணம் கடன் வாங்குவது அதிக செலவு கொண்டதாக மாறி வருகிறது. பல சூழல்களில், கடன் வழங்குநர்கள் அரசாங்கங்களிடம் வசூலிக்கும் வட்டி விகிதங்கள், 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டி வருகின்றன.


மேலும், பல்வேறு அரசாங்கங்களிடமிருந்து கோரப்படும் வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு ஏற்ற இறக்கதுடன் உள்ளது. வட்டி விகிதங்களின் அளவு எது போன்றதாக இருப்பினும், இந்தத் திடீர் உயர்வு மட்டுமே ஒரு பிரச்சினையாக அமைகிறது. அரசாங்கங்களுக்கான கடன் வாங்கும் செலவுகள் கடுமையாக உயர்கின்றன என்பது, சராசரி நுகர்வோருக்கான கடன் செலவுகளும் உயரும் என்பதையே குறிக்கிறது. கடன் செலவுகள் இன்னும் அதிகமான அளவில் உயரக்கூடும்.

அரசாங்கங்கள் ஏன் கடன் வாங்குகின்றன?


பெரும்பாலான நாடுகளில், வரிகள் மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள் மூலமாக மட்டுமே தங்கள் செலவினங்களை சரிசெய்ய அரசாங்கங்கள் சிரமப்படுகின்றன. எனவே, அந்த இடைவெளியை குறைக்க அரசாங்கங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தத் தேவை பொதுவாக வளரும் நாடுகளில் அதிகமாகவும், வளர்ந்த நாடுகளில் குறைவாகவும் காணப்படுகிறது. ஏனெனில், வளர்ந்த நாடுகளின் அரசாங்கங்கள் வரி வருவாயைத் திரட்டுவதில் அதிகத் திறனும் செயல்திறனும் கொண்டவையாக இருக்கின்றன. ஏழை நாடுகளில் வரி விதிப்பதற்குத் தேவையான அளவு வசதி படைத்த மக்கள் இல்லை.


தொடர்ச்சியான நெருக்கடிகளின் காரணமாக, வளர்ந்த நாடுகள்கூட தங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடையத் திணறி வருகின்றன. இதன் விளைவாக, அவை அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன — இது வெறும் முழுமையான தொகையில் மட்டுமல்ல, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (அல்லது பொருளாதாரத்தின் அளவின்) சதவீத அடிப்படையிலும் ஆகும்.



அரசுகள் எவ்வாறு பணம் கடன் வாங்குகின்றன?


ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அரசாங்கமே மிகவும் குறைந்த அபாயம்  கொண்ட கடன் வாங்குபவராக இருக்கிறது. ஏனெனில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அது தோல்வியடைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கடுமையான நெருக்கடி ஏற்பட்டாலும், அரசு பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தை பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வசதி நிறுவனங்களுக்கும் குடும்பங்களுக்கும் கிடையாது.


இருப்பினும், அரசாங்கங்கள் சற்று வித்தியாசமான முறையில் கடன் வாங்குகின்றன. அவர்கள் ஒரு பத்திரத்தை (Bond) வெளியிடுகிறார்கள் — இது அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்கள் (Treasurys) என்றும், இங்கிலாந்து அரசின் அரசு பத்திரங்கள் (Gilts) என்றும், ஜெர்மனி அரசாங்கத்தின் கடன் பத்திரங்கள் (Bunds) என்றும், இந்திய அரசாங்கம் வெளியிடும் அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) அல்லது அரசாங்கப் பத்திரங்கள் என்றும், ஜப்பான் அரசின் அரசு பத்திரங்கள் (Japan Government Bonds (JGBs)) என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது அடிப்படையில் "நமது நாடு உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறது" (I owe you) என்று கூறும் ஒரு ஆவணமாகும்.


அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக $100) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (உதாரணமாக 10 ஆண்டுகள்) கடனாகப் பெற்று, 10 ஆண்டுகளின் முடிவில் அசலைத் திருப்பிச் செலுத்துவதோடு, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தையோ அல்லது கூப்பனையோ (உதாரணமாக $5) செலுத்துவதாக உறுதியளிக்கிறது என்று இது குறிப்பிடுகிறது. வீடு, கார் அல்லது தொழிற்சாலைக் கடன்களுக்கான ஆண்டு வட்டி விகிதத்தைப் (சதவீதத்தில் குறிப்பிடப்படுவது) போல் இல்லாமல், அரசாங்கப் பத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு துல்லியமான தொகையை வழங்குகின்றன. எல்லாம் சரியாக நடந்தால், இந்த உதாரணத்திற்கான ஆண்டு வட்டி விகிதம் (அல்லது ஈட்டுத்தொகை) 5%-ஆக இருக்கும்.


ஆனால், அரசாங்கம் ஆண்டின் நடுவில் ஒரு போரைத் தொடங்க முடிவு செய்கிறது என்றும், அதன் விளைவாக பணவீக்கம்  அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசாங்கத்தின் பணத் தேவையும் அதிகரிக்கிறது. அதே, நேரத்தில் நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் குறைகின்றன என்றும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அரசாங்கம் அதிகப் பணம் கடன் வாங்க நிர்பந்திக்கப்படலாம். ஆனால், முதலீட்டாளர்களும் கடன் வழங்குபவர்களும் அதிகரித்த அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதால், இப்போது அதிக வருவாய் விகிதத்தைக் கோருவார்கள். அரசாங்கம் புதிய பத்திரங்களுக்கு, உதாரணமாக $10 போன்ற, அதிக வட்டி விகிதத்தை உறுதியளிக்க  வேண்டிய சூழல் ஏற்படும்.


இதன் காரணமாக, வருடத்திற்கு $5 வட்டி (coupon return) தரும் பழைய பத்திரங்கள் (bonds), தற்போது சிறந்த முதலீடாக தெரியாமல் போகும்.  பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்க முயல்வார்கள், $100-க்கும் குறைவான விலையிலேயே அவர்கள் இவற்றை விற்பார்கள். எவ்வளவு குறைவாக? அந்தப் பழைய பத்திரங்களை வாங்கும் ஒரு நபர், அவற்றிலிருந்து 10% ஈட்டுத்தொகையையோ (yield) அல்லது எதிர்பார்க்கப்படும் வருவாயையோ பெற விரும்புவர். எனவே, சந்தையில் அந்தப் பத்திரங்களை விற்பனை செய்ய  வேண்டுமெனில், அவற்றின் விலை $50-ஆகக் குறைய வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.


அடிப்படையில், உலகம் முழுவதும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது: அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. நாடுகள் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்பில் கடன் பெறுவதையும்,  பெறபட்ட கடன்களை மறுநிதியளிப்பு செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வட்டி வருவாய் விகிதங்களின் (yield) மாற்றங்கள் மூன்று தசம இடங்கள் (three decimal places) வரை துல்லியமாகக் கண்காணிக்கப்படுகின்றன.


உங்களுக்கு இதன் தாக்கம் என்ன?


அரசு பத்திரங்களின் (Government Bonds) வருமான விகிதம் (yields) அதிகரிக்கிறது என்றால், பாதுகாப்பான கடன்களுக்குக் அதிக வட்டி வழங்க வேண்டிய நிலை உருவாகும். இதன் விளைவாக, சாதாரண மக்கள் மற்றும் தொழில்களுக்கு கிடைக்கும் கடன்களின் வட்டியும் அதிகரிக்கும்.


மேலும், வருவாய் விகிதங்கள் அதிகரித்தால் அரசுகள் தனது ஆண்டு நீதி நிலை அறிக்கையில் இருந்து பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த அதிக பணம் ஒதுக்க வேண்டிய  சூழல் ஏற்படும். அதனால், அரசு மற்ற துறைகளில் உதாரணமாக நலத்திட்டங்கள் (welfare schemes) அல்லது பாதுகாப்புத் துறை (defence) செலவுகளை குறைக்க வேண்டியிருக்கலாம் அல்லது வரிகளை அதிகரிக்க  வேண்டிய சூழல் ஏற்படும். மொத்தத்தில், பத்திரங்கள் அதிகமாக விற்கப்பட்டு (bond sell-off), வருவாய் விகிதம் உயர்வது என்பது நல்ல அறிகுறி அல்ல.

Original link:

Graphs, Data and Perspectives: Why rising govt bond yields are bad news. 

Share: