புதிய புவிசார்-பொருளாதார உலகின் யதார்த்தம் என்னவென்றால், பரந்த மற்றும் லட்சியம் சார்ந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் (Free Trade Agreements (FTA)) காலம் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது.
இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கீழ் ஏற்பட்ட சமீபத்திய தலைமை மாற்றங்கள் மற்றும் எஃகுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கடைசி நேர கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதியாகத் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) ஜூலை 15 முதல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஜூலை 1 அன்று இங்கிலாந்தின் புதிய எஃகு வர்த்தக நடவடிக்கைகள் அமலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக, கடைசி நேரத்தில் இந்தியாவின் அடிப்படை ஏற்றுமதிகளுக்கு 85 சதவீத வரிவிலக்கை இந்தியாவால் பெற முடிந்தது. இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்புரீதியான வரம்புகளை இரண்டு முக்கிய எதார்த்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முதலாவதாக, இங்கிலாந்துடனான இந்தியாவின் தற்போதைய எஃகு வர்த்தகத்திற்கு 85 சதவீத அளவு விலக்கு பொருந்தினாலும், ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைக்கப்பட்ட எஃகு இறக்குமதி மீதான கட்டுப்பாடு வரம்புகள் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படுவது, ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்திய எஃகு ஏற்றுமதிகளுக்கு இங்கிலாந்து ஒரு கட்டணமில்லா பாதுகாப்பான புகலிடமாகச் செயல்படும் திறனைக் குறைக்கிறது.
இரண்டாவதாக, இங்கிலாந்து கொண்டுவரவுள்ள கார்பன் எல்லைச் சரிசெய்தல் செயல்முறை (CBAM) இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியப் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் வரவில்லை. மேலும், இந்தியாவின் ஒரே தற்காப்பு வழிமுறை, எதிர்-வரிவிதிப்புகளை (counter-tariffs) விதிக்கும் உரிமை மட்டுமே. நவீன தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் சந்தை அணுகல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் மகத்தானதாக இருந்தாலும், வர்த்தக ஒப்பந்தங்களின் புதிய புவிசார்-பொருளாதார யதார்த்தம் அதீத பரிவர்த்தனை சார்ந்ததாகவும், தற்காப்பு சார்ந்ததாகவும், மற்றும் வரையறுக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சம் என்னவென்றால், இந்தியா தனது 99 சதவீத வரிவிதிப்பு முறைகளில் உடனடியாக வரி இல்லா சந்தை அணுகலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரிகள் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் மருந்து ஏற்றுமதிகளில் 87 சதவீதம் உடனடியாக வரி இல்லா அணுகலையும் இது வழங்கியது. கூடுதலாக, கடல்சார் ஏற்றுமதிகளில் 21.5 சதவீத வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனுடன், சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் மீதான ஒப்பந்தம் (இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்), தற்காலிக இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பணியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இரட்டை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் உடனடி நிதி நிவாரணத்தை வழங்குகிறது.
இதற்குப் பதிலாக, இந்தியா தனது 90 சதவீத சுங்க வரி விதிப்பு முறைகளைத் தாராளமயமாக்கும். அதன்படி, முதல் ஆண்டில் 10,000 யூனிட்டுகள் என்ற ஒதுக்கீட்டின்கீழ், உயர் ரக பிரிட்டிஷ் கார்களுக்கான சுங்க வரிகள் 110 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும். மேலும், ஐந்தாம் ஆண்டில், ஆண்டுக்கு 37,000 யூனிட்டுகள் என்ற ஒதுக்கீட்டுடன் இந்தக் கார்களுக்கான சுங்க வரிகள் 10 சதவீதமாகக் குறையும். 2025-ல் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் கீழ், எஃகுத் துறை 10 முதல் 18 சதவீதம் வரையிலான சுங்க வரிகளிலிருந்து பயனடையும் நிலையில் இருந்ததுடன், இந்தியாவின் 893 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எஃகு வர்த்தகத்திற்கு வரி இல்லா அணுகலை நோக்கி நகரும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இங்கிலாந்தின் எஃகு வர்த்தக நடவடிக்கைகளில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம், சந்தை அணுகலுக்கான விதிகளை மாற்றியமைக்கிறது. உலகளாவிய கட்டணமில்லா இறக்குமதி வரம்புகளை 51 சதவீதம் குறைத்து, ஒதுக்கீட்டை மீறியதற்கான அபராதத்தை 50 சதவீத கட்டணமாக இரட்டிப்பாக்கியதன் மூலம், இங்கிலாந்து தனது எல்லைகளைச் சுற்றி எஃகு மீது ஒரு வலுவான வரித் தடையை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தின் எஃகு இறக்குமதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தாலும், இந்தியா தொடர்ந்து 6 சதவீத சிறிய ஆனால் நிலையான சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இந்த புதிய எஃகு கட்டமைப்பின்கீழ், இந்தியாவின் ஏற்றுமதிகள் இந்தியாவின் உள்நாட்டு ஒதுக்கீட்டிற்குள் இருக்கும் வரை, அவை பூஜ்ஜிய சதவீத வரியில் சுங்க அனுமதி பெறுகின்றன.
இந்தியாவின் எஃகு ஏற்றுமதியில் சுமார் 484 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தரநிலை வகை 1 சூடான உருளைத் தகடுகள், மூலப்பொருட்கள் மற்றும் சிறப்பு உலோகக் கலவைக் கம்பிகள் அடங்கியுள்ளன. இவற்றை உற்பத்தி செய்யும் திறன் பிரிட்டிஷ் எஃகு ஆலைகளுக்கு இல்லை என்பதால், பிரிட்டன் (இங்கிலாந்து) துருப்பிடிக்காத எஃகுக் கம்பிகள் மற்றும் கம்பிச் சுருள்கள் போன்ற 11 குறிப்பிட்ட சரக்குக் குறியீடுகளைப் பாதுகாப்பு வரம்பிலிருந்து நீக்கி, எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தியாவிலிருந்து அத்தகைய ஏற்றுமதிகளை அனுமதித்தது.
இருப்பினும், தரமான வகை-1 கொண்ட சூடான உருளைத் தகடுகள் போன்ற 188 வரி விதிப்புப் பிரிவுகளில் உள்ள மீதமுள்ள 15 சதவீதம், தற்போது ஆண்டுக்கு வெறும் 33,456 டன்கள் என்ற கடுமையான நாட்டுக்குரிய ஒதுக்கீட்டின் (CSQ) கீழ் முடக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்தக் காலாண்டிற்கான தங்களின் பிரத்யேக நாட்டுக்குரிய ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தினால், 50 சதவீத அபராத வரி விதிக்கப்படுவதற்கு முன்பு, கூடுதல் ஏற்றுமதிகளை வரி ஏதுமின்றிப் பெறுவதற்காக, அவர்கள் மற்ற நாடுகளுடன் ஒரு பகிரப்பட்ட உலகளாவிய இருப்புத் தொகுப்பில் போட்டியிட வேண்டியிருக்கும்.
இந்தக் கட்டமைப்பின் கீழ் இந்தியாவின் 85 சதவீத அடிப்படை வர்த்தகம் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி என்றாலும், ஜூலை 1 முதல் மொத்த உலகளாவிய இறக்குமதியை 18.3 மில்லியன் டன்களாகக் கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நேரத்தில் விதிக்கப்பட்ட உச்சவரம்புடன் சேர்த்துப் பார்க்கும்போது இது ஒரு சவாலாகிறது. புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையின் கீழ், தற்போது 25 சதவீதமாக உள்ள ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்ட சுங்க வரி, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடு சார்ந்த ஒதுக்கீடு அறிவிப்பின்படி, ஐரோப்பாவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் 3.2 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதியில், ஹாட் ரோல்டு காயில் (Hot Rolled Coil - வகை 1) எஃகு ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டில் 33 சதவீதக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மாற்று இடங்களைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம்.
ஐரோப்பாவிலிருந்து திசை திருப்பப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகக்கூடிய கூடுதல் எஃகுக்கு, இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இப்போது ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க இயலாமல் உள்ளது. சிறப்பு பொறியியல் உதிரிபாகங்கள் (specialised downstream engineering components) மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாலும், அமெரிக்காவில் மூலப்பொருட்களுக்கான எஃகு, தளராத 25 சதவீத பிரிவு 232 வரிச்சுவருக்குப் பின்னால் சிக்கியுள்ளதாலும், இந்திய எஃகு ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே உலகளாவிய ஏற்றுமதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப்படை வர்த்தக அளவைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் கூட்டமைப்புகள் ஒரே நேரத்தில் தங்கள் உள்நாட்டுத் தொழில்துறை தளங்களைப் பாதுகாக்க உள்நோக்கித் திரும்பும்போது ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கு அது போதுமானதாக இருக்காது.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) 2027 ஜனவரி 1 அன்று அமலுக்கு வர உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியம் கார்பன் வரிகளை விதித்து, அது இந்தியாவைப் பாதிக்கக்கூடிய பட்சத்தில், இந்தியாவும் பதிலுக்கு வரிகளை விதிக்கலாம் என்ற சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) வழங்குவதால், ஐக்கிய ராஜ்ஜியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) ஒப்பந்தம் தொடர்பாகத் தனது கொள்கைகளை வகுக்க இந்தியாவிற்குச் சற்று அவகாசம் கிடைக்கிறது. இருப்பினும், விரிவான மற்றும் இலட்சியவாத தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது என்பதே இந்தப் புதிய புவிசார்-பொருளாதார உலகின் யதார்த்தமாகும்.
அமெரிக்காவின் சுங்கவரிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகளை பெருமளவில் பின்பற்றி, சுங்கவரி அல்லாத தடைகள் மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளின் பரவலால் பெருகிய முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் பொருள், நவீன தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இனி தடையற்ற, விரிவான சந்தை அணுகலுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. மாறாக, அவை அதிக பரிவர்த்தனை சார்ந்தவையாகவும், வரையறுக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டவையாகவும் உள்ளன. பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கத் தனது ஏற்றுமதிகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டியுள்ள இந்தியா, இந்தப் புதிய உலக ஒழுங்கில் செழித்து வளர, விலக்குகளையும் நம்பகமான சந்தை அணுகலையும் பெறுவதற்காகத் தனது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும்.
எழுத்தாளர் தக்ஷஷிலா நிறுவனத்தில் புவிப் பொருளியல் ஆராய்ச்சிப் பகுப்பாய்வாளராகப் பணியாற்றுகிறார்.