செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு டிஜிட்டல் வடிவ 'கிழக்கிந்திய நிறுவனம்'. இதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தியா சாதுரியமான மாற்று வழிமுறைகளை (Jugaad) பயன்படுத்த வேண்டும். -நிஷாந்த் சஹ்தேவ்

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மாதிரிகள் "கணிப்பு நடுவர் வணிகம்" (Predictive Arbitrage) மூலம் 150 பில்லியன் டாலர்களை உறிஞ்சி வரும் வேளையில், இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான வழி அதன் பன்முகத்தன்மை மற்றும் ஒழுங்கற்றத் தன்மையையே பலமாக மாற்றுவதில்தான் உள்ளது. மேலும், கணினி வழிமுறை (Algorithm) சார்ந்த புதிய வடிவிலான ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு வகையான மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தை (Neural Satyagraha) இந்தியா கடைப்பிடிக்க வேண்டும்.


ஜேம்ஸ் சி. ஸ்காட் என்பவர் 1998-ஆம் ஆண்டில் எழுதிய ‘Seeing Like a State’ என்ற தனது புத்தகத்தில், எந்தவொரு பெரிய அதிகார அமைப்பும் செய்யும் முதல் வேலை, தனது மக்களைப் பற்றிய விவரங்களை எளிதில் படிக்கக்கூடியதாக, அதாவது புரிந்துகொள்ளவும் கண்காணிக்கவும் எளிதானதாக மாற்றுவதுதான் என்று வாதிடுகிறார். முற்கால நவீன அரசாங்கங்களுக்கு இது, மக்களுக்குப் குடும்பப் பெயர்களை (Surnames) உருவாக்குவது, எடைகள் மற்றும் அளவீடுகளைத் தரப்படுத்துவது, மற்றும் வரைபடங்களை வரைவது போன்றவற்றை அர்த்தப்படுத்தியது. மனித வாழ்க்கையின் சிக்கலான மற்றும் குழப்பமான யதார்த்தத்தை காகிதத்தில் படிக்கக்கூடிய ஒன்றாக மாற்றுவதன் மூலம், அரசாங்கங்களால் மக்களுக்கு வரிவிதிக்கவும், இராணுவத்தில் சேர்க்கவும், அவர்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. இவ்வாறு மக்களைப் பற்றி எளிதில் துல்லியமாகப் புரிந்துகொள்வதுதான், அவர்களைத் தங்கள் விருப்பப்படி கையாளுவதற்கான முதல் படியாகும் என்று ஸ்காட் கூறினார்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) இந்தியாவை வெறும் ஆயுதங்களை மட்டுமே கொண்டு கைப்பற்றவில்லை. அதற்காக அவர்கள் ஆவணங்களையும் தரவுகளையும் பயன்படுத்தினர். இந்தியாவின் நிலப்பரப்பை வரைபடமாக்குவதிலும், பயிர்களைப் பதிவு செய்வதிலும், சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்வதிலும் அவர்கள் பல ஆண்டுகளைச் செலவிட்டனர். இறுதியாக, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பன்முகத்தன்மையும் லண்டன் அலுவலகங்களுக்குப் புரியும் வகையிலான எளிய தகவல்களாக மாற்றப்பட்டது. இந்தியாவை அவர்கள் முழுமையாக புரிந்துகொண்ட உடனே, இந்தியா அவர்களின் அடிமை நாடாக மாற்றப்பட்டது.


இன்று, அதே கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு டிஜிட்டல் பதிப்பு உருவாகி வருகிறது, ஆனால் இந்த முறை ஆவணங்கள் கணினி குறியீடுகளால் (Computer code) எழுதப்படுகின்றன. தற்போதைய 2026-ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் ஒரு சக்திவாய்ந்த கருத்தை முன்னிறுத்துகிறது: அதுதான் முழுமையான வெளிப்படைத்தன்மை. ஒரு நாடு அதிகப்படியான தரவுகள், டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் குடிமக்களின் விவரப்பட்டியல்கள் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மாறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வெற்றியடையும் என்று நாடுகளுக்குக் கூறப்படுகிறது. இந்தியா இந்தத் திட்டத்தை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டுள்ளது. தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure) மூலமாக, உலகின் மிக வேகமான மற்றும் வெளிப்படையான தரவு அமைப்புகளில் ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது.


ஆனால், சிலிக்கான் வேலி (Silicon Valley) மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் (World Economic Forum Annual Meeting) உள்ள பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு கசப்பான உண்மை இங்குள்ளது: இந்த செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில், வெளிப்படைத்தன்மை என்பது இனி முன்னேற்றத்திற்கான வழி அல்ல என்றும் மாறாக, அது சுரண்டலுக்கான ஒரு கருவியாக மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு நாடு முற்றிலும் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக மாறும்போது, அது முற்றிலும் கணிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. 2026-ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார சூழலில், நீங்கள் எளிதாகக் கணிக்கக்கூடிய ஒருவராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டீர்கள் என்றுதான் பொருள் என்கின்றனர்.

கணினி வழிமுறைகளின் முன்னிலை வர்த்தகக் காலம்.


இப்போது நாம் "முன்கூட்டியே கணித்து லாபம் ஈட்டும் புதிய முறை" (Predictive Arbitrage) என்ற ஒரு புதிய போக்கின் எழுச்சியைப் பார்த்து வருகிறோம். நமது தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் (Ease of Doing Business) தரவரிசைகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டு பெரும் முதலீட்டு நிறுவனங்களும் (Hedge funds) தொழில்நுட்ப நிறுவனங்களும் வைத்துள்ள "Correlation engines" எனப்படும் மாபெரும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள், இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் இந்தியாவின் நகர்வுகளைக் கணிக்கவும் இந்திய நாட்டின் சொந்தத் தரவுகளையே பயன்படுத்தி வருகின்றன.


ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டின் உலகளாவிய தரவு ஓட்ட அறிக்கையின்படி (Global Data Flow Report), வெளிநாட்டு நிறுவனங்களின் இத்தகைய முன்கூட்டியே கணிக்கும் மாதிரிகளால் இந்தியப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 12.5 லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்திப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் 'பெருந்தரவு' (Big data) பற்றியது மட்டுமல்ல. இது ஒரு வகையான "கணினி நிரல் வழி ஆதிக்கம் அல்லது டிஜிட்டல் ஆக்கிரமிப்பு" (Algorithmic colonialism) ஆகும். ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையையும் (UPI), தளவாடப் போக்குவரத்தின் (Logistics) ஒவ்வொரு நகர்வையும் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள திறன்பேசிகளில் தேடப்படும் ஒவ்வொரு அவசரத் தேடலையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இந்த செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இப்போது உள்நாட்டு கொள்கை வகுப்பாளர்களைவிடவும் இந்தியச் சந்தையின் மாற்றங்களை மிகச் சிறப்பாகக் கணிக்க முடிகிறது.


இதன் உண்மையான அர்த்தம் என்னவென்று யோசித்துப் பாருங்கள். மகாராஷ்டிராவில் லாரிகள் புறப்படுவதற்கு முன்பாகவே அங்குள்ள உள்ளூர் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல்களை இந்த அமைப்புகளால் கண்டறிய முடியும். கான்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இளைஞர் குழு, விலை உயர்வுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதை அவர்களின் முதல் சமூக ஊடகப் பதிவு வெளிவருவதற்கு முன்பே இவைகளால் கணிக்க முடியும். நம்முடைய அடுத்தடுத்த நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கணிப்பதன் மூலம், உலகளாவிய முதலீட்டாளர்கள் நமது பொருளாதாரத்திற்கு முன்னதாகவே செயல்பட்டு, அந்த வர்த்தக மதிப்பு இந்தியாவை வந்தடைவதற்கு முன்பே லாபத்தைச் சுருட்டிவிடுகின்றனர். உங்களை மற்றவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியும்போது, நீங்கள் உங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தும் திறனை இழக்கிறீர்கள். எதிர்பாார்ப்பு எல்லைகளை அடுத்த தரப்பின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) ஏற்கனவே லட்சக்கணக்கான முறை கணினி வழியே சோதித்துப் பார்த்திருக்கும்போது, சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதோ அல்லது நமது நாட்டின் பண மதிப்பை பாதுகாப்பதோ கடினமாகிவிடுகிறது.


மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் எனும் கோட்பாடு


இந்தியா வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலர் (சுமார் ₹2,500 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை அடைய வேண்டுமானால், அது மற்ற நாடுகளால் எளிதில் கணிக்கக்கூடிய ஒரு அடிபணிந்த நாடாகத் தொடர முடியாது. அதற்குப் பதிலாக, தற்போதைய இந்த அறிவாற்றல் யுகத்திற்கு ஏற்ப மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் (Neural Satyagraha) எனப்படும் ஒரு துணிச்சலான புதிய தற்காப்பு அணுகுமுறையை இந்தியா கையாள்வது அவசியமாகும்.


1920-களில், மகாத்மா காந்தி அவர்கள் சுரண்டல் நிறைந்த ஒரு சட்ட அமைப்புக்கு ஒத்துழைக்க மறுப்பதற்காக 'சத்யாகிரகம்' (உண்மைக்கான போராட்டம்) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இப்போது 2026-ஆம் ஆண்டில், நம்மைச் சுரண்டும் மற்றும் நம் எண்ணங்களைக் கணிக்கும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் நமக்குத் தேவைப்படுகிறது. இது தரவுகளை மறைப்பதோ அல்லது டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி ஓடுவதோ அல்ல. மாறாக, செயற்கையாகத் திட்டமிட்டு ஒரு வியூகரீதியான பகுத்தறிவற்றத் தன்மையை, அதாவது கணிக்க முடியாத செயல்பாடுகளை உருவாக்குவதாகும்.



தொடர் கண்காணிப்பு நிறைந்த இந்த நவீன யுகத்தில், நமது வலுவான பொருளாதாரப் பாதுகாப்பு என்பது கண்டிப்பான ஒழுங்குமுறையில் இல்லை. மாறாக, கணிக்க முடியாத தன்மையில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையே இந்தியா காலம் காலமாக 'சாதுரியமான மாற்று வழிமுறை' (Jugaad) என்று அழைத்து வருகிறது. இந்தியாவின் இத்தகைய வளைந்து கொடுக்கும் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் முறையை மேலை நாடுகள் பலமுறை விமர்சித்துள்ளன. ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில், 'சாதுரியமான மாற்று வழிமுறைகள்' என்பது இனி ஒரு பலவீனம் அல்ல; அதுவே நமது மிகப்பெரிய பலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டுப் பாதையில், மேற்கத்திய பாணியில் பயிற்சி அளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இதை எளிதில் நகலெடுக்க முடியாது. ஏனெனில், இது எந்தவொரு நிலையான தர்க்க முறையையும் பின்பற்றுவதில்லை. நமது இறையாண்மையைப் பாதுகாக்க, நாம் "கணினி வழிமுறைகளால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய" நிலையிலிருந்து "கணினி வழிமுறைகளால் கணிக்க முடியாத" நிலைக்கு மாற வேண்டும்.


உத்திசார் திட்டவரைவு: தேசிய அளவிலான தரவுக் குழப்பங்களை ஏற்படுத்துதல் 


21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாடு எவ்வாறு மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தை  (Neural Satyagraha) கடைப்பிடிக்க முடியும்? அதற்குத் தேசிய தொழில்நுட்பக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் தேவை. அதாவது, அனைத்துத் தரவுகளையும் துல்லியமாகத் திரட்டும் "முழுமையான செயல்திறன்" என்ற இலக்கிலிருந்து மாறி, பிற நாடுகள் எளிதில் கணிக்க முடியாத "உத்திசார் சிக்கல்தன்மை" என்ற இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.


முதலாவதாக, ஒரு 'தேசிய இரைச்சல் நெறிமுறை' (National Noise Protocol) உருவாக்கப்பட வேண்டும். இந்தியா தனது சொந்த செயற்கை நுண்ணறிவுத் தொகுப்புகளைப் — அதாவது, இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின்கீழ் (IndiaAI Mission) உள்ள 60,000 அதிவேகக் கணினிச் செயலிகள் (GPUs) மற்றும் 2025ஆம் ஆண்டின் சாந்தி சட்டம் (SHANTI Act) மூலம் வழங்கப்படும் மின்சார மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை — குடிமக்களின் நடத்தையை ஆராய்வதற்கு மட்டுமல்லாமல், அவர்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். உலகளாவிய தரவு அமைப்புகளில், செயற்கையான ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த, தர்க்கமற்ற செயல்பாடுகளை வேண்டுமென்றே "குழப்பமான தரவுகளாக" (Noise) இந்தியா சேர்க்க வேண்டும். இது உள்நாட்டுச் சந்தைகளின் உண்மையான நிலையை வெளிநாட்டினருக்குக் காட்டாமல் மறைக்கும். உலகப் பொருளாதாரத்தில் இந்திய நுகர்வோரை மட்டும் எவராலும் கணிக்க முடியாத ஒரு காரணியாக மாற்றுவதே இதனுடைய நோக்கமாகும்.


இரண்டாவதாக, இந்தியா 'தரவுக் குழப்பத்தை ஒரு சேவையாக' (Obfuscation as a service) வழங்க வேண்டும். நாட்டின் டிஜிட்டல் அமைப்புகளில் "தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் இரைச்சல் நெறிமுறை" சேர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தைத் தரவுகளைப் பெறும்போது, அவர்களுக்குச் சாதாரண வணிக நோக்கங்களுக்குப் பயன்படும் பொதுவான தகவல்கள் மட்டுமே கிடைக்க வேண்டும். ஆனால், இந்திய நுகர்வோரின் அடுத்தகட்டச் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அவர்களைச் சுரண்டுவதற்கு அந்தத் தரவுகள் பயன்படாதவாறு இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, வர்த்தகத்தில் 'தரவுகளின் சீரற்ற தன்மையைக் கணக்கிடும் முறையை' (Entropy Standard) இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், "பரஸ்பர ரகசியம் காத்தல்" என்ற கொள்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும். ஒரு தரவின் மதிப்பு, அது எவ்வளவு பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது அல்ல; மாறாக, வெளிநாட்டினருக்கு அதன் பயன்பாடு எவ்வளவு விரைவாகப் பயனற்றுப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.


பயனுள்ள மோதலின் முரண்பாடு 


ஒரு சந்தையானது எவ்வளவு திறம்பட மற்றும் வேகமாகக் செயல்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக அதன் பொருளாதாரம் வளரும் என்று பொதுவான பொருளாதாரக் கோட்பாடு கூறுகிறது. ஆனால், இந்தத் திறனின் நன்மைகள் அந்தச் சந்தையில் உள்ள மக்களுக்கே சென்றடையும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆனால் 2026-ஆம் ஆண்டில், இந்தியாவின் டிஜிட்டல் சந்தையின் அதிவேகத் திறன் மற்றும் துல்லியம், போபாலில் உள்ள ஒரு சிறு வணிகருக்குப் பலன் தராமல், வெளிநாடுகளுக்குத்தான் அதிக லாபத்தைத் தருகிறது.


இந்தச் சூழலில், நாம் ‘Neural Satyagraha’ என்ற அகிம்சைப் போராட்ட முறையைக் கையாள்வதன் மூலம், "உற்பத்தித்திறன் சார்ந்த தடங்கல்களை" மீண்டும் கொண்டுவர முடியும். 2026-ஆம் ஆண்டு முதலாம் காலாண்டின் ‘NASSCOM-Zinnov’ அறிக்கை ஒரு சுவாரஸ்யமான போக்கைக் காட்டுகிறது. பெங்களூரு போன்ற அதிநவீன, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பெருநகரங்களில் ஆரம்பக்கட்ட வேலைகளுக்கான ஊதியம் தேக்கமடைந்துள்ள அதேவேளையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வேலைகளுக்கான தேவை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளால் இந்த குறைந்த செயல்திறன் கொண்ட உள்ளூர் சந்தைகளைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில், இந்தச் சந்தைகளை இயக்க உள்ளூர் அறிவும், மக்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளும் அறிவும் தேவைப்படுகின்றன.


இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் ஓரளவுக்கு எதிர்பாராத சில மாற்றங்களை வைத்திருப்பதன் மூலம், உலகளாவிய மூலதனத்தை இந்தியாவில் நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்யமுடியும். அதோடு, உலக முதலீட்டாளர்கள் நம்முடன் இன்னும் ஆழமான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நமது பொருளாதாரத்தை ஒரு அதிவேக சூதாட்ட இயந்திரம் (Slot machine) போலத் தற்காலிக லாபத்திற்காகப் பயன்படுத்திவிட்டு உடனே வெளியேறும் இடமாகப் பார்ப்பதைத் தடுக்கவும் உதவும் என்கின்றனர்.


வாக்குச்சீட்டுகளுக்கு அப்பால்: பிரதிநிதிகளின் குழு


மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான 2026 தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. ஆனால், அவர்கள் 20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான போரையே இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், வெறும் மக்கள்தொகையை மட்டும் கணக்கிடுவது இனி போதுமானதாக இருக்காது. ஒரு பிராந்தியத்தின் உண்மையான பலம் என்பது அதன் படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் திறனில்தான் உள்ளது.

ஒரு மாவட்டத்தின் முக்கியத்துவம் என்பது அங்கு எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையக்கூடாது. மாறாக, புதிய மற்றும் எதிர்பாராத கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அதன் திறனைப் பொறுத்தே அமைய வேண்டும். நமக்கு ஒரு புதிய கூட்டாட்சி முறை தேவைப்படுகிறது. அதை நாம் "பிரதிநிதிகளின் குழு" (Council of Nodes) எனலாம். இதில், கணினி வழிமுறைகளின் சுரண்டல்களின் (Algorithmic Exploitation) பிடியில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் மாநிலங்களுக்கு உரிய வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திர ஆண்டான 2047-ஆம் ஆண்டுக்குள், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டிருப்பதில் இல்லை. மாறாக, கணிக்க முடியாத தனித்துவமான திறமைகளைக் கொண்டிருப்பதில்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இனி ஆங்கிலம் தெரிந்திருப்பதால் மட்டுமே பெரிய பலன் கிடைத்துவிடாது. தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன் இப்போது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் எது முக்கியமாக இருக்கும் என்றால், அது "நுட்பமான அறிவுத்திறன்" தான். இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பயணம் என்பது, இந்த நுட்பமான அறிவுத்திறன் சார்ந்த பொருளாதாரமாக மாறுவதில்தான் உள்ளது. அதாவது, நிலையான தர்க்க முறைகளைப் பின்பற்றாத சிக்கலானப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வலிமை கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


2026-ஆம் ஆண்டில் இந்தியா எதிர்கொள்ளும் உண்மையான சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ ஒரு வெளிநாட்டு ராணுவத்திற்கு எதிராவோ அல்லது மாற்று அரசியல் கொள்கைக்கு எதிராவோ நடப்பது அல்ல. அது இந்தியாவைப் பற்றிய துல்லியமான கணிப்புகளுக்கு எதிராக நடப்பதாகும். இந்த புதிய சுதந்திரப் போராட்டத்தை இந்தியா மனித மூளை மற்றும் சிந்தனைகளைத் தரவுகள் மூலம் கட்டுப்படுத்துவதற்கு எதிரான அகிம்சைப் போராட்டம் (Neural Satyagraha) எனலாம். அதாவது, ஒரு வெளிப்புறக் கணினி அமைப்பால் நம்மை வகைப்படுத்தப்படுவதற்கும், அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடங்குவதற்கும் மறுப்பதே இந்த அகிம்சைப் போராட்டம் ஆகும்.


நிஷாந்த் சஹ்தேவ், அமெரிக்காவில் உள்ள சாப்பல் ஹில்லில் அமைந்துள்ள ‘University of North Carolina’ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு இயற்பியலாளர் ஆவார்.

Original link:

AI is a digital East India Company. India needs to use ‘juggad’ to protect itself.


Share: