கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரவு கசிவு (Data breach) ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, அணுசக்தி அமைப்புகள் அல்லது அணுசக்திப் பாதுகாப்பு அமைப்புகள் எதனுடனும் இந்தத் தரவுக் கசிவு தொடர்புடையது அல்ல என்று இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
• அணுசக்தி கழகம் (NPCIL) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தரவுக் கசிவு அணுமின் நிலையத்தின் வழக்கமான பொதுச் சேவை வசதிகள் (Balance of Plant (BoP)) தொடர்பான தரவுகளை மட்டுமே பாதித்துள்ளது என்றும், இதற்கான ஒப்பந்தம் 2018-ஆம் ஆண்டில் ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
• தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவப்பட்ட ‘VVER’ (Vodo-Vodo Energetichesky Reactor) வடிவமைப்பைக் கொண்ட ஆறு அழுத்தப்பட்ட நீர் உலைகளை உள்ளடக்கியது. இதில் முதல் இரண்டு அலகுகள் (கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 1 மற்றும் 2) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் 3 மற்றும் 4 ஆகிய அலகுகள் இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன, அவை 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. மீதமுள்ள இரண்டு அலகுகள் பல்வேறு நிலைகளில் முன்னேறி வருகின்றன.
• தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தரவுக் கசிவு அலகுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். பொதுச் சேவை வசதிகளுக்கான (BoP) வடிவமைப்பு, கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம், 2018-ஆம் ஆண்டில் பொது ஏலச் செயல்முறை மூலமாக ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக இந்திய அணுசக்தி கழகம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், பொதுச் சேவை வசதிகளின் வடிவமைப்பு, கொள்முதல்/வழங்கல், கட்டுமானம் மற்றும் அவற்றை இயக்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
• பொது ஏல செயல்முறையின் ஒரு பகுதியாக, ஏலம் கேட்பவர்களுக்குத் தேவையான மாதிரி வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளைத் தான் வழங்கியதாக இந்திய அனுசக்திக் கழகம் (NPCIL) தெரிவித்துள்ளது. "இந்த விவரங்கள் மற்றும் திட்டத்தின் தேவைகளின் அடிப்படையில், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரான ‘M/s Reliance Infrastructure Ltd’ நிறுவனம், சம்பந்தப்பட்ட அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து விரிவான பொறியியல் வரைபடங்களைத் தயாரித்தது. ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனம் முன்மொழிந்த வடிவமைப்புகள், தொழில்நுட்பக் குறிப்புகளுக்கு ஏற்ப இருந்ததால், அவற்றை ஆய்வுசெய்த பிறகு இந்திய அணுசக்தி கழகம் ஏற்றுக்கொண்டது" என்று கூறியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• ‘World Leaks’ என்ற முடக்கச் செயலி (Ransomware) கும்பல், கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பான 19,000-க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கொண்ட 14.3 ஜிபி (GB) அளவிலான ஒரு பிரம்மாண்ட தரவுத் தொகுப்பை இணையத்தின் டார்க் வெப் (Dark Web) பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ‘Yotta’ என்ற மூன்றாம் தரப்பு தரவு மைய நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சர்வரில் (Server) இந்தத் தரவு திருட்டு நடந்துள்ளது. இந்த சர்வர் ‘Reliance Infrastructure’ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான இந்த நிறுவனத்திற்குத்தான், கூடங்குளத்தில் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் 3 மற்றும் 4 ஆகிய அணுஉலை பிரிவுகளுக்கான வழக்கமான கட்டுமான வசதிகளை அமைப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
• இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இந்திய அணுசக்தி கழக (NPCIL) அதிகாரிகள் சாதாரண நிகழ்வாகக் கூறி மறுத்துள்ளனர். கசிந்த தரவுகள் அனைத்தும் அணுமின் நிலையத்தின் வழக்கமான இயக்கம் தொடர்பான பொதுச் சேவை வசதிகளுக்கான (BoP) தொகுப்பைச் சேர்ந்தவை மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான உள்நாட்டு வலையமைப்புகள் இணையத் தொடர்பின்றி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாகவும், இதனால் அவை பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் இணையப் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.