டெல்லியின் பழமையான மலைமுகடு (Ridge) சீரமைக்கப்பட்டு வருகிறது — அது ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 டெல்லியின் மலைமுகடு (Ridge) வனப்பகுதியை மீட்டெடுப்பதற்காக '70 லட்சம் மரங்கள் நடும் திட்டம்' (Mission 70 Lakh Plantation) என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எந்தெந்தப் பகுதிகள் மலைமுகடு (Ridge) என வகைப்படுத்தப்பட்டுள்ளன?, மேலும் அங்கு எவ்வகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன?


தற்போதைய நிகழ்வு :


தலைநகர் டெல்லியில், 70 லட்சம் மரங்களை நடும் மாபெரும் இயக்கத்தையும், நானக்புரா மலைமுகடு (Nanakpura Ridge) பகுதியை மீட்டெடுப்பதற்குமான ஒரு பிரம்மாண்டமான பிரச்சாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசின் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ (Ek Ped Maa Ke Naam) என்ற முன்முயற்சியின் கீழ் 2024-ம் ஆண்டில் ‘70 லட்சம் மரங்கள் நடும் திட்டம்’ (Mission 70 Lakh Plantation) தலைநகரில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லி மலைமுகடு (Ridge) புத்துயிர் அளிக்கும் பிரச்சாரத்தின் (Delhi Ridge Rejuvenation Campaign) தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மத்திய மலைமுகடு (Central Ridge) மற்றும் நானக்புரா மலைமுகட்டில் (Nanakpura Ridge) உள்துறை அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார்.


முக்கிய அம்சங்கள் :


1. பசுமையான மலைமுகடு பகுதியின் பல்லுயிர் பெருக்கம், மண், நீர் மற்றும் டெல்லியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 6,300 ஹெக்டேர் பரப்பளவை வனப்பகுதியாக மேம்படுத்தவும், அதற்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கவும் மத்திய அரசும், டெல்லி அரசும் தீர்மானித்துள்ளன.


2. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பை (Jan Bhagidari) ஊக்குவிக்கும் வகையில், இந்த மாபெரும் மரநடுதல் திட்டத்தில் 20.01 லட்சம் மரங்கள், 37.07 லட்சம் புதர்ச்செடிகள் மற்றும் 92,960 மூங்கில் கன்றுகள் நடப்படுவதுடன், பள்ளிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (Resident Welfare Associations (RWA)), நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு 12.04 லட்சம் கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


3. டெல்லி அரசின் 'டெல்லி மலைமுகடு ஓர் அறிமுகம்' (An Introduction to the Delhi Ridge) என்ற ஆவணத்தின்படி, “முகடு (Ridge) என்பது ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீண்டுள்ள, தொடர்ச்சியான உயர்ந்த நிலப்பகுதியாகும் (மலைத்தொடர் போன்ற அமைப்பு). டெல்லி மலைமுகடு என்பது, குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக ஹரியானா-டெல்லி வரை நீண்டுள்ள ‘ஆரவல்லி மலைத்தொடர்கள்’ எனப்படும் இந்தியாவின் பழைமையான மற்றும் தொன்மையான மலைத்தொடர்களின் வடக்கு நோக்கிய நீட்சியாகும்.”


4. 2001-ம் ஆண்டின் டெல்லி மாபெரும் திட்டம் (Master Plan of Delhi), டெல்லி மலை முகட்டினை அடையாளம் கண்டு நான்கு மண்டலங்களாகப் பிரித்தது. அவை,  வடக்கு, மத்திய, தென் மத்திய மற்றும் தெற்கு ஆகியவை ஆகும். டெல்லி தேசிய தலைநகரப் பகுதி (NCT of Delhi) அரசின் வனத்துறையால் வழங்கப்பட்டபடி, இந்த மலைமுகட்டின் வெவ்வேறு பகுதிகளின் நிலைகள் பின்வருமாறு குறிப்பிட்ட்டுள்ளது. அவை,


(i) வடக்கு மலைமுகடு (Northern Ridge) : இது டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள வடக்கு மலைமுகடு, 87 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


(ii) மத்திய மலைமுகடு (Central Ridge) : மத்திய மலைமுகடு 864 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


(iii) தென்-மத்திய மலைமுகடு (South-Central Ridge) : சஞ்சய் வனம் (Sanjay Van) உட்பட 626 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட தென்-மத்திய மலைமுகடு, மெஹ்ரௌலி (Mehrauli) பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.


(iv) தெற்கு மலைமுகடு (Southern Ridge) : தெற்கு மலைமுகடு சுமார் 6200 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


5. டெல்லி மலைமுகடு (Delhi Ridge) என்பது நகரின் பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் இறுதிப் பகுதியாகவும், சூழலியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாகவும் விளங்குகிறது. இது தலைநகர் டெல்லிக்கு ஒரு பசுமை நுரையீரலாகவும் (green lung), பாலைவனமாதல் மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு இயற்கை அரணாகவும் செயல்படுகிறது.


6. கடந்த மே மாதம், தலைநகர் டெல்லியின் மிக முக்கியமான சூழலியல் மண்டலங்களில் ஒன்றான மத்திய மலைமுகடு சுமார் 670 ஹெக்டேர் பரப்பளவை டெல்லி அரசு “பாதுகாக்கப்பட்ட காடாக” (Reserved Forest) அறிவித்தது. மேலும், அங்கு சிறப்பு வனங்களை (காடுகளை) உருவாக்கி, “உள்ளூர்” மர வகைகளை நடுவதற்கான திட்டங்களையும் அதிகாரிகள் வகுத்துள்ளனர்.


பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு காடு அல்லது தரிசு நிலத்தையும் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கைகளில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளில், உரிய அனுமதி பெறப்படாவிட்டால் அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


1927-ம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின் (Indian Forest Act) 4-ம் பிரிவின் கீழ், ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க மாநில அரசால் ஒரு தொடக்க அறிவிப்பாக (preliminary notification) வெளியிடப்படுகிறது. மேலும், அனைத்து உரிமைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலமோ அல்லது நிராகரிப்பதன் மூலமோ அனைத்து உரிமைகளையும் தீர்த்து வைப்பதற்காக ஒரு வனத் தீர்வு அதிகாரி (Forest Settlement Officer(FSO)) நியமிக்கப்படுகிறார். அச்சட்டத்தின் 20-ம் பிரிவின் கீழ், அந்த நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்து மாநில அரசால் இறுதி அறிவிப்பு வழங்கப்படுகிறது.


7. இருப்பினும், மத்திய மலைமுகடு (Central Ridge) ஏற்கனவே ஒரு பாதுகாக்கப்பட்ட வனமாகவே இருந்தது. இது 1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் 1994-ல் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் போலவே, ஒரு 'தொடக்க' அறிவிப்பைத் தொடர்ந்து உரிமைகள் குறித்த ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். அதன் பிறகு, 1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 20-இன் கீழ் வெளியிடப்படும் ஒரு 'இரண்டாவது' அறிவிப்பு இந்த நிலைக்கு இறுதி தீர்வாக அமைகிறது.


8. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருந்தாலும், இந்த இரண்டாவது அறிவிப்பு, நடைபெற வேண்டிய ஒரு செயல்முறையை நிறைவு செய்கிறது. ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அறிவிப்பு, அப்பகுதியை ஒழுங்குபடுத்துவதற்கும், ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கும், வன நிலங்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வனத்துறைக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.


9. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மலைமுகடு பகுதிகளில், பொருத்தமான காலி நிலம் கிடைக்கும் இடங்களில் எல்லாம், அந்தந்தப் பகுதிக்கே உரிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மர வகைகள் நடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதில், முன்மொழியப்பட்ட மர வகைகளில் வேம்பு, அரசமரம், சீஷம், நாவல், புளி மற்றும் மாமரம் ஆகியவை அடங்கும்.



10. இது தவிர, மேற்கு வனப் பிரிவின் கீழ் உள்ள மத்திய மலைமுகட்டில் தீர்த்தங்கர வனம், ரிது வனம், ராசி வனம் மற்றும் பஞ்சவடி வனம் ஆகிய சிறப்பு வனங்களை மேம்படுத்தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது, இதனைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர்.


மத்திய மலைமுகடு பகுதியில் நடப்பட்ட மர வகைகள் குறித்த பகுப்பாய்வு


1. மத்திய மலைமுகடு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வன ஆய்வு நிலைகள் தொடர்பாக, டெல்லி வனப் பகுதி மற்றும் வனவிலங்குத் துறையின் மரநடுதல் பதிவேடுகளை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆய்வு செய்ததில், நடப்பட்ட குறைந்தபட்சம் 22 மர வகைகளில், ஏழு மட்டுமே மலைமுகடு பகுதியின் தனித்துவமான வகைகள் என்பது தெரியவந்துள்ளது.



2. டெல்லி மலைத்தொடர், ஆங்காங்கே மரங்கள் மற்றும் முள் புதர்கள் காணப்படும் ஒரு வெப்பமண்டல வறண்ட முள் காடு ஆகும். இங்குள்ள பூர்வீகத் தாவரங்கள், வளர்ச்சி குன்றிய நிலை, முள் போன்ற பாகங்கள், மெழுகு பூசப்பட்ட, சதைப்பற்றுள்ள மற்றும் மென்மயிர் நிறைந்த இலைகள் போன்ற வறட்சிக்காலத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.


3. மண்ணின் தன்மை சிறப்பாகவும், போதுமான ஈரப்பதம் மற்றும் மட்கிய சத்து (humus) கொண்டதாகவும் உள்ள பகுதிகளில், தாக் (Butea monosperma), கனியார் (Bauhinia purpurea), பிலு (Salvadora persica) போன்ற அகன்ற இலை மர வகைகளும் நன்கு செழித்து வளரும். பொதுவாக 'காட்டின் சுடர்' (flame of the forest) என்று அழைக்கப்படும் உள்ளூர் தாக் அல்லது பலாஸ், மண்ணின் களிமண் தன்மைக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறது.


4. நடப்படும் ஒன்பது தாவர இனங்கள், மூன்று அயல்நாட்டு வகைகள் உட்பட, மலைமுகடு சூழல் மண்டலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஆறு, மலைமுகடு பகுதியில் இயற்கையாகக் காணப்படாத உள்ளூர் மர வகைகள் ஆகும். ஆனால், தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டால் மட்டுமே அவை ஓரளவே தகவமைத்துக் கொள்ளக்கூடியவை எனக் கருதப்படுகின்றன.


5. 2021 மற்றும் 2025-க்கு இடையில் 'மத்திய மலைமுகடு' (Central Ridge) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்றுகள் நடும் இயக்கங்களின் இனப் பட்டியல்களில், தாக் (Butea monosperma), கைர் (Acacia senegal), ஹோலோப்டெலியா இன்டெக்ரிஃபோலியா (Holoptelea integrifolia) மற்றும் காசியா ஃபிஸ்டுலா (Cassia fistula) போன்ற, மலைமுகடு பகுதிக்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூர்வீகத் தாவரங்கள் அடங்கியுள்ளன. இந்த மர வகைகள் இயற்கையாகவே வறண்ட இலையுதிர் சூழல்களுக்குத் தகவமைத்துக் கொண்டவை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆரவல்லி-மலைமுகடு தாவரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.


6. நடப்பட்ட அயல்நாட்டு மர வகைகளில், சாசேஜ் மரம் (கிகேலியா ஆப்ரிகானா-Kigelia africana), ஜகரண்டா (ஜகரண்டா மிமோசிஃபோலியா-Jacaranda mimosifolia) மற்றும் காட்டு ஜலேபி (பித்தசெல்லோபியம் டல்ஸ்-Pithecellobium dulce) ஆகியவை அடங்கும். கடம்பா (நியோலமார்க்கியா கடம்பா-Neolamarckia cadamba), கச்னார் (பௌஹினியா வரியேகாட்டா-Bauhinia variegata) மற்றும் பக்கைன் (மெலியா அசெடராக்-Melia azedarach) போன்ற மற்றவை மலைமுகடு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இயல்பானவை அல்ல. மேலும், இவ்வகை மரங்கள் நன்றாக வளர்வதற்கு வழக்கமாக அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது.


7. மூன்றாவது பிரிவில், மலைமுகடு சுற்றுச்சூழல் அமைப்பில் இயற்கையாக அங்கம் வகிக்காத இந்தியப் பூர்வீக இனங்களான ஆலமரம் (Ficus benghalensis), அரசமரம் (Ficus religiosa), செமல் (Bombax ceiba) மற்றும் வில்வம் (Aegle marmelos) ஆகியவை அடங்கும். இம்மரங்கள் பல்வேறு சூழல்களில் வளரக்கூடியவை என்றாலும், இவை இயற்கையாகவே 'மலைமுகடு' சூழலமைப்பைச் சாராத, வேறு வகையான காடுகளைச் சேர்ந்தவையாகும்.


8. இதற்கிடையில், வன மற்றும் வனவிலங்குத் துறை (Forest and Wildlife Department), ஜூன் 22 அன்று வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், தெற்கு மலைமுகட்டில் (Southern Ridge) சூழலியல் மறுசீரமைப்புக் கொள்கைகளைப் பின்பற்றி ஒரு பெரிய அளவிலான மரக்கன்று நடும் திட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species)

டெல்லி அரசாங்கத்திற்காக வன ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute (FRI)) சமீபத்தில் வெளியிட்ட பத்தாண்டு கால செயல் திட்டத்தில் (2026-27 முதல் 2036-27 வரை), மத்திய மலைமுகட்டின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species) 44.13% சார்பு ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis Juliflora) மற்றும் லான்டானா கேமரா (Lantana Camara) ஆகியவை இந்த மலைமுகட்டில் காணப்படும் முக்கிய ஆக்கிரமிப்பு இனங்களாகும்.


ஒரு ஆக்கிரமிப்பு மர வகைகள் (Invasive species) என்பது வேகமாகப் பரவி, சூழல் மண்டலங்களைச் சீர்குலைத்து, பூர்வீகத் தாவரங்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் சுற்றுச்சூழல், பொருளாதாரம் அல்லது உடல்நலம் சார்ந்த பாதிப்புகளை விளைவிக்கும் ஒரு அயல்நாட்டு மர வகையாகும்.



டெல்லி வனத்துறை பதிவுகளின்படி, உள்ளூரில் விலாயதி கிக்கர் (Vilayati Kikar) என்று அழைக்கப்படும் மெக்சிகன் மெஸ்கிட் இனமான புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis Juliflora), காலனித்துவ காடு வளர்ப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மலைத்தொடரில் பரந்த ஒற்றைப்பயிர் சாகுபடியை உருவாக்கியுள்ளது.


அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட லான்டானா கேமரா (Lantana camara), தற்போது இந்தியா முழுவதும் பரவலாக வளர்கிறது. அதன் வண்ணமயமான பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது, காடுகள், விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் முழுவதும் பரவியுள்ளது. இது உள்ளூர் தாவரங்களுடன் போட்டியிடுவதோடு, பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிக்கிறது.


மலைமுகட்டைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகள் :


1. 1980-களின் நடுப்பகுதியில் ஓரிரு அரசு சாரா அமைப்புகளால் இந்த மலைமுகட்டைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் தொடங்கப்பட்டன. பாதுகாப்பை வலுப்படுத்த, டெல்லி மலைமுகட்டின் மேலாண்மை முறையைப் பரிந்துரைப்பதற்காக, லவ்ராஜ் குமார் (Lovraj Kumar) தலைமையில் ஒரு குழுவை டெல்லி அரசு நியமித்தது.


2. மேலும், மலைமுகடு பகுதியை 'பாதுகாக்கப்பட்ட காடுகளாக' (Reserved Forests) அறிவிக்கும் செயல்முறையைத் தொடங்குமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.சி. மேத்தா vs இந்திய ஒன்றியம் மற்றும் பிறர் (M.C. Mehta vs Union of India and Others) வழக்கில், 1995-ம் ஆண்டில் டெல்லி மலைமுகட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு மலைமுகடு மேலாண்மை வாரியத்தை (Ridge Management Board) அமைக்குமாறு உச்சநீதிமன்றம் டெல்லி அரசை வலியுறுத்தியது.


3. எம்.சி. மேத்தா வழக்கின் வழிகாட்டுதல்கள், 1995 அக்டோபர் 6-ம் தேதி தலைமைச் செயலாளரின் தலைமையில் மலைமுகடு மேலாண்மை வாரியம் (Ridge Management Board) அமைக்க வழிவகுத்தன. இந்த வாரியத்தில் தலைவர் உட்பட 8 உறுப்பினர்கள் கொண்டிருந்தனர்.

4. மலைமுகடு மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், மலைமுகட்டைப் பாதுகாப்பதற்காகவும், தானாக முன்வந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.


உருவவியல் மலைமுகடு (Morphological Ridge) என்றால் என்ன?


1. உருவவியல் மலைமுகடு (Morphological Ridge) என்பது புவியியல்ரீதியாக நீட்டிக்கப்பட்ட ஒரு மலைமுகடுப் பகுதியாகும். இது அதிகாரப்பூர்வமாக வன நிலமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்ட பல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்கீழ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.


2. இது, அங்கீகரிக்கப்பட்ட மலைமுகடுப் பகுதியைப் போன்றே, உருவவியல் மலைமுகடு பகுதியும் பாறை நிறைந்த நிலப்பரப்பையும் தாவரங்களையும் கொண்டுள்ளது. இந்த நிலவடிவ மலைமுகட்டின் எல்லையானது, இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட, 2006-ம் ஆண்டின் டெல்லி நில அதிர்வு மண்டல வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட டெல்லி வனத்துறை வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டது.


3. இப்பகுதி, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மலைமுகட்டின் அதே இயற்பியல் மற்றும் சூழலியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, பாறை நிறைந்த ஆரவல்லி மலை வெளிப்பாடுகள், ஆழமற்ற மண் அடுக்குகள் மற்றும் வறண்ட முள் வனத் தாவரங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலம் வருவாய்ப் பதிவேடுகளில் பெரும்பாலும் “பயிரிட முடியாத பாறைக் குன்று” (gair mumkin pahad) என்று பதிவு செய்யப்படுகிறது.


4. உருவவியல் மலைமுகடுப் பகுதியானது, சிதறிய மரங்கள், முட்புதர்கள் மற்றும் வறட்சியைத் தாங்கும் தாவர இனங்களைக் கொண்ட வெப்பமண்டல வறண்ட முள் காடுகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. இங்குள்ள பூர்வீக இனங்கள் பொதுவாக வளர்ச்சி குன்றியவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட பிஸ்தேந்து (bistendu) மற்றும் அகன்ற இலைகள் கொண்ட தாக் (dhak) ஆகிய இரண்டும் இத்தகைய பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றன.

5. மலைமுகடு மற்றும் உருவவியல் மலைமுகடு ஆகியவற்றில் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும்போது, ​​மண் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தாவரங்கள் மாறுபடுகின்றன. தெற்கு மலைமுகடு வறண்டதாகவும், கரடுமுரடானதாகவும், மெல்லிய மண் மற்றும் வெளிப்பட்ட பாறைகளைக் கொண்டதாகவும் உள்ளது. அதேசமயம், மத்திய மற்றும் வடக்கு மலைமுகடுகளில் சற்றே அதிக நீரைத் தக்கவைக்கும் தன்மையுள்ள மண்ணும், அடர்த்தியான தாவரங்களும் காணப்படுகின்றன.


Original article : Delhi’s ancient ridge is being restored— here’s why it matters. -Khushboo Kumari

Share: