டிஜிட்டல் முகமை, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை (Women-led Development) எவ்வாறு முன்னெடுத்து செல்லமுடியும்? -ரிதுபர்ணா பட்கிரி

இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டுமடங்காக அதிகரித்திருந்தாலும், டிஜிட்டல் அணுகல் நிலையிலிருந்து அதிகாரத்தை நோக்கிய மாற்றம் இன்னும் முழுமையடையாமலே உள்ளது. சமூக-கலாச்சாரத் தடைகள் எவ்வாறு பெண்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்குத் தடையாக அமைகின்றன? இது பெண்கள் தங்களுக்கான முடிவுகளை மேற்கொள்ளும் திறனையும், பெண்களின் தலைமையிலான மேம்பாடு குறித்த தொலைநோக்குப் பார்வையையும் எவ்வாறு பாதிக்கிறது?


பாலின சமத்துவத்தை அடைவதையும், அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு 5-ஐ அடைவதற்கு, பாலின அடிப்படையிலான டிஜிட்டல் சமத்துவம் மையமானது. 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey (NFHS-6)), இணையப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டுமடங்காகியுள்ளது. இருப்பினும், கட்டமைப்புரீதியான சமத்துவமின்மையின் காரணமாக, டிஜிட்டல் அணுகலிலிருந்து அதிகாரம் பெறுவதற்கான மாற்றம் முழுமையடையாமல் உள்ளது.


2023-24-ஆம் ஆண்டுகளின் 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது 64.3% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது 2019-21-ஆம் ஆண்டுகளின் 5-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு காலகட்டத்தில் 33.3%-ஆக இருந்தது. தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூகம் மற்றும் கொள்கை சார்ந்த காரணிகளின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறைவான விலையில் கிடைக்கும் அலைபேசிகளின் பரவலான பயன்பாடு மற்றும் மேம்பட்ட இணைய இணைப்பு வசதிகள் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்துவதற்க்கு   வழிவகுத்துள்ளன. இணையமானது பொருளாதார வாய்ப்புகள், சேவைகள் மற்றும் கல்வியை அணுகுவதற்கும், சமூகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய வழியாகக் கருதப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் அரசு சேவைகள் இணையம் சார்ந்த செயல்பாடுகளாக மாறியதால், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு வேகபடுத்தப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைவரும் அணுகுவதை உறுதிசெய்ய அரசு மேற்கொண்ட முயற்சிகள், பெண்களுக்கான இணைய பயன்பாட்டையும் விரிவுபடுத்தியுள்ளன. இதன் விளைவாக, தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பல பெண்கள் முதன்முறையாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும்,  இடைவெளிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.


தொடரும் தடைகள்


பெண்களின் இணையப் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் யார் பயனடைகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், டிஜிட்டல் அணுகலிலிருந்து உண்மையான அதிகாரமளித்தலை நோக்கிய மாற்றம் முழுமையடையாமல் உள்ளது.


உதாரணமாக, இணையப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி தொடர்ந்து இருந்துவருகிறது. ஆண்களில் 80.5% பேர் இணையத்தைப் பயன்படுத்தும் நிலையில், பெண்களில் 58.6% பேர் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல, நகர்ப்புறங்களில் 77.3% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்தும் நிலையில், கிராமப்புறங்களில் 58.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதால், கிராம-நகர்ப்புற இடைவெளியும் கணிசமாக உள்ளது.


பெண்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கு நீண்டகாலமாக தடையாக இருப்பவை பாலின அடிப்படையிலான சமூக நெறிமுறைகள், வர்க்க வேறுபாடு, சாதி, மதம், இனப்பிரிவு, மாற்றுத்திறனாளித்தன்மை, கிராம–நகர்ப்புற வேறுபாடு (Rural–Urban Divide) மற்றும் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் உள்ள சமத்துவமின்மை (Unequal Control over Financial Decision-making) ஆகியவையாகும்.



டிஜிட்டல் பாலின இடைவெளிக்குப் பின்னால் உள்ள கட்டமைப்பு காரணிகள்


டிஜிட்டல் பாலின இடைவெளியானது சமூக மற்றும் கட்டமைப்புரீதியான பாலின சமத்துவமின்மைகளில் ஆழமாக உள்ளது. மொபைல் இணையத்தைப் பற்றி அறிந்தவர்களிடையே, அதனைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத் தடைகளாகக் கட்டுப்படியாகும் விலை, எழுத்தறிவு, பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவை அமைகின்றன. சமூக நெறிமுறைகள் மற்றும் குறைந்த கல்வி மற்றும் வருமானம் போன்ற கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, இது போன்றத்தடைகளால் பெண்கள் விகிதாச்சார அளவிற்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.


பெண்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பெரும்பாலும் ஆணாதிக்க (Patriarchal) சமூகத்தின் ஒழுக்கநெறி சார்ந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதனால் அது பல நேரங்களில் எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 2014-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information (RTI)) மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், மொபைல் போன்களின் தவறான பயன்பாடே பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.


பெண்களின் மொபைல்  பயன்பாடு, குறிப்பாக கிராமப்புறங்களில், அவர்களது குடும்பத்தினரால் கண்காணிக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. மொபைல் தகவல் தொடர்புக்கான உலகளாவிய அமைப்பின் (Global System for Mobile Communications Association (GSMA)) 2025-ஆம் ஆண்டு மொபைல் பாலின இடைவெளி அறிக்கை, இந்தியாவில் அலைபேசி இணையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் ஒரு முக்கியத் தடையாக உள்ளனஎன்பதை காட்டுகிறது. மேலும், லட்சுமி லிங்கம் மற்றும் ஈஷா பல்லமுடி ஆகியோர், "Good Girls" and "Smart Boys": Mobile Phones and the Social Reproduction of Gender (2025) என்ற தங்கள் நூலின் அத்தியாயத்தில், அலைபேசிகளை அணுகுவதிலும் பயன்படுத்துவதிலும் பாலினம், சாதி மற்றும் வர்க்கம் சார்ந்த தடைகள் உள்ளன என்று குறிபிடுகின்றனர்.


மேலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாரம்பரியக் கட்டுப்பாட்டு முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சீர்குலைப்பது குறித்து ஒருவிதமான  பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான பாலின அடிப்படையிலான விதிமுறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அணுகுதல், பயன்படுத்துதல் மற்றும் அதன் மூலம் அதிகாரமடைதல் ஆகியவற்றில் பெண்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் தகவல் தொடர்பு மற்றும் தகவல்களைப் பெறுதல் ஆகியவற்றைத் தாண்டி, பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் நிதிச் சுதந்திரத்தையும்  குறைத்துவிடுகின்றன.


நிதி சார்ந்த டிஜிட்டல் இடைவெளி


தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் மூலம், வணிகம் மற்றும் நிதி சார்ந்த முடிவுகளில் பெண்களின் பங்கேற்பை சிறப்பாக ஊக்குவிக்க முடியும். சந்தைகளுக்கான அணுகலை வழங்குவதோடு தொழில்முனைவு முயற்சிகளையும் ஊக்குவிப்பதால், டிஜிட்டல் இணைப்பு வசதியானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small, and Medium Enterprises) பயனளிக்கும்.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (International Telecommunication Union (ITU)) 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வளரும் நாடுகளில் மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு 1% அதிகரிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 0.20% அதிகரிப்புடன் தொடர்புடையதாக உள்ளது. ஆனால், குறைந்த கல்வியறிவு, குறைந்த வருமானம், கிராமப்புறப் பின்னணி அல்லது மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மொபைல் போன்கள், மொபைல் பணப் பரிவர்த்தனை, மொபைல் இணையம் மற்றும் பிற மொபைல் சேவைகளுக்கான அணுகல் குறைவாக இருப்பதால், வணிகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தும் அவர்களின் திறன் கட்டுப்படுத்தப்படுகிறது.


பெண்கள் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாக   நம்பப்படுவதில்லை. மேலும், அவர்கள் தாங்களே சம்பாதித்த பணத்தைச் செலவிடுவதற்கும் பல நேரங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதன் தாக்கம் பெண் தொழில் முனைவோர் மற்றும் வணிக மேலாளர்களை மட்டுமல்லாமல், நேரடி பணப் பரிமாற்ற (Direct Benefit Transfer/Direct Cash Transfer (DBT)) திட்டங்களின் பயனாளிகளையும் பாதிக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் அவர்கள் பெறும் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதில்லை என்பதாகும்.


ஷரோன் புட்டோ, பிரீத்தி ராவ் மற்றும் ஃபேப்ரிசியோ வாலெண்டி ஆகியோர் 2021-ல் மேற்கொண்ட 'நிதிச் சேர்க்கையில் டிஜிட்டல் தீர்வுகள் மூலம் கிடைக்கும் புதிய நுண்ணறிவுகள்' (Emerging insights from digital solutions in financial inclusion) என்ற ஆய்வில், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைவினைத்துறை சார்ந்த 874 பெண் கைவினைக் கலைஞர்களில் 50 சதவீதத்தினரிடம் தொழில் பயன்பாட்டிற்கான தனிப்பட்ட வங்கிக் கணக்கு இல்லை என்றும், மூன்றில் ஒரு பகுதியினரிடம் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் கணக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பெண்களின் டிஜிட்டல் நிதி இடைவெளி (Digital Financial Gap) என்பது, பெண்களுக்கு நிதி அறிவு குறைவாக உள்ளது என்ற சமூகப் பார்வையுடனும், அவர்கள் நிதி முடிவுகளை எடுக்கத் தகுதியற்றவர்கள் என்ற நம்பிக்கையுடனும் நேரடியாக தொடர்புடையதாக உள்ளது. பெண்கள் தாங்களே வருமானம் ஈட்டினாலும், அவர்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக ஆண் உறுப்பினர்களே நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே, இந்த இடைவெளியைப் குறைக்க, பெண்களுக்கு டிஜிட்டல் சாதனங்களின் உரிமையையும், அவற்றை சுயமாகப் பயன்படுத்தும் முழுமையான கட்டுப்பாட்டையும் உறுதி செய்வது  முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.


டிஜிட்டல் சாதனங்களின் உரிமை


டிஜிட்டல் தன்னாட்சியை (digital autonomy) உறுதி செய்வதற்கு டிஜிட்டல் சாதனங்களின் உரிமை மிகவும் முக்கியமானது. ஏனெனில், சாதன உரிமை இல்லாமல் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது. ஜிங்ஜிங் சென் எழுதிய, 'கைபேசிகள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனவா? கிராமப்புற இந்தியாவின் ஒரு கண்ணோட்டம்' என்ற 2021-ஆம் ஆண்டு கட்டுரை, கைபேசி உரிமையானது முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் அதிகரித்thu டன் தொடர்புடையது என்பதை எடுத்துக்காட்டுகிறது.


ஒரே மொபைல் சாதனத்தைப் பகிர்ந்து பயன்படுத்துவது, மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் (Period Trackers), தாய்மை நலச் செயலிகள் (Maternal Health Apps) போன்ற தனியுரிமை தேவைப்படும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு போதுமான தனியுரிமையை வழங்காது. இதனால், பெண்கள் பகிர்ந்து பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தங்களின் தனிப்பட்ட உடல்நலம் மற்றும் பிறருடன் பகிர விரும்பாத விவகாரங்களை அணுகுவதில் தயக்கம் காட்டக்கூடும்.


அப்துல்ரஷீத் ஏ இலியா மற்றும் சிடி ஒனோனிவு ஆகியோரின் 2020-ஆம் ஆண்டு ஆய்வான, 'அதிகாரமளிப்பதில் கைபேசி பயன்பாட்டிற்கான வழிமுறைகள்: நைஜீரியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒரு விமர்சன யதார்த்தவாத ஆய்வு', துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அணுகல்த்தன்மை மற்றும் ஏற்புத்தன்மை ஆகியவை கைபேசிகளால் எவ்வாறு எளிதாக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.


இந்த மாற்றுத்திறனாளிப்பெண்களுக்கு  அதிகமாகப் பொருந்துகிறது. ஏனெனில், மொபைல் போன் அவர்களுக்கு சுகாதாரச் சேவைகள் மற்றும் அவர்களின் சிறப்புத் தேவைகள் தொடர்பான பிற சேவைகளை (Self-sufficiently) சார்ந்து இருக்காமல் சுயமாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும், தாய்மை நலம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களும் கொள்கைகளும் இன்று டிஜிட்டல் தளங்கள் வழியாக செயல்படுத்தப்படுவதால், அவற்றின் பயன்களைப் பெறுவதற்கு பெண்கள் சொந்தமாக மொபைல் போன் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.


டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான முயற்சிகள்


2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சியானது, டிஜிட்டல் அரசாங்க சேவைகளை வழங்குவதோடு, கிராமப்புறங்களை பிராட்பேண்ட் வலையமைப்புகளுடன் இணைக்கிறது. 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA)), இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற குடிமக்களுக்கு அடிப்படை டிஜிட்டல் கல்விப் பயிற்சியை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க முயற்சிகிறது. இது முக்கியமாக பெண்கள் உட்பட விளிம்புநிலை சமூகத்தினரை இலக்காகக் கொண்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு மக்களவையின் நட்சத்திரக்குறியிடப்படாத கேள்வி எண் 3080-இன் படி, பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (PMGDISHA) திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் 52% பேர் பெண்கள் ஆவர். இந்தத் திட்டங்கள் அணுகலையும் அடிப்படை டிஜிட்டல் திறன்களையும் விரிவுபடுத்தியுள்ளன. ஆனால், பயனுள்ள டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கு, சமூகச் சூழலுக்கு ஏற்ப செயல்படக்கூடிய, பாலினப் பாகுபாடு இல்லாத நடவடிக்கைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.


அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றத்திற்கான நடவடிக்கைகள்


எனவே, டிஜிட்டல் உள்ளடக்கம் என்பது வெறும் தொழில்நுட்பத்தை அணுகுவது மட்டுமல்ல. அது 'டிஜிட்டல் செயல் திறன்' (digital agency) எனும் திறனை வளர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தை சுயமாகப் பயன்படுத்தி, தங்களின் முடிவுகளைத் தாங்களே எடுக்கும் திறனையும், தங்களுக்குரிய உரிமைகளைச் செயல்படுத்தும் ஆற்றலையும் பெண்களுக்கு வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்றோரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறன் கொண்ட டிஜிட்டல் எழுத்தறிவுத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டியது முக்கியமான  நடவடிக்கையாகும்.


பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய, பள்ளிப் பாடத்திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுத் திட்டங்களில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு (cybersecurity) குறித்த கல்வியை இணைக்கலாம். டிஜிட்டல் பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் மற்ற உறுப்பினர்களின் ஆதரவு ஆகியவற்றிற்கு உள்ளூர் சுயஉதவிக் (Local self-help groups) குழுக்கள் மற்றும் இணைந்து செயல்படும் அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.




குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் கைம்பெண்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கி, மொபைல் போன் வாங்குவதற்கான மானியங்கள் மற்றும் செலவுச் சீட்டுகளை வழங்குவதன் மூலம் பெண்களிடையே மொபைல் போன் உரிமையை ஊக்குவிக்கலாம். மொபைல் போன்களை வாங்குவதற்கு எளிதான கடன் மற்றும் நுண்நிதி (microfinance) வசதிகள் கிடைப்பது, பெண்கள் தொழில்நுட்பத்தை சிறப்பாக அணுக உதவும். மொபைல் போன் உரிமையை ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களுடனும் இணைக்க வேண்டும்.


அனைவருக்கும் ஏற்ற செயலி வடிவமைப்பு, உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆதரவு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அணுகக்கூடிய டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்க வேண்டும். 'ஆப்பிரிக்க மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆராய்ச்சி மையம்' (African Population and Health Research Centre (APHRC)) மேற்கொண்ட, 2024-ஆம் ஆண்டு 'டிஜிட்டல் நிதிச் சேவைகள், பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் தாய்மைக்கால மன அழுத்தம்: கிராமப்புற கென்யாவில் ஒரு தரமான ஆய்வு', பெண்களுக்கான மொபைல் நிதிச் சேவைகள் சக-ஆதரவுக் குழுக்கள் மற்றும் சமூகம் சார்ந்த கல்வியுடன் இணைக்கப்படும்போது மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன என்பதை வெளிக் காட்டுகிறது. இது போன்ற அணுகுமுறை இந்தியாவிலும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.


பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு டிஜிட்டல் உள்ளடக்கம் முக்கியமானது.


இருப்பினும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் உள்ளடக்கம் அங்கீகரிக்கப்படும்போது மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் முழுமையான பலனைத்தரும். டிஜிட்டல் துறையில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைப்பது ஒரு சமூகப் பிரச்சினையாகும். பயனுள்ள டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு அணுகல் வசதி மட்டும் போதுமானதாக இருக்காது. அதனுடன் உரிமை, டிஜிட்டல் எழுத்தறிவு, நிதிச்சுதந்திரம் மற்றும் சுயமான முடிவெடுக்கும் திறன்  போன்றவை முக்கியமான ஒன்றாகும். பெண்களை அதிகாரப்படுத்துவதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கும் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை.


அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றம் (Inclusive Digital Transformation) ஏற்பட வேண்டுமெனில், பெண்கள் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துபவர்களாக (Passive Users) மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, பெண்கள் தாங்களாக டிஜிட்டல் சாதனங்களை வைத்திருப்பதையும், நிதி தொடர்பான முடிவுகளை தாங்களாக எடுப்பதையும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்பதையும் உறுதிசெய்ய வேண்டும். டிஜிட்டல் அணுகல் மட்டுமே போதுமானதாக இருக்காது. சுதந்திரமாக செயல்படும்  டிஜிட்டல் அணுகல் மட்டுமே, பெண்கள் தலைமையிலான (women-led development) வளர்ச்சிக் கனவை உண்மையாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும்.


Original Link: How digital agency can advance women-led development.

Share: