குறைமின்கடத்தி: ஆற்றல் சார்ந்த கேள்விகள் -ரிச்சா மிஸ்ரா

சிப் (Chip) உற்பத்தி தொழில்துறைக்குத் தடையற்ற மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் தேவைப்படுகிறது. எனவே, இந்தியாவின் எரிசக்திக் கொள்கைகளும் சிப் கொள்கைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.


இந்தியா 446 ஜிகாவாட்டிற்கும் (GW) அதிகமான ஒட்டுமொத்த மின்உற்பத்தித் திறனைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. ஆனால், நாட்டின் - குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி இலக்கை அடைய இது மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில், சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு துல்லியமான மின் விநியோகம், சீரான சுற்றுச்சூழல் மற்றும் மிக அதிக அளவிலான வளங்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளால் இவற்றை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து வழங்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.


இதிலிருந்து, குறைமின்கடத்தி கொள்கையும் எரிசக்திக் கொள்கையும் நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் இலக்குகளோடு எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு சாதாரண 300 மில்லிமீட்டர் (300mm) சிப் தயாரிப்புத் தொழிற்சாலைக்கே நூற்றுக்கணக்கான மெகாவாட் (MW) மின்சாரம் தேவைப்படும் என்பதால், குறைமின்கடத்தி மற்றும் எரிசக்திக் கொள்கைகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது முற்றிலும் இயல்பானது என்கின்றனர்.


மின்சார விநியோகத்திலும் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் மின்சார பகிர்மான அமைப்பில் இன்னும் 20 முதல் 22% வரை மிக அதிகமான மின் இழப்பு ஏற்படுகிறது.


ஒரு சாதாரண சிலிக்கான் சிப் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு (Silicon fabrication plant) 99.9999% தடையற்ற மின்சாரம் தேவைப்படுகிறது. இது தொழில்நுட்பத் துறையில் "ஆறு ஒன்பதுகள் (Six nines)" தரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அதிநவீன உற்பத்தியில், ஒரு மில்லிசெகண்டில் மிகச்சிறிய பங்கு நேரத்திற்கு மின் அழுத்தத்தில் (Voltage) மாற்றம் ஏற்பட்டால்கூட, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகள்’ (Silicon wafers) மொத்தமாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


இந்தியா தற்போது மின்சார பயன்பாட்டைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், பிராந்திய மின்சாரக் கட்டமைப்புகள் இன்னும் எதிர்பாராத மின்அழுத்தக் குறைவு (Voltage drops), மின் எழுச்சி (Surges) மற்றும் அதிர்வெண் மாற்றங்கள் (Frequency variations) உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, பெரிய அளவிலான குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள், தங்களின் உற்பத்தி தடையின்றி சீராக நடப்பதற்காக, அதிக செலவுமிக்க தொழில்துறை தரத்திலான மின்சேமிப்பு அமைப்புகளையும் பிரத்யேக மின் துணை நிலையங்களையும் அமைக்க முதலீடு செய்ய வேண்டியுள்ளது.


குறைபாடு: சூரியஒளி மற்றும் காற்று மூலம் பெறப்படும் மின்சாரம் நிலையற்றது. ஆனால், குறைமின்கடத்தி சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒரு நொடிகூட நிறுத்தப்படாமல், வருடத்தின் 365 நாட்களும், வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7/365) தொடர்ந்து இயங்க வேண்டும்.


செலவு: இந்தியாவில் இன்னும் போதிய அளவு பசுமை ஆற்றலைச் (Green energy) சேமித்து வைக்கும் வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையை முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) மூலமே இயக்குவதற்குத் தேவையான, மிகப்பெரிய மற்றும் மிக அதிக விலையுள்ள மின்கலன் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது. மேலும், அதிக மின் கட்டணம் மற்றும் சர்வதேச சந்தையில் விலைப் போட்டித்திறன் போன்ற சிக்கல்களும் உள்ளன. சிப் தயாரிப்பு என்பது மிக அதிக முதலீடு தேவைப்படும் ஒரு தொழிலாகும். மேலும், இதன் ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவில் மின்சாரக் கட்டணம் ஒரு மிகப்பெரிய பங்காக உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம்தான் மிகப்பெரிய செலவுகளில் ஒன்று. ஆனால், இந்தியாவில் மின்சார விலை அடிக்கடி மாறுகிறது. ஏனெனில், வேளாண்தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, இந்தத் தொழிற்சாலைகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.


தைவான் (Taiwan) போன்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால், இந்தத் தொழிற்சாலைகளுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் நீண்டகால ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் மாநில ஒழுங்குமுறை ஆணையங்களின் (State Electricity Regulatory Commission (SERC)) விதிகள் அல்லது 'குறுக்கு-மானியக் கூடுதல் கட்டணம்' (Cross-subsidy surcharges) வேளாண்துறைக்கு மானியம் வழங்குவதற்காகத் தொழில்துறை பயனர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே மின் கட்டண அமைப்புகள் மாறுபடுகின்றன.


தண்ணீர் தேவைகள்


மேலும், மிக முக்கியமான ஒரு சவால் உள்ளது. சிப் தயாரிப்பிற்குத் தேவைப்படும் மிகத் தூய்மையான நீரை உற்பத்தி செய்வதற்கு மிக அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது.


சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகளை (Silicon wafers) சுத்தம் செய்யத் தேவைப்படும், எந்தவொரு மாசும் இல்லாத மிகத் தூய்மையான நீராக, சாதாரண நகராட்சி நீரையும் ஆற்று நீரையும் மாற்றுவதற்கு, அந்தத் தண்ணீர் பல கட்ட தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis), அயனி நீக்கம் (Deionisation) மற்றும் வடிகட்டுதல் முறைகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்தச் செயல்முறைக்கு, சிப் தயாரிப்பிற்கு ஏற்கனவே தேவைப்படும் மின்சாரத்துடன் கூடுதலாக, மிக அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சாரக் கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள் உலகம் முழுவதும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பதால், திறன்பேசி உற்பத்தி துறையில் ஏற்பட்ட புரட்சியைப் போல, நிறுவனங்கள் காலாவதியான உள்கட்டமைப்புகளைத் தவிர்த்துவிட்டு நவீன தீர்வுகளைப் பின்பற்றுவதற்கு ஏதுவான, வணிகத் தோழமைமிக்கக் கொள்கைகளை அரசாங்கங்கள் கொண்டுவர வேண்டும்.


அரசாங்கத்தின் பரந்த கொள்கை இலக்குகளை, களத்தில் நம்பகமான ஆதாரங்களாக மாற்றித் தரும் ஒரு துல்லியமான உள்ளூர் உள்கட்டமைப்பு உத்திதான் தற்போது தேவைப்படுகிறது. தைவான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற உலகளாவிய குறைமின்கடத்தி உற்பத்தி மையங்களுடன் போட்டியிட, இந்தியா தனது ஆற்றல் மற்றும் குறைமின்கடத்தி கொள்கைகளை ஒருங்கிணைத்து ஒரே கூட்டுத் தொழில்முறைத் திட்டமாக ஒருங்கிணைக்க வேண்டும்.


பொது மின்சாரக் கட்டமைப்பிலிருந்து சிப் தயாரிப்பு மையங்களை முற்றிலும் தனியாகப் பிரிப்பதன் மூலம் இந்தியா இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று சில வல்லுநர்கள் நம்புகின்றனர். மாநில அரசாங்கங்கள் குஜராத்தில் உள்ள தோலேரா (Dholera) மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா போன்ற உற்பத்தி மையங்களுக்காக பிரத்யேகமான மற்றும் அதி-பாதுகாப்பான மின் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். சிப் தொழிற்சாலைகள் தங்களுக்கு என்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின்உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும். இந்த மையங்கள் மிகச் சிறிய மின்அழுத்த மாறுபாடுகளைக்கூட தடையின்றிச் சமாளிக்க, தொடர்ச்சியான அணுசக்தி அல்லது இயற்கை எரிவாயு மின்சாரத்துடன், பெரிய அளவிலான தொழில்துறை மின்கலன்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்த வேண்டும்.

மாறிக்கொண்டே இருக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி,          24 மணி நேரமும் தொழிற்சாலைகளைத் தடையின்றி இயக்குவதற்கு ஏதுவாக, இந்தியா தனது மின்சாரச் சந்தை ஒழுங்குமுறை விதிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். சூரிய ஒளி மற்றும் காற்றாலையோடு சேர்த்து, உந்தப்பட்ட சேமிப்பு நீர்மின்சாரம் (Pumped-storage hydropower) மற்றும் பெரிய மின்கலன் அமைப்புகளை ஒருங்கிணைத்து வழங்கும் எரிசக்தி நிறுவனங்களுக்கு, மின்சார ஒழுங்குமுறை அமைப்புகள் சலுகைகளை வழங்க வேண்டும்.


ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் குறைமின்கடத்தி தொழிற்சாலைகளுக்காக விதிக்கப்படும் குறுக்கு-மானியக் கூடுதல் கட்டணங்கள் (Cross-subsidy surcharges) மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான கட்டணங்களை முழுமையாக நீக்க வேண்டும். இது, சிப் தயாரிப்பு நிறுவனங்கள் நீண்டகால, நிலையான விலை கொண்ட 'மெய்நிகர் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்' (Virtual Power Purchase Agreements (VPPA)) மூலமாக, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் குறைந்த விலை பசுமை மின்சாரத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்கின்றனர்.




சுயசார்பு கொண்ட சிப் உற்பத்தி தொழில்துறையை உருவாக்குவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது. ஆற்றல் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறையிலிருந்து தனது விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க, கனிம பாதுகாப்பு கூட்டாண்மை (Minerals Security Partnership) மற்றும் அமெரிக்க-இந்திய முக்கிய கனிமங்கள் ஒத்துழைப்பு கட்டமைப்பு (US-India Critical Minerals Cooperation Framework) போன்ற ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச உறவுகளை இந்தியா தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் காலியம் (Gallium), இண்டியம் (Indium) மற்றும் அரிய மண் கனிமங்கள் (Rare earth elements) போன்ற அத்தியாவசியமான பொருட்களை நீண்டகாலத்திற்கு தடையின்றிப் பெறுவதை உறுதி செய்கின்றன.


நவீன குறைமின்கடத்திகள், சூரிய ஒளித் தகடுகள் மற்றும் காற்றாலைகளைத் தயாரிப்பதற்கு இந்த மூலப்பொருட்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகள் (Silicon wafer) உற்பத்திக்குத் தேவைப்படும் பெரும் அளவிலான மின்சாரம் மற்றும் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்க, குறைந்த ஆற்றலில் இயங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தைப் பெறுவதற்கான கொள்கை கட்டமைப்பு ஒரு இருஅடுக்கு அமைப்பைப் (Two-tier system) பின்பற்றுகிறது. அதாவது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் மாநில அளவிலான கொள்கைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய குறைமின்கடத்தி உற்பத்தித் திட்டம் (India Semiconductor Mission), நிதிச் சலுகைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Renewable energy) பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், அதே நேரத்தில் மின்சாரக் கட்டமைப்பு தடங்கல்களிலிருந்து இந்த அதிநவீன உற்பத்தித் துறையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





சிப் தயாரிப்பு ஆலைகளை மின்சார விநியோகப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதன் மூலமும், தண்ணீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு குறைமின்கடத்தி தொழில்துறையை இந்தியாவால் உருவாக்க முடியும். இருப்பினும், இந்த மாற்றம் சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களால் இயக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

 

original article : Semiconductor: Energy questions -Richa Mishra

Share: