இந்தியாவின் தற்போதைய பொருளாதார சவால்கள், சிக்கன நடவடிக்கை குறித்து உணர்த்துவது என்ன? -ரித்விகா பட்கிரி

 மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்களால் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சிக்கன நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அரசு செலவினங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. சிக்கனக் கொள்கைகளின் (Austerity policies) வரலாறு அவற்றின் செயல்திறன் குறித்து கூறுவது என்ன?


ஈரானில் நடக்கும் போர் மற்றும் ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) முற்றுகை காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தங்கம் வாங்குவது, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது மற்றும் தனிநபர் வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.


பொருளாதாரத்தில் இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் "சிக்கன நடவடிக்கை" (Austerity) என்று வரையறுக்கப்படுகின்றன. சிக்கன நடவடிக்கை என்றால் என்ன? சிக்கனக் கொள்கைகளின் வரலாறு அவற்றின் செயல்திறனைப் பற்றி என்ன சொல்கிறது? ஜான் மேனார்ட் கீன்ஸ் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் இத்தகைய கொள்கைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்கினர்? மேலும், இந்தியாவில் தற்போதைய சிக்கன நடவடிக்கை குறித்த விவாதம், நாட்டின் பொருளாதார சவால்களைப் பற்றி உணர்த்துவது என்ன?



சிக்கன நடவடிக்கை என்றால் என்ன?


சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுச் செலவினங்களை குறைப்பதன் மூலம், நிதி சமநிலையை மீட்டெடுப்பதையும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கொள்கைகளின் தொகுப்பாகும். இந்தச்  சிக்கன நடவடிக்கைகளில் பொதுவாக சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் பிற சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இவை பின்வரும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கலாம்:


பிற்போக்கு வரி விதிப்பு (Regressive taxation): குறைந்த வருமானம் உடையவர்கள் அதிக வரி செலுத்தும் முறை.


மூலதன ஆதாய வரியைக் குறைத்தல் (Reduction in capital gains tax): முதலீடுகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கான வரிகளைக் குறைப்பது.


நுகர்வு மீதான வரிகளை அதிகரித்தல்: பொருட்கள் மற்றும் சேவைகள் (Goods and Services Tax (GST)) மீதான வரிகளை உயர்த்துவது.


பணவாட்டம் (Deflation): பணவீக்கத்தைக் குறைக்க, அரசுச் செலவுகள் அல்லது கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவது.


வட்டி விகித உயர்வு: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மூலம் வட்டி விகிதங்களை உயர்த்துவது.


தனியார்மயமாக்கல் (Privatisation): அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை விற்பது அல்லது பொதுச் சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது.


நெகிழ்வான தொழிலாளர் ஒப்பந்தங்கள், ஊதியக் கட்டுப்பாடு மற்றும் வேலைவாய்ப்பு விதிமுறைகளைத் தளர்த்துதல்.



பேரியல் பொருளாதார (Macroeconomics) மாதிரிகளின்படி, இந்த சிக்கனக் கொள்கைகளின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவைக் குறைவதால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாகும். உதாரணமாக, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அரசு செலவினங்களைக் குறைக்கும்போது, புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது, ஆட்குறைப்பு செய்வது மற்றும் ஊதிய உயர்வு முடக்கம் போன்றவற்றால் நேரடியாக வேலைவாய்ப்புகள் குறைகின்றன.


1930-கள் மற்றும் 1970-களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளின்போது, மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் 


சிக்கனக் கொள்கைகளின் (Austerity policies) வரலாறு, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசாங்கங்கள் இத்தகைய கொள்கைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கிளாரா மாட்டே என்ற பொருளாதாரப் பேராசிரியை, தனது "The Capital Order: How Economists Invented Austerity and Paved the Way to Fascism (2022)" என்ற புத்தகத்தில், முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக முதலாம் உலகப் போருக்குப் பிறகு நிலவிய பணவீக்கம், பொதுக் கடன்கள் மற்றும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்குப் பதிலடியாகவே இந்தச் சிக்கனக் கொள்கை ஒரு வழிமுறையாக உருவானது என்று கூறுகிறார்.


1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தின் (Great Depression) போது, பல அரசாங்கங்கள் நிதிக் குறைப்பு, வரி உயர்வு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவற்றின் மூலம் பதிலளித்தன. இந்தச் சூழ்நிலையில்தான், நவீன பேரியல் பொருளாதாரத்தின் (Macroeconomics) தந்தை என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கீன்ஸ், உலகளாவிய வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் "The General Theory of Employment, Interest, and Money (1936)" என்ற புத்தகத்தை எழுதினார்.


கீன்ஸின் 'சிக்கன முரண்பாடு' (Paradox of thrift) எனப்படும் சேமிப்பு முரண்பாடு கோட்பாட்டின்படி, பொதுவாக, வேலைவாய்ப்பின்மை காரணமாக தனிநபர்கள் அல்லது குடும்பங்களின் சேமிப்பு விகிதம் அதிகரிக்கும்போது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் சேமிப்பைக் குறைத்து, இறுதியில் பொருளாதார மந்தநிலையை மேலும் மோசமாக்கும் என்கின்றனர்.

1970-களில் "தேக்கவீக்கம்" (Stagflation) என்ற பொருளாதார நிலை உருவானது. இது ஒரே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது, பணவீக்கம் (விலைவாசி உயர்வு), மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய மூன்றும் ஒன்றாகக் காணப்படும் ஒரு காலகட்டமாகும். இந்தக் காலத்தில், இங்கிலாந்து (UK) மற்றும் அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் நவதாராளவாத (Neoliberal) பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. அதாவது நிதி ஒழுக்கம், தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், மற்றும் தொழிலாளர் சந்தை நெகிழ்வுத்தன்மை போன்ற கொள்கைகளை அமல்படுத்தின. அப்போது நிலவிய அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டுமே தொழிலாளர் சங்கங்கள் பலவீனமடைவதற்குக் காரணமாக அமைந்தன.


இந்த மாற்றங்கள் அதற்குப் பிந்தைய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தன. மேலும், அரசின் செலவினக் குறைப்பு மற்றும் நவதாராளவாத சீர்திருத்தங்களுக்கு எதிரான பரவலான விமர்சனங்கள் எழுவதற்கும் இது வழிவகுத்தது.


செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்கள்


கெய்னீசியன் (Keynesians) பொருளாதார அறிஞர்களின் விமர்சனங்களைத் தவிர, இடதுசாரி விமர்சகர்களும் இந்தச் சிக்கனக் கொள்கைகளை எதிர்க்கிறார்கள். இத்தகைய கொள்கைகளின் வரலாறு, தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமைகள், அவர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் போக்கையே காட்டுகிறது என்று வாதிடுகின்றனர். மார்க் பிளைத் தனது "Austerity: The History of a Dangerous Idea (2013)" என்ற புத்தகத்தில், இந்தச் சிக்கனக் கொள்கை வரலாற்றில் எந்தவொரு காலக்கட்டத்திலும் கடனைக் குறைக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவோ உதவியதில்லை என்று விளக்குகிறார்.






கெய்னீசியப் பார்வை (Keynesian perspective): பொருளாதார மந்தநிலை அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும்போது, அரசாங்கமே நேரடியாகப் பணத்தைச் செலவழித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பொருளாதாரக் கொள்கை.


இருப்பினும், அரசாங்கங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, பல நாடுகளின் முதன்மையான கொள்கை முடிவாக இந்த நிதிச் செலவினக் குறைப்பு முறைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சந்தையின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொதுக் கடனைச் சீராகப் பராமரிக்கவும், நீண்டகாலப் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சிக்கனக் கொள்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) குறைவதற்கும், சமத்துவமின்மை அதிகரிப்பதற்கும், பொதுச் சுகாதாரத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்தன என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும், இது பாலினரீதியாக சமமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்புகளையும் குறைத்துவிட்டது.


கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடி 


அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு, கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடி ஒரு மிகச்சிறந்த உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 2001-ஆம் ஆண்டில் கிரேக்க நாடு 'யூரோ' நாணய முறையை ஏற்றுக்கொண்ட பிறகு, பொதுச் சேவைகள் மற்றும் இதர சமூக நலத்திட்டங்களுக்காக அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும், பொதுக் கடனும் மிக வேகமாக உயர்ந்தன. 2009-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், கிரேக்க நாட்டின் நிதிப் பற்றாக்குறை அனைவரும் நினைத்ததைவிட மிக அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியது.       இது 2011-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15.6 சதவீதத்தை எட்டியது.


கிரேக்க அரசாங்கம் திவாலாவதைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஆணையம் (European Commission), ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank (ECB)) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளடங்கிய "Troika" கூட்டமைப்பு, மூன்று ஆண்டுகால நிதியுதவித் திட்டத்தை வழங்கியது. ஆனால், இத்திட்டம் கிரேக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் வரிகளை உயர்த்துதல், ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.


கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிடமிருந்து 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றது. இருப்பினும், கடனை அடைப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட நிதி ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) கிரேக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுத்தது. இதனால் அவர்களின் மொத்த பொருளாதார உற்பத்தி 25 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்தது.  வேலையில்லாத் திண்டாட்டம் 27 சதவீதத்தை எட்டியது. மக்களின் ஊதியங்களும் ஓய்வூதியங்களும் பெருமளவு குறைந்தன.  மேலும், நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Debt-to-GDP ratio) 2009-ஆம் ஆண்டில் 130 சதவீதமாக இருந்தது, 2014-ஆம் ஆண்டில் 180 சதவீதமாக உயர்ந்தது. இதனால்தான், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் எந்தளவுக்குப் பயனுள்ளவை என்ற விவாதங்களில், கிரேக்கத்தின் இந்த அனுபவம் இன்றும் மிக முக்கிய உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.


சிக்கன நடவடிக்கையால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள்


சமீபத்திய கொரோனா (Covid-19) பெருந்தொற்று, சுகாதாரம் மற்றும் பிற சமூகத் துறைகளுக்கான அரசாங்க நிதியுதவியைக் குறைப்பதால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.             பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நிதிக் குறைப்பு (Fiscal restraint) காரணமாக, பல நாடுகளின் பொது சுகாதார அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதை இந்தச் சுகாதார நெருக்கடி வெளிக்காட்டியது. நிலைமையைச் சமாளிக்க அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களை அதிகரித்தபோது, சிக்கன நடவடிக்கை குறித்த விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றன.


பெண்ணிய அறிஞர்களும் இந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நிதிக் குறைப்பு கொள்கைகள் பாரம்பரிய பாலினப் பொறுப்புகளையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் மேலும் வலுப்படுத்துவதாக வாதிடுகின்றனர். உதாரணத்திற்கு, 1970-களில் நிலவிய ஊதியப் பணவீக்கத்தின்போது, அரசாங்கம் வழங்கிய நலத்திட்ட உதவிகளும் வேலையில்லாத் திண்டாட்டக் கால உதவிகளும், ஆண்களே குடும்பத்தின் முதன்மை உழைப்பாளி என்ற பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்ட உதவிகள், உணவு உதவித் திட்டங்கள் அல்லது வேலைக்குச் செல்லும் மனைவிகளை நம்பியிருந்த ஆண்கள் சமூகத்தால் பெண்தன்மை கொண்ட ஆண்கள் (Feminised men) என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டனர்.


சிக்கன நடவடிக்கை குறித்த சமீபத்திய பெண்ணிய விமர்சனங்கள் கூறுவது என்னவென்றால், சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றிற்கான பொதுச் செலவுகளை அரசாங்கம் குறைக்கும்போது, அந்தப் பொறுப்புகள் அனைத்தும் பெண்களுக்கு மேலும் சுமையாக கருதப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு ஊதியமில்லாத வீட்டு வேலைகளும், பராமரிப்புப் பணிகளும் பெருமளவில் அதிகரிக்கின்றன. மேலும், பெண்கள் பொதுவாக இத்தகைய பராமரிப்புத் துறைகளில்தான் அதிக அளவில் வேலை செய்கிறார்கள் என்பதால், அரசாங்கம் இத்துறைகளுக்கான நிதியைக் குறைக்கும்போது அவர்கள் வேலை இழக்கும் அபாயமும் அதிகமாகிறது.


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள்


இந்தியாவில், சிக்கனக் கொள்கை பற்றிய கவலைகள் ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் எழுந்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம் மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள்தான்.           இது எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது, இதனால் உலகளாவிய பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளால் இந்தியப் பொருளாதாரம் எளிதில் பாதிக்கப்படுகிறது.


அரசாங்கக் கொள்கை அளவில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசின் சமீபத்திய கோரிக்கைகள் மக்களின் நடத்தையில் மாற்றங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது எரிபொருள் நுகர்வைக் குறைத்தல், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்துதல் போன்றவையாகும்.


இருப்பினும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான பொதுச் செலவினங்கள் குறித்து இந்தியாவிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஒட்டுமொத்த அரசுச் செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், நாட்டின் வளர்ச்சித் தேவைகளோடு ஒப்பிடும்போது இந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் போதிய அளவில் இல்லை என்று பல பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.


சிக்கன நடவடிக்கைகளின் வரம்புகள்


‘State of Working India report 2026’ அறிக்கையின்படி, இந்தியாவில் 15-25 வயதுப் பிரிவில் உள்ள பட்டதாரிகளில் 40 சதவீதத்தினரும், 25-29 வயதுப் பிரிவில் உள்ளவர்களில் 20 சதவீதத்தினரும் தகுந்த வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இந்த அதிகப்படியான வேலையில்லாத் திண்டாட்டம், நமது பொருளாதார அமைப்பில் உள்ள ஆழமான அடிப்படைக் குறைபாடுகளைக் காட்டுகிறது.


கெய்னீசியப் பொருளாதாரக் கோட்பாட்டின்படி, இத்தகையச் சூழல் நிலவும்போது அரசாங்கமே நேரடியாகப் பொதுத்துறையில் முதலீடு செய்வதும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்காகப் பணம் செலவழிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. குறிப்பாக சுகாதாரம், கல்வி, முதியோர் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பணிகள், மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் அவசியமாகின்றன.


சொந்த வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற மக்களின் பழக்கவழக்க மாற்றங்கள் ஓரளவுக்கு உதவக்கூடும் என்றாலும், பொதுப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளில் கூடுதல் முதலீடுகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

மக்களின் பழக்கவழக்க மாற்றங்கள் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் துணையாக இருக்க முடியுமே தவிர, நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு செய்ய வேண்டிய முதலீடுகளுக்கு அவை மாற்றாக அமைந்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


Original article : What India’s current economic challenges reveal about austerity. -Ritwika Patgiri

Share: