ஆரம்பத்தில், செலவுகளைக் குறைப்பதற்காகவும் மற்றும் பின்னணி அலுவலக ஆதரவுப் பணிகளுக்காகவும் மட்டுமே இந்தியாவில் தொடங்கப்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres (GCC)), இன்று இந்தியாவின் பரந்த தொழில்நுட்பத் திறமையாளர்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் சூழலமைப்பின் உதவியுடன், புத்தாக்கம் மற்றும் பொறியியல் துறையின் முக்கிய மையங்களாக வளர்ந்துள்ளன.
இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்களின் (GCC) கட்டமைப்பு மிக வேகமாக மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய மையங்களை பின்னணி அலுவலகப் பணிகளுக்காக மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, பொறியியல், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய வணிகச் செயல்பாடுகளுக்காகவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. சமீபத்திய அறிக்கை ஒன்றின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தற்போது 2,117 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை 2.36 மில்லியன் (சுமார் 23.6 லட்சம்) நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, 2025-26-ஆம் நிதியாண்டில் சுமார் 98.4 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 8.2 லட்சம் கோடி ரூபாய்) வருவாயை ஈட்டியுள்ளன.
உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) என்பது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உலகளாவிய வணிகத்திற்காகத் தொழில்நுட்பம், பொறியியல், செயல்பாடுகள், நிதி, ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற முக்கியமான பணிகளை நிர்வகிக்க வெளிநாடுகளில் உருவாக்கும் மையங்களாகும். தொடக்க காலத்தில், இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCC) முக்கியமாகச் செலவுகளைக் குறைப்பதற்கும், அலுவலகத்தின் பின்னணிப் பணிகளை கவனிப்பதற்கும் மட்டுமே அமைக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் திறமையாளர்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் சூழல் காரணமாக, இவை புதுமை மற்றும் பொறியியலுக்கான முக்கிய மையங்களாக வளர்ந்துள்ளன. இன்று, பல உலகளாவிய திறன் மையங்கள் தங்களின் நிறுவனங்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, இணைய பாதுகாப்பு, சிப் வடிவமைப்பு, மேகக்கணிப் பொறியியல் (Cloud engineering) மற்றும் நிறுவன உருமாற்றம் போன்ற நவீனத் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (National Association of Software and Service Companies (NASSCOM)) மற்றும் ‘Zinnov’ என்ற ஆலோசனை நிறுவனம் இணைந்து தயாரித்த ‘The GCC Value Orbit’ என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறை 32% வளர்ச்சியை எட்டியுள்ளது. இக்காலக்கட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புதிய உலகளாவிய திறன் மையங்கள் (GCC) மற்றும் 1,000 கூடுதல் கிளை மையங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன.
இருப்பினும், உலகளாவிய திறன் மையங்களின் (Global Capability Centres (GCCs)) வேகமான வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், இந்தியா எதிர்பார்த்த அளவிற்கான சர்வதேச முடிவெடுக்கும் அதிகாரங்கள் மற்றும் மூத்த தலைமைப் பொறுப்புகளை இன்னும் பெறவில்லை என்று கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். பொறியியல், செயல்பாடுகள் மற்றும் தயாரிப்பு சார்ந்த பொறுப்புகள் இந்தியாவில் பெருமளவு அதிகரித்திருந்தாலும், ஒரு நிறுவனத்தின் உத்தி சார்ந்த கட்டுப்பாடு மற்றும் உயர்மட்ட பெரு நிறுவன அதிகாரங்கள் பொதுவாக வெளிநாடுகளில் உள்ள தலைமையகங்களிலேயே தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்த அறிக்கையே ஒரு முக்கிய இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது; அதாவது, இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்களில் (GCCs) வெறும் 5% மட்டுமே மாற்றத்திற்கான மையங்களாக வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றில் மட்டுமே உயர்மட்டத் தலைமைப் பொறுப்புகளும், சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அடுத்தகட்ட சவால் என்பது வெறும் செயல்பாட்டு மற்றும் பொறியியல் மையமாகமட்டும் இல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய தலைமைப் பொறுப்புகள், செயற்கை நுண்ணறிவு தலைமைக் குழுக்கள் மற்றும் நிறுவன அளவிலான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இடமாக உருவெடுப்பதே ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செலவு சேமிப்பு அடிப்படையிலான வர்த்தகத்திலிருந்து, உத்திசார் உரிமையாளராக உருவெடுத்தல்
இந்த அறிக்கை இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வளர்ச்சி என்பது இனி வெறும் குறைந்த செலவிலான ஒப்பந்தப் பணிகளை (Low-cost outsourcing) செய்வது மட்டுமே அல்ல என்று கூறுகிறது. உலகளாவிய நிறுவனங்கள் தற்போது தங்களது இந்திய மையங்களிடம் தயாரிப்புகள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தளங்கள் மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வெறும் "பணி வழங்கும் இயந்திரங்களாக" மட்டும் இல்லாமல், நிறுவனங்களின் முக்கிய நரம்பு மையங்களாக மாறி வருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாகச் செயற்கை நுண்ணறிவு விளங்குகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCC) இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் திறன்களைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றில் 250-க்கும் மேற்பட்ட மையங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலுக்கான பிரத்யேகமான சிறப்பு மையங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் இந்த உலகளாவிய திறன் மையங்களின் (GCC) கட்டமைப்பு 2,50,000-க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதன்மூலம், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு அமைப்பின் பயன்பாடு மற்றும் பொறியியல் அடுக்குகளில், இந்தியா மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), தற்போது செயற்கை நுண்ணறிவு மாதிரி பொறியியல், நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செயல்படுத்துதல், சிப் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மென்பொருள் மேம்பாடு போன்ற பணிகளைக் கையாண்டு வருகின்றன. அதே நேரத்தில், நிறுவனங்கள் தங்களை முழுமையாக "செயற்கை நுண்ணறிவு-சார்ந்த" (AI-native) அமைப்புகளாக மாற்றியமைத்து வருகின்றன. இதன் விளைவாக, அதிகப்படியான ஆட்களைப் பணிக்குத் திரட்டும் முறைக்குப் பதிலாக, தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் குறிப்பிட்ட துறைசார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன.
உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பீடு
இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களின் (GCC) வளர்ச்சி, பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறைக்கு பெரும் சவாலையும் அழுத்தத்தையும் அளித்து வருகிறது. நீண்டகாலமாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையானது, மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தப் பணி (Labour-based outsourcing) மற்றும் பணியாற்றிய நேரம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் ஊதியம் பெறும் ஒப்பந்தங்களை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முக்கியமான பணிகளை ஒப்பந்த பணி (Outsourcing) செய்வதற்குப் பதிலாக, தங்களுடைய சொந்தப் பிரிவு அலுவலகங்களான உலகளாவிய திறன் மையங்கள் (GCC) மூலமாக நேரடியாகச் செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் இந்தியாவின் பெரிய ஒப்பந்தப் பணி நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து வருவதுடன், திறமையான பணியாளர்களுக்கானப் போட்டியும் அதிகரித்துள்ளது. அதிக சம்பளம், சிறந்த தயாரிப்பு அனுபவம் மற்றும் வேலை நிலைத்தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, பொறியாளர்கள் அத்தகைய உலகளாவிய திறன் மையங்களை நோக்கி அதிகம் செல்கின்றனர்.
‘Nasscom-Zinnov’ நிறுவனங்களின் அறிக்கையும் இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, வணிக மாதிரிகள் 'நேரம் மற்றும் பொருட்களின்' அடிப்படையிலான கட்டண முறையிலிருந்து, 'மதிப்புப் பகிர்வு' மற்றும் 'லாபப் பகிர்வு' மாதிரிகளுக்கு மாறி வருகின்றன. அதே சமயம், இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCC) தயாரிப்புகள் மற்றும் உருமாற்றத் திட்டங்களுக்கான முழுப்பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன.
தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, இது இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாரம்பரிய வணிக மாதிரியைப் பாதிக்கக்கூடும். வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் தொழில்நுட்பப் பணிகளை நிர்வகிப்பதற்காக, பெருமளவிலான ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலமே இந்த நிறுவனங்கள் இதுவரை வளர்ச்சி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த மாற்றம் முற்றிலும் எதிர்மறையான ஒன்றாக இருக்காது. வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்குப் பதிலாக, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது ஆலோசனை வழங்குதல், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, தானியங்கி முறை மற்றும் தளம் சார்ந்த பொறியியல் (Platform engineering) போன்ற அதிக மதிப்புமிக்க உயர்தரப் பணிகளை நோக்கித் தள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Original Link: Global firms’ AI centres are reshaping Indian IT industry, but who has the top jobs?