முக்கிய கனிம வளங்கள் தொடர்பான இலக்குகள், வடகிழக்கு இந்தியாவின் மக்கள், நிலம் மற்றும் வரலாற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சில நாட்களுக்குள், சுரங்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் பல வடகிழக்கு மாநிலங்களை, குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆற்றல் கொண்ட உத்திசார் கனிமங்களின் முக்கிய ஆதாரங்களை ஒரே மாதிரியாகச் சித்தரித்தன. மணிப்பூர் ஒரு “அமைதியான கனிம வள எல்லை” (quiet mineral frontier) என்றும், அருணாச்சலப் பிரதேசம் ஒரு “வளம் நிறைந்த எல்லை” (resource-rich frontier) என்றும் விவரிக்கப்பட்டன. அதேசமயம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவை அவற்றின் மலைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் செல்வத்தை வலியுறுத்தும் ஒப்பிடத்தக்க விவரிப்புகளின் மூலம் சித்தரிக்கப்பட்டன. அரசாங்கங்கள் வழக்கமாக இயற்கை வளங்களையும் மேம்பாட்டு வாய்ப்புகளையும் விளம்பரப்படுத்துகின்றன. மேலும், இதுபோன்ற விளக்கங்கள் பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காது.
இருப்பினும், இவற்றை ஒன்றாகப் பார்க்கும்போது, தேசிய உரையாடலிலும் இந்தியாவின் இராஜதந்திர சிந்தனையிலும், வடகிழக்குப் பகுதி அதிகளவில் கட்டமைக்கப்படும் மொழியில் ஏற்பட்டுவரும் ஒரு பரந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
முக்கிய கனிம வளங்களுக்கான உந்துதல்
முக்கியமான கனிமங்கள் இனி புவியியல்ரீதியாக மட்டும் விவாதிக்கப்படுவதில்லை என்பதால், இந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதில் லித்தியம், கோபால்ட், கிராஃபைட், நிக்கல் மற்றும் அரியவகை மண் தனிமங்கள் ஆகியவை தொழில்துறைப் போட்டி, தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் எரிசக்தி மாற்றங்களை அதிகளவில் வடிவமைக்கின்றன. மின்கலன்கள், குறைமின்கடத்திகள், புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இவற்றைச் சார்ந்துள்ளன. இதன் விளைவாக, நாடுகள் இந்த வளங்களுக்கான அணுகலைப் பாதுகாப்பதற்காகத் தங்களை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா பல முக்கியமான கனிமங்களுக்குத் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்துள்ளது. எனவே, தனது ஆய்வு முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் சுரங்க அமைச்சகம் அளித்த பதிலின்படி, இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம் 2022-23, 2023-24 மற்றும் 2024-25 களப் பருவங்களில் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 43 முக்கிய கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டது. இதில் கிராஃபைட், வனேடியம், லித்தியம், அரியவகை மண் தனிமங்கள், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்கள் அடங்கும். அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் முழுவதும் ஆய்வு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன. மணிப்பூரில், நிக்கல், கோபால்ட் மற்றும் குரோமியம் ஆய்வு தொடர்பான திட்டங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக, புவியியல் ஆய்வுகள் இப்பகுதி முழுவதும் கனிம வளம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், அந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் விதம்தான் தற்போது மாறிவருவதாகத் தெரிகிறது. வடகிழக்குப் பகுதி, புவியியலையும் தாண்டிய ஒரு இராஜதந்திர முக்கியத்துவத்தை நீண்டகாலமாகவே கொண்டுள்ளது. ஆனால், தற்போது அந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் கட்டமைப்பு விரிவடைந்து வருவதாகத் தெரிகிறது.
நடைமுறையில் மாற்றம்
பல பத்தாண்டுகளாக, தேசியளவிலான உத்தியில் வடகிழக்குப் பகுதியானது பெரும்பாலும் எல்லைகள் மற்றும் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் இடம்பெற்று வந்துள்ளது. கிளர்ச்சிகள், பிராந்திய மேலாண்மை, இணைப்பு முயற்சிகள் மற்றும் அண்டை நாடுகளை உள்ளடக்கிய புவிசார் அரசியல் கருத்தாய்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. அதேசமயம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இராஜதந்திர அணுகல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான கருவிகளாகப் பெரும்பாலும் நியாயப்படுத்தப்பட்டன.
ஒரு காலத்தில் எல்லைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு இராஜதந்திர களத்தில், வளங்கள் பற்றிய நடைமுறை பெருகி வருகிறது. பிராந்திய மற்றும் வளப் பாதுகாப்பு ஒன்றிணையும் நிலையில், முக்கிய கனிமங்கள் இப்போது வர்த்தக வழித்தடங்கள் மற்றும் புவிசார் அரசியல் அணுகலுடன் சேர்த்து விவாதிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் முக்கியமாக உணர்திறன் மிக்க எல்லைப் பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்கள், இப்போது அதிகளவில் உத்திசார் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.
எல்லை (frontier) என்ற வார்த்தையின் தொடர்ச்சியான பயன்பாடு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், எல்லைகள் அரிதாகவே நடுநிலையான விளக்கங்களாகச் செயல்படுகின்றன. அவை பொதுவாகவே புவியியலை விவரிப்பதில்லை. மாறாக, ஒரு பிராந்தியத்தை அரசுகள் எவ்வாறு கற்பனை செய்து புரிந்து கொள்கின்றன என்பதை அவை பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. வரலாற்றுரீதியாக, எல்லைகள் ஒருங்கிணைப்பு, வளர்ச்சி அல்லது வளப் பிரித்தெடுப்பிற்காகக் காத்திருக்கும் பகுதிகளாகக் காணப்படுகின்றன. ஏனெனில் அவை பெரும்பாலும் எதிர்கால சாத்தியக்கூறுகள் நிறைந்த நிலப்பரப்புகளாகக் கருதப்படுகின்றன.
சவால் என்னவென்றால், எல்லைகள் என்பவை கண்டறியப்படுவதற்கான வெற்று இடங்களாக அரிதாகவே இருக்கின்றன. வடகிழக்கின் மலைகளும் பள்ளத்தாக்குகளும் வழக்கமான நில அமைப்புகள், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் நிலப்பரப்புடனான நீண்டகால உறவுகளை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அடர்த்தியான சமூக மற்றும் அரசியல் நிலைகளை ஏற்கனவே கொண்டுள்ளன. நிலம் தொடர்பான கேள்விகள் பெரும்பாலும் பொருளாதாரத்தைத் தாண்டியும் நீள்கின்றன. ஏனெனில் அவை அதிகாரம், அடையாளம் மற்றும் நினைவுகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, வளங்களை அகழ்ந்தெடுத்தல் என்பது, தமக்கென சொந்த நிறுவனங்களையும் வரலாறுகளையும் ஏற்கனவே கொண்டுள்ள நிலப்பரப்புகளுக்குள் நுழைகிறது.
அரசியல் நிச்சயமற்ற தன்மை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மணிப்பூரில், பல ஆண்டுகளாக நீடிக்கும் வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவை நிலம் மற்றும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில், உரிமை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு ஆகியவை குறித்த இதேபோன்ற கவலைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. சமூகங்கள் நம்பிக்கை, பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் கண்ணோட்டத்தில் நிலம் தொடர்பான திட்டங்களைப் புரிந்துகொள்வதால், அவை பெரும்பாலும் வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட பரிமாணங்களைப் பெறுகின்றன.
வளங்களும் உள்ளடக்கமும்
விநியோகச் சங்கிலி நிச்சயமற்றத் தன்மை மற்றும் இராஜதந்திரப் போட்டிகளால் வடிவமைக்கப்படும் தற்போதைய உலகச் சூழலில், முக்கியமான வளங்களுக்கான இந்தியாவின் தேடல் புரிந்துகொள்ளத்தக்கதே. அதே வேளையில், பல பத்தாண்டுகளாகச் சீரற்ற நிலையில் உள்ள வடகிழக்கு பிராந்தியத்திற்குச் சிறந்த உள்கட்டமைப்பு, கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளும் அவசியமாக உள்ளன. இதன் விளைவாக, வள மேம்பாடு குறித்த விவாதங்களை வெறும் 'ஆதரவு' அல்லது 'எதிர்ப்பு' என்ற எளிய நிலைப்பாடுகளாக மட்டும் சுருக்கிவிட முடியாது.
இந்த மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழ்கின்றன என்பதும், அவற்றை யார் வடிவமைக்கிறார்கள் என்பதும், வளங்களைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். மிக நீண்ட காலமாக, வடகிழக்குப் பகுதியில் தேசிய முன்னுரிமைகளும் உள்ளூர் யதார்த்தங்களும் பெரும்பாலும் வெவ்வேறு வேகத்திலேயே பயணித்து வந்துள்ளன. இணைப்புத் திட்டங்கள் சில சமயங்களில் அதற்கேற்ற பொருளாதாரச் சூழல் அமைப்புகள் இல்லாமலேயே வந்தன. அதே சமயம், பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகளை இராஜதந்திரக் கருத்தாய்வுகள் அடிக்கடி மறைத்துவிட்டன. வளங்களை அகழ்ந்தெடுப்பது, அதன் சமூக விளைவுகளை நிர்வகிக்கத் திறனுள்ள நிறுவனங்களை விட வேகமாக நகரத் தொடங்கினால், வள மேம்பாடு இதே போன்ற பதட்டங்களை மீண்டும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்த விவாதம் மலைகளுக்கு அடியில் உள்ள கனிமங்களைப் பற்றியது மட்டுமல்ல. பல ஆண்டுகளாக, வடகிழக்கு பிராந்தியம் முதலில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு 'எல்லையாகவும்', பின்னர் இணைக்கப்பட வேண்டிய ஒரு 'வழித்தடமாகவும்' பார்க்கப்பட்டது. இப்போது அது இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்படத் தொடங்கினால், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த 'புதிய முன்னெடுப்பு' அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்களையும் உள்ளடக்கியதாக இருக்குமா?, அல்லது அவர்களின் காலடியில் உள்ள நிலத்திற்கு வேறொரு நோக்கத்தை மட்டும் அது வழங்குமா? என்பதுதான்.
முக்கிய கனிம வளங்கள் தொடர்பான இலக்குகள், வடகிழக்கு இந்தியாவின் மக்கள், நிலம் மற்றும் வரலாற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
சங்முவான் ஹாங்சிங் (Sangmuan Hangsing) ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியின் (Kautilya School of Public Policy) முன்னாள் மாணவர் ஆவார்.
Original article : From borderland to India’s strategic resource frontier. -Sangmuan Hangsing