கிரேட் நிக்கோபார் திட்டம் : சூழலியல் பொறுப்புணர்வுடன் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துதல். -டி கே ஜோஷி

 இந்திய-பசிபிக் (Indo-Pacific) நூற்றாண்டில், கிரேட் நிக்கோபார் என்பது இந்தியாவின் எல்லைப் பகுதி மட்டுமல்ல, அது இந்தியாவின் எதிர்கால நுழைவாயிலைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய உத்திசார்ந்த கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.


எந்த ஒரு நாடு தன் எல்லைகளையும், கூட்டணிகளையும், வர்த்தகப் பாதைகளையும் பாதுகாக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டால் தன் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கௌடில்யர் (Kautilya) கூறிய இந்தப் பாடம், இன்றும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. இன்று நாடுகள் அவற்றின் பொருளாதார அளவு அல்லது ராணுவ பலத்தை வைத்து மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அவை புவியியலை எவ்வளவு சிறப்பாகப் புரிந்துகொள்கின்றன, எதிர்காலத்திற்கு எவ்வாறு தயாராகின்றன, மற்றும் வாய்ப்புகள் ஆபத்தாக மாறுவதற்கு முன்பே எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே மதிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் முன்இருக்கும் அத்தகைய ஒரு சிக்கல்தான் கிரேட் நிக்கோபார் பகுதி ஆகும்.


இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள 'கிரேட் நிக்கோபார்' தீவு, உலகிற்கு இந்தியாவின் மிக முக்கியமான ராஜதந்திர நுழைவாயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, அங்கு முன்மொழியப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை வெறும் உள்கட்டமைப்புத் திட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. மாறாக, இந்தியா தனது தனித்துவமான புவியியல் சாதகத்தைப் பயன்படுத்தி, தன் ஒட்டுமொத்த தேசிய வலிமையைப் பெருக்கிக் கொள்ள முடியுமா என்பதற்கான ஒரு சோதனையாகவே இதைப் பார்க்க வேண்டும்.


பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் பகுதியானது இந்தியாவின் வர்த்தகம், கலாச்சாரம், சிந்தனைகள் மற்றும் அதன் பாதுகாப்பு சவால்களைக் கூட தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்தது. இருப்பினும், 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜாதத்திரரீதியான கவனம், கடல் பகுதிகளைக் காட்டிலும் நிலப்பகுதிகள் மீதே பெரும்பாலும் இருந்தது.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றுதான் 'கிரேட் நிக்கோபார்' (Great Nicobar) ஆகும். இது சுமார் 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டப் பகுதி 166.10 சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்தத் தீவுகளின் மொத்த பரப்பளவில் வெறும் 2% மட்டுமே. இதில் 130.75 சதுர கிலோமீட்டர் பரப்பளவு — அதாவது இத்தீவுகளின் மொத்த காட்டுப் பகுதியில் சுமார் 1.82%, திட்டப் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த கிரேட் நிக்கோபார் தீவானது, தென்கிழக்கு ஆசியாவிற்கு மிக அருகிலும், சர்வதேச கடல் வணிகக் கப்பல்கள் செல்லும் முக்கியப் பாதைகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது.


கடல்சார் கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான் இதன் ராணுவ மற்றும் வணிகரீதியான முக்கியத்துவம் இன்னும் தெளிவாகப் புரிகிறது. ஏடன் வளைகுடாவில் (Gulf of Aden) இருந்து மலாக்கா நீரிணைக்கு (Malacca Strait) செல்லும் கப்பல்கள், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கு ஆசியாவிற்கு கொண்டு செல்லப்படும் எரிசக்தி விநியோகங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சரக்குக் பெட்டகக் கப்பல்கள் (Container ships), மற்றும் இப்பகுதிக் கடல்களில் இயங்கி வரும் கடற்படைக் கப்பல்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தளவாடப் போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றைக் கவனித்தால் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்.


இந்தியப் பெருங்கடல் பகுதி நாளுக்கு நாள் மிக முக்கியத்துவம் ஒரு பகுதியாக மாறி வருகிறது. எரிசக்திப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, கடற்படை நடவடிக்கைகள், தீவுகளில் கட்டமைப்பு வசதிகள், கடலுக்கடியில் பதிக்கப்படும் கேபிள்கள் (Undersea cables) மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் இப்போது நாடுகளுக்கு இடையிலான ஒரு பெரிய போட்டியின் அங்கமாக மாறியுள்ளன. இந்த போட்டி பல நாடுகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. சமீபத்தில், தாய்லாந்து நாடு அந்தமான் கடலையும் தாய்லாந்து வளைகுடாவையும் (Gulf of Thailand) நேரடியாக இணைக்கும் வகையில் கால்வாய் வெட்டும் தனது நீண்டகாலத் திட்டத்தைக் கைவிட்டது. அதற்குப் பதிலாக, இரண்டு புதிய ஆழ்கடல் துறைமுகங்களை இணைக்கும் 90 கிலோமீட்டர் நீளமுள்ள நிலப்பாலத் (Land bridge) திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதன்படி, ஒரு துறைமுகம் அந்தமான் கடலில் உள்ள ரானாங் (Ranong) என்ற இடத்திலும், மற்றொரு துறைமுகம் தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சும்போன் (Chumphon) என்ற இடத்திலும் அமையவுள்ளன. இந்தத் திட்டத்தில் அதிவேக இரட்டைப் ரயில் பாதைகள், பல வழிச் சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய் இணைப்புகள், மற்றும் வான்வழி-டிஜிட்டல் வலையமைப்புகள் ஆகிய வசதிகளும் அடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் இணைந்து, இந்திய-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்தின் வர்த்தகப் பாதைகளை மாற்றி அமைப்பதுடன், அந்தமான் பகுதியின் பொருளாதார முக்கியத்துவத்தையும் கணிசமாக உயர்த்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மலாக்கா ஜலசந்தி (Strait of Malacca) உலகின் மிக முக்கியமான கடல்வழிச் போக்குவரத்து நெரிசல் பகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைப்பதுடன், பெருமளவிலான எரிபொருள் விநியோகத்தையும் உலக வர்த்தகத்தையும் இணைக்கும் கடல்வழிப் பாதையாகும். கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள கலாத்தியா வளைகுடா (Galathea Bay), சிக்ஸ் டிகிரி சேனலில் (Six Degree Channel) இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிக்ஸ் டிகிரி சேனல்தான் மலாக்கா ஜலசந்தியை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லும் கடல்வழிப் பாதைகளுடன் இணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் கப்பல்கள் இந்த மலாக்கா ஜலசந்தி – சிக்ஸ் டிகிரி சேனல் வழித்தடத்தைக் கடந்து செல்கின்றன. மலாக்கா, சுந்தா (Sunda) மற்றும் லோம்போக் (Lombok) ஆகிய முக்கிய கடல்வழி நெரிசல் புள்ளிகளுக்கு அருகில் கிரேட் நிக்கோபார் அமைந்திருப்பது, இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய வர்த்தகரீதியான சாதகமான சூழலை வழங்குகிறது.


Six Degree Channel (சிக்ஸ் டிகிரி சேனல்): இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை. இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கும் இந்தியாவின் நிக்கோபார் தீவிற்கும் நடுவில் அமைந்துள்ளது.


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், உலகின் முக்கிய நாடுகள் தங்களின் துறைமுகங்கள், தளவாடக் கட்டமைப்பு வலையமைப்புகள், கடல்சார் வசதிகள், கடற்படைப் பிரிவுகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடங்கள் ஆகியவற்றின் மூலமாகத் தங்களது ஆதிக்கத்தை சீராக அதிகரித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, இந்தியா தனது ராஜதந்திரரீதியான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் எல்லைப்பகுதி மற்ற பகுதிகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டு, மக்கள் வசிப்பிடமாக மாறி, தேவையான சேவைகளைப் பெற்று, உற்பத்தித் திறன் கொண்டதாகவும், ராஜதந்திரரீதியாகப் பயனுள்ளதாகவும் இருக்கும்போதுதான் அந்த நாட்டின் சுயசார்பு நிலை இன்னும் வலுவடைகிறது. சர்வதேச கொள்கலன் மறுபகிர்வு துறைமுகம் (International Container Transshipment Port (ICTP)), ஒரு புதிய விமான நிலையம், குடியிருப்புப் பகுதி மற்றும் மின்உற்பத்தி நிலையம் ஆகிய அனைத்தும் இணைந்து, இந்த முக்கியமான கடல்சார் பகுதியில் இந்தியா தனது வலுவான, நீண்டகால ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கும் என்கின்றனர்.


அனைத்து கருத்துக்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), இந்தத் திட்டம் இந்தத் தீவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது என்பதை அங்கீகரித்துள்ளது.


சிங்கப்பூர் வெறும் அதன் புவியியல் அமைப்பால் மட்டுமே ஒரு முக்கிய கடல்சார் மையமாக மாறிவிடவில்லை. அந்தச் சாதகமான இருப்பிடத்தைப் பயன்படுத்தி, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை அந்த நாடு வளர்த்துக்கொண்டது. அதன் இருப்பிடம் வாய்ப்புகளை உருவாக்கியது என்றால், அதன் உள்கட்டமைப்பு அந்த வாய்ப்புகளை உலகளாவிய செல்வாக்காக மாற்றியது. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் 'டீகோ கார்சியா' (Diego Garcia) தீவும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வலுவான தளவாட ஆதரவும் செயல்பாட்டு வசதிகளும் இருந்தால், ஒரு தொலைதூரத் தீவுகூட எவ்வளவு பெரிய ராஜதந்திரரீதியான முக்கியத்துவத்தைப் பெற முடியும் என்பதைக் காட்டுகிறது.


கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டம், இந்தியா தனது வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலையான முறையிலும், முற்றிலும் இந்தியப் பாணியிலும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டு மறு ஏற்றுமதி மையங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும். மேலும், இது இந்தியாவின் கடல்சார் இருப்பை உலகளவில் விரிவுபடுத்துவதுடன், தென்கிழக்கு ஆசியா மற்றும் பரந்த இந்தியா-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்திற்கான நுழைவாயிலாகவும் செயல்படும். கிரேட் நிக்கோபாரில் அமையவுள்ள மறுஏற்றுமதி துறைமுகம் (Transhipment port), வெளிநாட்டுத் துறைமுகங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலையைக் குறைக்கும். இந்தியாவின் விநியோகச் சங்கிலியை மிகவும் வலுவானதாக மாற்றும், புதிய முதலீடுகளை ஈர்க்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மற்றும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்தின் மீது இந்தியாவிற்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.


அதே நேரத்தில், கிரேட் நிக்கோபார் தீவு சுற்றுச்சூழல்ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய ஒரு பகுதியாகும். அங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெரிய திட்டமும் முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகள், சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், அறிவியல்ரீதியான கண்காணிப்பு மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றுடன்தான் செயல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முழுமையாக முடக்கிவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பையும், சுற்றுச்சூழலுக்கான பொறுப்பையும் சமநிலையில் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.




இந்திய-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்தில் பெரிய மாற்றங்கள் நடந்துவரும் வேளையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீவை இந்தியா பொறுப்புடன் மேம்படுத்த விரும்புகிறதா அல்லது வளர்ச்சி அடையாமல் அப்படியே விட்டுவிடப் போகிறதா என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வி ஆகும். இந்தியா நிலம் மற்றும் கடல் என இரண்டிலும் எல்லையைக் கொண்ட ஒரு வல்லமையுள்ள நாடு. ஆனால், நீண்டகாலமாகவே கடல் சார்ந்த பகுதிகளைவிட நில எல்லைப் பாதுகாப்பிற்கே அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. எனவே, கிரேட் நிக்கோபார் திட்டம் (Great Nicobar project) என்பது தேவையற்ற ஒரு செலவு அல்ல; அது எதிர்காலத்திற்கான ஒரு உத்திசார் முதலீடு ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பொறுத்து மட்டுமல்ல, சரியான நேரத்தில் கண்டறிந்து பயன்படுத்தும் வாய்ப்புகளையும் பொறுத்தே அமைகிறது.                கிரேட் நிக்கோபார் என்பது அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்பு. இதை நாம் புறக்கணித்தால், இந்தியாவிற்குச் சாதகமாக உள்ள ஒரு புவியியல் அமைப்பை நாம் பயன்படுத்தாமல் வீணடிப்பதாக அர்த்தம். மேலும், அது பிற நாடுகள் அந்தப் பகுதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நாமே வழிவகுத்துக் கொடுப்பது போலாகிவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முறையில் இந்தத் தீவை மேம்படுத்துவது,  இந்தியாவின் புவியியல் அமைப்பையே நாட்டின் மிகப்பெரிய பலமாக மாற்றும் என்கின்றனர்.


இந்தியா தனது உத்திசார்ந்த சிந்தனையை மற்றவர்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப, பொறுப்புடனும் துணிச்சலுடனும் செயல்பட்டாலே போதுமானது. இந்த இந்திய-பசிபிக் (Indo-Pacific) நூற்றாண்டில், கிரேட் நிக்கோபார் என்பது இந்தியாவின் எல்லைப் பகுதி மட்டுமல்ல, அது இந்தியாவின் எதிர்கால நுழைவாயிலைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய உத்திசார்ந்த கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.


டி கே ஜோஷி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் மற்றும் தீவுகள் மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் ஆவார். இவர் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி ஆவார். மேலும், 2009-10-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் கூட்டுப்படைத் தலைமையகத்தின் (A&N Command) தலைமைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.


Original article : Great Nicobar task: Pursuing national security with ecological responsibility. -D K Joshi

Share: