பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியிருப்பது, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புக்கு எவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்குகிறது? -டி.பி. சீதாராம்

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வலுவான காரணங்கள் உள்ளன. எனவே, ஒரு நெருக்கடி காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் கிடைப்பதை வெளிப்படையாக உறுதி செய்யும் வகையில், தற்போது அமீரகத்துடன் உள்ள தற்காலிக ஏற்பாட்டை ஒரு முறையான அவசரகால அணுகல் ஒப்பந்தமாக இந்தியா விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.


கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 15-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புத் திட்டத்தில் (Strategic Petroleum Reserves (SPR)) அமீரகத்தின் தீவிரப் பங்களிப்பைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.


இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்தியாவின் சண்டிகோல் (Chandikhol) மற்றும் பாதூர் (Padur) ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலத்தடி குகைக் கிடங்குகளில் அமீரகம் தனது கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க முடியும்; அதே நேரத்தில் இந்தியா தனது கச்சா எண்ணெயை அமீரகத்தின் புஜைராவில் (Fujairah) சேமித்து வைக்க அனுமதிக்கப்படும். முன்னதாக 2015-ஆம் ஆண்டில், ‘IL&FS’ நிறுவனம் புஜைராவில் 3,33,484 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கை உருவாக்கியது, ஆனால் தனது பெரும் கடன்களை அடைப்பதற்காக அந்த நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் அதனை விற்பனை செய்துவிட்டது.


புஜைராவில் கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எண்ணெயைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம். அமீரகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏற்படும் முதல் நேர்மறையான முடிவுகளில் ஒன்றாக இந்த ஏற்பாடு அமையக்கூடும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாகவும், தனது கச்சா எண்ணெய் தேவையில் 87% இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடாகவும் இருக்கும் இந்தியாவிற்கு, இந்த மாற்றம் எண்ணெய் விலை மாற்றங்களையும் தாண்டி மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தியா இதனைத் தனது ஆற்றல் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த தயார்நிலை ஆகிய இரண்டையும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியேற்றத்தின் மூலம் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு


பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியேற்றம் என்பது, ஒரு காலத்தில் புவிசார் அரசியல் ரீதியாகச் சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், இது பல ஆண்டுகளாகவே உருவாகி வந்த ஒரு சூழலாகும். அமீரகத்தின் தலைநகரான அபுதாபி, 2023-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு விதித்து வந்த கச்சா எண்ணெய் உற்பத்தி வரம்புகளால் பெரும் அதிருப்தியில் இருந்தது. ஏனெனில், இந்த வரம்புகள் அந்நாட்டின் விரிவாக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுத்தன. தற்போது அமீரகத்தின் எண்ணெய் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 4.85 மில்லியன் பேரல்களுக்கும் (Barrels) அதிகமாக உள்ளது. இந்த வெளியேற்றம் அமீரகத்தின் தெளிவான நீண்டகால உத்தியைக் காட்டுகிறது: அதாவது, உலகளாவிய எரிசக்தி மாற்றம் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை எதிர்காலத்தில் குறைவதற்கு முன்பாகவே, தனது முழுத்திறனையும் பயன்படுத்தி எண்ணெயை உற்பத்தி செய்துவிட வேண்டும் என்பதே ஆகும். மேலும், உள்நாட்டு முடிவுகளால் மற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகப் பலன் அளித்து வந்த ஓர் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்க அமீரகம் விரும்பவில்லை. அதன் இறையாண்மை நிதி அமைப்பான அபுதாபி முதலீட்டு வாரியம் (Abu Dhabi Investment Authority (ADIA)), தற்போது ஏறக்குறைய 1.12 டிரில்லியன் டாலர் (சுமார் ₹93 லட்சம் கோடிக்கும் அதிம்) மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.


ஏமனில் இரு நாடுகளுக்கும் இருந்த வெவ்வேறு இலக்குகள் மற்றும் செங்கடலில் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் என, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வந்த கருத்து வேறுபாடுகள், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து அமீரகம் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. கடல்வழி வர்த்தகப் பாதைகளை பெரிதும் நம்பியிருக்கும் அமீரகத்திற்கு இந்தத் தாக்குதல்கள் கடுமையான அச்சுறுத்தலாக இருந்தன. ஆனால், ஹூதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியாவோ, மேலும் மோதல் ஏற்படுவதை விரும்பவில்லை.


முக்கியமாக இந்தியாவைப் பொறுத்தவரை, 2020-ஆம் ஆண்டின் ஆபிரகாம் உடன்படிக்கை (Abraham Accords) மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் உறவை இயல்பாக்கியது, ஒரு முக்கிய எரிசக்தி பாதுகாப்புப் பலன்களைக் கொண்ட கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இணைய பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புப் பாதுகாப்பு போன்றவற்றில் இஸ்ரேலின் அதிநவீனத் திறன்களை அபுதாபி பெற்றுக் கொண்டது. காசா போர் நடந்த சமயத்திலும்கூட, அமீரகம் இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து ஆதரித்தது. இந்த இருதரப்பு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திரரீதியான ஆர்வம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திலும் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. ஈரான் எல்லையிலுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முற்றிலும் தவிர்த்துவிட்டு புதிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவின் திட்ட வகுப்பாளர்கள் இந்த வளர்ந்துவரும் ஒத்துழைப்பைத் தங்களுக்குச் சாதகமாக தீவிரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.





இருதரப்பு வாய்ப்பு


இந்தியா இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையே கிடைக்கக்கூடிய இருதரப்பு வாய்ப்புகள் நமக்குச் சாதகமாக அமையும். ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் நிறுவனமான ‘Abu Dhabi National Oil Company’, அரசாங்கங்களுக்கு இடையேயான நீண்டகால எண்ணெய் விநியோக ஒப்பந்தங்களை வழங்க முடியும். மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) கூட்டமைப்பின் விதிகளுக்குப் பயப்படாமல் விலையையும், எண்ணெயின் அளவையும் நேரடியாகப் பேசித் தீர்மானிக்க முடியும். அபுதாபி இனி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மறைமுகமான, டாலர் அடிப்படையிலான முறையோடு பிணைக்கப்பட்டிருக்காது என்பதால், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ரூபாய்-திர்ஹாம் (Rupee-Dirham) மதிப்பில் மேற்கொள்வது குறித்து தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளும் மிகவும் நடைமுறைக்குச் சாத்தியமானதாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுப்பாடற்ற அதிக வருவாயைக் கொண்டும், தங்களுக்கென நிலையான நுகர்வோரை உருவாக்கிக் கொள்ளும் தீவிர ஆர்வத்தோடும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய வலுவான காரணங்களைக் கொண்டிருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெய் இந்தியாவின் உத்திசார் இருப்புப் பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டு, அந்த எண்ணெயை ஓரளவிற்குப் பயன்படுத்த ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் தற்போதைய முறையும் இதில் அடங்கும். நெருக்கடி காலங்களில் இந்த எண்ணெய் முழுவதையும் இந்தியாவே பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், ஒரு தெளிவான அவசரகால அணுகல் ஒப்பந்தமாக இதனை இந்தியா விரைந்து மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.





இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு


இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு என்பது, ‘Indian Strategic Petroleum Reserves Limited’ என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் அரபு நாடுகளின் அரசியல் கொந்தளிப்புகள் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பிற நாடுகளை இந்தியா பெரிதும் நம்பியிருப்பது ஆபத்தானது என்ற கவலை எழுந்தது. அதற்குப் பதிலாகவே இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் உள்ள மொத்த சேமிப்புத் திறன் 5.33 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளபடி, தற்போதைய நாட்டின் நுகர்வு அளவின் அடிப்படையில், மற்ற சேமிப்பு வசதிகளையும் சேர்த்தால் இந்த உத்திசார் இருப்பு இந்தியாவின் தோராயமாக 74 நாட்களுக்கான தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாகும்.


நெருக்கடி காலங்களில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை விரைவாகப் பெறுவதற்காக, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்தச் சேமிப்புக் கிடங்குகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிற்கு வரும் 80%-க்கும் அதிகமான வளைகுடா எண்ணெய் கடந்து வரும் 21 மைல் அகலமுள்ள மிகக் குறுகிய கடல்வழியான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள வாதம் மிகச் சரியானது என்றாலும், இந்தியாவின் இருப்பு அளவு என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது.


இதற்கு முற்றிலும் மாறாக, ஜப்பான் நாடு தனது நிகர இறக்குமதியில் 254 நாட்களுக்குத் தேவையான உத்திசார் இருப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் தென்கொரியா 210 நாட்களுக்கான இருப்பை வைத்துள்ளது. தனது தரவுகளை வெளிப்படையாக அறிவிக்காத சீனாகூட, முறையாகச் செயல்பட்டு 90 முதல் 100 நாட்களுக்குத் தேவையான இருப்பை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கான அடிப்படை விதியாக, சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) தனது உறுப்பு நாடுகள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கான நிகர இறக்குமதி இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்தியா இன்னும் சர்வதேச எரிசக்தி முகமையின் முழுநேர உறுப்பு நாடு அல்ல என்றாலும், அதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளது. ஆனால், அந்த விருப்பத்திற்கும் இந்தியாவின் தற்போதைய இருப்பு நிலவரத்திற்கும் இடையே உள்ள இடைவெளி சாதாரணமானது அல்ல; அது நாட்டின் பாதுகாப்பில் உள்ள ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது. மேலும், அவசர காலத்தில் இந்தியாவின் அணுஉலைகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட ரக கச்சா எண்ணெய்க்குப் பதிலாக மாற்று ரகங்களை எளிதாகப் பயன்படுத்த முடியாது. ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான வணிகரீதியான கூட்டுச் சேமிப்பு மாதிரியானது, ஒரு போர்க்கால நெருக்கடியின்போது அந்த எண்ணெயை யார் கட்டுப்படுத்துவது என்பதில் சட்டரீதியான தெளிவின்மையை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பரந்த வடமாநிலப் பகுதிகளில் இத்தகைய உத்திசார் பெட்ரோலிய இருப்பு கிடங்குகள் எதுவும் இல்லாததால், அவசர காலத்தில் நாட்டின் மையப்பகுதிகளுக்கு எண்ணெயைக் கொண்டு சேர்க்க, குழாய் வழித்தடங்கள் மற்றும் சாலைகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.


ஒடிசாவின் சண்டிகோல் (Chandikhol) பகுதியில் கூடுதல் வசதிகளை உருவாக்குவது மற்றும் கர்நாடகாவின் படூர் (Padur) பகுதியில் வசதியை விரிவாக்கம் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கத் திட்டங்களை அரசாங்கம் வகுத்திருந்தது. இவை இரண்டும் சேர்ந்து நாட்டின் சேமிப்புத் திறனை மேலும் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அதிகரிக்கும் என்றும், இத்திட்டம் 2023-24-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முதலீட்டை ஈர்க்க தடுமாறி வரும் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரிகளை நம்பியிருந்ததன் காரணமாக, இந்த காலக்கெடு முடிவடைந்தும் திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. எனவே, அடுத்த கட்டப் பணிகளுக்குப் பிரத்யேகமான அரசு நிதியைத் தர வேண்டுமே தவிர, மீண்டும் பொது-தனியார் மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்யக்கூடாது.


தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டிய வர்த்தக ரீதியான இருப்புக்கான கட்டாயத்தை, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உள்ள அளவிற்குக் கூட்ட வேண்டும். ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான தற்போதைய சேமிப்பு ஒப்பந்தத்தை, இருதரப்பையும் கட்டுப்படுத்தும் ஒரு வலுவான ஒப்பந்தமாக மாற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், ஜப்பானும் பிற நாடுகளும் பல ஆண்டுகளாக நம்பியிருக்கும் கூட்டு அவசரகால பாதுகாப்பு வழிமுறைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள, இந்தியா சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) முழுநேர உறுப்பினராவதற்கான பாதையை விரைவுபடுத்த வேண்டும். பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் வெளியேறியுள்ள நிலையில், இந்த புதிய அணுகுமுறை இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆற்றல் துறை கூட்டாண்மையை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளுக்கும் லாபகரமானதாக அமையும் என்கின்றனர்.


டி.பி. சீதாராம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்னாள் இந்தியத் தூதர் ஆவார்.

Original link:

How UAE’s exit from OPEC presents an opportunity for India’s strategic petroleum reserves.


Share: