இந்தியாவிடம் இப்போது ஆராய்ச்சித் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான நிதியும் திறமையும் நல்வாய்ப்பும் உள்ளன. -சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன்


அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை ஹார்முஸ் (Hormuz) விவகாரம் நமக்குக் காட்டிக்கொடுத்தது. தொழில்நுட்பத் துறையில் உண்மையான சவால்களைத் தாங்கி நிற்கும் திறன், நீண்டகால முக்கியத்துவத்தையும் பெற வேண்டுமென்றால், நாட்டின் உள்நாட்டுத் திறன்களை அடிமட்டத்திலிருந்து வலுவாகக் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.


இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மூன்று மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்த மிக முக்கியமான காரணியாக இருந்தது, எண்ணெய் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையே இருந்த தூரம்தான். மார்ச் மாதத்தில் இந்த நீரிணை மூடப்பட்டபோது, தனக்குத் தேவையான பெரும்பாலான எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, ஒரு மிகப்பெரிய விநியோகத் தடையை எதிர்கொண்டது. இதனால் எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட வேண்டியிருந்தது. இது ரஷ்ய கச்சா எண்ணெயின் பயணக் காலத்தை நீட்டித்து, அதன் விலையையும் மிகவும் அதிகமாக்கியது. இது ஒரு முக்கியமான பாடம் என்றாலும், இதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. எண்ணெய் விநியோகத்தை எப்போதாவது ஒரு வழியில் மாற்றி அமைத்துவிட முடியும். ஆனால், முக்கியமான தொழில்நுட்பங்களில் சுயசார்பு அடைய இலக்கு நிர்ணயித்துள்ள ஒரு நாட்டிற்கு, மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கும் அத்தகைய நெகிழ்வுத்தன்மை இருக்காது.


இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், விநியோகத் தொடர்கள் வெறும் பலவீனமானவை என்பது மட்டுமல்ல, அவை தற்போதைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் கொள்கைகளைச் செயல்படுத்தும் கருவிகளாகவே மாறிவிட்டன. ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் என்பது பிற நாட்டை வழிக்குக் கொண்டுவரும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. விநியோகப் பாதையில் ஏற்படும் ஒரு தடை அல்லது நெருக்கடி ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடம் சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு தொழில்நுட்பம், அடுத்த வருடமே மற்றவர்களுக்குக் கிடைக்காமல் மறுக்கப்படும் ஒரு பொருளாக மாறிவிடுகிறது. சீனா தனது மொத்த உற்பத்தியில் 2.43 விழுக்காட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடுகிறது. இதில் முக்கால்வாசிப் பணத்தை அதன் சொந்த நிறுவனங்களே நிதியுதவியாக வழங்குகின்றன. இந்தச் செலவினத்தின் பின்னணியில் அதற்கு ஒரே ஒரு லட்சியம் மட்டும்தான் உள்ளது: மற்றவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்வதை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தன்கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை உலகம் சார்ந்திருக்கும்படிச் செய்வதே ஆகும்.


இந்தியா தன்னைத்தானே மதிப்பீடு செய்து கொண்டுள்ளதால், தனது பலங்கள் மற்றும் பலவீனங்களை நன்றாகவே அறிந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.64 விழுக்காட்டை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காகச் செலவிட்டது. ஆனால், உலகளாவிய சராசரியோ இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. மேலும், சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தச் செலவினத்தில் 75 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வரும் நிலையில், இந்தியாவில் இந்தச் செலவில் சுமார் 40 விழுக்காடு மட்டுமே தனியார் நிறுவனங்களிடமிருந்து வந்தது. இருப்பினும், இந்தச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக அரசாங்கம் இப்போது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


2024-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) என்பது பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள், புத்தொழில் நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கிறது. நிதிசார்ந்த அபாயங்களைக் குறைப்பதன் மூலம், ஆராய்ச்சித் துறையில் அதிக முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் 'ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு' நிதியின்கீழ், தனியார்துறை ஆராய்ச்சிகளுக்கு நீண்டகால நிதியுதவியாக ஆறு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பிரிவு, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஐந்து ஆண்டுகளில் மேலும் 50,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். தனியார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்: ஒரு நிறுவனம் வணிகரீதியாக மாறுவதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் (ANRF) இணைந்து முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், அந்த ஆராய்ச்சியை முழுமையான வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் விரிவுபடுத்தவும் மேலும் 5 முதல் 10 ரூபாய் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டுமுயற்சி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளையும் கொள்முதல் முறைகளையும் தனது ஆராய்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆதரிக்கிறது.


ஒரு நிறுவனம் பல்வேறு வழிகளில் இந்த அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற முடியும். அந்த அறக்கட்டளையின் முதன்மை முதலீட்டுடன் இணைந்து, இரண்டாம் நிலை நிதி மேலாண்மை அமைப்பில் ஒரு வரையறுக்கப்பட்ட பங்காளராக சேரலாம் அல்லது தகுதிவாய்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக நேரடியாக இதில் பங்கேற்கலாம் அல்லது இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடலாம். அறிவியல் துறையைப் பொறுத்தவரை, அது ஒரு தேசியப் பணியில் இணைந்து செயல்படலாம்; அல்லது அறக்கட்டளையுடன் இணைந்து நிதி வழங்குவதற்காகப் போட்டிக்கு முந்தைய சவால் ஒன்றை முன்மொழியலாம்; நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை 'அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) கண்டுபிடிப்பு நிதி' மூலமாகச் செலுத்தலாம்; அல்லது ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்கு முன்பாக, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அறக்கட்டளையில் இணைவதற்கு இத்தனை விருப்பங்கள் இருப்பதற்கு ஒரே ஒரு முக்கியக் காரணம்தான் உள்ளது: இணைய விரும்பும் எந்தவொரு நிறுவனமும், தொடக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக விலகியிருக்கக்கூடாது என்பதுதான். 


ஆனால், இந்த அறக்கட்டளை என்ன வழங்குகிறது என்பதில் இருந்து, ஒட்டுமொத்தத் தொழிற்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி நமது கவனம் மாற வேண்டும். ஏனெனில், அறக்கட்டளை என்பது ஒரு தூண்டுகோல் மட்டுமே; அது நிறுவனங்களுக்கு மாற்றாகவோ அல்லது ஒரு ஊன்றுகோலாகவோ இருக்க முடியாது. இது நிறுவனங்களின் அபாயங்களைக் குறைக்கலாமே தவிர, அவர்களுக்கான வேலையை அதுவே செய்துவிட முடியாது. எனவே, தொழிற்துறை மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, நிறுவனங்கள் பொது நிதியுதவியுடன் இணைந்து தங்களது சொந்த மூலதனத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவதாக, பிற நாடுகளை அல்லது நிறுவனங்களை நம்பியிருப்பது ஆபத்தானதாக இருக்கும் மற்றும் உள்நாட்டுத் திறன் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் உத்திசார் தொழில்நுட்பங்களில் அவர்கள் தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும் அதை தவிர்த்து, தங்களுக்குப் பாதுகாப்பான சந்தைகளில் இருந்து கிடைக்கும் சிறிய லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, குறுகியகால காலாண்டு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நீண்டகால ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதாவது, அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள், பெருநிறுவனங்களின் கூட்டு நிதி மற்றும் திட்டமிடல் குழுக்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.


இந்தியத் தொழில்துறை இதற்கு முன்பும் இதுபோன்ற சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. 1990-களின் நடுப்பகுதியில் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation (WTO)) அறிவுசார் சொத்துரிமை விதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டு, மருந்துத் துறையில் 'பொருட்களுக்கான காப்புரிமைகளை' (Product patents) அங்கீகரிக்கச் சம்மதித்தபோது, உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் வரவால் பாதிக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அதற்கு முன்பு வரை இந்திய நிறுவனங்கள் பிற நாடுகளில் உருவாக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு முறையை ஆராய்ந்து, அவற்றை மறுஉருவாக்கம் செய்யும் முறையையே நம்பியிருந்தன. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, வேதியியல் செயல்முறைகளில் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொண்டன. உலகின் மிகக் கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கச் செயல்பட்டு, உலகம் முழுவதும் மலிவு விலையிலான மருந்துகளை வழங்கும் முக்கிய விநியோகஸ்தர்களாக மாறின. இன்று இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் மிகவும் பரந்தது, ஆனால் அதன் மூலம் நாம் கற்கும் பாடம் ஒன்றுதான்: வெற்றி என்பது நமது திறன்களை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, சவால்களைக் கண்டு பின்வாங்குவதில் இல்லை.


முன்னர் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட இந்தியா இன்னும் அதிவேகமாக வளர்ச்சி பெறமுடியும். அதற்குப் பல சாதகமான அம்சங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன: தற்போது நமக்குக் கிடைத்து, எப்போதும் நிலைத்திருக்காத மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic dividend), உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital public infrastructure), ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிதி மற்றும் திட்ட அமைப்புகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே உலக நாடுகள் தங்களின் தேவைகளுக்குச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து அதற்கு மாற்றாக விளங்கும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தற்போதைய உலகளாவிய சூழல் ஆகியவை ஆகும். இந்த பலங்கள் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்வதோடு மட்டுமல்லாமல், அறிவுசார் சொத்துக்களை வெறும் பயனாளராகப் பயன்படுத்துபவராக மட்டும் இல்லாமல், அதை உருவாக்குபவராக மாறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். இருப்பினும், இந்த வாய்ப்பு நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்காது, மேலும் அரசாங்கம் மட்டுமே இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏற்பட்ட ஹார்முஸ் (Hormuz) நெருக்கடியானது, நமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளது. இந்தியா தனது சொந்தத் திறன்களை ஆரம்பத்திலிருந்தே கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழில்நுட்பரீதியாகத் தற்சார்பு அடையவும், சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறவும், இறுதியில் உலகிற்குத் தவிர்க்க முடியாத ஒரு நாடாகவும் மாற முடியும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது, ஆராய்ச்சி ஆய்வகங்களும் தயாராக உள்ளன, நிதியும் கிடைக்கிறது; இனி இந்த முயற்சியை முழுமையாக முடிப்பதற்குத் தொழில்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.


சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஆவர்.


Original Link: India now has the funds, the talent and the opening for a research leap.

Share: