1920-களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒரு கண்டுபிடிப்பு, பருவமழை முன்னறிவிப்புகளை எப்படி மாற்றியமைத்தது? - அமிதாப் சின்ஹா

 1988-ஆம் ஆண்டில்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மீண்டும் அகில இந்திய அளவிலான வானிலை கணிப்புகளைத் தொடங்கியது. மேலும், தனது கணிப்புகளில் மழைப்பொழிவின் அளவு சார்ந்த (Quantitative) விவரங்களையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது.


இந்தியப் பருவமழையில் எல் நினோ (El Niño) ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுவதால், இந்தியாவில் இந்த நிகழ்வு பலருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருக்கிறது. எல் நினோ தென் திசை அலைவு    (El Niño Southern Oscillation (ENSO)) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடக்கும் ஒரு பெரிய அளவிலான கடல்-வளிமண்டலத் தொடர்பாகும். இதுதான் உலகளாவிய காலநிலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குகிறது. இந்த நிகழ்வு, இந்தியப் பருவமழை உட்பட உலகெங்கிலும் உள்ள வானிலை நிகழ்வுகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


இந்த உலகளாவிய நிகழ்வு, குறிப்பாக அதன் வளிமண்டலப் பகுதி, முதன்முதலில் 1920-களின் தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) கண்டறியப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். பிரிட்டிஷ் கணிதவியலாளரும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவருமான                   சர் கில்பர்ட் வாக்கர் என்பவர், பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே காற்று அழுத்தத்தில் ஒரு ஊசலாட்டம் (See-saw) போன்ற ஏற்ற இறக்கமான அமைப்பைக் கவனித்தார். இந்த நிகழ்வு பின்னர் "தெற்கத்திய அலைவு" (Southern Oscillation) என்று அழைக்கப்பட்டது.





இந்தியப் பருவமழையைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு நம்பகமான மாதிரியை உருவாக்க முயன்றபோது, 1904-ஆம் ஆண்டு முதல் 1924-ஆம் ஆண்டு வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய வாக்கர், பருவமழை என்பது இந்தியாவிற்கு வெளியேயுள்ள காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். வானிலை பதிவுகளை மிக உன்னிப்பாக ஆய்வு செய்த அவர், மூன்று முக்கியமான வளிமண்டல அமைப்புகளைக் கண்டறிந்தார். அவற்றில் இரண்டு பசிபிக் பெருங்கடலிலும், ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலிலும் இருந்தன. இந்த அமைப்புகளில் இருமுனைகளுக்கும் இடையே காற்று அழுத்தம் தொடர்ந்து உயர்மட்டத்திற்கும் குறைந்த மட்டத்திற்கும் மாறி மாறி நகர்ந்தது. மற்ற இருஅமைப்புகளான "வட அட்லாண்டிக் அலைவு" மற்றும் "வட பசிபிக் அலைவு" ஆகியவற்றைவிட இது மிகவும் தெற்கே அமைந்திருந்ததால், இதற்கு "தெற்கத்திய அலைவு" (Southern Oscillation) என்று பெயரிடப்பட்டது.


வாக்கர் என்பவர், உலகில் இருக்கும் மூன்று வளிமண்டல அமைப்புகளில் இந்த 'தெற்கு அலைவு' (Southern Oscillation) என்ற அமைப்புதான் மிகவும் சீரானது என்றும், இதுவே இந்தியப் பருவமழையை அதிகம் பாதிக்கக்கூடியது என்றும் கண்டறிந்தார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, நார்வேய-அமெரிக்க வானிலை ஆய்வாளரான ஜேக்கப் பிஜெர்க்னெஸ், இந்த 'தெற்கு அலைவு' அமைப்பை, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதல் நிகழ்வோடு இணைத்துப் பார்த்தார். இந்த நிகழ்வுதான் 'எல் நினோ' (El Niño) என்று அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில், குறிப்பாக பெரு (Peru) மற்றும் ஈக்வடார் (Ecuador) நாடுகளில் வசிக்கும் மக்கள், கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றங்களைப் பற்றி பல நூற்றாண்டுகளாகவே அறிந்திருந்தனர். இருப்பினும், 1960-களின் பிற்பகுதியில், பிஜெர்க்னெஸ் ஒரு முக்கியமான விஷயத்தை நிரூபித்துக் காட்டினார். கடல் சார்ந்த நிகழ்வான 'எல் நினோ'-வும், வளிமண்டலம் சார்ந்த நிகழ்வான 'தெற்கு அலைவும்' ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இவை இரண்டும் இணைந்து ஒரு கூட்டு அமைப்பாக செயல்பட்டு, ஒன்றை ஒன்று மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.


இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு முழுமையான செயல்முறையைப் பற்றிய முதல் தெளிவான புரிதலை வழங்கியது. எல் நினோ-தெற்கு அலைவின் (ENSO) இரு எதிர்நிலைகளான 'எல் நினோ' (El Niño) மற்றும் 'லா நினா' (La Niña) ஆகிய இரண்டும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய வானிலை அமைப்புகளையும் பாதிக்கின்றன. எல் நினோ காலத்தின்போது, தென் அமெரிக்கக் கடற்கரைக்கு அருகிலுள்ள பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பகுதி வழக்கத்தைவிட அதிக வெப்பமடைகிறது. அதேநேரத்தில் ‘லா நினா’ காலத்தின்போது, குளிர்ச்சியடைகிறது. பொதுவாக எல் நினோ உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துகிறது. இது வழக்கமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பருவமழையளவைக் குறைக்கிறது, ஆனால் வட அமெரிக்காவிற்கு பலத்த மழையைக் கொண்டுவருகிறது. லா நினா இதற்கு நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.


வாக்கர் என்பவர் தெற்கு அலைவைக் (Southern Oscillation) கண்டுபிடித்தது, பருவமழை பற்றிய அறிவியல் புரிதலை பெரிதும் மேம்படுத்தியதுடன், பருவமழை கணிப்புகளை மேலும் அறிவியல் பூர்வமானதாக மாற்றியது. இதற்கு முன்பு, 1870-களில்  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்டு வந்த வானிலை கணிப்புகள், முக்கியமாக புள்ளிவிவரத் தொடர்புகளை மட்டுமே நம்பியிருந்தன.


இருந்தபோதிலும், பருவமழை கணிப்புகள் உடனடியாக துல்லியமாக மாறிவிடவில்லை. எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) எனப்படும் பசிபிக் பெருங்கடல் காலநிலை மாற்றத்திற்கும் இந்திய பருவமழைக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டறியப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) நம்பகமான கணிப்புகளை வழங்க முடியவில்லை. இதற்குக் காரணம், பருவமழை என்பது மிகவும் சிக்கலான ஒரு அமைப்பாகும்.                    மேலும் 'எல் நினோ-தெற்கு அலைவுடன்' அதற்குள்ள தொடர்பு என்பது நேரடியான ஒரு 'காரண-விளைவு' (Cause-and-effect) சார்ந்ததல்ல. நம்பகமான துணைக் குறியீடுகள் இல்லாத காரணத்தால், 1932-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்குமான பருவமழை கணிப்புகளை வெளியிடுவதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நிறுத்திக்கொண்டது. அக்காலத்தில் கணிப்புகள் வடமேற்கு இந்தியா மற்றும் தீபகற்ப (Peninsular) பகுதிகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டன, மேலும் அவை எண்களின் அடிப்படையிலான துல்லியமான அளவீடுகளாக (Quantitative) இருக்கவில்லை. இன்று வழங்குவது போல, இயல்பான மழையளவில் இத்தனை சதவீதம் மழை பெய்யும் என்று துல்லியமாகக் கூறாமல், அதற்குப் பதிலாக "இயல்பைவிட சற்று அதிகம்" அல்லது "இயல்பான அளவிற்கு மிக அருகில்" போன்ற விளக்கங்களையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அப்போது பயன்படுத்தியது.


1988-ஆம் ஆண்டில், இந்திய வானிலை ஆய்வு மையமானது (IMD) ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பருவமழை கணிப்புகளை மீண்டும் தொடங்கி, துல்லியமான அளவு அடிப்படையிலான கணிப்புகளை வழங்கியது. காலப்போக்கில், இந்தத் துறை தனது கணினித் திறன் (Computing capacity), வானிலை கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் முன்னறிவிப்பு மாதிரிகளை பெருமளவில் மேம்படுத்தியது. இதன் விளைவாக, நீண்டகால வானிலை கணிப்புகள் மிகவும் துல்லியமாக மாறின. இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன.


அமிதாப் சின்ஹா, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் காலநிலை மற்றும் அறிவியல் பிரிவின் துணை ஆசிரியர் ஆவார்.


Original article : How an IMD discovery in 1920s changed monsoon forecasts -Amitabh Sinha

Share: