Showing posts with label school education. Show all posts
Showing posts with label school education. Show all posts

2025-26-ஆம் ஆண்டிற்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு: உள்கட்டமைப்பு மற்றும் இடைநிற்றல் விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால், மாணவர் சேர்க்கை குறைந்து இடைவெளிகள் அதிகரிக்கின்றன. -சாஹப் தீன், நவ்னீத் ஷர்மா

பள்ளிக் கல்வித் திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பிற்காக, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE+)) இந்தியாவின் மிக முக்கியமான தரவுத்தளமாகச் செயல்படுகிறது. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பெரும்பாலும் பள்ளிகளின் அமைப்பு பெரும்பாலும் பள்ளிகள் தாங்களே வழங்கும் (Self-reporting) தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், தரவுகளின் தரம் குறித்த கவலைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் இருப்பு மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் ஆகியவற்றை அறிக்கையிடுவதில் ஏற்படும் பிழைகள், தேசிய புள்ளிவிவரங்களின் துல்லியத்தைத்தன்மையைப் பாதிக்கக்கூடும்.


எனவே, வலுவான சரிபார்ப்பு அமைப்புகள், தொடர்ச்சியான தணிக்கைகள், டிஜிட்டல் அங்கீகாரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை தரவுகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். இதன் மூலம் கல்வித் திட்டமிடல் சிறப்பாக நடைபெறுவதோடு, அரசுப் பொதுவளங்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும். சரிபார்ப்புக்கான உறுதியான நடவடிக்கைகளில், பள்ளிகள் அளிக்கும் தரவுகள் மீதான அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மூன்றாம் தரப்பு தணிக்கைகள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் சீரற்ற மாதிரிச் சோதனைகள் (random sampling checks), மாணவர் மற்றும் ஆசிரியர் தரவுத்தளங்களுடனான தானியங்கி டிஜிட்டல் ஒப்பீட்டுச் சரிபார்ப்புகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறிய தனியாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுடன் தரவுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளும் அடங்கும்.


2025-26-ஆம் ஆண்டிற்க்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பின் அறிக்கை, இந்தியாவில் பள்ளிக் கல்வியின் ஒரு கலவையான முடிவை வெளிக்காட்டுகிறது. குறைந்த இடைநிற்றல் விகிதங்கள், அதிக ஆசிரியர் எண்ணிக்கை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசியக் கொள்கையுடன் இணைப்பது உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களை அது காட்டுகிறது. அதே சமயம், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாகக் காணப்படும் கவலைக்குரிய சரிவு, அரசுப் பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளை நோக்கிய முக்கிய மாற்றம் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையிலான தெளிவான பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றையும் இது சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த அறிக்கை ஒரு முக்கிய முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது: முன்னேற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும், அது சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரைப் பொறுத்தவரை தீவிரமான சமூக, பொருளாதார மற்றும் கொள்கைரீதியாக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.


பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது


2023-24-ஆம் ஆண்டில் 24.80 கோடியாக இருந்த ஒட்டுமொத்த பள்ளி மாணவர் சேர்க்கை, 2025-26-ஆம் ஆண்டில் 24.72 கோடியாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி, ஆழமான கட்டமைப்புச் சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை: (அ) குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததால் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது, (ஆ) வேலைவாய்ப்பின்மையின் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்வதால் (Migration) குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது, மற்றும் (இ) பொருளாதார நெருக்கடி, குழந்தை திருமணம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, தரமான பள்ளிகளை அணுக முடியாத நிலை போன்ற காரணங்களால் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பே மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது ஆகியவை அடங்கும். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாற்று கல்வி அமைப்புகள் (Substitute Education Systems) ஆகியவற்றுக்கு இடையே மாணவர் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்து குழந்தைகளையும் முழுமையாகப் பதிவுசெய்யாமல் இருக்கக்கூடும். பள்ளி மாணவர் சேர்க்கையில் ஏற்படும் தொடர்ச்சியான சரிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  போதுமான மாணவர்கள் இல்லாத பள்ளிகள் நிதி ரீதியாகச் செயல்பட முடியாத சூழலை ஏற்படுத்தும். இது பள்ளிகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும். இது போன்ற மூடல்கள், தொலைதூரக் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதைக் கடினமாக்குகின்றன. பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது, ஆசிரியர்களைப் பணியமர்த்துவதைப் பாதிக்கலாம் மற்றும் கல்வி சார்ந்த வளங்களைக் குறைக்கலாம்.


அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் மாறிச் செல்வது, அரசுப் பள்ளிகளில்  86 லட்சம் மாணவர்கள் குறைந்திருப்பதையும், அதே காலகட்டத்தில் தனியார் உதவி பெறாத பள்ளிகளில் 88 லட்சம் மாணவர்கள் அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது. இது போன்ற இடமாற்றம், தனியார் பள்ளிகள் உயர்தரமான ஆங்கில வழிக் கல்வி, சிறந்த கற்றல் விளைவுகள் மற்றும் அதிக பொறுப்புணர்வு ஆகியவற்றை வழங்குகின்றன என்று பெற்றோர்கள் கருதுவதை வெளிக் காட்டுகிறது.


மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாறிச் செல்வது ஏற்படுத்தும் விளைவுகள், சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு (Socially and Economically Disadvantaged Students) முக்கிய கவலையாக உள்ளது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரரீதியாக  நலிவடைந்த குடும்பங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியை முக்கிய ஆதாரமாகத் இருந்து வருகின்றன. ஏனெனில், சமூக மற்றும் பொருளாதாரரீதியாகவும் ஏழ்மையான குடும்பங்களுக்குக் கல்வியை குறைவான விலையில் கிடைக்கச் செய்வதற்காக, பள்ளிகள் இலவசக் கல்வியுடன் இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் மதிய உணவையும் வழங்குகின்றன. மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறிச் செல்வது, கல்வியிலும் சமூகத்தின் பிற அம்சங்களிலும் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வை (Social Inequality) அதிகரிக்க செய்கிறது.



அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் விலையுயர்ந்த தனியார் கல்வியைப் பெறும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. அதே சமயம், சமூகப் பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் கல்வி வளங்கள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளிகளைச் சார்ந்துள்ளன. இறுதியில், இது இரு அடுக்குக் கல்வி முறையை உருவாக்குகிறது.   கல்விக்கான வாய்ப்புகள் படிப்படியாக ஒரு குடும்பத்தின் வருமான அளவைச் சார்ந்ததாக அமைகின்றன.


மேலும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைக் கட்டணத்தைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முயற்சிக்கும்போது நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம். இது அவர்களைக் கடனில் தள்ளக்கூடும் அல்லது இறுதியில் பிள்ளைகள் தங்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தவும் வழிவகுக்கலாம். எனவே, பாரபட்சமற்ற கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்காக, அரசுப் பள்ளிகளின் தரத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துவது  முக்கியமான நடவடிக்கையாகும்.


முன்னேற்றம் இருந்தபோதிலும் உள்கட்டமைப்பு இடைவெளிகள் தொடர்கின்றன


பள்ளி உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 95% பள்ளிகளில் மின்சார வசதி, 70% பள்ளிகளில் கணினி வசதி, மற்றும் 67% பள்ளிகளில் இணைய வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள்  மற்றும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் முக்கியமான உள்கட்டமைப்பு குறைபாடுகள்  தொடர்ந்து வருகின்றன. அது போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இணைய அணுகல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (nformation and Communication Technology (ICT)) உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், டிஜிட்டல் கற்றல், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் இணையவழி கல்வி வளங்கள் தடைபடுகின்றன.




மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சாய்வுதளம் (Ramps), கழிப்பறைகள், உதவி சாதனங்கள் மற்றும் சிறப்பு கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட போதுமான மற்றும்  உள்கட்டமைப்பு வசதிகள் பல பள்ளிகளில் இன்னும் தேவைப்படுகின்றன. போதிய உள்கட்டமைப்பு இல்லாத நிலை, கற்றல் முடிவுகள், மாணவர் வருகைப் பதிவு, பள்ளியில் தொடர்தல் மற்றும் ஒட்டுமொத்த கல்வித் தரம் ஆகியவற்றை பாதிக்கிறது. இது தவிர, போதுமான டிஜிட்டல் வசதிகள் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை அணுகும் வாய்ப்பை இழக்கின்றனர். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே சமமற்ற கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.


2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்வதே நிலையான வளர்ச்சி (ensure inclusive, equitable, and quality education for all) இலக்குகள் 4-இன் நோக்கமாகும். குறைந்துவரும் மாணவர் சேர்க்கையும், பலவீனமான தகவமைப்பும் இந்த இலக்கை அடைவதை நேரடியாகப் பாதிக்கின்றன. இடைநிற்றல் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio (GER)) முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி மட்டங்களில் தகவமைப்பு பலவீனமாகவே உள்ளது. இது, பல மாணவர்கள் தங்கள் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியைவிட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது. மாணவர் சேர்க்கைக் குறைவு, பள்ளியில் தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என்ற இலக்கை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


பல்வேறு சமூகப் பொருளாதாரக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான கல்வி ஏற்றத்தாழ்வுகளும் விரிவடைந்துள்ளன. இறுதியில், குறைந்த கல்வித் தகுதியானது எதிர்கால வேலைவாய்ப்புகள், வருமான நிலை மற்றும் சமூக முன்னேற்ற வாய்ப்புகளை பாதிக்கிறது. இது நீண்டகால மனித மூலதன மேம்பாட்டிற்குத் தடையாக அமைகிறது. எனவே, நிலையான வளர்ச்சி இலக்கு 4-ஐ அடைவதற்கு, குறிப்பாகப் பெண்கள், பின்தங்கிய பிரிவினர் மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதி மாணவர்களின் கல்வியின் தொடர்ச்சியை வலுப்படுத்துவது மிக முக்கியமான நடவடிக்கையாகும்.



மாணவர் சேர்க்கைத் தரவுகள், ஆசிரியர் நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை நேரடியாகப் பாதிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அரசாங்கங்கள் ஆசிரியர் நியமனத்தைக் குறைக்கும். மாணவர் சேர்க்கை குறைந்துவரும் சிறிய கிராமப்பள்ளிகள், புவியியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்தாலும், ஆசிரியர்களை இழக்க நேரிடும். இது ஆசிரியர்கள் மீதான சுமையை அதிகரிப்பதோடு, கல்வியின் தரத்தையும் குறைக்கிறது. இதேபோல், குறைந்த மாணவர் சேர்க்கையானது, பள்ளிக் கல்விக்கான எதிர்கால நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகாரிகக்க செய்யும். இறுதியாக இந்த நிலை சில சமூகங்கள் மற்றும் பகுதிகள் கல்வி வாய்ப்புகளில் இருந்து விலகும் நிலையை உருவாக்கக்கூடும்.


தற்போதைய 2025-26-ஆம் ஆண்டிற்க்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு அறிக்கை, இந்தியாவின் பள்ளிக் கல்வி அமைப்பில் உள்ள முன்னேற்றங்களையும் நீடித்த சவால்களையும்  கோடிட்டுக்காட்டுகிறது. இடைநிற்றல் விகிதங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து செயலபடும் நிலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஊக்கமளிக்கின்றன. இதற்கு மாறாக, மொத்தப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைதல், மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி வேகமாக நகர்தல், உள்கட்டமைப்பு இடைவெளிகள், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பின் தரவுகளின் தரம் குறித்த கவலைகள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் தொடர்வதில் உள்ள சவால்கள் ஆகியவை உடனடி கொள்கை கவனம் தேவைப்படும் பிரச்சினைகளாக உள்ளன.


சமூகப் பொருளாதாரரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் பின்தங்கிய குழுக்களான, குறிப்பாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றன. பள்ளிக் கல்வியின் தரத்தை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதுமான ஆசிரியர்கள் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் நம்பகமான கல்வித் தரவுகளை பராமரித்தல் போன்றவை, புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 4  ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு முக்கியமானதாகும்.


சஹாப் தீன், லக்னோவில் உள்ள தொலை உணர்வுப் பயன்பாட்டு மையத்தில் ஒரு திட்ட விஞ்ஞானியாக உள்ளார். நவ்நீத் சர்மா, தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தில் (Central University of Himachal Pradesh) கல்வியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

\
Share: