இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் கடல் சுவர்கள் மற்றும் தடுப்பணைகளை (Embankments) அதிகம் சார்ந்துள்ளன. அதேவேளையில், சதுப்புநிலக்காடுகள், கடல்புற்கள் மற்றும் பவளப் பாறைகள் (Coral Reefs) போன்ற இயற்கைச் சூழல் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட தகவமைப்பு முறைகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றன.
ஒடிசாவின் கடற்கரையில் உள்ள பிதர்கனிகா அருகே டானா புயல் கரையைக் கடந்தபோது, அந்தப்பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகள், கடலோர உள்கட்டமைப்புகளுக்காக பில்லியன் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டாலும் பெரும்பாலும் வழங்கத் திணறும் ஒரு பாதுகாப்பை அமைதியாக வழங்கின: காலநிலை தாக்கங்களைக் குறைத்து, சுற்றுச்சூழல் அமைப்புகளையும் வாழ்வாதாரங்களையும் வலுப்படுத்தின. இந்தியாவின் கடற்கரை பகுதி முழுவதிலும், சதுப்புநிலக் காடுகள், கடற்கரை புல்வெளிகள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களுக்கு ஏற்ப சமூகங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள ஏற்கனவே உதவி வருகின்றன. இருப்பினும், கடற்கரை பகுதியில் இருக்கும் சுவர்கள், தடுப்பணைகள் மற்றும் கரைக்கட்டுகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமானதாக இருந்த போதிலும், சில நேரங்களில் அவை அபாயங்களை வேறு இடங்களுக்கு மாற்றினாலும், அவை தகவமைப்புச் செலவினங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. நிரூபிக்கப்பட்ட நன்மைகள் இருந்தபோதிலும், இந்தச் சூழலமைப்பு சார்ந்த தலையீடுகள், சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பு (Ecosystem-based Adaptation (EbA)) என அரிதாகவே அங்கீகரிக்கப்படுகின்றன. இது, தகவமைப்பு திட்டமிடல் மற்றும் நிதி உதவி போன்றவற்றின் முக்கியத்துவத்தைக் கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு, பருவநிலை மாற்றம் அவர்கள் தினமும் எதிர்கொள்ளும் உண்மை (lived reality) நிலையாக மாறிவிட்டது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மட்ட உயர்வு, உப்புநீர் ஊடுருவல், தீவிரமடையும் சூறாவளிகள் மற்றும் புயல் அலைகள் போன்றவை இந்தியாவின் 11,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையோரத்தில் அச்சுறுத்தல்களை பல மடங்கு அதிகரித்து வருகின்றன. ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த அபாயங்கள், சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் நுட்பமான கடலோர நிலப்பரப்பை மாற்றியமைப்பதோடு மட்டுமல்லாமல், 25 கோடி மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகளையும் நேரடியாக பாதிக்கின்றன. இந்த சூழலில், மீன்வளம், வேளாண்மை மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு ஆதாரமாக இருக்கும் இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துக்கொண்டே காலநிலை அபாயங்களைக் குறைக்கும் வலுவான அணுகுமுறையாக சுற்றுச்சூழல் அடிப்படையிலான தகவமைப்பு (Ecosystem-based Adaptation (EbA)) விளங்குகிறது.
இந்தியாவின் கடலோரத் தகவமைப்பு நிலப்பரப்பானது, கடலோர சுவர்கள், தடுப்பணைகள், கரைகள் மற்றும் நான்கு தூண்கள் கொண்ட கான்கிரீட் தடுப்புக் கட்டைகள் (Tetrapods) போன்ற பொறியியல் நடவடிக்கைகளுக்கான ஒரு தெளிவான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இந்த விருப்பம் பொதுச் செலவினங்களிலும் தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளில் கடலோர மாநிலங்கள் கடினமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ₹2,641 கோடி செலவிட்ட நிலையில், தேசிய கடலோர இயக்கத்தின் நிதி ஒதுக்கீடு 2022-23ல் ₹195 கோடியிலிருந்து 2024-25-ல் ₹50 கோடியாகக் குறைந்துள்ளது. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் சாம்பல் (Grey) கட்டமைப்பு நடவடிக்கைகள் இன்னும் முக்கியமானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருந்தாலும், அவற்றை பராமரிப்பதற்கு அதிக தொகை தேவைப்படும். மேலும், அவை அடிப்படை பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்குப் பதிலாக, அபாயங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றக்கூடும். உதாரணமாக, கேரளாவில், கடல் அரிப்பைத் தடுக்க அமைக்கப்பட்ட கடின பாதுகாப்பு அமைப்புகள் (hard armouring) சில குறிப்பிட்ட இடங்களை பாதுகாத்துள்ளன. அதேநேரத்தில், அருகிலுள்ள பகுதிகளில் கடல் அரிப்பு (erosion) மற்றும் சேதத்தை அதிகரித்துள்ளன.
இதுவரை பயன்படுத்தப்படாத தகவமைப்புச் சொத்து
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள உதவுவதற்காக, சுற்றுச்சூழல் அடிப்படையிலான தகவமைப்பு பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சூழல் மண்டல சேவைகளைப் பயன்படுத்துகிறது.
இந்தியா கடற்கரையானது, காலநிலை தாக்கங்களுக்கு எதிரான இயற்கை பாதுகாவலர்களாகச் செயல்படும் சதுப்புநிலக் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் ஈரநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்புளுக்கான (EbA) உலகளாவிய 'முக்கிய மையமாக' இந்தியாவை ஆய்வுகள் அடையாளம் காட்டுகின்றன. நமது நாட்டில் உள்ள சதுப்புநிலக் காடுகள், மாற்ற நாடுகளைவிட ஒரு ஹெக்டேருக்கு அதிக மக்களைப் பாதுகாக்கின்றன. இருப்பினும், இந்தியாவின் பருவநிலைத் தாங்கும் திறன் சார்ந்த உத்தியில், இந்தச் சூழலியல் பாதுகாப்பு போதிய அளவில் பயன்படுத்தப்படாத ஒரு வளமாகவே உள்ளது.
சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பின் நன்மைகள் ஏற்கனவே வெளிபடையாக தெரிகின்றன. உதாரணமாக, சுந்தரவனக் காடுகளில், 18,000-க்கும் மேற்பட்ட பெண்கள் 4,600 ஹெக்டேர் சதுப்புநிலக்காடுகளை மீட்டெடுத்து, ஆம்பன் மற்றும் யாஸ் புயல்களின் பேரழிவைக் குறைத்தனர். இந்த மீட்டெடுப்புப் பணிகள், தேன் சேகரிப்பு மற்றும் நண்டு வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் வாழ்வாதாரங்களையும் வலுப்படுத்தின. இது சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பின் சமூக மற்றும் பொருளாதார இணைப்பலன்களை (Economic co-benefits) எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் தகவமைப்பு செயல்திட்டத்தில் சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பு (EbA) ஒரு புறம் சார்ந்தே உள்ளது. பிளவுபட்ட அதிகார வரம்புகள், பலவீனமான கண்காணிப்பு மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்புக்கான முன்னுரிமை ஆகியவை, சூழலமைப்பு அடிப்படையிலான தலையீடுகளைத் தனிப்பட்ட தகவமைப்புகளாக அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக, பரந்த துறைசார் திட்டங்களுக்குள் புதைத்துவிடுகின்றன.
இருப்பினும், மிகவும் கவனிக்கப்படாத தடையாக இருப்பது, 'சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பு' (EbA) என்ற சொல்லைச் சுற்றியுள்ள தெளிவற்ற தன்மையே ஆகும். கொள்கையானது, இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions (NbS)), சூழல்மண்டலம் சார்ந்த கடலோரத் தகவமைப்பு (Ecosystem-based Coastal Adaptation (EbCA)), சூழல்மண்டலம் சார்ந்த பேரிடர் இடர் குறைப்பு (Ecosystem-based Disaster Risk Reduction (Eco-DRR)) மற்றும் பிற சூழல்மண்டலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைகள் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட கருத்துக்களால் நிலைத்து நிற்கிறது. இது, எது சூழல்மண்டலம் சார்ந்த தகவமைப்புத் தகுதி பெறுகிறது என்பதில் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்குகிறது. மேலும், பல சூழல் மண்டலம் சார்ந்த தலையீடுகள் பரந்த வளர்ச்சி, பாதுகாப்பு அல்லது மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் தகவமைப்பு நன்மைகள் அரிதாகவே மதிப்பிடப்படுகின்றன அல்லது பதிவு செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, பல கடலோர சூழல் மண்டலம் சார்ந்த தகவமைப்புத் தலையீடுகள் துறைசார் முன்னெடுப்புகள் அல்லது பொதுவான கொள்கைப் பிரிவுகளுக்குள் மறைந்தே இருக்கின்றன. இது, இந்தியாவின் கடலோர சூழல் மண்டலம் சார்ந்த தகவமைப்புத் திட்டங்களின் தொகுப்பை, இருப்பதைவிட மிகவும் பலவீனமானதாகக் காட்டுகிறது.
வகைப்பாடு ஏன் முக்கியமானது
கடலோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டம் இந்த முரண்பாட்டை தெளிவாக விளக்குகின்றன. இது 9 மாநிலங்களில் 540 சதுர கிலோமீட்டர் சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து கடலோர சமூகங்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இது முக்கியமாக ஒரு மீட்டெடுப்புத் திட்டமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
தெளிவான அங்கீகாரம் மற்றும் வகைப்பாடு இல்லாததால், பல சூழல்-சார்ந்த தகவமைப்பு (EbA) நடவடிக்கைகள் பல்வேறு திட்டங்கள் மற்றும் பெயர்களின்கீழ் சிதறிக் காணப்படுகின்றன. தெளிவான வகைப்பாடு, தகவமைப்பு விளைவுகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் உதவுவதோடு, சூழல்-சார்ந்த தகவமைப்பின் சமூக-பொருளாதார நன்மைகள் திட்டமிடல் மற்றும் நிதியுதவியில் முறையாகப் பிரதிபலிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. தகவமைப்பு விளைவுகள் எவ்வாறு அளவிடப்பட்டு அறிக்கையிடப்படுகின்றன என்பதில், தகவமைப்பு மீதான உலகளாவிய இலக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளதால், இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. சூழல்-சார்ந்த தகவமைப்பு தலையீடுகளை அடையாளம் காணவும், அதை கண்காணிக்கவும் தெளிவான வழிகள் இல்லாததால், இந்தியா மிகவும் பயனுள்ள காலநிலை நடவடிக்கைகளைக் குறைவாகக் கணக்கிடும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
இது வெறும் சொற்களின் பயன்பாடு பற்றிய கேள்வியாகத் தோன்றினாலும், இதற்கு உண்மையான கொள்கை சார்ந்த விளைவுகள் உள்ளன. காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு (adaptation) நடவடிக்கைகளை மேம்படுத்த இந்தியா, சிதறிக்கிடக்கும் தனித்தனி திட்டங்களிலிருந்து விலகி, சுற்றுச்சூழல் அடிப்படையிலான தகவமைப்பு (Ecosystem-based Adaptation (EbA)) கடலோரத் திட்டமிடல் மற்றும் தகவமைப்பு கொள்கைகளில் ஒருங்கிணைக்கும் விரிவான உத்தியை உருவாக்க வேண்டும். இப்போது சவால் என்பது சுற்றுச்சூழல் அடிப்படையிலான தகவமைப்பு கொள்கைகள் செயல்படுகிறதா இல்லையா என்பதல்ல. மாறாக, அதை அங்கீகரித்து, அதன் பயன்களை அளவிட்டு, பரவலாக நடைமுறைப்படுத்துவதற்கு நமது கொள்கை அமைப்புகள் தயாராக உள்ளனவா என்பதே முக்கியமான கேள்வியாகும். சுற்றுச்சூழல் அடிப்படையிலான தகவமைப்பபை காலநிலை மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான ஒரு முக்கிய உத்தியாக செயல்படுத்துவதன் மூலம், இந்தியா தனது இயற்கையான மூலதனத்தை (Natural Capital) மிகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும், சமத்துவமான மற்றும் வலுவான பாதுகாப்புக் கவசமாக மாற்றி அமைக்க முடியும்.
ஜூய் குசானி, போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் முன்னர் சஸ்டைனபிள் ஃபியூச்சர்ஸ் கொலாபரேட்டிவ் அமைப்பில் பயிற்சியாளராகப் பணியாற்றினார்; சோனி ஆர். கே. சஸ்டைனபிள் ஃபியூச்சர்ஸ் கொலாபரேட்டிவ் அமைப்பில் ஒரு இணை ஆய்வாளர் ஆவார்.
Original article : When mangroves do what seawalls cannot. -Jui Gusani, Sony R.K.