கட்டுப்பாடற்ற இணையவழிக் குற்றங்களின் அபாயங்கள். -அமிதாப் ரஞ்சன்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது போல, மோசடி வலையமைப்புகளைத் தகர்ப்பதற்கு இந்தியா இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டுப் பேச்சுவார்த்தைகளையும் செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.


2025-ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையவழிக் குற்றங்களால் சுமார் ₹22,495 கோடி என்ற மிகப்பெரிய அளவிலான பண இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 28.15 லட்சம் இணையவழிக் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 24 விழுக்காடு கூடுதலான புகாராகும். இதற்கு முந்தைய ஆண்டான 2024-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இணையவழிக் குற்ற இழப்புகள் 200 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து ₹22,845 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு தனது டிஜிட்டல் பொருளாதாரத்தில் இருந்து ஆண்டுக்கு ₹22,000 கோடிக்கும் மேலாக இழப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) என்கிற இலக்கை நம்பகத்தன்மையோடு எதிர்பார்க்க முடியுமா?


இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் (Digital transformation) ஒரு உண்மையான சாதனையாகும். ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) தளம் மாதந்தோறும் பில்லியன் கணக்கான பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது. ஆதார் (Aadhaar) அடையாள அட்டை, நாட்டின் மிகப்பெரிய அளவிலான மக்கள்தொகைக்கான அடையாளத்தை முற்றிலும் மறுவரையறை செய்துள்ளது. ஆனால், ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு பக்கவிளைவு உண்டு; அந்த வகையில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்குப் பக்கவிளைவாக உருவெடுத்துள்ளதுதான் பரந்து விரிந்த குற்றவியல் சுற்றுச்சூழல் அமைப்பு. இது தற்போது நாட்டின் வளர்ச்சி இலக்குகளுக்கு மிக முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


மோசடித் தொழிற்சாலைகள் 


இந்த நெருக்கடியின் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு பரிமாணம் என்னவென்றால், இது பல நாடுகளை உள்ளடக்கிய சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையான 'Golden Triangle' பகுதியிலும், கம்போடியா-தாய்லாந்து எல்லைகளில் உள்ள முகாம்களிலும், சீனப் பின்னணி கொண்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிக் குழுக்கள் தொழில்துறை அளவில் இந்த மோசடித் திட்டங்களை நடத்தி வருகின்றன.


போலியான வேலைவாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு ஏமாற்றப்படும் இந்திய இளைஞர்கள், இந்த முகாம்களுக்குள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் அங்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, உலகளவில் உள்ள மக்களைக் குறிவைத்து முதலீட்டு மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற மோசடிகளைச் செய்யும் தொலைபேசி அழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.


நிதிசார்ந்த குற்றங்களிலேயே மனரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடூரமான ஒன்றுதான் இந்த டிஜிட்டல் கைது மோசடி ஆகும். சுங்கத்துறை அல்லது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி போலப் பேசும் ஒரு நபர், பாதிக்கப்பட்டவரிடம் அவரது ஆதார் அடையாள அட்டை (Aadhaar) கடத்தல் அல்லது பணமோசடி நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர். பின்னர், அந்த நபரை ஒரு போலி காணொளி அழைப்பு கண்காணிப்பு மூலம் கைது செய்துள்ளது போன்ற மாயையை உருவாக்கி, அவர்களின் வாழ்நாள் சேமிப்புப் பணம் முழுவதையும் திட்டமிட்டுப் பறித்து விடுகின்றனர்.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் 2022-ஆம் ஆண்டில் தோராயமாக 40,000-லிருந்து, 2023-ஆம் ஆண்டில் 60,000-ஆகவும், 2024-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.24 லட்சமாகவும் உயர்ந்தன. மேலும் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் ஒட்டுமொத்தப் பண இழப்பு 2,600 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்துள்ளது.


2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டு தைவானுடன் தொடர்புடைய மோசடியில் ஈடுபடும் குழுவினரைக் கண்டுபிடித்து அழித்தது. இந்தக் கும்பல், தங்களை 'பயங்கரவாத எதிர்ப்புப் படை' (Anti-Terrorist Squad (ATS)) அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்டு, குடிமக்களிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது. சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவம் இதன் தீவிரத்தை வெளிப்படுத்தியது. சீனாவைச் சேர்ந்த சில மின்கலன் மேலாண்மை செயலிகள் (Battery management apps), டெல்லியில் ‘E-rickshaw’ இயக்கங்களை முற்றிலும் முடக்கி, போக்குவரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறின. உடனடியாக அந்தச் செயலிகளை செயலிகள் பதிவிறக்கத் தளங்களில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. இவை ஏதோ திட்டமிடாமல் தற்செயலாக நடக்கும் குற்றங்கள் அல்ல; மாறாக, மிகச்சிறந்த விநியோகச் சங்கிலிகள் மற்றும் புவிசார் அரசியல் ஆதரவாளர்களைக் கொண்டு, எல்லைகளைத் தாண்டி நடத்தப்படும் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனத்தைப் போன்ற குற்றச் செயலாகும்.


இந்தியாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS Delhi) மருத்துவமனைமீது நடத்தப்பட்ட 'ரான்சம்வேர்' (Ransomware) காரணமாக, வெளிநோயாளி, உள்நோயாளி, ஆய்வகம் உள்ளிட்ட சேவைகள் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முடங்கின. இந்தத் தாக்குதல் ஐந்து சர்வர்களில் (Servers) இருந்த கோப்புகளைப் பாதித்ததோடு, சுமார் 1.3 டெராபைட் (TeraByte (TB)) அளவிலான தரவுகளை முடக்கியது. இதனால் 3 முதல் 4 கோடி நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


நாடாளுமன்றத்தில் இந்தத் தாக்குதலை அரசாங்கம் பின்னர் உறுதிப்படுத்தியது. இதற்காக இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency (NIA)) ஆகியவை விசாரணைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விசாரணையாளர்கள் இந்த டிஜிட்டல் தடயங்கள் ஹாங்காங் மற்றும் சீனா வரை செல்வதைக் கண்டறிந்தனர். இதற்கிடையில், 2023-ஆம் ஆண்டில் தரவுகள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, கோவின் (CoWIN) தளத்தின் பாதுகாப்புத் திறன் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. உலகளவில் இணையவழித் தாக்குதல்களுக்கு அதிகம் இலக்காகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதாகத் தொழில்முறை இணைய பாதுகாப்பு மதிப்பீடுகள் காட்டுகின்றன.


நான்கு ஆண்டுகளில் நிதி இழப்புகள் சுமார் 41 மடங்கு அதிகரித்துள்ளன.  அதாவது 2021-ஆம் ஆண்டில் ₹551 கோடியாக இருந்த இழப்பு, 2024-ஆம் ஆண்டில் ₹22,800 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதில் முதலீடு தொடர்பான மோசடிகளால் மட்டுமே, இழந்த ஒட்டுமொத்தப் பணத்தில் 75 விழுக்காட்டிற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.




ஒவ்வொரு மோசடிப் பணப்பரிமாற்றமும், குடும்பங்களின் சேமிப்பைச் சீரழிக்கிறது. இந்தச் சேமிப்புதான் பொதுவாகச் சந்தையில் பொருட்களை வாங்கும் திறனை ஊக்குவிப்பதாக இருக்கும். ஒவ்வொரு ரான்சம்வேர் (Ransomware) தாக்குதலும் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. ஒவ்வொரு பெரிய தரவுத் திருட்டும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயலும் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவை அதிகரிக்கிறது.


இணையவழிக் குற்றங்கள் என்பவை எப்போதாவது பொருளாதாரத்தைப் பாதிக்கின்ற, சட்டம்-ஒழுங்கு சார்ந்த ஒரு சாதாரணப் பிரச்சனை மட்டுமல்ல; அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடக்கும் ஒரு பெரிய தடையாகும். சிங்கப்பூர் தனது பொருளாதார அடையாளத்தோடு இந்த இணையப் பாதுகாப்பையும் இணைத்துள்ளது. இஸ்ரேல் இதை ஒரு முக்கியத் தொழில் துறையாகவே மாற்றியிருக்கிறது. அடுத்த தலைமுறை டிஜிட்டல் விநியோகச் சங்கிலிகளுக்கு உலக அளவில் ஒரு முதன்மையான கூட்டணி நாடாக மாற விரும்பும் இந்தியா, இணையப் பாதுகாப்பில் பலவீனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்த இணையக் குற்றங்களின் பாதிப்பு தற்போது ஒரு இணையவழிப் பெருந்தொற்று (Cyberdemic) போலப் பரவி வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ்அப் செயலியிலுள்ள போலிப் பங்குச்சந்தை ஆலோசனையை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழக்கிறார். இளம் பட்டதாரி ஒருவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு கடத்தப்படுகிறார். மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) அதிகாரியெனப் பேசும் ஒரு மோசடி நபரால் முதியவர் ஒருவர் பல நாட்களாகத் தனது வீட்டிற்குள்ளேயே மனரீதியாகச் சிறைபிடிக்கப்படுகிறார்.


இத்தகைய இணையவழிக் குற்றங்களால் ஏற்படும் பண இழப்பைவிட, அது தரும் மனஉளைச்சலும் பாதிப்பும் மிக அதிகம் என்று நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Generative AI) இந்த அச்சுறுத்தலை மேலும் வேகமாக்கியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள், நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளைப் போல அவர்களின் குரல் மற்றும் உருவத்தை அப்படியே போலியாக உருவாக்கி (Deepfake) ஏமாற்ற இந்தத் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்த ஒருவருக்கு இணையப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால், அது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிதாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளவர்களிடம் இந்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.


ஐந்து அம்சத் திட்டம்


இந்தியாவின் நிறுவனரீதியிலான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) இதுவரை சுமார் 8,031 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிப் பரிவர்த்தனைகளை முடக்க உதவியுள்ளது. மேலும், குடிமக்கள் நிதிசார் இணையக் குற்றப் புகாரளிப்பு அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting System) 23 லட்சத்திற்கும் அதிகமான புகார்களின் மூலம் சுமார் 7,130 கோடி ரூபாய்க்கு மேல் நிதிஇழப்பைத் தடுத்துள்ளது. இவை அர்த்தமுள்ள முயற்சிகள் என்றாலும், இந்தச் சவாலின் அளவு மிகப் பெரியதாக இருப்பதால் நமது அடுத்தகட்ட நடவடிக்கை ஒரு பிரம்மாண்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்.


முதலாவதாக, இணையப் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக மாற வேண்டும். இதற்கு இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), இந்திய கணினி அவசரக்காலப் பதிலளிப்புக் குழு CERT-In, ரிசர்வ் வங்கி (RBI), உளவு அமைப்புகள் மற்றும் மாநிலக் காவல்துறை ஆகியவற்றுக்கு இடையே உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.


இரண்டாவதாக, இணையப் பாதுகாப்புப் பழக்கவழக்கங்கள் (Cyber hygiene) ஒரு தேசிய இயக்கமாக மாற வேண்டும். முன்னொரு காலத்தில் நிதி அறிவு சார்ந்த விஷயங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ, அதேபோன்ற அவசரத் தேவையுடன் இது பள்ளிப் பாடத்திட்டங்களிலும், நிறுவனங்களில் சேரும் புதிய ஊழியர்களுக்கான பயிற்சியிலும் சேர்க்கப்பட வேண்டும்.





மூன்றாவதாக, இந்தியா தனது இணையக் குற்றப் புலனாய்வு (Cyber-forensic) துறைக்கான மனிதவளத்தை மிக வேகமாகவும் பெருமளவிலும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலில் குற்றப் புலனாய்வு நிலைகளில் இதற்கான தகுதிவாய்ந்த நபர்களின் பற்றாக்குறை நீடிக்கிறது.


நான்காவது, இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் போலி வங்கிக் கணக்குகள் (Mule accounts) மற்றும் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை முறைகளை உடனுக்குடன் கண்டறிய வேண்டும். அதாவது, ஒரு  இணையவழிக் குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, அது நடப்பதற்கு முன்பே கணித்து தடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.




ஐந்தாவது மற்றும் மிக அவசரமான விஷயம் என்னவென்றால், இந்தியா தனது இருதரப்பு மற்றும் பலதரப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இதில் குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தங்கள், பரஸ்பர சட்ட உதவி, ‘Interpol’ உடனான ஒருங்கிணைப்பு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் மோசடி மையங்களை அவற்றின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஒழிப்பதற்கான நேரடி ராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கு நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்றும், மருத்துவமனை சர்வர்கள் (server) முடக்கப்படமாட்டாது என்றும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மோசடி மையங்களிலிருந்து இயங்கும் குற்றவாளிகளால் ஆதார் (Aadhaar) மூலம் இணைக்கப்பட்ட அடையாளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட வேண்டும்.



தொழில்நுட்பம் எவ்வளவுதான் அதிநவீனமாக இருந்தாலும், நம்பிக்கை இல்லையென்றால் டிஜிட்டல் பொருளாதாரத்தால் அதன் முழுத் திறனை எட்ட முடியாது. இந்த நூற்றாண்டில் இந்தியாவின் எதிரிகள் எப்போதும் ராணுவ சீருடை அணிந்து வரமாட்டார்கள். அவர்கள் கணினித் திரைக்குப் பின்னால் இருந்துகொண்டே டிஜிட்டல் வலையமைப்புகளுக்குள் நுழையலாம், திருடப்பட்ட அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தலாம், மேலும் சாதாரண மக்களின் சேமிப்புப் பணத்தைத் திருடவும் செய்யலாம்.


இந்த டிஜிட்டல் எல்லையைப் பாதுகாப்பது என்பது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது கட்டாயமாகும். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிலான முன்னுரிமை இந்த வேகமாக வளர்ந்து வரும் இணையவழிப் பெருந்தொற்று (Cyberdemic) தடுப்புப் பணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.


அமிதாப் ரஞ்சன், புது தில்லியில் உள்ள இந்தியப் பொது நிர்வாகக் கழகத்தின் பதிவாளர் ஆவார்.


Original Link: Perils of unchecked cybercrime.

Share: