வங்காளத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொதுவெளியில் அணிவகுத்து நிற்கவைப்பதைக் கண்டித்த கல்கத்தா உயர்நீதிமன்றம் : சட்டம் என்ன சொல்கிறது? -அமால் ஷேக்

 ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்யலாம். ஆனால், அவர்களைப் பொதுவெளியில் அவதூறு செய்ய முடியாது என்று நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டார். இதுகுறித்த தகவல்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இடுப்பில் கயிறு கட்டி தெருக்களில் அழைத்துச் செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அவர்களை இவ்வாறு பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு சென்றதை கல்கத்தா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) விமர்சித்தது.



நீதிபதிகள் ஜெய் சென்குப்தா மற்றும் ஸ்மிதா தாஸ் தே ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, இது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநிலக் காவல்துறையைக் கேட்டுக்கொண்டது. ஒரு நபரை காவல்துறை கைது செய்யலாம், ஆனால் அவரைப் பொதுவெளியில் அவதூறு செய்ய முடியாது என்று நீதிமன்ற அமர்வு வாய்மொழியாகக் குறிப்பிட்டது. 


சட்டக் கட்டமைப்பு


குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைப் பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குச் சட்டத்தில் எந்த விதியும் அங்கீகாரம் அளிக்கவில்லை. பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)) பிரிவு 43(3), குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கைவிலங்குகளைப் (handcuffs) பயன்படுத்த காவல்துறை அதிகாரியை அனுமதிக்கிறது.


மேலும், இதில் கூறப்பட்டுள்ளதாவது, “தொடர்ந்து குற்றம்புரியும் நபர் (habitual offender), காவலில் இருந்து தப்பி ஓடியவர் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பயங்கரவாதச் செயல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக வைத்திருத்தல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பொருந்தும். மேலும் கொலை, பாலியல் வன்கொடுமை, அமிலத் தாக்குதல், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைக் கள்ளநோட்டு அடித்தல், ஆட்கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் உட்பட அரசுக்கு எதிரான குற்றங்கள் அல்லது பொருளாதாரக் குற்றங்கள் போன்ற குற்றங்களைச் செய்த ஒரு நபரைக் கைது செய்யும்போது, ​​குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு காவல் அதிகாரி கைவிலங்கைப் (handcuffs) பயன்படுத்தலாம்.”


இந்த வகைகளுக்குள்ளும்கூட, இச்சட்ட விதி “may” (செய்யலாம்/அனுமதிக்கலாம்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறது, “shall” (கட்டாயமாகச் செய்ய வேண்டும்) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. இதன் பொருள், கைவிலங்கு அணிவிப்பது கட்டாயமல்ல என்பதாகும். கைவிலங்கு போன்ற கட்டுப்பாடுகள் அவசியமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், அதிகாரி குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை மற்றும் அந்தந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் அவர் ஆராய வேண்டும்.


1955-ம் ஆண்டின் கைதிகள் (நீதிமன்றத்தில் ஆஜராகுதல்) சட்டத்தின் (Prisoners (Attendance in Court) Act), பிரிவு 9(2)(e)-ன் கீழ், "சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை, அவர்கள் ஆஜராக வேண்டிய நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், அங்கிருந்து திரும்ப அழைத்து வருவதற்கும், மற்றும் அவ்வாறு ஆஜராகும் காலத்தில் அவர்களைக் காவலில் வைப்பதற்கும்" இது தொடர்பான விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்கள் முன்பு என்ன தீர்ப்பளித்துள்ளன?


பிரேம் சங்கர் சுக்லா vs டெல்லி நிர்வாகம்-1980 (Prem Shankar Shukla vs Delhi Administration) வழக்கில், உச்சநீதிமன்றம் கைவிலங்கிடுவதை (handcuffing) “மனிதாபிமானமற்றது”, “நியாயமற்றது” மற்றும் “தன்னிச்சையானது” என்று விவரித்தது. நீதிமன்றம் மேலும் கூறுகையில், “விசாரணைக்குட்பட்ட ஒருவர் தப்பிச் செல்வதைத் தடுப்பது பொது நலன் சார்ந்தது, நியாயமானது, மற்றும் சரியானது என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், ஒரு நபரின் கை கால்களைக் கட்டி, உடலின் உறுப்புகளில் இரும்புக் கட்டுப்பாடுகளைப் பூட்டுவது, தெருக்களில் அவனை இழுத்துச் சென்று, நீதிமன்றங்களில் மணிக்கணக்கில் நிற்க வைப்பது என்பது அவனைச் சித்திரவதை செய்வதாகும். நீதிமன்றத்தின் கருத்துப்படி, இத்தகைய செயல் மனித கண்ணியத்தை மீறுவதாகவும், சமூகத்தின் தரத்தைக் குறைப்பதாகவும், இந்தியாவின் அரசியலமைப்பு கலாச்சார நெறிமுறைகளுக்கு முரணானதாகவும் அமைகிறது.


இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு விசாரணைக் கைதி ஆவார். அவர், இதற்கு மாறான முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் தனக்கு வழக்கமாகக் கைவிலங்கிடப்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தந்தி (telegram) அனுப்பினார்.



இந்த நடைமுறை அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கமாக் கைவிலங்கிடுவது, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாகவும், தப்பித்தல் அல்லது வன்முறையையோ தடுப்பதற்கு வேறு எளிய வழிமுறைகள் எதுவும் உதவாது என்று நம்புவதற்குத் தகுந்த மற்றும் பதிவு செய்யப்பட்ட காரணம் இருக்கும்போது மட்டுமே கைவிலங்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. கைவிலங்கு அணிவித்தல் என்பது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கக்கூடாது. அதுவே கடைசித் தேர்வாக (கடைசி முயற்சியாக) இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.


கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதே பொதுவான விதி என்றும், எந்தவொரு விதிவிலக்கிற்கும் அதற்கான நியாயப்படுத்தல் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு நீதிபதிக்கு முன்பாக விளக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் தீர்ப்பளித்தது.


ஜனநாயகத்திற்கான குடிமக்கள் vs அசாம் மாநிலம்-1995 (Citizens for Democracy vs State of Assam) வழக்கில், ஒரு குடிமை உரிமைகள் அமைப்பின் தலைவர் குவஹாத்தியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட ஒரு பூட்டப்பட்ட அறைக்குள், விசாரணைக் கைதிகள் ஏழு பேர் தங்கள் படுக்கைகளுடன் கைவிலங்கிடப்பட்டிருப்பதைக் கண்டார். பிரேம் சங்கர் சுக்லா வழக்கில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், “நாட்டின் எந்தவொரு சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கும்போதும், அல்லது ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கோ, அல்லது சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கோ சென்று திரும்பும்போதோ, தண்டனை பெற்ற அல்லது விசாரணைக் கைதியான ஒரு கைதியின் மீது கைவிலங்குகளோ அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாட்டுச் சங்கிலிகளோ வலுக்கட்டாயமாகப் பூட்டப்படக்கூடாது என்பதை நாங்கள் ஒரு விதியாக அறிவித்து, இயக்கி, வகுக்கிறோம்” என்று தீர்ப்பளித்தது.


2026-ம் ஆண்டு ஜனவரி மாதம், இஸ்லாம் கான் மற்றும் பலர் vs ராஜஸ்தான் அரசு மற்றும் பலர் (Islam Khan and Ors vs State of Rajasthan and Ors) வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர், கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையங்களுக்கு வெளியே உட்கார வைத்து, அவர்களைப் புகைப்படம் எடுத்து, அந்தப் படங்களைப் பரப்புவதை காவல்துறை ஒரு வழக்கமான நடைமுறையாகக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டிய ஒரு மனுவை விசாரித்தார்.


மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, அவமானகரமான நிலையில் அமர வைக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.


இத்தகைய நடவடிக்கைகள் “தன்னிச்சையானவை, சட்டவிரோதமானவை மற்றும் கட்டுப்பாடற்ற தன்னிச்சையான போக்கை வெளிப்படுத்துபவை. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறைக்கு முற்றிலும் பொருத்தமற்றவை” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், “அடிப்படை உரிமைகளின் எந்தவொரு மீறலையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள “கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கு ஒரு கடுமையான மற்றும் அமைப்புரீதியான அச்சுறுத்தலை” வெளிப்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.


2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், சங்ராம் சிங் ராஜூத் vs மத்தியப் பிரதேச அரசு மற்றும் பிறர் (Sangram Singh Rajoot vs State of Madhya Pradesh & Others) வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக, அவர் காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.


"சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாமல், ஒரு தனிநபரை அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் அல்லது பொது அவமதிப்பை ஏற்படுத்தும் அரசின் அல்லது அதன் அமைப்புகளின் எந்தவொரு நடவடிக்கையும், மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளைக்கு முரணானதாக அமையும்" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், "ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டார் என்ற ஒரே காரணத்தால் மட்டும், அது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஆகாது. மாறாக, அத்தகைய செயல் வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது தீய எண்ணத்துடனோ செய்யப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஆகிவிடும்" என்று தீர்ப்பளித்தது.

இதுபோன்ற வழக்குகள் அனைத்திலும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தண்டனை விதிக்கப்படும் வரை அரசியலமைப்புப் பாதுகாப்புகளைத் தக்கவைத்துக் கொள்கிறார் என்றும், சுதந்திரம் அல்லது கண்ணியத்தின் மீதான கட்டுப்பாடுகள் சட்டப்பூர்வமான நியாயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன. 'ஜனநாயகத்திற்கான குடிமக்கள்' வழக்கில், உச்சநீதிமன்றம், "பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் கைவிலங்கிடுவதும் சங்கிலியால் பிணைப்பதும் இழிவுபடுத்துகிறது, நுட்பமான உணர்வுகளை அவமானப்படுத்துகிறது மற்றும் நமது கலாச்சாரத்தின் மீதான ஒரு களங்கமாகும்" என்று குறிப்பிட்டதோடு, தனது முந்தைய வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மற்ற சட்ட விளைவுகளுடன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் உத்தரவிட்டிருந்தது.


original article : Calcutta High Court criticises parading of accused persons in Bengal: What law says -Amaal Sheikh

Share: