உலக சுற்றுச்சூழல் தினம் 2026: சுற்றுச்சூழல் தொடர்பான 5 முக்கிய பாடங்கள் -ரோஷ்னி யாதவ்

 ஆர்க்டிக் பகுதி, பெருங்கடல்கள் மற்றும் உலகின் காடுகள் ஆகியவை கடந்த ஆண்டு வலுவான எச்சரிக்கை நிலைகளை வெளிப்படுத்தின. கேள்வி என்னவென்றால், நாம் அவற்றைக் கவனத்தில் கொள்கிறோமா? நமது பூமி எதை நோக்கிச் செல்கிறது என்பதையும், அடுத்து என்ன நிகழக்கூடும் என்பதையும் உணர்த்தும் ஐந்து சுற்றுச்சூழல்கள் நிலை குறித்து விரிவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய நிகழ்வு :


ஜூன் 5 அன்று, அஜர்பைஜான் குடியரசு, பாகு (Baku) நகரில் 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் (United Nations Environment Programme (UNEP)) நடத்தப்படும் உலக சுற்றுச்சூழல் தினம், நவீன உலகின் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்து விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாகும். 2026-ம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினம், காலநிலை மாற்றத்தின் மீது கவனம் செலுத்துகிறது. இதன் பொருள், பூமி வெளிப்படுத்தும் அவசர எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் அதற்குப் பதிலாக அக்குறியீடுகளுக்கு மனிதகுலம் எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதையும் இது கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், “இயற்கையால் பெற்ற ஊக்கம். காலநிலைக்காக. நமது எதிர்காலத்திற்காக” (Inspired by Nature. For Climate. For Our Future) என்பதாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. ஒரு முக்கிய கடல் நீரோட்டம் செயலிழந்து வருகிறது


விஞ்ஞானிகள் முன்பு எதிர்பார்த்ததைவிட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பரந்த நீரோட்ட அமைப்பு மிக அதிகமாக பலவீனமடையக்கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்ததை அடுத்து, அதன் நிலைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.


உலகின் பெரும்பகுதிகளில் காலநிலையை ஒழுங்குபடுத்தும் அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)), 2100-ம் ஆண்டிற்குள் 59% வரை குறையக்கூடும். இதனால், இந்தியத் துணைக்கண்டம் போன்ற தொலைதூர வானிலை அமைப்புகளில் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) முக்கியமானது. ஏனெனில் இது ஒரு 'காலநிலைத் திருப்புமுனை' (climate tipping point) ஆகக் கருதப்படுகிறது. ஒரு திருப்புமுனையாக, அளவுக்கு அதிகமாக சமநிலைப்புள்ளியைத் தாண்டி சாய்க்கப்பட்ட நாற்காலியைப் போலவே, AMOC ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடந்தவுடன், அது மீளமுடியாத வகையில் ஒரு புதிய, மந்தமான நிலைக்குச் சரிந்துவிடக்கூடும். அப்படி நடந்தால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துவதாக அமையலாம். அது வட அமெரிக்காவில் தீவிரமான கடல் மட்ட உயர்வையும், உலகளவில் கடுமையான வானிலை சீர்குலைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.


கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேளாண் வாழ்வாதாரத்திற்கும், நீர் விநியோகத்திற்கும் கோடைக்கால பருவமழையைச் சார்ந்துள்ள இந்தியாவிற்கு, இந்தக் கண்டுபிடிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.


அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC))


AMOC என்பது கடல் நீரோட்டங்களின் ஒரு பெரிய அமைப்பாகும். இது 'தெர்மோஹலைன் சுழற்சி' (thermohaline circulation (THC)) என்றும் அழைக்கப்படும் உலகளாவிய கடல் நீரோட்ட அமைப்பின் (global ocean conveyor belt) அட்லாண்டிக் கிளையாகும். இது உலகின் கடல் பகுதிகளில் வெப்பம் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பரவச் செய்ய உதவுகிறது. இது வெப்பமண்டலங்களிலிருந்து வெப்பமான மேற்பரப்பு நீரை, வட அரைக்கோளத்தை நோக்கி எடுத்துச் செல்கிறது. அது உறைபனி நிறைந்த ஆர்க்டிக்கை அடையும்போது, ​​நீர் குளிர்ந்து, அடர்த்தியாகி, ஆழ்கடலில் பல கிலோமீட்டர் ஆழத்திற்குச் செல்கிறது. பின்னர் அது ஒரு குளிர்ந்த ஆழ்கடல் நீரோட்டமாகத் தெற்கு நோக்கித் திரும்பி, இறுதியில் மேற்பரப்பிற்கு வந்து வெப்பமடைந்து, இந்தச் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது. மெதுவான ஆனால் சக்திவாய்ந்த இந்த அமைப்பு, உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான வெப்பத்தை இடமாற்றம் செய்கிறது.


2. ஆர்க்டிக் கடல் பனி உருகுவது குறைந்துள்ளது. இது ஒரு ‘நல்ல செய்தி’ அல்ல.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி உருகுதல் என்பது பருவநிலை மாற்றத்தின் மிக முக்கியமான மற்றும் பரவலாக அறியப்பட்ட குறிகாட்டிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் கடல் பனி இழப்பின் வேகம் குறைந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.


இதன் பொருள் ஆர்க்டிக் கடல் பனி மீண்டும் பழைய நிலையை அடைகிறது (மீட்சியடைகிறது) என்பதல்ல. இந்த வேகம் குறைவது தற்காலிகமானது மட்டுமே. மேலும், இது இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அதன் பிறகு, கடல் பனியானது நீண்டகால சராசரியைவிட வேகமாக உருகக்கூடும் என்று ஆய்வு கூறியது.


ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி குறைவது தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இது புவி வெப்பமயமாதலைத் தீவிரப்படுத்தி, கடல் மட்டம் மேலும் உயர வழிவகுத்து, கடல் பனியைச் சார்ந்துள்ள சூழல் அமைப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை முன்வைக்கும்.


‘உள் காலநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப, கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனி இழப்பு மிகக் குறைவு’ (Minimal Arctic Sea Ice Loss in the Last 20 Years, Consistent With Internal Climate Variability) என்ற தலைப்பிலான ஆய்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘Geophysical Research Letters என்ற இதழில் வெளியிடப்பட்டது.


குறிப்பாக, மனித நடவடிக்கைகளால் புவியின் வெப்பநிலை உயர்கிறது என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதாகும். இது வெப்பத்தைத் தக்கவைக்கும் பசுமை இல்ல வாயுக்களை (GHGs) வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. ஆர்க்டிக் பகுதியில், இந்த வெப்பமடைதல் கடல் பனி உருகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


மனிதர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதே வேளையில், புவியின் சராசரி வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, ஆர்க்டிக் கடல் பனி உருகுவது மெதுவாக இருப்பது, காலநிலை மாற்றமும் மெதுவாகிறது என்பதைக் குறிக்கிறது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.



3. 2025-ல் பூமியின் பெருங்கடல்கள் முன்னெப்போதையும்விட அதிக வெப்பமடைந்திருந்தன


ஒரு புதிய ஆய்வின்படி, 1960-களில் நவீன அளவீடுகள் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த ஆண்டையும்விட 2025-ல் பூமியின் பெருங்கடல்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சியுள்ளன. கடந்த ஆண்டு, பெருங்கடல்கள் கூடுதலாக 23 ஜெட்டாஜூல் (zettajoules) வெப்பத்தை உறிஞ்சின. இது 2024-ல் உறிஞ்சப்பட்ட கூடுதல் 16 ஜெட்டாஜூல் வெப்பத்தைவிட கணிசமாக அதிகமாகும்.


ஆற்றல் பொதுவாக ஜூல்களில் (joules) அளக்கப்படுகிறது. ஒரு ஜெட்டாஜூல் என்பது ஒரு செக்ஸ்டில்லியன் ஜூல் ஆகும். அதாவது, கடந்த ஆண்டு பெருங்கடல்கள் உள்வாங்கிக்கொண்ட 23 ஜெட்டாஜூல்களை 23,000,000,000,000,000,000,000 என்று எழுதலாம்.


Ocean Heat Content Sets Another Record in 2025 என்ற பகுப்பாய்வு, ஜனவரி 9 அன்று ‘அட்வான்சஸ் இன் அட்மாஸ்பெரிக் சயின்சஸ்’ (Advances in Atmospheric Sciences) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.


கடல் நீர் வெப்பமடைவது கடல்சார் சூழல் மண்டலங்களில் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, வெப்பமான கடல் நீர் 'கடல் அடுக்குப்பிரிவு' (ocean stratification) நிகழ்வை அதிகரிக்கிறது. இது அடர்த்தியின் அடிப்படையில் கடல் நீர் கிடைமட்ட அடுக்குகளாகப் பிரியும் ஒரு இயற்கையான நிகழ்வாகும்; இதில் வெப்பமான, எடை குறைந்த, உப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த நீர், குளிர்ந்த, அதிக எடை கொண்ட, அதிக உப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த நீரின் மேல் அடுக்காக அமைகிறது. பொதுவாக, கடல்சார் சூழல் மண்டலங்கள், கடல் நீரோட்டங்கள், காற்று மற்றும் அலைகள் ஆகியவை இந்த அடுக்குகளை ஒன்றோடொன்று கலக்கச் செய்கின்றன.


இருப்பினும், வெப்பநிலை அதிகரிப்பு இந்த நீர் அடுக்குகள் ஒன்றோடொன்று கலப்பதை கடினமாக்கியுள்ளது. இதன் காரணமாக, பெருங்கடல்களால் வளிமண்டலத்திலிருந்து குறைந்த அளவே கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்ச முடிகிறது. மேலும், உறிஞ்சப்பட்ட ஆக்ஸிஜனால் கீழே உள்ள குளிர்ந்த கடல் நீருடன் சரியாகக் கலக்க முடியாததால், கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.


வெப்பமான பெருங்கடல்கள் கடல்சார் வெப்ப அலைகளை ((Marine Heatwaves(MHWs)) ஏற்படுத்துகின்றன. இவை, கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை, சராசரி வெப்பநிலையை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக, குறைந்தது ஐந்து நாட்களுக்கு உயரும்போது ஏற்படுகின்றன.


பல ஆய்வுகளின்படி, கடல் நீர் வெப்பமடைவது சூறாவளி மற்றும் புயல்கள் போன்ற தீவிரமான புயல் நிகழ்வுகள் அடிக்கடி மற்றும் அதிக வீரியத்துடன் ஏற்படவும் காரணமாக அமையலாம்.


4. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பது மட்டுமே பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாகாது


சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (International Renewable Energy Agency (IRENA)) அறிக்கையின்படி, 2024-ம் ஆண்டில் உலகம் சுமார் 582 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்த்தது, இது முந்தைய ஆண்டை விட 15% அதிகரிப்பாகும். மேலும், ஒரே ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனின் மிகப்பெரிய ஆண்டு அதிகரிப்பும் இதுவேயாகும்.


ஜூலை 2025 நிலவரப்படி, உலகெங்கிலும் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 4,442 ஜிகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. தற்போது, ​​உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 30% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் பெறப்படுகிறது.


கடந்த ஆண்டு ஜூலை 10 அன்று வெளியிடப்பட்ட சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சங்கத்தின் (IRENA) அறிக்கையில், தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவும் திறனை மும்மடங்காக்கும் தனது இலக்கை உலகம் நெருங்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்கு புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் இது இருந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரைவான வளர்ச்சி, காலநிலை இலக்குகளை அடைவதில் உலகம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்ற தோற்றத்தை அளிக்கக்கூடும். இருப்பினும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கவே இல்லை.


தற்போதைய நிலையில், இது முக்கியமாக அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்தத் தேவை 1990-ம் ஆண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன், இன்னும் அதிகமாக வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


5. உலகின் வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாக்க ஒரு புதிய நிதியின் தேவை


காடழிப்பு என்பது ஒரு முக்கிய உலகளாவிய சவாலாகும். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உயிருள்ள காடுகளைவிட அழிந்த அல்லது வெட்டப்பட்ட காடுகளுக்குச் சந்தையில் அதிக மதிப்பு இருப்பதுதான். உதாரணமாக, காடுகள் நிலைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளான வெப்பநிலை குறைப்பு மற்றும் வனவிலங்குகளுக்கான வாழ்விடங்கள் போன்றவை பெரும்பாலும் பெரிதாகக் கருதப்படுவதில்லை. அதே வேளையில், காடுகளை அழித்து அந்த நிலத்தைச் சோயா போன்ற ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு (monoculture) மாற்றுவதில் வலுவான நிதி சார்ந்த ஊக்கங்கள் உள்ளன.


உலகின் வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், பிரேசிலின் பெலேம் நகரில் நடைபெற்ற COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஒரு புதிய நிதி தொடங்கப்பட்டது. 'வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதி' (Tropical Forest Forever Facility(TFFF)) என்று அழைக்கப்படும் இந்த நிதியானது, 125 பில்லியன் டாலர்களைத் திரட்டி முதலீடு செய்வதையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் காடுகளைப் பாதுகாக்கும் வளரும் நாடுகளுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.




வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதியானது (TFFF), கார்பன் சேமிப்பு உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்கும் உலகின் முக்கிய வெப்பமண்டல காடுகளைப் பாதுகாப்பதற்கு நிதி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதி (TFFF) என்பது ஒரு நிரந்தரமான, சுயநிதி அமைப்பாக வடிவமைக்கப்பட்ட முதலீட்டு நிதியாகும். இதன் மூலம், வளரும் வெப்பமண்டல வனங்களைக் கொண்ட 74 நாடுகள் வரை, தங்களிடம் தற்போதுள்ள தொன்மையான காடுகளைப் பாதுகாத்து (old-growth forests) வருவதற்காக நிகர வருமானம் வழங்கப்படும்.


இந்த நிதியானது, செல்வந்த அரசாங்கங்கள் மற்றும் கொடையாளர்களிடமிருந்து 25 பில்லியன் டாலரையும், கூடுதலாக 100 பில்லியன் டாலரை தனியார் முதலீடாகவும் திரட்டத் திட்டமிட்டுள்ளது. பின்னர், அந்தத் தொகையானது பொது மற்றும் பெருநிறுவனச் சந்தைப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுத் தொகுப்புகளில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருமானமானது, தங்கள் காடுகளைப் பாதுகாக்கும் வெப்பமண்டல வன நாடுகளுக்கு வெகுமதியாகப் பயன்படுத்தப்படும்.


நாடுகளுக்கான நிதியுதவித் தொகைகள், ஆண்டுதோறும் வன விதானப் பரப்பைக் (forest canopy cover) குறைந்த செலவிலும் வெளிப்படையான முறையிலும் கண்காணிக்கும் செயற்கைக்கோள் தொலை உணர்வுத் தரவுகளின் (satellite-based remote sensing data) அடிப்படையில் வழங்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.


இந்தியாவின் புதிய காலநிலை இலக்குகள்


இந்தியா மார்ச் 25 அன்று, 2035-ம் ஆண்டுக்கான தனது பருவநிலை இலக்குகளை வெளியிட்டது. அதன்படி, தனது பொருளாதாரத்தின் கார்பன் செறிவைக் (carbon intensity) குறைப்பதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதிலும், காடுகள் மற்றும் மரங்களிலிருந்து கார்பன் உறிஞ்சும் பரப்புகளை (carbon sinks) உருவாக்குவதிலும் மேலும் முன்னேற்றம் காண்பதாக உறுதியளித்துள்ளது.


தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs)


2015-ம் ஆண்டின் இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உதவும் வகையில் காலநிலை நடவடிக்கைகளைத் தீர்மானித்து, செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) எனக் குறிப்பிடப்படுகின்றன. காலநிலை நடவடிக்கைகளின் தன்மையையும் மற்றும் அளவையையும் நாடுகளே தீர்மானிக்கின்றன என்பதை இது வலியுறுத்துகிறது.


2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 50% இலக்கைவிட, 2035-ம் ஆண்டில் தனது மின்சார உற்பத்தித் திறனில் குறைந்தபட்சம் 60% புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து (non-fossil fuel) பெறப்படுவதை உறுதிசெய்யும் என இந்தியா தெரிவித்துள்ளது.


2005-ம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடுகையில், கார்பன் உமிழ்வு அடர்த்தியில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓர் அலகுக்கான உமிழ்வுகளில், குறைந்தபட்சம் 47% குறைப்பை அடைவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இது, 2030-ம் ஆண்டுக்கான அதன் தற்போதைய 45% இலக்கைவிட இரண்டு சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகும்.


Original article : World Environment Day 2026: Let’s revisit 5 critical environmental lessons. -Roshni Yadav

Share: