டிரம்பின் புதிய நிரந்தர குடியுரிமை அட்டைக்கான (Green Card) விதிமுறை விளக்கம்: தற்காலிக நுழைவுஅனுமதி சீட்டுகளில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள், இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
டிரம்பின் நிரந்தர குடியுரிமைக்கான விதிமுறை விளக்கம்: 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு வழக்கத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றி, தற்காலிக நுழைவுஅனுமதி சீட்டுடன் அமெரிக்காவிற்கு வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்கு (Green Card) விண்ணப்பிக்க தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் (United States Citizenship and Immigration Services (USCIS)) செய்தித் தொடர்பாளர் சாக் காலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல், விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கியிருந்து நிரந்தர குடியுரிமையைப் பெற விரும்பும் ஒரு வெளிநாட்டவர், விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியே ஆக வேண்டும். வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிரந்தர குடியுரிமை அட்டை நிராகரிக்கப்பட்ட பிறகும் சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கி தலைமறைவாக வாழ நினைப்பவர்களைக் கண்டறிந்து நாட்டைவிட்டு வெளியேற்றும் சுமை அரசுக்குக் குறைகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஏற்கனவே தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சட்டபூர்வமான குடியேற்ற வாய்ப்புகளைக் குறைப்பதற்காக தற்போதைய அமெரிக்க அரசாங்கம் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
இந்தச் சமீபத்திய உத்தரவு யாரைக் குறிவைக்கிறது?
தற்போது, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் — அதாவது அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் நுழைவுஅனுமதி (Visas) பெற்றவர்கள், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் — அமெரிக்காவை விட்டு வெளியேறாமலேயே தங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கான முழு செயல்முறையையும் இங்கேயே விண்ணப்பித்து முடித்துக்கொள்ள முடியும்.
இந்த அறிக்கையின்படி, குடியேற்றவாசிகள் அல்லாத தற்காலிக நுழைவுஅனுமதி பெற்ற (Non-immigrant visas) மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்றோர் அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், குறுகிய காலத்திற்காகவும் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய மாற்றமானது "சட்டத்தின் அசல் நோக்கத்திற்குத்" திரும்புவதாகவும், சட்டத்தின் ஓட்டைகளை (Loophole) குறைப்பதாகவும் அந்த முகமை விவரித்துள்ளது.
மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா நுழைவுஅனுமதி பெற்று வருபவர்கள் போன்ற குடியேறாதோர், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமெரிக்காவிற்கு வருகின்றனர். அவர்களின் வருகை முடிந்ததும் அவர்கள் இங்கிருந்து புறப்படும் வகையில்தான் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்த வருகையானது, நிரந்த குடியுரிமை அட்டையைப் (Green Card) பெறுவதற்கான செயல்முறையின் முதல் படியாக அமைந்துவிடக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையின் மூலம், அமெரிக்க வெளியுறவுத்துறை இனி வெளிநாடுகளில் உள்ள தனது தூதரக அலுவலகங்களிலேயே பெரும்பாலான வழக்குகளைக் கையாள முடியும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) தெரிவித்துள்ளது. மேலும், இது தனது வரம்பிற்குள் வரும் பிற வழக்குகளைச் செயலாக்குவதில் கவனம் செலுத்த, குறைந்த அளவே உள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) வளங்களை விடுவிக்க உதவும். அந்தப் பிற வழக்குகளில், "வழக்கமான வன்முறை மற்றும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நுழைவுஅனுமதி, குடியுரிமை விண்ணப்பங்கள் மற்றும் பிற முன்னுரிமைகள் அடங்கும் என்று அந்த முகமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய விண்ணப்பதாரர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தங்களுக்கு ஏதேனும் "அசாதாரண சூழ்நிலைகள்" இருக்கும் பட்சத்தில் இந்த கடுமையான செயல்முறையிலிருந்து தப்பிக்கலாம்; ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலை என்றால் என்ன என்பதை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) தற்போது வரை தெளிவாக வரையறுக்கவில்லை. யார் இதற்குத் தகுதியானவர், யார் தகுதியற்றவர் என்பதற்கான தெளிவான அளவுகோல் இல்லாததால், இது அங்குள்ள அதிகாரிகளுக்கு வரம்பற்ற தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிற்குப் பொருளாதாரரீதியாகப் பயனளிக்கும் அல்லது நாட்டின் நலனுக்கு ஏற்ற பணிகளைச் செய்யும் நபர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படலாம். ஆனால், மற்றவர்கள் நுழைவுஅனுமதி விண்ணப்ப செயல்முறைக்காகத் தங்கள் சொந்த நாடுகளுக்கு (வெளிநாடுகளுக்கு) செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க செய்தி நிறுவனமான ‘Associated Press’ நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில் அந்த முகமை தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வக் குடியேற்றத்தின் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை
தற்போதைய அமெரிக்க அரசாங்கம், சட்டபூர்வமான குடியேற்ற வழிகளை முடக்குவதற்காகத் தொடர்ந்து எடுத்து வரும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மாதம், அமெரிக்கா ஒரு புதிய நுழைவுஅனுமதி பத்திரம் (Visa bond) திட்டத்தை விரிவுபடுத்தியது. இதன்படி, 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 டாலர் (சுமார் ₹12.5 லட்சம்) வரை பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security (DHS)), நிரந்தர குடியுரிமை அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அகதிகள், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (Immigration and Customs Enforcement (ICE)) காவலில் வைக்கப்படலாம் என்று அறிவித்தது. குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவைப் பயன்படுத்தி இந்த கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்படி, அமெரிக்காவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு நிரந்தர குடியுரிமை அட்டைக்கு விண்ணப்பிக்காத அகதிகள், மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் காவலில் வைக்கப்படலாம். மேலும், அகதிகள் ஒரு வருடத்திற்குள் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தவறினாலும், அவர்களைச் சட்டபூர்வமாகக் காவலில் வைக்க அது ஒரு காரணமாகாது என்று கூறப்பட்டிருந்த 2010-ஆம் ஆண்டின் அரசாணையை இந்த புதிய கொள்கை ரத்து செய்தது.
அதேபோல, 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் வகையில் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் விரிவுபடுத்தப்பட்ட பயணத்தடை உத்தரவு கடந்த ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது.
கடந்த நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களைச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குள் நுழைந்து, தனது நுழைவுஅனுமதி (visa) காலத்தை மீண்டும் மீண்டும் புதுப்பித்து வந்தவர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS), நிரந்தர குடியுரிமை அட்டை திட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்வதாக அறிவித்தது. இந்த மறுஆய்வின் மூலம், குடியேற்ற முடிவுகளில் விண்ணப்பதாரர்களின் சொந்த நாடுகள் "குறிப்பிடத்தக்க எதிர்மறையான காரணிகளாக" சேர்க்கப்பட்டன. இனி அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் சொந்த நாடு மற்றும் அவர்கள் அமெரிக்காவிற்கு வந்ததற்கான நோக்கம் ஆகியவற்றை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதேமாதத்தில், பைடன் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்ட சுமார் 2,30,000 அகதிகளுக்கான நிரந்தர குடியுரிமை அட்டைகளை வழங்கும் பணிகளை தற்போதைய அரசு முடக்கியது. மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சலுகைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் எவருக்கும் நிரந்தர குடியுரிமை அட்டைகளை மறுக்க அதிகாரிகளுக்கு வழிவகை செய்யும் கடுமையான "பொதுப் பொறுப்பு" விதியையும் அரசாங்கம் முன்மொழிந்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்டவர் லொட்டரி மூலம் நுழைவுஅனுமதி பெற்றவர் என அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அமெரிக்கா தனது "பல்வகைமை நுழைவுஅனுமதி" (Diversity Visa) திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இத்திட்டத்தின்கீழ் குடியேற்றம் குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுதோறும் லொட்டரி முறையில் 50,000 நிரந்தர குடியுரிமை அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தத் தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய சுழற்சி வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, ட்ரம்ப் நிர்வாகம் "பிறப்புரிமை குடியுரிமையை" (Birthright citizenship) ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை நுழைவுஅனுமதி வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமையைப் பறித்ததுடன், எதிர்காலத்தில் அவர்கள் மூலம் தங்களது பெற்றோருக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கியுள்ளது.
இப்போது என்ன நடக்கும்?
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஏற்கனவே சட்டரீதியான சவால்கள் எழுந்துள்ளன. குடியேற்ற வழக்கறிஞர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பல விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பானது அல்ல என்றும், அல்லது அவர்கள் விண்ணப்பிப்பதற்குக் குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கத் தூதரகம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, ஆகஸ்ட் மாதம் 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது முதல், அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.
இந்த கொள்கையின் மையத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல நாடுகளில், அமெரிக்கா குடியேற்ற நுழைவுஅனுமதி (Immigrant Visa) விண்ணப்பங்களைச் செயல்படுத்துவது இல்லை. இதனால், பல விண்ணப்பதாரர்கள் தங்களின் குடும்பங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிய நேரிடும், அதேநேரத்தில் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை (Green Card) கிடைப்பதற்கான வாய்ப்பும் தள்ளிப்போகும்.
‘Cato Institute’ கல்வி நிறுவனத்தின் குடியேற்ற ஆய்வுகளுக்கான இயக்குநர் டேவிட் பியர் தனது கட்டுரை ஒன்றில், இந்த நடவடிக்கை திறமைசாலிகளை மற்ற நாடுகளுக்குச் செல்லத் தூண்டும் என்றும், இது அமெரிக்காவை வணிகரீதியாகப் பின்தங்கச் செய்யும் என்றும் எழுதியுள்ளார்.
இந்தக் கொள்கை எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு டிரம்ப் அவர்களின் பல குடியேற்ற நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. எனவே, இதனால் பாதிக்கப்படும் குடியேறிகள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்குமுன் ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசிக்குமாறு சட்ட அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
Original link:
Trump’s green card rule explained: What it means for visa holders in the US.