தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒரு வியூகம். -பி சிதம்பரம்

அரசின் நோக்கம் நேர்மையானதோ அல்லது உண்மையானதோ கிடையாது என்றும் மக்களவையில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றினால், பெண்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை 182-லிருந்து 272-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு பெருமிதத்துடன் உரிமை கோரும். 


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிதிநிலை கூட்டத்தொடரின் நிதி சார்ந்த பணிகளை முடித்த பிறகு, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி, 2026 -ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டன. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்ததால், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பிப் பிரச்சாரம் செய்ய ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருந்தது. எனவே, அவையை ஒத்திவைக்க இதுவே சரியான நேரமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 30-ஆம் தேதியன்று தொடங்கிவிட்டதாலும், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு (மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29) நடைபெறவிருந்ததாலும், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏப்ரல்மாத இறுதி வரை அவசரமாகக் கையாள வேண்டிய பணிகள் ஏதுமில்லை என்றே பரவலாகக் கருதப்பட்டது.


சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் ஏற்பட்ட  இடையூறு


அவசரமான காரியம் என்று எதுவுமே இல்லை. நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களை மேலும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் சுமுகமாக முடிப்பதே ஒரே பணியாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்  (Special Intensive Revision (SIR)) என்பது தற்செயலாக நடந்த விபத்து அல்ல, அது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். கோடிக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பதே இதன் நோக்கம் என்றம் விமர்சிக்கப்படுகிறது.


ஒரு சில பொறுப்பற்ற அரசியல் பேச்சுகளைத் தவிர, தேர்தல் செயல்முறை சீராகவே நடந்து கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளபடும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சசிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையால் பாதிப்புள்ள மாநிலங்களில், சராசரியாக 10% மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர் என்ற தகவலை எவருமே நீதிமன்றத்திற்கு தெரிவிக்காதது வருத்தத்திற்குறியது. இத்தகைய பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஆகும்.


இது யாருடைய திட்டம்?


பாஜக (BJP) தலைமையிலான மேலிடத் தலைவர்கள், தமிழ்நாடு (234 இடங்கள்) மற்றும் மேற்குவங்கம் (294 இடங்கள்) போன்ற பெரிய மாநிலங்களின் தேர்தலுக்கு முன்னதாக ஏதேனும் ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரிடம், 106-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த 30 மாதங்களாக இதைச் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிய ஒன்றிய அரசு, இப்போது திடீரென இதில் வேகம் காட்டுகிறது. இது தொடர்பாக அமைச்சருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலாம் என்று கார்கே பரிந்துரைத்தார். ஆனால், மார்ச் மாதம் 26-ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில் அமைச்சர், "இவ்வளவு தாமதம் ஏற்பட்டால் அது மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதைத் தள்ளிப்போடும், மேலும், 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக இதைச் செயல்படுத்துவதைப் பாதிக்கும்" என்று கூறினார். ஆனால், ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதிக்கும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்கும் இடையிலான மிகச்சிறிய இடைவெளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அமைச்சரின் இந்த வாதத்தில் அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை.


பெண்கள் இடஒதுக்கீட்டை இவ்வளவு அவசரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) திடீரென எப்போது ஆர்வம் வந்தது? நிச்சயமாக, செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது அந்த ஆர்வம் இல்லை. ஏனெனில், 2029-ஆம் ஆண்டுக்கு முன்பாக இதனைச் செயல்படுத்தவே முடியாத வகையில்தான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் தரவுகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று சட்டப்பிரிவு-334A தெளிவாகக் குறிப்பிடுகிறது.


இந்த மசோதாவில் "பிறகு" (after) என்ற வார்த்தை ஏன் மூன்று முறை பயன்படுத்தப்பட்டது, அதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி ஏற்கனவே எழுப்பப்பட்டது (செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான "Reservation when? After, after, after (இடஒதுக்கீடு எப்போது? பிறகு, பிறகு, பிறகு)" என்ற கட்டுரையில்). இந்தச் சட்டம் எப்படி, எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும், அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கவில்லை. அரசியலமைப்பின் 334A (Article 334A) பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் கடந்தகால மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எடுத்துக்கொண்ட கால அவகாசத்தை (சுமார் ஆறு ஆண்டுகள்) வைத்துப் பார்க்கும்போது, 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (106th Amendment Bill) மிகவும் மெதுவாகச் செயல்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.


வெற்றி அல்லது தோல்வி


திடீரென்று, ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசு அவசரம் காட்டுகிறது. மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் ஒரு மசோதாவைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரும் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய மாற்றத்தைச் செய்ய அரசியல் சாசனத் திருத்த மசோதா கட்டாயம் தேவைப்படும் என்கின்றனர். இதற்கு 'சிறப்புப் பெரும்பான்மை' அவசியம் ஆகும். அதாவது, ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேலானோரும், அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பா.ஜ.க (BJP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவையில் இந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை, இருப்பினும் அரசாங்கம் இந்த அபாயகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். 


ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 39-எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28-உறுப்பினர்களும் அவைக்கு வரமாட்டார்கள் என்று அரசு நம்புகிறது. அரசாங்கத்தின் இந்த எண்ணம் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. மக்களவையில் இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாஜக தேர்தல் நேரத்தில் இதனை மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை 182-லிருந்து 272-ஆக உயர்த்திய பெருமையை ஒன்றிய பாஜக அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் ஒருவேளை மசோதா தோல்வியடைந்தால், அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று பழி சுமத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.


பாஜக அரசு மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளை அலட்சியம் செய்கிறது. இந்த மாற்றம் சபையை நிர்வகிப்பதில் சிரமங்களை உருவாக்கலாம். உறுப்பினர்கள் பேசுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கும் என்றும்  மிக முக்கியமாக, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும், மக்கள்தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வாக்கு வலிமை இடைவெளி கணிசமாக அதிகரிக்கும். இது பாஜகவின் வழக்கமான 'பிரித்தாளும் சூழ்ச்சி' தந்திரத்தையே பிரதிபலிக்கிறது. 


இந்தக் கருத்து விவாதத்திற்குரியது என்றாலும், இது கொண்டு வரப்பட்ட நேரம் மிகவும் மோசமானதாகும். 


Original Link: An election-eve gambit.


Share: