மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் ஏன் உருவாக்கியது? -அமால் ஷேக்

 ஹைதராபாத்தைச் சேர்ந்த மனிதக் கடத்தலுக்கு எதிரான அமைப்பு ஒன்று 2004-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்கு தொடங்கியது. வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு (Commercial Sexual Exploitation (CSE)) ஆளாக்கப்படும் நபர்கள், "பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது அதிலிருந்து மீண்டவர்களாகவோ" நடத்தப்படுவதற்குப் பதிலாக, "குற்றவாளிகளாக" நடத்தப்படுகிறார்கள் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.


கடந்த மாதம், உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்தது.  வணிகரீதியான மற்றும் பாலியல் சுரண்டல்களுக்காக (CSE) நடைபெறும் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க பொருத்தமான சட்டக் கட்டமைப்பு இல்லாதது கடுமையாகப் பாதிக்கிறது என்று கூறியது. எனவே, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டம் (Victim Protection Plan) ஒன்றை உருவாக்குவதன் மூலம் "விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று நீதிமன்றம் கூறியது. வணிகரீதியான பாலியல் சுரண்டல்களால் (CSE) பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் மறுவாழ்விற்கும் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரே ஒரு திட்டம் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என்று குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த முயற்சி பாதிக்கப்பட்டவர்களை இந்த அமைப்பின் மையப் புள்ளியாக வைப்பதும், அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஆகும். மேலும், அவர்களை வெறும் செயலற்ற நபர்களாகப் பார்க்காமல், அதிகாரமளிக்கப்பட வேண்டிய மனிதர்களாகப் பார்ப்பதே நீதிமன்றத்தின் நோக்கமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உரிய கண்ணியத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதில் நீதிமன்றத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


வழக்கின் பின்னணி


ஹைதராபாத்தைச் சேர்ந்த மனிதக் கடத்தலுக்கு எதிரான ‘பிரஜ்வலா’ (Prajwala) என்ற அமைப்பு 2004-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்கு தொடங்கியது. வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்களாக நடத்தப்படாமல், குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்றும், முறையான 'பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்' (Victim Protection Plan) இல்லாததால் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலனற்றுப் போவதாகவும் அந்த மனுவில் வாதிடப்பட்டது.


டிசம்பர் மாதம் 2015-ஆம் ஆண்டில், மனிதக் கடத்தலுக்கு எதிரான ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டுவர ஒரு அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவையும் (Inter-Ministerial Committee), ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை முகமையையும் (Organised Crime Investigation Agency (OCIA)) உருவாக்க அரசு உறுதியளித்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த மனுவை முடித்து வைத்தது. இந்த 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை முகமை' (OCIA) செப்டம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டுக்குள் நிறுவப்பட்டு, டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று நீதிமன்றம் எதிர்பார்த்தது.


இருப்பினும், இந்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்ட வரைவு மசோதாக்கள் 2016, 2017, 2018 மற்றும் 2021-ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட போதிலும், எதுவுமே சட்டமாக மாறவில்லை. இதில் 2018-ஆம் ஆண்டின் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது (lapsed).


திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமையை (OCIA) உருவாக்கும் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு 2019-ஆம் ஆண்டில் ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் 'தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) அதிகாரங்களை விரிவுபடுத்தி, மனிதக் கடத்தல் குற்றங்களை விசாரிக்கும் அனுமதியை அதற்கு வழங்கியது. இதனால், 2015-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அடிப்படையாக இருந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறி, 'பிரஜ்வலா' (Prajwala) என்ற தொண்டு நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 


கண்ணியம் மற்றும் மறுவாழ்வு குறித்து


மனித கண்ணியம் குறித்து நீதிமன்றம் கூறுகையில், ஒவ்வொரு நபரும் மனிதராகப் பிறந்த காரணத்தினாலேயே இந்த கண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டது. மனிதக் கடத்தல் என்பது மனிதர்களைப் பொருட்களாக நடத்துவதாலும், அவர்களின் மனிதத்தன்மையை மதிக்காமல் விடுவதாலும் இந்த கண்ணியக் கோட்பாட்டை நேரடியாக மீறுகிறது.


நீதிமன்ற அமர்வு மேலும் கூறுகையில், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அது ஒரு நபர் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்தே அமைகிறது. மக்கள் தங்கள் விருப்பங்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்களுக்குப் போதிய வருமானமும், சுயசார்புடைய வாழ்வாதாரமும் தேவை. இவை இல்லை என்றால், அவர்கள் எளிதாக சுரண்டலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இத்தகைய வறுமையும் பற்றாக்குறையும் ஒரு மனிதனின் கண்ணியத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணியம் முற்றிலும் பறிக்கப்படும் சூழ்நிலைகளையும் உருவாக்கிவிடும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.


வணிகரீதியான பாலியல் சுரண்டலால் (CSE) பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் ஆழமான மற்றும் பரவலான சமூக அவப்பெயரை எதிர்கொள்கிறார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் காரணமாக, அவர்களின் கண்ணியம், அடையாளம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை.




பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தப்பட்டவர்களுக்கு, இந்திய அரசியலமைப்பின் 21 மற்றும் 23 ஆகிய பிரிவுகளின்கீழ் மறுவாழ்வு பெற அரசியலமைப்புரீதியான உரிமை உள்ளது என்று கூறியது. இதில் பிரிவு-23, மனிதக் கடத்தல், பிச்சை எடுத்தல் மற்றும் பிற வகையான கட்டாய உழைப்பைத் தடை செய்கிறது. மேலும், இந்த விதியை மீறுவோரைச் சட்டப்படி தண்டனைக்குரியவராக்குகிறது.


பந்துவா முக்தி மோர்ச்சா மற்றும் நீர்ஜா சவுத்ரி ஆகியோரின் 1984-ஆம் ஆண்டு தீர்ப்புகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்தத் தீர்ப்புகளில், கொத்தடிமைகளைக் கண்டறிந்து அவர்களை விடுவிப்பது மட்டும் போதாது; அவர்களின் மறுவாழ்வும் அதே அளவு முக்கியமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதே கொள்கையைப் பயன்படுத்தி, கொத்தடிமைகளுக்கு மட்டுமே மறுவாழ்வு அளித்துவிட்டு, வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு (CSE) ஆளாக்கப்பட்டு கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை மறுப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அல்லது நியாயமான காரணமும் இல்லை என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. இந்த இரண்டு குழுவினருமே சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்தான், மேலும் இவர்கள் இருவருக்குமே இந்திய அரசியலமைப்பின் 23-வது பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது. இவர்களுக்குள் இப்படி ஒரு பாகுபாட்டைக் காட்டுவது, முந்தைய தீர்ப்புகளின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியது.


குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வை சமூகரீதியாக மேம்படுத்துவதே முக்கிய நோக்கம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.


பிரிவு 17: சிக்கலும் சம்மதமும்


1956-ஆம் ஆண்டின் ஒழுக்கக்கேடான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின் (Immoral Traffic (Prevention) Act (ITPA)) 17-வது பிரிவை நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்தப் பிரிவு, ஒரு விபச்சார விடுதியில் சோதனை நடத்தப்பட்டு, அங்கிருந்து ஒரு நபர் மீட்கப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கையாள்கிறது.


சட்டமானது மூன்று வெவ்வேறு தரப்பினரையும் ஒரே மாதிரியாகவே நடத்துகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அவர்கள், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள், அவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் அந்தத் தொழிலைத் தொடர முடிவு செய்த பெண்கள், மற்றும் சுயவிருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ஆகியோராவர். அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அது அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.


இதன் விளைவாக, நீதிமன்றம் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முதலாவதாக, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரை அடையாளம் காண முறையான விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், அவர்களை "மீட்பது" (Rescue) என்ற கருத்து இவர்களுக்குப் பொருந்தாது. இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாதுகாப்பு இல்லத்தில் வைப்பதா அல்லது அவரது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைப்பதா என்பதைத் தீர்மானிப்பதில், அந்தப் பெண்ணின் சம்மதமே மிக முக்கியமான காரணியாக இருக்க வேண்டும்.


சுயமாக விருப்பப்பட்டு செய்யும் பாலியல் தொழில் எது, கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் பாலியல் தொழில் எது என்பதற்கு இடையேயான வேறுபாடு நிஜ வாழ்க்கையில் பல நேரங்களில் தெளிவாக இருப்பதில்லை என்று இந்திய தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் உதவிப் பேராசிரியர் டெபாங்கனா சாட்டர்ஜி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தெரிவித்துள்ளார்.


முதலில் தாங்களாகவே முன்வந்து பாலியல் தொழிலுக்கு வரவில்லை என்றே பல பெண்கள் கூறுவதாக அவர் விளக்கினார். இருப்பினும், ஒரு விபச்சார விடுதியில் 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்த பிறகு, அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.


நீதிமன்றம் இந்தச் சிக்கலை அங்கீகரிப்பது மிக முக்கியம் என்று அவர் கூறினார். ஏனெனில், இந்தத் தீர்ப்பு காவல்துறையினர் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உதவும். மேலும், இத்தகைய அங்கீகாரம் பாலியல் தொழில் பற்றிய சமூக அவப்பெயரையும், கூச்சத்தையும் குறைக்க உதவும் என்றும், இந்த விஷயத்தைப் பற்றிப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசுவதை எளிதாக்கும் என்றும் தெரிவித்தார்.


இருப்பினும், ஒருவரின் சம்மதம் என்பது பெரும்பாலும் கடினமான சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு உட்பட்டே இருக்கிறது என்றும், இதனால் ஒருவர் தன் சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது கடினம் என்றும் கூறினார். சுயவிருப்பம் என்பதன் உண்மையான அர்த்தத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவரை, இந்த வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் கூறினார்.


பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்


உச்சநீதிமன்றம் மறுவாழ்வு பெறுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின்படியான உரிமையாக அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது முதல் மீண்டும் சமூகத்தோடு இணைப்பது வரையிலான ஒவ்வொரு கட்டத்தையும் உள்ளடக்கிய விரிவான "பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டத்தை" (Victim Protection Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக நடத்தக் கூடாது என்றும், அவர்களின் சுதந்திரமான மற்றும் முழுமையான சம்மதம் இல்லாமல் பொதுவாக மறுவாழ்வை அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது என்றும் இந்தத் திட்டம் கூறுகிறது.


மேலும், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகளை (AHTU) துணைக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின்கீழ் வலுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து விசாரிப்பதற்காக அவற்றை காவல் நிலையங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரிவுகள் கடத்துபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும், சமூகப் பணியாளர்கள், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



மீட்பு நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்யவோ, வார்த்தைகளாலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தவோ கூடாது. அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களோ அல்லது காணொளிகளோ எடுக்கக் கூடாது. குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மீட்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களைக் காவல் நிலையச் சிறைகளில் அடைத்து வைக்கவோ அல்லது இரவு முழுவதும் காவல் நிலையங்களில் அடைத்து வைக்கவோ கூடாது. அவர்களுக்கு சட்ட உதவி, மருத்துவக் கவனிப்பு மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அதோடு எவ்வித தாமதமும் இன்றி தகுதியான அதிகாரி அல்லது நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நீண்டகாலக் காவலில் வைக்கவோ அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவோ உத்தரவிடுவதற்கு முன்பு, நீதிபதிகள் பாதிக்கப்பட்டவரின் தரப்பு விளக்கத்தைக் கட்டாயம் கேட்க வேண்டும். தேவைப்பட்டால், ஒரு வயது வந்த பெண் தனது சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் ஆராய வேண்டும். இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு குறித்தோ அல்லது அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறித்தோ ஏதேனும் சந்தேகங்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத வரை, அவர்களின் சுய சம்மதம் மட்டுமே முதன்மையான காரணியாகக் கருதப்பட வேண்டும்.


பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருப்பவர்களைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் சிறைச்சாலைகளைப் போலச் செயல்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகப் பணியாளர் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்குத் தேவையான மருத்துவக் கவனிப்பு, மனநல ஆலோசனை, கல்வி, திறன் பயிற்சி, வாழ்வாதார ஆதரவு மற்றும் அரசாங்கத் திட்டங்களைப் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்புத் திட்டம் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டம், நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது, அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை ஒழுங்காக மறுபரிசீலனை செய்வது, சட்ட உதவி வழங்குவது மற்றும் அந்த இல்லங்களுக்குள்ளேயே நடக்கும் துஷ்பிரயோகங்களைப் புகாரளிப்பதற்கான அமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.


சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்த பெண்கள், தாங்கள் விரும்பினால் மறுவாழ்வு உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் செய்யாமல், அவர்களுக்கு என்ன தேவை என்று நிறுவனங்கள் தங்களாகவே முடிவு செய்வதால்தான், மறுவாழ்வுத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன என்று சாட்டர்ஜி கூறினார். பாதிக்கப்பட்ட பல பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, அழகுக்கலை நிபுணர் படிப்புகள், தொழிற்பயிற்சிகள் அல்லது ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான உதவி போன்ற நடைமுறைரீதியான உதவிகள்தான் தேவைப்படுகின்றன. இந்த மாதிரியான விஷயங்களில்தான் மறுவாழ்வுத் திட்டங்கள் உண்மையாகவே உதவ வேண்டும். அதை விடுத்து, அவர்களை ஒரு காப்பகத்தில் அடைத்து வைப்பதால், சில நேரங்களில் அந்தக் காப்பகமே அவர்களைச் சுரண்டும் ஒரு இடமாக மாறிவிடுகிறது என்றும் குறிப்பிட்டார்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமை குறித்து


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமை (OCIA) என்ற புதிய அமைப்பை உருவாக்குவதை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. ஆனால், ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ITPA) 7, 8 மற்றும் 20 ஆகிய பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஏனெனில், தற்போதுள்ள இந்தச் சட்டப்பிரிவுகள் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகக் கருதி அவர்கள் மீது வழக்குத் தொடர வழிவகுக்கின்றன.


மேலும் அந்த அமர்வு, பாதுகாப்பு இல்லங்களில் குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டாயமாகத் தடுத்து வைக்கும் முறையை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தாங்களாகவே முன்வந்து இத்தொழிலில் ஈடுபடும் வயதுவந்த பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியது. பாலியல் தொழிலை ஒரு சட்டப்பூர்வ உரிமையாக மாற்றாமலேயே, பாலியல் தொழிலாளர்களின் (மனித) உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கெனத் தனியாக ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.


Original article : Why Supreme Court framed a Victim Protection Plan for human trafficking survivors. -Amaal Sheikh

Share: