கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம் (coercive diplomacy) என்பது என்ன? - ஆஷியா பர்வீன்

 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரில், அமெரிக்காவின் இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டும் ஏன் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை?


வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததால், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை (peace deal) மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறுவதாகத் தெரியவில்லை.


அமெரிக்காவுடனான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திற்கும், லெபனானில் போர் நிறுத்தத்தை ஈரான் ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது. அதே நேரத்தில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் போர்நிறுத்தம் மூலம் பெரிய அளவிலான மோதல்கள் நிறுத்தப்பட்டதிலிருந்து நிகழ்ந்த மிகத் தீவிரமான சண்டைகளில் ஒன்றாக, புதன்கிழமை (ஜூன் 3, 2026) வளைகுடாவில் இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரில், இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆகியன இணைந்து செயல்பட்டும் ஏன் எதிர்பார்த்த முடிவை எட்ட முடியவில்லை? 'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy) என்ற கோட்பாடு, இந்தச் சூழலை ஓரளவிற்காவது புரிந்துகொள்ள உதவுகிறது.


'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy)


பனிப்போர் காலத்தில் பிரபலமடைந்த 'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy) என்ற கருத்தாக்கம், ஒரு எதிராளியின் முடிவைப் பாதிக்க அச்சுறுத்தல்களையும் பலத்தையும் திட்டமிட்டுப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. சர்வதேச உறவுகளின் புகழ்பெற்ற அறிஞர்களான தாமஸ் ஷெல்லிங் மற்றும் அலெக்சாண்டர் ஜார்ஜ் ஆகிய இருவரும் இந்தக் கருத்தாக்கத்தை விரிவாக விளக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர்.


ஷெல்லிங் தனது Arms and Influence (1966) என்ற புத்தகத்தில், கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம் என்ற கருத்தாக்கத்தை இவ்வாறு வாதிடுகிறார். அவை, “காயப்படுத்தும் சக்தி என்பது பேரம் பேசும் சக்தி. அதைச் சுரண்டுவது இராஜதந்திரம் – அது ஒரு கொடிய ராஜதந்திரம். ஆனால் அது ராஜதந்திரம்தான்.” மிருகத்தனமான பலத்திற்கும் வற்புறுத்தலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டு, அவர் குறிப்பிட்டதாவது, “மிருகத்தனமான பலம் உண்மையில் பயன்படுத்தப்படும்போது வெற்றி பெறுகிறது. அதேசமயம் காயப்படுத்தும் உத்தி கைவசம் வைத்திருக்கும்போது மிகவும் வெற்றிகரமாக அமைகிறது.”


கியூப ஏவுகணை நெருக்கடி எடுத்துக்காட்டு 


ஜார்ஜ் தனது Forceful Persuasion: Coercive Diplomacy as an Alternative to War (1991) என்ற புத்தகத்தில், ஒரு தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியை நிறுத்த அல்லது கைவிட ஒரு எதிராளியை இணங்க வைப்பதற்கு, அச்சுறுத்தலை இராஜதந்திர முயற்சிகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை இதேபோல் எடுத்துக்காட்டுகிறார்.


கட்டாயப்படுத்தும் இராஜதந்திரத்திற்கு (coercive diplomacy) மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக அவர் கியூபா ஏவுகணை நெருக்கடியைக் குறிப்பிடுகிறார். அக்டோபர் 1962-ல், சோவியத் யூனியன் கியூபாவில் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை (medium-range ballistic missiles) நிலைநிறுத்தியது. பனிப்போர் காலத்தின் இரு வல்லரசுகளையும் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது.


ஆனால், கியூபா மீதான முற்றுகையுடன், சாத்தியமான வான்வழித் தாக்குதல் அல்லது படையெடுப்பைப் பயன்படுத்துவதற்கான தனது உறுதியை அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி வெளிப்படுத்தியதால், சோவியத்தின் முதல் செயலாளர் நிகிதா குருசேவ் அந்த ஏவுகணைகளை அகற்றினார்.



டிரம்ப் நிர்ப்பந்தித்த இராஜதந்திரம்


இப்போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம். பொதுவாக, தனது கோரிக்கைகளுக்கு இணங்குமாறு ஈரானை வற்புறுத்துவதற்காக, அமெரிக்கா இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுடன் இணைப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், போர்நிறுத்த நிபந்தனைகளின் தொடர்ச்சியான விதிமீறல்கள் அமெரிக்காவின் உத்தியின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாகத் தெரிகிறது.


போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய முடியாதது ஒருபுறம் இருக்க, வளைகுடாப் பகுதியில் ஈரானிடமிருந்து அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களையும் எதிர்கொள்கிறது. இது, அமெரிக்க அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மை குறித்த எதிராளியின் கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது. பயனுள்ள கட்டாயப்படுத்தும் இராஜதந்திரத்திற்குச் சாதகமான சில நிபந்தனைகளை ஜார்ஜ் அடையாளம் காட்டுகிறார். அவற்றுள் அடங்குபவை,


  • தெளிவான நோக்கங்கள்

  • வலுவான உந்துதல்

  • இரு தரப்பினருக்கும் இடையே உந்துதலில் ஒரு சமச்சீரற்றத் தன்மை

  • அவசர உணர்வு

  • போதுமான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆதரவு

  • மோதல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தீவிரமடைந்துவிடும் என்ற எதிரணியின் அச்சம்

  • நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான மற்றும் துல்லியமான நிபந்தனைகள்


இந்த நிபந்தனைகளுக்கு எதிராகப் பார்க்கும்போது, ஈரானைக் கட்டாயப்படுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் நம்பகத்தன்மையற்றவையாகவே தோன்றுகின்றன. இதற்குக் காரணம், அச்சுறுத்தல்களும் கோரிக்கைகளும் அதற்கேற்ற நடவடிக்கைகளால் சீராக ஆதரிக்கப்படாததே ஆகும்.


Original article : What is coercive diplomacy? -Ashiya Parveen


 

Share: