அமெரிக்க - ரஷ்யா பொருளாதாரத் தடைகள் மசோதா : முன்மொழியப்பட்ட 100% வரி மற்றும் அது இந்தியாவிற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து... -சுகல்ப் ஷர்மா

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பான மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பு, ரஷ்ய எரிபொருளை (எண்ணெய் மற்றும் எரிவாயு) பெருமளவில் வாங்கும் நாடுகளின்மீது கூடுதல் வரிகளை விதிக்கப் பரிந்துரைக்கிறது. இது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் வாஷிங்டனுடன் நடைபெற்றுவரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளது. 


எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யாவின் வருவாயைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham) ஆதரித்த மசோதா, தற்போது ஒரு புதிய வடிவத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் கிரஹாம் திடீரென காலமானதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த இரு கட்சிகளையும் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்) சார்ந்த செனட்டர்கள் குழு ஒன்று, ரஷ்யா மீதான தடைகள் மசோதாவின் திருத்தப்பட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய கச்சா எண்ணெயின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையான இந்தியா உட்பட, ரஷ்யாவின் எரிபொருளை அதிக அளவில் வாங்கும் நாடுகளின்மீது கடுமையான வரிகளை விதிப்பதற்கான அம்சங்கள் இந்தத் திருத்தப்பட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன.


இந்த அசல் மசோதா ஒரு வருடத்திற்கும் மேலாக ஆரம்பக் கட்டங்களைத் தாண்டத் தவறியதைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதா அதன் தற்போதைய வடிவத்தில் சட்டமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையளிக்கும் ஒரு காரணமாக அமையும்.


குறிப்பாக, இந்தப் புதிய மசோதா அசல் மசோதாவின் நீர்த்துப்போன பதிப்பாகும். மேலும், இது வாஷிங்டனிடமிருந்து சில மாற்று வழிகளுக்கும் சலுகைகளுக்கும் இடமளிக்கிறது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியா அவற்றுக்காக அழுத்தம் கொடுக்கும் எனத் தொழில்துறை வல்லுநர்களும் ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

புதிய மசோதாவின் பரிந்துரைகள் 


நிலுவையில் இருந்த அசல் மசோதாவில், ரஷ்ய எரிபொருளை வாங்கும் அனைத்து நாடுகளின் மீதும் 500% என்ற அளவில் பொதுவான வரியை விதிக்கும் முன்மொழிவுக்கு மாறாக, இந்த மசோதாவின் புதிய பதிப்பு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் முதல் ஐந்து பெரிய நாடுகளின்மீது 100% வரை வரிகளை விதிக்கப் பரிந்துரைக்கிறது.

முன்மொழியப்பட்ட இந்த வரிக்குறைப்பு எழுத்துப்பூர்வமாக அர்த்தமுள்ளதாகத் தோன்றினாலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ள இந்தியாவிற்கு இந்த உச்சவரம்பு இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. முக்கியமாக, இந்தியாவின் பார்வையில், இந்த புதிய மசோதா அதன் விதிகளைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்குகிறது.


மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி விநியோகப் பற்றாக்குறை சூழ்நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அர்த்தமுள்ள வகையில் குறைப்பது என்பது ஒரு சாத்தியமான வழி அல்ல. மேற்கு ஆசியாவிலிருந்து எரிசக்தி வரத்து தடைபட்டுள்ள நிலையில், உலகச் சந்தையிலிருந்து மில்லியன் கணக்கான பீப்பாய் ரஷ்ய எண்ணெயை அகற்றுவது வாஷிங்டனுக்குக் கூட விவேகமானதாக இருக்காது. அது ஏற்கனவே கவலைக்குரியதாக உள்ள விநியோகச் சூழலை மேலும் மோசமாக்குவதுடன், நிச்சயமாக எண்ணெய் விலையைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தும். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இதை நிச்சயமாக விரும்பமாட்டாது.


இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என சில அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் இதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், தற்போது நிலவும் எரிசக்தி சந்தை நிலவரங்களும் மேற்கு ஆசிய மோதலும் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், இந்தியா தனது எரிசக்தி தொடர்பான கவலைகளை வாஷிங்டனிடம் எடுத்துரைக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். கடந்த ஆண்டு இந்த மசோதா முதன்முதலில் முன்மொழியப்பட்டபோதும் இந்தியா அவ்வாறே செய்தது.


இந்தியாவின் சவால்


"இந்தியா நிச்சயமாக இதற்கான விலக்கு கோரி வலியுறுத்தும். மேலும், இந்தியாவுக்கு நிலைமை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஒரு நட்புரீதியான சலுகையாக இதற்கு ஒப்புக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும்," என்று அபுதாபியைச் சேர்ந்த எரிசக்தி ஆய்வாளர் நடாலியா கடோனா 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிடம் கூறினார்.


இந்த மசோதா இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்ட பின்னடைவுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டுள்ள வாஷிங்டன் (அமெரிக்கா) மற்றும் புது தில்லி (இந்தியா) ஆகிய இரு தரப்பினருக்கும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். முன்மொழியப்பட்ட சட்டத்தின்கீழ் வரிவிதிப்புகளை (tariffs), ஒரு பேராயுதமாக வாஷிங்டன் பயன்படுத்தக்கூடும் என்பதையும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை இந்தியாவின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். ஏனெனில், எண்ணெய் மீது தடைகளுக்கு உட்படாத வரையில், யார் சிறந்த விலையை வழங்கினாலும் அதனிடமிருந்து எண்ணெயை வாங்குவதற்குத் தனக்குச் சுதந்திரம் உண்டு என்று இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.


"ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகள்மீது அமெரிக்கா விதிக்க முன்மொழிந்துள்ள வரிகளை, இன்றைய மிகவும் நிலையற்ற உலகளாவிய எண்ணெய் சந்தையின் பின்னணியில் பார்க்க வேண்டும். இந்தியாவின் கண்ணோட்டத்தில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, ரஷ்ய கச்சா எண்ணெய் நாட்டின் மிக வலிமையான எரிசக்திப் பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் அதிக சுத்திகரிப்பு இயக்க விகிதங்களைப் பராமரிக்கவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும், மேலும் பல ஆசிய சுத்திகரிப்பு அமைப்புகள் சந்தித்த இடையூறுகளைத் தவிர்க்கவும் உதவியுள்ளது," என்று கச்சாப் பொருள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான 'கேப்லர்' (Kpler) -ன் மாதிரி உருவாக்கம் மற்றும் சுத்திகரிப்பு மேலாளர் சுமித் ரிடோலியா கூறினார்.






அதே அளவு, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதாரரீதியாக ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு இணையாகச் செயல்படக்கூடிய, வேறு எந்த மாற்று விநியோகர்களும் இல்லை. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெயே மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விநியோக ஆதாரமாக உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, இவ்வளவு பெரிய அளவிலான ரஷ்ய எண்ணெய் சந்தையிலிருந்து விரைவில் வெளியேறிவிடும் என்று கருத இடமில்லை என்று ரிடோலியா கூறினார்.


மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் வெகுவாகக் குறைவதால், ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவின் மிக வலிமையான எரிசக்திப் பாதுகாப்பு அரணாக உருவெடுத்தது. கேப்ளர் (Kpler) தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்களாக (bpd) உயர்ந்தது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேலாகும். மேலும் மதிப்பீடுகளின்படி, ஜூலை மாத இறக்குமதி அளவை சமன் செய்துள்ளதுடன், ஜூன் மாத அளவுகளுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கலாம்.


இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 88%-க்கும் மேலானவற்றை இறக்குமதியையே சார்ந்துள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யாவே முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்ய கச்சா எண்ணெயைப் புறக்கணித்த நிலையில், ரஷ்யா தனது எண்ணெயை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியது. இந்திய சுத்திகரிப்பாளர்கள் இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் விளைவாக, முன்னர் இந்தியாவிற்கு ஒரு சிறிய அளவிலான எண்ணெய் விநியோகராக இருந்த ரஷ்யா, பாரம்பரிய மேற்கு ஆசிய விநியோகர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக உருவெடுத்தது.




மேற்கு ஆசியப் போர் தொடங்குவதற்கு முந்தைய மாதங்களில், ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) மீது அமெரிக்கா தடைகளை விதித்ததாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது. இந்தியா மீதான தனது 25% கூடுதல் தண்டனை வரியை ரத்து செய்வதற்கு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பை அமெரிக்கா ஒரு முன்நிபந்தனையாக வைத்தது. ஆனால், ஹார்முஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டதால் மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் குறைந்தபோது, ​​ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான மாற்று ஆதாரமாக அமைந்தது. மேலும், அதன் அளவு வரலாற்று உச்சத்தை எட்டியது.


திருத்தப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதாவின் சாத்தியக்கூறு


தற்போதுள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், முன்மொழியப்பட்ட பொருளாதாரத் தடை மசோதா அதன் தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்படுமா என்பதுதான். அப்படியானால் அது எப்போது சட்டமாக மாறும் என்பதும் மற்றொரு கேள்வியாக உள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை நெருக்கடியால் ஏற்பட்ட சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் நெருக்கடியின் பின்னணியில், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து எரிசக்தி சந்தை வல்லுநர்கள் ஐயத்துடன் உள்ளனர். மேலும், இந்த மசோதா சட்டமானாலும் கூட, அதிபரின் விலக்கு அளிக்கும் அதிகாரம் (presidential waiver) மற்றும் மசோதாவில் உள்ள பிற மாற்றங்கள், அமெரிக்க அரசாங்கம் விதிவிலக்குகளை அளிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையை மிகவும் நடைமுறைக்கு ஏற்றவாறு கையாள்வதற்கும் போதுமான வாய்ப்பை வழங்குகின்றன.


"இந்த மசோதா பொருளாதாரரீதியாக உண்மையானதா என்பதே கேள்வி. இந்த மசோதா நிறைவேறும் என்றோ அல்லது அதன் தற்போதைய வடிவத்தில் நீடிக்கும் என்றோ நான் நினைக்கவில்லை. முதலாவதாக, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரான 500% வரிவிதிக்கும் அச்சுறுத்தலிலிருந்து, மிகப்பெரிய ஐந்து நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகபட்சம் 100% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விலக்குகள் மற்றும் அமெரிக்க அதிபரின் தள்ளுபடிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அரசியல் முழக்கம் ஏற்கனவே பொருளாதார யதார்த்தத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்பதை இது காட்டுகிறது," என்று கடோனா கூறினார்.


"இரண்டாவதாக, இந்த மசோதா கொண்டுவரப்படும் நேரம் மிகவும் மோசமானது. வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க முயற்சிப்பது மிகுந்த ஆபத்தானது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஏற்கனவே ஒரு பேரலுக்கு 85 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமாகிறது. அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், ஒரு நாளைக்கு பல மில்லியன் பேரல்கள் ரஷ்ய விநியோகத்தை அகற்றுவது அல்லது அச்சுறுத்துவது மற்றொரு விலை உயர்வுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.


ரிட்டோலியா இதை ஆமோதித்து, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைக்கும் வகையில் 100% இரண்டாம் நிலை வரிவிதிப்புகள் அமல்படுத்தப்பட்டால், சந்தை முதலில் ஒரு எளிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். அதற்கான மாற்று எண்ணெய் எங்கிருந்து வரும்? உபரி உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாலும், ஹார்முஸ் நீரிணை அபாயங்கள் இன்னும் அதிகமாக இருப்பதாலும், மாற்று விநியோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வைத் தூண்டாமல், ரஷ்யாவின் அளவுகளைப் பெருமளவில் ஈடுசெய்வது மிகவும் சவாலாக இருக்கும் என்று கூறினார்.


முன்னாள் வர்த்தக அதிகாரியும், ஜி.டி.ஆர்.ஐ (GTRI) சிந்தனைக் குழுவின் தலைவருமான அஜய் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, அசல் மசோதா 15 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க செனட்டில் எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் இருந்ததால், இந்தியா கவலைப்பட அதிகக் காரணம் இல்லை. இது, இத்தகைய பரந்த சுங்கவரி அதிகாரங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவு குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மசோதாவும் இதே போன்றதொரு நிலையைச் சந்திக்கக்கூடும் என்று அவர் ஒரு குறிப்பில் கூறினார். மேலும், பரஸ்பர சுங்கவரி முறை மற்றும் பிரிவு 122 சுங்கவரிகள் ஆகிய இரண்டையும் ரத்து செய்த சமீபத்திய அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், நிறுவப்பட்ட வர்த்தகச் சட்டங்களுக்கு வெளியே சுங்கவரிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சட்ட வரம்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதால், அதன் வெற்றி வாய்ப்புகள் மேலும் பலவீனமடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


“இந்தியா தனது எரிசக்தி கொள்கையைத் தொடர்ந்து தேசிய நலன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ரஷ்ய எண்ணெய், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நிலையான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கவும் உதவியுள்ளது. இந்த மசோதா சட்டமாவதற்கும், அமல்படுத்தப்படுவதற்கும் உள்ள வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. அப்படியே சட்டமானாலும், வெளிப்புற அரசியல் அழுத்தம் தனது எரிசக்தி கொள்கையைத் தீர்மானிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, சீனாவைப் போலவே இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.


Original Link: US Russia sanctions bill: The proposed 100% tariff and what it could mean for India.

Share: