சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை முறைப்படுத்தியது இந்தியாவில் நிதி கூட்டாட்சி முறையை எவ்வாறு பாதித்துள்ளது? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


 மாநிலங்கள் மூலதனச் செலவினங்களுக்கான விதிகளை எளிதாக்குமாறும், 50 ஆண்டு கடன்களை வழங்குமாறும் கோரின. மேலும், முதலீடு மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கடன் வாங்குவதில் உள்ள சில வரம்புகளையும் சுட்டிக்காட்டின.


கடந்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பரவலான வரி குறைப்புகளால் (Revenue loss) மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, மேற்கு வங்கம், தெலங்கானா, பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாதத்தில் முக்கிய இடம் பெற்றதாகத் தெரிகிறது. முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் முன்னேற்றத்தைத் தொடர்வது முக்கியம் என்று கோவா மாநிலம் கூறியதுடன், ஒன்றிய அரசின்  (Central Sector Schemes (CSS)) திட்டங்களின் கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதிப் பங்கீட்டைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு நியாயமான வழிமுறையையும் கோரியது.


குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி குறைப்புகளுக்குப் பிறகு, குறைந்து வரும் நிதிச் சூழல் மாநிலங்களால் எழுப்பப்பட்ட ஒரு முக்கிய கவலையாக இருந்தது. மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையாக சரக்கு மற்றும் சேவை வரி குறைப்புகளுக்கு மாநிலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தாலும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு வரியை மாற்றி கொண்டுவரப்பட்ட புகையிலை மீதான கலால் வரி மற்றும் பான் மசாலா மீதான செஸ் வரி ஆகியவற்றின் வசூலில் இருந்து வருவாயைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவற்றில் பல மாநிலங்கள் கோரியதாகத் தெரிகிறது.


மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் (Special Assistance to States for Capital Investment (SASCI)) தொடர வேண்டும் என்றும், அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பல பங்கேற்பாளர்கள் விரும்புவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏனெனில், இத்திட்டம் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சொத்துக்களை விரைவாக உருவாக்க உதவுகிறது. 2020-21ஆம் ஆண்டு முதல், மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 50 ஆண்டு கால வட்டியில்லாக் கடன்களாக ரூ. 4.25 லட்சம் கோடிக்கும் மேல் வழங்கியுள்ளது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட 'வளர்ந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (VB—G RAM)' திட்டத்தின் நிதி ஒதுக்கீடு குறித்து மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசால் பெரும்பாலும் நிதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போலல்லாமல், இந்த புதிய திட்டம் மொத்தச் செலவில் 40% தொகையை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்று கோருகிறது. முன்னதாக, ஒன்றிய அரசு அனைத்து தொழிலாளர் செலவுகளையும், மூலப்பொருள் செலவுகளில் 75% தொகையையும் ஏற்றுக்கொண்டது.


உங்களுக்குத் தெரியுமா:


சரக்கு மற்றும் சேவை வரி  2017-ல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல வரிகளை விதித்து வந்த நிலையில், தற்போதுள்ள வரி அமைப்பை எளிமையாக்கி, அதை ஒரே சீரானதாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இது கருதப்பட்டது. 


 சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தின் முதல் 5 ஆண்டுகளில் மாநிலங்கள் இழந்த வருவாயை ஈடுசெய்ய உதவுவதற்காக இழப்பீட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2017ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டத்தின் கீழ் வந்தது. பின்னர், மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்குவதற்காக கோவிட் ஆண்டுகளில் திரட்டப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக, இந்த வரியின் வசூல் மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டது.


Original Article : How has the GST rate rationalisation affected fiscal federalism in India? -Roshni Yadav

Share: