ஜி7 உச்சிமாநாட்டில், உலகளாவிய கொள்கை கட்டமைப்புகளை வடிவமைக்க இந்தியா உதவ வேண்டும். -அஜய் மல்ஹோத்ரா

இன்று, உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுடனும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் சுமுகமான உறவை மேற்கொண்டு, அதே சமயம் இருதரப்பிலுமே தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே வசதியாக உள்ளது.


பிரான்ஸ் நாட்டின் அழைப்பை ஏற்று, பொருளாதார பலம், தொழில்நுட்பத் தலைமை மற்றும் உலகளாவிய வளர்ச்சி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் (G7 Summit) உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.


1970-கள் காலகட்டத்தில் இருந்தது போல, இந்த ஜி7 கூட்டமைப்பு இப்போது அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லை. வளர்ந்து வரும் புதிய பொருளாதார நாடுகளின் எழுச்சியும், 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் உலகளாவிய அதிகார சமநிலையை மாற்றிவிட்டன.             இருப்பினும், உலகளாவிய தரநிலைகளை நிர்ணயிப்பதிலும், நிதிச் செயல்பாடுகளை முறைப்படுத்துவதிலும் இந்த அமைப்பு இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஆனால், தற்போதைய சூழலில் இந்த நாடுகளுக்கு இடையே ஒற்றுமை சற்றுக் குறைவாகவே உள்ளது. வர்த்தகம், காலநிலை நிதி (Climate finance), தொழில்துறை மானியங்கள், எரிசக்திக் கொள்கை மற்றும் ரஷ்யாவுடனான உறவு ஆகியவற்றில் உள்ள கருத்து வேறுபாடுகள், குறிப்பாக அமெரிக்காவிற்கும் மற்ற உறுப்பு நாடுகளுக்கும் இடையே தெளிவாகத் தெரிகின்றன. இந்த ஏவியன் உச்சிமாநாடு,      ஜி7 நாடுகளுக்கு இடையேயான கூட்டு ஒருங்கிணைப்பையும் அதேநேரத்தில் பல பேச்சுவார்த்தைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட சில விவகாரங்களின் அடிப்படையில் இந்தியா பிற நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்கான கூடுதல் வாய்ப்புகளைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பெரும் கவனத்தைப் பெறும் என்றும் கூறப்படுகிறது. உலகத் தலைவர்கள் மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடக்கும் மோதல்கள் குறித்து விவாதித்தாலும், பிரான்ஸ் நாடு உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒருங்கிணைப்பற்ற உலகப் பொருளாதாரத்தின் ஆபத்துகளை இந்த நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியாக வைத்துள்ளது. இந்த விவாதங்கள் பொருளாதாரப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), எரிசக்தி மாற்றம், காலநிலை நிதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.


உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வளர்ந்துவரும் எரிசக்தி சந்தையாகவும், தொழில்நுட்ப மையமாகவும் விளங்கும் இந்தியா, இந்த விவாதங்களால் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் இந்த விவாதங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் நாடாகவும் மாறி வருகிறது. மேலும், இது பல வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான கவலைகளையும் இந்த மாநாட்டில் பிரதிபலிக்கும் என்கின்றனர்.


இந்தியாவும் ஜி7 நாடுகளும் முக்கியமான கனிமங்கள் (Critical minerals) சார்ந்த விஷயங்களில் பொதுவான நலன்களைக் கொண்டுள்ளன. எரிசக்தி மாற்றம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்களின் (Rare earth elements) விநியோகத்தைப் பாதுகாப்பது மிக அவசியமானதாகும். தூய்மையான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்காக சீனா மீதான விநியோகச் சார்பைக் குறைப்பதற்கான       ஜி7 நாடுகளின் முயற்சிகளுக்கு இந்தியாவின் முயற்சிகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சந்தை மற்றும் வளர்ந்து வரும் கனிமச் சுத்திகரிப்புத் திறன் ஆகியவை, புதிய கனிம விநியோகக் கட்டமைப்புகளில் இந்தியாவை ஒரு முக்கியமான நாடாக மாற்றுகின்றன.


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நிர்வாகம், தரநிலைகள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதுமட்டுமின்றி, தரவு மையங்களும் (Data centres) மேம்பட்ட கணினி செயல்பாடுகளும் மின்சாரத் தேவையை அதிகரிப்பதால், இது ஒரு எரிசக்தி சார்ந்த கவலையாகவும் மாறி வருகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) துறையில் இந்தியாவின் அனுபவம், இது குறித்த உலகளாவிய விவாதங்களை வடிவமைப்பதில் இந்தியாவிற்கு ஒரு வலுவான இடத்தை அளிக்கிறது.


எரிசக்தி பாதுகாப்பு என்பது மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும். தூய்மையான எரிசக்தி நோக்கிய மாற்றமானது உலகம் முழுவதும் முதலீட்டு முறைகளையும் தொழில் கொள்கைகளையும் மாற்றி வருகிறது.                  இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கு இப்போதும் பெட்ரோலிய எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இந்தியா இந்த நடைமுறை உண்மைகளையே பிரதிபலிக்கிறது. புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், விலை மலிவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தியா தனது எரிபொருள் சார்ந்த முடிவுகளை எடுக்கிறது. அதேநேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. எரிசக்தியைப் பெருமளவில் பயன்படுத்தும் ஒரு நாடாக, தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த விஷயத்தில் அதிகாரத்துடன் தனது கருத்துகளை இந்தியா முன்வைக்க முடியும் என்கின்றனர்.


பொருளாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியாவின் முக்கிய நோக்கம் வாய்ப்புகளைக் குறைப்பது அல்ல; மாறாக புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு வலுவான மற்றும் மீள்திறன் மிக்க பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். மற்றவர்களைத் தவிர்ப்பதன் மூலம் பெறப்படும் பாதுகாப்பு, எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததோ, அதே பிரிவினையையும் பிளவையும் உருவாக்கிவிடும். இன்று பல வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகள் யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும், எந்த விலைக்குச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன.                   இது, அவர்கள் வெளியில் பேசும் 'தடையற்ற வர்த்தகக் கொள்கைகளுக்கும்', ஆனால் நடைமுறையில் அவர்கள் பின்பற்றும் 'சந்தையை சீர்குலைக்கும் கொள்கைகளுக்கும்' இடையே உள்ள பெரிய முரண்பாட்டை வெளிக்காட்டுகிறது.


வளர்ச்சியைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் என்கிற பட்டியலில் உள்ள பல நாடுகள் கடுமையான கடன் சுமையையும், நிதிப் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றன. எனவே, சர்வதேச வளர்ச்சி வங்கிகளில் (Multilateral Development Banks (MDBs)) சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது தற்போதைய அவசரமான தேவையாக உள்ளது.


காலநிலை நிதி தொடர்பாக, வளர்ந்த நாடுகள் 2024-ஆம் ஆண்டு             பாகு (Baku) நகரில் நடந்த மாநாட்டில், 2035-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் குறைந்தது 300 பில்லியன் டாலர்களைத் திரட்ட ஒப்புக்கொண்டன. இருப்பினும், இந்தத் தொகை தேவைப்படுவதைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.            மேலும், இந்த நிதியின் பெரும்பகுதி இலவச நிதியுதவியாக வராமல், கடன்களாகவே வழங்கப்படுகிறது. வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் அக்கறை இல்லாமல் இல்லை. அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களும் வசதிகளும்தான் அவர்களிடம் இல்லை. காலநிலை நிதி என்பது நீண்டகாலமாகவே, "பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அவரவர் திறன்கள்" (Common but Differentiated Responsibilities and Respective Capabilities (CBDR-RC)) என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. இந்தியா தனது அத்தியாவசிய வளர்ச்சித் தேவைகளையும் காலநிலை இலக்குகளையும் எவ்வாறு சமநிலையில் கையாள்கிறது என்ற தனது சொந்த அனுபவத்தைப் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில், இந்த சர்வதேசக் கொள்கை நிலைப்பாட்டையும் உறுதியாக ஆதரிக்க வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 'கார்பன் எல்லை வரி' (Carbon Border Adjustment Mechanism (CBAM)) என்பது இதனுடன் தொடர்புடைய மற்றொரு கவலையாகும். இந்தத் திட்டம், எஃகு, அலுமினியம், சிமெண்ட் மற்றும் உரங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் போது வெளியேறும் கார்பன் உமிழ்வுகளின் அடிப்படையில், அவற்றின் இறக்குமதிக்கு வரி விதிக்கிறது.                                    கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இது இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளைத்தான் கடுமையாகப் பாதிக்கிறது. ஏனெனில், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் பசுமைத் தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறுவதற்குத் தேவையான நிதியும், தொழில்நுட்பமும் இல்லாததால், அவை இன்னும் நிலக்கரியையே பயன்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்ற பெயரில் முன்வைக்கப்படும் இந்த ‘கார்பன் எல்லை வரி' (CBAM) என்பது உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வர்த்தகத் தடையாகும். எந்த வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்வதாக வளர்ந்த நாடுகள் வாக்குறுதி அளித்தனவோ, அதே நாடுகளின் மீது வரி விதிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தீர்வை நோக்கி முன்னேறிவிட முடியாது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை மாற்றத்திற்கான நிதியை முதலில் தராமல் நிறுத்திவிட்டு, பிறகு அந்த மாற்றத்தைச் செய்ய வசதியற்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது வரி விதிப்பது என்பது முற்றிலும் அநீதியான ஒரு செயலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் (Critical minerals) குறித்து எவியான் (Evian) நகரில் விவாதிக்கப்படும் தரநிலைகளும் கூட்டணிகளும் உலகளாவிய பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்கக் கூடியவை ஆகும். இந்த விவாதங்கள் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இவற்றில் இந்தியா பங்கெடுப்பது அதன் சொந்த நலன்களுக்கு மிகவும் அவசியமானது. இந்தியா தனது சொந்த நாட்டில் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, இந்த ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பது, அது எந்தவொரு ஒரு குறிப்பிட்ட நாடுகலின் கூட்டணியிலும் சேராமல், பலதரப்பட்ட உலக நாடுகளுடனும் நட்புறவை பாதுகாக்கும் கொள்கையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.


எவியான் மாநாட்டில் இந்தியா வெறும் பங்கேற்பாளராக மட்டும் இல்லாமல், அங்கு எடுக்கப்படும் முடிவுகளை வடிவமைக்கும் ஒரு முக்கிய நாடாகப் பங்கேற்க வேண்டும். வளர்ந்த நாடுகளுடனும், வளர்ந்து வரும் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் இணக்கமாகவும் செல்வாக்குடனும் பழகும் திறன் உலகின் மிகச் சில நாடுகளுக்கே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இன்றைய விவாதங்களே நாளைய உலக விதிகளாக மாறும் என்பதால், அந்த விதிகளை யாரோ உருவாக்கி, பிறகு இந்தியா ஏற்றுக்கொள்வதைவிட, அவற்றை உருவாக்கும் நாடாக பங்கெடுப்பதுதான் இந்தியாவிற்குச் சாதகமான பலன்களை வழங்கும் என்கின்றனர்.

அஜய் மல்ஹோத்ரா, ஒரு முன்னாள் தூதரக அதிகாரி ஆவார்.

 

original article : At G7 summit, India should help shape global frameworks. -Ajai Malhotra

Share: